search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • இங்கிலாந்திலிருந்து 8,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாடு மலாவி
    • நலிவடைந்த நாடுகளில் செவித்திறன் குறைபாடு உடையவர்கள் அதிகம் உள்ளனர் என்றார் டாக்டர். ரெயின்

    இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயர் (West Yorkshire) பகுதியில் உள்ளது, பிராட்ஃபோர்டு (Bradford) நகரம்.

    இந்நகரின் "பிராட்ஃபோர்டு ராயல் இன்ஃபர்மரி" (Bradford Royal Infirmary) மருத்துவமனையை சேர்ந்த "ஈஎன்டி" (ENT) எனப்படும் காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணர்களும், செவித்திறன் பரிசோதனை நிபுணர்களும் (audiologists), தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி (Malawi) நாட்டிற்கு சென்று செவித்திறன் குறைபாடு உடைய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை அளித்து வருகின்றனர்.

    இங்கிலாந்திலிருந்து சுமார் 8,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாடு மலாவி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சேவையில், பேராசிரியர். கிரிஸ் ரெயின் (Prof. Chris Raine) தலைமையிலான பிராட்ஃபோர்டு மருத்துவர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அது மட்டுமின்றி மலாவி பகுதியில் உள்ள ஈஎன்டி மருத்துவர்களுக்கும் ஈஎன்டி சிகிச்சையளிப்பதில் உள்ள நிபுணத்துவம் குறித்து பயிற்சி அளிக்கின்றனர்.


    இது குறித்து பேராசிரியர். டாக்டர் ரெயின் கூறியதாவது:

    செவித்திறன் குறைபாடு கண்ணுக்கு புலப்படாத நோய்.

    இது குழந்தைகளுக்கு கல்வி கற்பதில் சிரமத்தை உண்டாக்கி, ஈடுபாட்டை குறைக்க கூடிய குறைபாடு. பிறருடன் பழகுவதையும், வேலை வாய்ப்புகளையும் இந்த குறைபாடு தடை செய்து விடலாம்.

    பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள பல நாடுகளில் செவித்திறன் குறைபாடு உடைய குழந்தைகள் அதிகம் உள்ளனர்.

    ஆனால், பெரும்பாலான நோயாளிகளுக்கு இது குணப்படுத்தக் கூடியதுதான்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    செவித்திறன் குறைபாட்டை சரி செய்வதில் முக்கிய சிகிச்சை முறையான "காக்லியர் இம்ப்லேன்ட்" (cochlear implant) எனும் சிகிச்சைக்கு தேவைப்படும் கருவிகளை "மெட்எல்" (MedEl) எனும் நிறுவனம் இவர்களுக்கு இலவசமாக தருவது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் பிராட்ஃபோர்டு மருத்துவர்கள், மலாவியில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கு செவித்திறன் குறைபாட்டை நீக்கியுள்ளனர்.

    வளர்ச்சியடைந்த நாட்டில் இருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் உள்ள பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள நாட்டிற்கு சென்று பெரும் மருத்துவத்தொண்டில் 10 வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வரும் பிராட்ஃபோர்டு மருத்துவ குழுவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


    • இங்கிலாந்தின் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது என்றார் சுனக்
    • பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அவர்களின் இல்லங்களுக்கு எதிரில் போராட்டங்கள் நடந்தன

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் 5-வது மாதத்தை நெருங்கி வரும் நிலையில் உலகெங்கும் இரு தரப்பினருக்கும் ஆதரவாக மக்கள் ஆங்காங்கே கருத்து கூறி வருகின்றனர்.

    இங்கிலாந்தில், இரு தரப்பினரில் ஒருவரை ஆதரிப்பவர்களால் மற்றொரு தரப்பினர் விமர்சிக்கப்படுவது தீவிரமாகி வருகிறது.

    ஒரு சில இடங்களில் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகிறது. மேலும், சில பாராளுமன்ற உறுப்பினர்களின் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்த கருத்துகளுக்கு எதிராக அவர்களின் இல்லங்களுக்கு எதிரில் போராட்டங்கள் நடந்தன.

    இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், லண்டன் நகரின் 10, டவுனிங் தெருவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்ல வாசலில் நாட்டு மக்களுக்கு இது குறித்து உணர்ச்சிகரமாக உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது:

    நாட்டின் முதல் வெள்ளையரல்லாத பிரதமராக உங்கள் முன் நான் நிற்கிறேன்.

    பயங்கரவாத சித்தாந்தங்களில் நம்பிக்கை உடையவர்களால் இங்கிலாந்தின் ஜனநாயகமே அழியும் நிலையில் உள்ளது.


    நம் நாட்டிற்குள் நெடுங்காலமாக தங்கியுள்ள அயல்நாட்டினர், நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்கை முழுமையாக அளித்துள்ளனர்.

    நீங்கள் இந்துவாக இருந்தும் என்னை போல் ஒரு பெருமைக்குரிய இங்கிலாந்து நாட்டினராக இருக்கலாம்; ஒரு இறை நம்பிக்கைமிக்க முஸ்லீமாக இருந்து தேசபக்தி மிகுந்த பிரிட்டன் குடிமகனாகவும் இருக்கலாம்; யூத அல்லது கிறித்துவ மதத்தை சேர்ந்தவராகவும் இருந்து நாட்டுபற்று மிக்கவராக இருக்கலாம். அது நம் நாட்டில் சாத்தியமே.

    இனத்தால், கலாச்சாரத்தால் மாறுபட்டாலும் ஒன்றுபட்ட பிரிட்டனாக நாம் இருப்பதுதான் நமது சாதனையே.

    பிரிட்டனின் தெருக்களில் ஜனநாயகத்தை சூறையாடும் குரல்கள் ஒலிக்கு தொடங்கி உள்ளது.

    வன்முறையை ஏதோவொரு வகையில் நியாயப்படுத்தும் அணிகள் உருவாகி வருகின்றன.

    நம்மை பிரித்து நமது மனங்களில் விஷத்தை விதைக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்து விட்டது.

    இவ்வாறு ரிஷி சுனக் கூறினார்.

    • ஆன்-மேரி கப்பலை அதில் உள்ள சரக்குகளுடன் இங்கிலாந்து கைப்பற்றியது
    • லேட்சன் என்பவருக்கு நீல் வின்தர் எனும் கார்பென்டர் இப்பார்சலை அனுப்பியுள்ளார்

    1807 காலகட்டத்தில் ஐரோப்பிய நாடான டென்மார்க்கிலிருந்து, ஃபேரோ தீவுகள் (Faroe Islands) ஜலசந்திக்கு ஆன்-மேரி (Anne-Marie) எனும் கப்பல் புறப்பட்டது. அப்போதைய டென்மார்க் மன்னருக்கு சொந்தமான 2 கப்பல்களில் ஆன்-மேரி கப்பலும் ஒன்று.

    பிரான்ஸ் நாட்டு மன்னராக இருந்த நெப்போலியனுக்கும், பிற ஐரோப்பிய நாடுகளின் கூட்டணிக்கும் போர் (Napoleonic wars) நடந்த அந்த காலத்தில் ஆன்-மேரி கப்பல், தனது பயணத்தின் போது, செப்டம்பர் 2 அன்று ஹெச்எம்எஸ் டிஃபென்ஸ் (HMS Defence) எனும் இங்கிலாந்து கடற்படை கப்பலால் தாக்கப்பட்டது.

    அந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாத ஆன்-மேரி கப்பலை அப்போதைய போர் மரப்புப்படி, தாக்குதலில் வென்ற இங்கிலாந்து கடற்படை, அதில் இருந்த சரக்குகள் மற்றும் தபால்களுடன் கைப்பற்றியது.

     அந்த பொருட்கள் இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

    அவையனைத்தும் தற்போது வரை இங்கிலாந்தின் தேசிய காப்பகத்தில் (National Archives) பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்தன.

