search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    வியாபாரி கொலையில் 3 பேர் கைது
    X

    வியாபாரி கொலையில் 3 பேர் கைது

    • 3 பேருக்கும் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே மறவன்மடம் மேற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 33). பாத்திர வியாபாரி.

    இவர் நேற்று முன்தினம் காலை புதுக்கோட்டை-கூட்டாம்புளி சாலையில் மனைவியுடன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் முருகனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.

    இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். அதில், தூத்துக்குடி சிப்காட் ராஜகோபால் நகர் 2-வது தெருவை சேர்ந்த மாரிதங்கம்(23) என்பவரை முன்பகை காரணமாக பாத்திர வியாபாரி முருகன் மற்றும் சிலர் சேர்ந்து கடந்த ஆண்டு மடத்தூர் பகுதியில் வைத்து வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவத்திற்கு பழிக்கு பழியாக மாரிதங்கம் மற்றும் சிலர் சேர்ந்து தற்போது முருகனை வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.

    போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த கொலை கும்பலை சேர்ந்த மாரிதங்கம் மற்றும் அவரது கூட்டாளிகளான புதுக்கோட்டை புதுத்தெருவை சேர்ந்த வினித்(22), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாரீஸ்வரன் என்ற மாதேஷ் ஆகியோர் மறவன்மடம்-புதுக்கோட்டை இடையே உள்ள தட்டப்பாறை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு தப்பி செல்ல முயன்றனர்.

    தொடர்ந்து தனிப்படை போலீசார் தட்டப்பாறை சாலை பகுதிகளை முழுமையாக சுற்றி வளைத்தனர். இதனால் அந்த கும்பல் காட்டுக்குள் தப்பி ஓடினர். போலீசார் அந்த கும்பலை பின்தொடர்ந்து பிடிக்க சென்றபோது ஓடியபோது தடுமாறி கீழே விழுந்ததில் மாரிதங்கத்திற்கு கை முறிவும், மாதேஸ்வரனுக்கு கால் முறிவும் ஏற்பட்டது. வினித்துக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    தொடர்ந்து 3 பேருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×