search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக மீனவர்கள் கைது- மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
    X

    தமிழக மீனவர்கள் கைது- மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    • நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
    • இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று முதலமைச்சர் வலியுறுத்தல்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், விசைப்படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (24-08-2004) எழுதியுள்ள கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களும் மீன்பிடி விசைப்படகும் நேற்று (23-08-2024) இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த கவலையளிப்பதாகக் தெரிவித்துள்ளார்.

    அக்கடிதத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் IND-TN-06-MM-1054 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் கோடியக்கமைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நேற்று (23-08-2024) இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை தான் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளதாகவும், 2024-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 324 மீனவர்களும், 44 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் இதுபோன்ற தொடர் கைது நடவடிக்கைகளால் தமிழ்நாடு மீனவ சமூகத்தினர் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவதுடன் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், கடந்த இரண்டு வாரங்களில், இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடலில் மீனவர்களைத் தாக்கிய சம்பவங்களை சுட்டிக் காட்டியுள்ள முதலமைச்சர், இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிப்பதற்கு உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×