    சுமார் 200 வருடங்கள் கடந்த நிலையில், அக்கப்பலின் பொருட்கள் தற்போது முதல்முறையாக ஃபேரோ தீவுகளை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்னிலையில் இங்கிலாந்தில் திறக்கப்பட்டன.

    49 ஆயிரம் ஜோடி கம்பளியினால் பின்னப்பட்ட "ஸாக்ஸ்"கள், பல பறவைகளின் இறகுகள், மற்றும் ஒரு பார்சலும் அந்த பொருட்களில் இருந்தன.

    அந்த பார்சலை பிரித்த போது, அதில் இயந்திர உதவியின்றி, கைகளாலேயே பின்னப்பட்ட ஒரு அழகிய ஸ்வெட்டர், தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அக்கால ஃபேரோ தீவுகளின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில், ஒளிரும் வண்ணத்தில் காண்போர் கண்களை அந்த ஸ்வெட்டர் கவர்கிறது.


    200 வருடங்கள் கடந்தும் அதன் தரம், வடிவம், வண்ணம், மற்றும் வேலைப்பாடு சிறிதும் குறையாமல் அப்படியே இருப்பது காண்போரை வியக்க வைத்தது.

    1807 ஆகஸ்ட் 20 அன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனை சேர்ந்த லேட்சன் (Ladsen) என்பவருக்கு நீல்ஸ் வின்தர் (Niels Winter) எனும் கார்பென்டர் அனுப்பியுள்ள இந்த பார்சலுடன் டேனிஷ் மொழியில் வின்தர் அனுப்பியுள்ள கடிதமும் இருந்தது.

    அதில், "உங்களுக்கு எனது மனைவியின் வாழ்த்துக்கள். உங்கள் வருங்கால மனைவிக்கு என் மனைவி ஒரு ஸ்வெட்டரை இத்துடன் அனுப்பியுள்ளார். உங்கள் வருங்கால மனைவிக்கு இது பிடிக்கும் என நாங்கள் நம்புகிறோம்" என எழுதப்பட்டுள்ளது.

    இந்த ஸ்வெட்டர் கலைப்பொருளாக இங்கிலாந்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட உள்ளது.

    • பாராளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களுக்கு முன் ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தினர்
    • இதுநாள் வரை இங்கிலாந்தில் காணப்பட்ட ஜனநாயக வழிமுறையே அல்ல இது என்றார் ரிஷி சுனக்

    கடந்த 2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் பகுதியில் பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொன்றனர். மேலும், ஹமாஸ் அமைப்பினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 250க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இந்த பயங்கரவாத நடவடிக்கையில் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கப் போவதாக உறுதியெடுத்து அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதியில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏராளமான பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

    4 மாதங்களை கடந்தும் தீவிரமாக போர் நடைபெற்று வரும் நிலையில், உலகெங்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலிய ராணுவ படையினருக்கும் ஆதரவாக பல்வேறு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இங்கிலாந்தில், பொதுமக்களில் சிலர் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கும் ஆதரவு நிலைப்பாட்டிற்கு எதிராக அவர்களது இல்லங்களுக்கு முன் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

    இது அந்நாட்டில் இதுவரை காணாத நடைமுறையாக உள்ளது.


    இந்நிலையில், பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இரு தரப்பினரில் எவருக்கு ஆதரவு குரல் அளித்தாலும், மற்றொரு தரப்பினர் அச்சுறுத்துவதாக தெரிவித்தனர்.

    ஆதரவு நிலை எடுப்பவர்களை நேரிடையாக குறிப்பிட்டு எச்சரிக்கைகள் விடப்படுவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்ததாவது:

    சமீப காலங்களாக, கும்பல் ஆட்சி (mob rule) ஜனநாயகத்தை அழிக்க முயல்வதை அனைவரும் ஏற்று கொள்கிறோம். இது சரியல்ல.

    கருத்து சுதந்திரத்தையும், ஆரோக்கியமான விவாதத்தையும் தடுக்கும் வகையில் அதிகரித்து வரும் வன்முறையுடன் கூடிய அச்சுறுத்தும் நடைமுறை வளர்ந்து வருகிறது.

