search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நான் நலமாக இருக்கிறேன்... பரிபூரண ஆரோக்கியத்தோடு வருவேன்... வீடியோ வெளியிட்ட வைகோ
    X

    நான் நலமாக இருக்கிறேன்... பரிபூரண ஆரோக்கியத்தோடு வருவேன்... வீடியோ வெளியிட்ட வைகோ

    • சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது.
    • தமிழகத்தில் பொது ஊழியம் செய்கின்ற ஒரு சாதாரண தொண்டனாகிய இந்த வைகோ ஏறத்தாழ 7000 கி.மீ. நடந்து இருக்கிறேன்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 25-ந்தேதி நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கி இருந்தார். அன்று இரவு எதிர்பாராத விதமாக அவர் கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக நெல்லையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் வைகோ சென்னை அழைத்து வரப்பட்டார். அவருக்கு தோள்பட்டையுடன் சேர்த்து கட்டு போடப்பட்டிருந்தது. சென்னை வந்த அவர் அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள இல்லத்தில் சென்று தங்கினார். இதையடுத்து, நேற்று முன்தினம் மதியம் வைகோ, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

    இதையடுத்து சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அவரது மகன் துரை வைகோ ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அன்பு உள்ளம் கொண்ட தமிழ் பெரு மக்களே... தமிழகத்தில் பொது ஊழியம் செய்கின்ற ஒரு சாதாரண தொண்டனாகிய இந்த வைகோ ஏறத்தாழ 7000 கி.மீ. நடந்து இருக்கிறேன். ஆனால் கீழே விழுந்ததில்லை. இப்போது நான்கு நாட்களுக்கு முன்னர் நெல்லைக்கு சென்றிருந்த இடத்தில், தங்கியிருந்த வீட்டில் படிகளின் வழியாக ஏறாமல் பக்கத்தில் இருக்கக்கூடிய திண்ணையில் ஏறினேன். அப்போது இடதுபுறமாக சாய்ந்து விட்டேன். எனக்கு தலையில் அல்லது முதுகில் அடிபட்டு இருந்தால் இயங்க முடியாமல் போயிருப்பேன்.

    இடது தோள்பட்டையின் கிண்ணம் உடைந்து விட்டது; எலும்பு சிறிய அளவில் கீறியுள்ளது. தற்போது உங்களுக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நான் நன்றாக இருக்கிறேன். முழு ஆரோக்கியத்துடன் வருவேன். நான் முன்பு போல் இயங்க முடியுமா என்று மட்டும் யாரும் சந்தேகம் பட வேண்டாம். நான் உழைப்பு என்பதற்கு இலக்கணமாக இருக்கக்கூடியவர் என்பதை கலைஞரே சொல்லியிருக்கிறார். ஆகவே, நம்முடைய தோழர்கள், பொதுவாழ்வில் அக்கறை உடையவர்கள் எல்லோர்க்கும் சொல்லிக்கொள்வது இந்த நாட்டில் மேலும் தமிழ்நாட்டிற்கு செய்யவேண்டிய சேவைகளை செய்வதற்கு காத்து கொண்டிருக்கும் வைகோ முழு நலத்துடன் பரிபூரண ஆரோக்கியத்துடன் வருவேன் என்பதையும் எனக்காக கவலைப்படுகிற உள்ளங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    Next Story
    ×