search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    26 கிலோ அரிசி மூட்டை விலை 20 ரூபாய் குறைந்தது
    X

    26 கிலோ அரிசி மூட்டை விலை 20 ரூபாய் குறைந்தது

    • திருவள்ளூர் பகுதிகளில் புதிய நெல் அறுவடை பணிகள் தொடங்கி இருப்பதும் இந்த விலை குறைவுக்கு காரணமாகும்.
    • ரேசன் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா அரிசியும் தரமாக உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அரிசி விலை குறைந்துள்ளது. நெல்லின் வரத்து அதிகரிப்பு மற்றும் புதிய நெல் அறுவடை ஆகியவற்றின் காரணமாக அரிசி விலை குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    26 கிலோ அரிசி மூட்டை தற்போது சந்தையில் ரூ.930 முதல் 1700 வரையில் கிடைக்கிறது. அரிசியின் தரத்தை பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த அரிசி மூட்டைகள் அனைத்துமே 20 ரூபாய் குறைந்து உள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல்-அரிசி மொத்த வியாபாரிகள் சம்மேளன தலைவரான துளசிங்கம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால் மக்கள் பட்டாசு, இனிப்பு வகைகளை வாங்குவதில் தான் தற்போது ஆர்வம் காட்டுகின்றனர். நெல்வரத்து அதிகரிப்பு மற்றும் புதிய நெல் அறுவடை ஆகியவற்றால் 26 கிலோ அரிசி மூட்டை ரூ.20 வரையில் குறைந்துள்ளது.

    இட்லி அரிசியின் விலையும் சரிவை சந்தித்துள்ளது. ரூ.1010-க்கு விற்பனையான 26 கிலோ இட்லி அரிசியின் விலை தற்போது 980-ஆக வும், ரூ.1030-க்கு விற்பனை செய்யப்பட்ட இட்லி அரிசியின் விலை 990-ஆகவும் குறைந்துள்ளது.

    செங்குன்றம் பகுதிக்கு தினமும் லாரிகளில் வருகை தரும் நெல்லின் அளவு அதிகரிப்பு, திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம், கடம்பத்தூர், பகுதிகளில் புதிய நெல் அறுவடை பணிகள் தொடங்கி இருப்பதும் இந்த விலை குறைவுக்கு காரணமாகும்.

    அதே நேரத்தில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா அரிசியும் தரமாக உள்ளது. இதுவும் அரிசி விலை குறைவுக்கு ஒரு காரணமாகும். 1 கிலோவில் இருந்து 20 கிலோ வரையில் மட்டுமே அரிசிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.

    அதனால் வியாபாரிகள் அனைவருமே 26 கிலோ அரிசி பையையே விற்பனை செய்கிறார்கள். 25 கிலோவுக்கு மேல் உள்ள அரிசி மூட்டைகளுக்கு ஜி.எஸ்.டி. கிடையாது என்பதால் 25 கிலோ மூட்டையை 26 கிலோவாக வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×