    இது இந்நாள் வரை இங்கிலாந்தில் காணப்பட்ட ஜனநாயக வழிமுறையே அல்ல.

    நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து இந்த சூழலை மாற்ற வேண்டும்.

    பாராளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களுக்கு முன் போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்க ரோந்து படையினர் அதிகரிக்கப்படுவார்கள். உறுப்பினர்களின் இல்லத்திற்கு முன் போராடுவது சட்ட விரோத அச்சுறுத்தலாக கருதப்படும்.

    இவ்வாறு ரிஷி சுனக் கூறினார்.

    பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக $39 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனவரி 17 அன்று கேத்தரினுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது
    • தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுநிலவுவதாகவும் வதந்திகள் உலவுகின்றன

    பிரிட்டிஷ் இளவரசர் சார்லசின் மனைவி, கேத்தரின் மிடில்டன் (Catherine Middleton).

    சுமார் 2 மாதங்களாக, 42-வயதாகும் "கேட்" (Kate) என அழைக்கப்படும் கேத்தரின் மிடில்டன் பொதுவெளியில் காணப்படவில்லை. இது பல்வேறு யூகங்களுக்கும், சந்தேகங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

    கடந்த ஜனவரி 17 அன்று, பிரிட்டிஷ் அரண்மனையின் அதிகாரபூர்வ அலுவலகம், கேத்தரினுக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் அவர் ஈஸ்டர் பண்டிகை காலகட்டத்தில் மீண்டும் பொதுவெளிக்கு திரும்புவார் என தெரிவித்தது.

    ஆனால், அவர் இதுவரை காணப்படாததால் சமூக வலைதளங்களில் ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. கேத்தரினின் உடல்நலம் குறித்தும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அரண்மனை வட்டாரங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை.

    இதற்கு சான்றாக, ஒரு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், பாதியிலேயே "சொந்த விஷயமாக" புறப்பட்டு சென்றதை சமூக வலைதளங்களில் பயனர்கள் குறிப்பிட்டு அவரும் தனது மனைவியின் உடல்நலம் குறித்து ஏதும் தெரிவிக்காமல் இருப்பதை பயனர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


    கேத்தரினின் தற்போதைய உடல்நிலை குறித்து புகைப்படங்கள் ஏதும் சமூக வலைதளங்களில் வெளியாகாததும் வதந்திகளுக்கு மேலும் வலுவூட்டுகிறது.

    கேத்தரினுக்கும், அவரது கணவர் சார்லசிற்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாகவும், அதனால் கேத்தரின் மன உளைச்சலில் இருப்பதாகவும் அரண்மனைக்கு நெருக்கமானவர்கள் சிலர் வலைதளங்களில் பதிவு செய்தனர்.

    உடல்நலம் தேறி வந்த கேத்தரின், திடீரென "கோமா" நிலைக்கு சென்று விட்டதாகவும் சில உறுதிப்படுத்தப்படாத கருத்துகள் இணையத்தில் உலவுகின்றன.

    பிரிட்டிஷ் அரண்மனைக்கு விசுவாசமிக்க பெரும்பாலான இங்கிலாந்து பொதுமக்கள் கேத்தரின் விரைவில் உடல்நலம் தேற வேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.

    • 1984ல் வேல்ஸ் (Wales) பகுதியில் சுரங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர்
    • தாக்கப்படும் அபாயம் இருந்தும் இங்கு வந்து உதவினர் என உக்ரைன் தொழிலாளர்கள் கூறினர்

    கடந்த 2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2 ஆண்டுகளை கடந்து தீவிரமாக நடைபெற்று வருவதால், உக்ரைனில் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.

    நூற்றுக்கணக்கான உக்ரைன் சுரங்க தொழிலாளர்களும் ரஷியாவிற்கு எதிராக போரில் களம் இறங்கி உள்ளனர்.

    1984ல் ஐரோப்பாவின் வேல்ஸ் (Wales) பகுதியில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உக்ரைன், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து சுரங்க தொழிலாளர்களும் ஆதரவளித்தனர்.

