search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தண்ணீர் தொட்டியில் 2 குழந்தைகளுடன் பிணமாக கிடந்த இளம்பெண்- கொலையா? போலீஸ் விசாரணை
    X

    தண்ணீர் தொட்டியில் 2 குழந்தைகளுடன் பிணமாக கிடந்த இளம்பெண்- கொலையா? போலீஸ் விசாரணை

    • போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது40). கட்டிட தொழிலாளி.

    இவரது மனைவி புஷ்பா (28). இவர்களுக்கு ஹரிணி (9), ஷிவானி (3) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    புஷ்பா வீட்டு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் தங்கராஜ் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கும் வரும் போது குடித்து விட்டு வருவார்.

    குடித்து விட்டு வந்து, மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இதனை உறவினர்கள் பேசி சமாதானப்படுத்தி வந்தனர்.

    நேற்று மாலை தங்கராஜ் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றவே 2 பேரும் ஒருவருக்கொருவர் திட்டிகொண்டனர்.

    சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் இது வழக்கமாக நடப்பது தான் என்று நினைத்து கொண்டனர். இந்த நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் புஷ்பா மற்றும் அவரது குழந்தைகள் வெளியில் வரவே இல்லை.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர், வீட்டு வாசலில் இருந்த தங்கராஜிடம், மனைவி மற்றும் மகள்களை எங்கே என்று கேட்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதனால் அவர் மீது அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் புஷ்பா மற்றும் அவரது 2 பெண் குழந்தைகளும் பிணமாக கிடந்தனர்.

    போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து புஷ்பாவின் கணவர் தங்கராஜிடம் போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தண்ணீர் தொட்டியில் 3 பேரும் இறந்து கிடந்தது எப்படி? யாராவது கொன்று தண்ணீர் தொட்டியில் போட்டனரா? அல்லது அவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×