    நீண்ட நாள் நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தினால் வருவாய் இல்லாமல் தவித்த அந்த தொழிலாளர்களுக்கு உலகெங்கும் இருந்து பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.


    அப்போது சோவியத் யூனியன் (Soviet Union) என அழைக்கப்பட்ட ஒருங்கிணைந்த ரஷியாவில், உக்ரைன் பகுதியில் இருந்த சுரங்க தொழிலாளர்களில் ஏராளமானவர்கள், வெல்ஷ் (Welsh) சுரங்க தொழிலாளர்களுக்கு பலவித உதவிப்பொருட்களை அனுப்பி வைத்தனர்.

    சுமார் 40 வருடங்கள் கடந்த பிறகும், தங்களுக்கு உக்ரைனியர்கள் செய்த உதவியை மறக்காத வெல்ஷ் பணியாளர்கள், தங்களின் ஊதியத்தை நன்கொடையாக வழங்கி, பல சரக்கு வாகனங்களில் மருந்து, மளிகை உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களை தெற்கு வேல்ஸ் பகுதியில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) நகருக்கு, சாலை வழியே கொண்டு சென்று வழங்கினர்.

    இது குறித்து உக்ரைன் சுரங்க தொழிலாளர்கள், "சுரங்க தொழிலாளர்கள் அனைவரும் ஒரே இனம் என்பதை 1984ல் நாங்கள் மறக்கவில்லை. அதே போல் அவர்களும் எங்களை இப்போது மறக்கவில்லை. குண்டு வீச்சில் தாக்கப்படும் அபாயம் உள்ளதை அறிந்தும் அவர்கள் துணிந்து வந்து எங்களுக்கு உதவினர்" என பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

    • நேற்றுடன், ரஷிய-உக்ரைன் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்தது
    • இங்கிலாந்து உக்ரைனுக்கு அளிக்கும் உதவிகளை வரவேற்கிறேன் என்றார் மன்னர்

    கடந்த 2022 பிப்ரவரி 24 அன்று, தனது அண்டை நாடான உக்ரைனை, ரஷியா, "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது.

    நேற்றுடன், ரஷிய-உக்ரைன் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. ஆனால், தற்போது வரை போர் நிற்பதற்கான அறிகுறிகள் இல்லை.

    போர்நிறுத்தம் குறித்து உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை அமைப்பினர் விடுத்த கோரிக்கைகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புறக்கணித்து விட்டார்.

    இப்பின்னணியில், உக்ரைனுக்கு அமெரிக்காவில் இருந்து கிடைத்து வந்த நிதியுதவிகள் தொடர்ந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உக்ரைனுக்கு நிதியுதவி தொடர்ந்து அளிக்க போவதாக உறுதியளித்தார்.


    இந்நிலையில், இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், உக்ரைனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    மன்னர் சார்லஸ் தெரிவித்திருப்பதாவது:

    எந்த வித முன்னறிவிப்போ, தூண்டுதலோ இன்றி ஒரு தாக்குதலை உக்ரைன் சந்தித்தது.

    அந்நாட்டு மக்கள் வார்த்தையில் விவரிக்க முடியாத அளவு துன்பத்தையும், அடக்குமுறையையும் சந்தித்து வருகின்றனர்.

    இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து அளித்து வரும் உதவிகளை வரவேற்கிறேன். இங்கிலாந்தில் உக்ரைன் வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ராணுவ பயிற்சியையும் பாராட்டுகிறேன்.

    அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு நிலவுகின்ற நேரத்தில் உக்ரைன் மக்களுக்கு சர்வதேச நாடுகள் உதவுவது பாராட்டத்தக்கது.

    மிகவும் நெருக்கடியான காலகட்டத்திலும் உக்ரைன் மக்கள் அசாத்திய மன உறுதியையும், வீரத்தையும் காட்டி வருவதை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு மன்னர் சார்லஸ் தெரிவித்தார்.

    பிப்ரவரி 6 அன்று மன்னர் சார்லசுக்கு புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்டதும், அவர் பூரண நலம் பெற உலகெங்கும் உள்ள மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு செய்தி அனுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

    • பிப்ரவரி 6 அன்று மன்னர் சார்லசுக்கு கேன்சர் இருப்பதாக அரண்மனை தெரிவித்தது
    • உலகெங்கிலும் இருந்து 7 ஆயிரத்திற்கும் மேலான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது

    கடந்த பிப்ரவரி மாதம், இங்கிலாந்து மன்னரான மூன்றாம் சார்லஸ், புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் அரண்மனை அதிகாரபூர்வமாக கடந்த பிப்ரவரி 6 அன்று தெரிவித்தது. ஆனால், எந்த வகையான கேன்சர் என்பது பற்றியோ உடலின் எந்த பாகத்தில் உள்ளது என்பது குறித்தோ அரண்மனை அலுவலகம் தகவல் வெளியிடவில்லை.

    மேலும், மன்னர் சார்லஸ் இதனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், அவர் புற்று நோய்க்கான சிகிச்சை பெற தொடங்கி விட்டதாகவும் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகெங்கும் உள்ள பல முக்கிய தலைவர்கள் செய்தி அனுப்பி வந்தனர்.

    மேலும், பல இங்கிலாந்து மக்களும் மன்னர் சார்லஸ் நலம் பெற அவருக்கு கடிதங்கள் அனுப்பி வருகின்றனர்.

    இதுவரை உலகெங்கிலும் இருந்து 7 ஆயிரத்திற்கும் மேலான கடிதங்கள் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    குறிப்பாக, குழந்தைகள் தங்கள் கைப்பட எழுதி மற்றும் வரைந்து அனுப்பியுள்ள கடிதங்கள் தினந்தோறும் அரண்மனையில் குவிகின்றன.


    இது குறித்து மன்னர் சார்லஸ் தெரிவித்திருப்பதாவது:

    இது போன்ற அன்பான எண்ணங்கள்தான் எனக்கு பெரும் ஆறுதலையும், ஊக்கத்தையும் தருகின்றன. பல கடிதங்களை படிக்கும் போது எனக்கு கண்களில் நீரே வந்து விட்டது.

    நான் நலமடைய விரும்பும் அனைவருக்கும் என் நன்றி.

    எனக்காக நேரம் ஒதுக்கி தங்களின் அன்பான வார்த்தைகளால் கடிதம் எழுதிய அனைவருக்கும் நன்றி.

    இவ்வாறு சார்லஸ் தெரிவித்தார்.

    • மண்வெட்டியினால் தோண்டும் போது அது ஒரு பொருளின் மீது இடித்தது
    • 15 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், வெடிகுண்டு நிபுணர்கள் வந்திறங்கினர்

    இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள டேவன் (Devon) பிராந்தியத்தில் உள்ளது பிளைமவுத் (Plymouth) துறைமுக நகரம்.

    இந்நகரின் செயின்ட் மைக்கேல் அவென்யு (St. Michael Avenue) பகுதியில் வசித்து வந்த ஒருவர் தனது மகளின் வீட்டின் பிற்பகுதியை விரிவாக்கம் செய்ய கட்டுமான நிபுணருடன் ஆலோசித்து பணிகளை தொடங்கினார்.

    அப்போது மண்வெட்டியினால் அங்கு தோண்டும் போது ஒரு பொருளின் மீது அது இடித்தது. உடனடியாக வெளியே எடுக்க முடியாத அளவிற்கு பெரிதாக இருந்த அந்த பொருளை நீண்ட முயற்சிக்கு பிறகே அவர்களால் காண முடிந்து.

    தனது மனைவியின் ஆலோசனையின் பேரில், பெரிய உலோக உருண்டை வடிவிலான அந்த பொருளின் புகைப்படங்களை அந்த உரிமையாளர், காவல் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பினார்.

    சுமார் 15 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், அவர் வீட்டிற்கு காவல்துறை அதிகாரிகளும், வெடிகுண்டு நிபுணர்களும் வந்திறங்கினர்.


    அந்த பொருள் ஒரு "வெடிகுண்டு" என்றும் அதை செயலிழக்க செய்யும் நடவடிக்கைகளுக்காக வந்துள்ளதாக தெரிவித்த அவர்கள், அந்த வீட்டின் சுற்றுப்பகுதியில் உள்ள அனைவரையும் தொலைதூரம் போகச் சொல்லி உத்தரவிட்டனர். அப்பகுதி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது.

    அந்த உலோக பொருள் இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளில் ஒன்று என்பதால், அதனை அங்கேயே வெடிக்க முயன்றால் பல வீடுகள் நாசமடையலாம் என்பதால் நீண்ட ஆலோசனைக்கு பிறகு அந்த வெடிகுண்டை அந்த தோட்டத்தில் இருந்து, மிக பத்திரமாக வெளியே எடுத்து, ராணுவ வாகனத்தில் ஏற்றி, சுற்றி ஏராளமான மணல் மூட்டைகளை அடுக்கி, ஆட்கள் நடமாட்டமில்லாத சாலைகளின் வழியே எடுத்து சென்று, பின் ஒரு பெரிய காற்றடைத்த ரப்பர் படகில் ஏற்றி, கடலில் நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


    வெடிகுண்டு நிபுணர்களின் மேற்பார்வையில், எந்த பாதிப்புமின்றி அந்த குண்டு கடலில் வெடிக்க செய்யப்பட்டது.

    சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகே அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

    வெடிகுண்டு வெடித்தால் அதன் தாக்கம் 4,300 கட்டிடங்களுக்கும், பொதுமக்களில் 10,320 பேருக்கும் இருந்திருக்கும் என பிளைமவுத் நகர கவுன்சில் தெரிவித்தது.

    500 கிலோ எடையுள்ள இந்த வெடிகுண்டு இரண்டாம் உலக போரில் இங்கிலாந்தில் வீசப்பட்டு வெடிக்காத பல குண்டுகளில் ஒன்று என வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர்.

    • ரஷியாவிற்கு எதிராக பல வர்த்தக கட்டுப்பாடுகளை இங்கிலாந்து கொண்டு வந்தது
    • "உக்ரைனுக்கு இன்றும் என்றும் ஆதரவு தொடரும்" என்றார் ரிஷி சுனக்

    இன்றுடன், "சிறப்பு ராணுவ நடவடிக்கை" (special military operation) எனும் பெயரில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்து, 2 வருடங்கள் ஆகின்றன.

    ரஷியாவை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது.

    போர் நிறுத்தம் மற்றும் படைகளை உக்ரைனிலிருந்து திரும்ப பெறுவது குறித்து பல உலக நாடுகள் கடந்த பல மாதங்களாக முன் வைத்த கோரிக்கைகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புறக்கணித்து வந்தார்.

    இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன் ரஷியாவிற்கு எதிராக மேலும் பல பொருளாதார மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகளை இங்கிலாந்து கொண்டு வந்தது.

    பல்வேறு காரணங்களால் அமெரிக்காவிலிருந்து உக்ரைனுக்கு கிடைத்து வந்த பொருளாதார மற்றும் ராணுவ உதவிகள் தொடர்ந்து கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உக்ரைனை தொடர்ந்து ஆதரிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமது நாடு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் ரிஷி சுனக், உக்ரைனுக்கு சுமார் ரூ. 2600 கோடி (250 மில்லியன் பவுண்ட்) மதிப்பிற்கு ராணுவ தளவாட உதவிக்காக நிதி ஒதுக்கியுள்ளார்.

    இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்ததாவது:

    போர் தொடங்கி 2 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் ரஷியாவின் ஆதிக்க மனப்பான்மையை எதிர்க்கும் நிலைப்பாட்டில் இங்கிலாந்து மேலும் உறுதியாக உள்ளது.

    என்றுமே சர்வாதிகாரம் வெற்றி பெறுவதில்லை.

    நாங்கள் இன்றும் உக்ரைன் பக்கமே நிற்கிறோம்; தொடர்ந்தும் நிற்போம்.

    இதற்காக எத்தனை நாட்கள், என்னென்ன செய்ய வேண்டுமோ, அனைத்தையும் செய்வோம்.

    இவ்வாறு ரிஷி சுனக் தெரிவித்தார்.

    • விற்பனைத்தொகையில் 1000 யூரோக்களை சிறுவனின் பெற்றொர் நன்கொடையாக வழங்கினர்
    • ஆஸ்டனை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக ஆஸ்டனின் தாயார் கூறினார்

    இங்கிலாந்தின் நார்தாம்ப்டன் (Northampton) பகுதியை சேர்ந்த ஆஸ்டன் (Aston) எனும் சிறுவன், நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு உதவுவதற்காக, "திங்க்ஸ் அபவுட் ஸ்பேஸ்" (Things About Space) எனும் புத்தகத்தை தனது 8-வது வயதில் எழுதி, படிப்பதற்கு சிரமம் உள்ளவர்களுக்கு அதன் ஒலி பதிப்பையும் வெளியிட்டு புகழ் பெற்றான்.

    ஆஸ்டனின் புத்தகம், 700 பிரதிகளுக்கும் மேல் விற்று தீர்ந்தது.

    தற்போது 11-வயது ஆகும் ஆஸ்டன் எழுதிய புத்தகத்தின் விற்பனை மூலம் கிடைத்த தொகையில் 1000 யூரோக்களை இங்கிலாந்து வானியல் நிறுவனத்திற்கு நன்கொடையாக ஆஸ்டனின் பெற்றோர் வழங்கினர்.

    ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அந்த புத்தகத்தின் பல பிரதிகளை வாங்கி உள்ளூர் பள்ளிகளில் வினியோகித்தார்.

    ஆஸ்டன் முதலில் எழுதிய பதிப்புகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால், கடந்த ஆண்டு, அதன் இரண்டாவது பதிப்பை மீண்டும் வெளியிட வேண்டியிருந்தது.

    "பல நண்பர்கள் அந்த புத்தகத்தைப் பற்றி கேட்டது எனக்கு மிகவும் பிடித்தமாக இருந்தது. புத்தகம் எழுதி வெளியிடுவது எப்படி என கேட்பவர்களுக்கு நான் சொல்வது, மனது வைத்தால் யாராலும் இதை செய்ய முடியும் என்பதுதான். என்றாவது ஒரு நாள் எதிர்காலத்தில் விண்வெளியில் பயணம் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்" என்று ஆஸ்டன் வானொலி பேட்டியில் கூறினார்.

    "ஆஸ்டனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று ஆஸ்டனின் தாயார் கூறினார்.

    பிரிட்டிஷ் விண்வெளி வீரர் டிம் பீக் (Tim Peake) ஆஸ்டனின் புத்தகத்தை குறித்து கேள்விப்பட்டு அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியதுடன், ஆஸ்டனின் புத்தகத்தின் பிரதியில் கையெழுத்திட்டு வாழ்த்தினார்.

    ஆஸ்டனுக்கு சில குழந்தைகளை தாக்கும் அபூர்வ வளர்ச்சி குறைபாட்டு நோய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இட்லி, தோசை, வடை, பொங்கல் என தென்னிந்திய உணவு வகைகளை வெளிநாட்டுகாரர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
    • வீடியோ வைரலாகி 18 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.

    தென்னிந்திய உணவு வகைகளுக்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது. குறிப்பாக இட்லி, தோசை, வடை, பொங்கல் என தென்னிந்திய உணவு வகைகளை வெளிநாட்டுகாரர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

    இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சமையல்கலைஞரான ஜேக் ட்ரையன் என்பவர் தமிழ்நாட்டின் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றான பொரியலை தயார் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இன்ஸ்டாகிராமில் 'ட்ரையன் கிரீன் பீன் பொரியல்' என்ற தலைப்பில் அவர் பாரம்பரிய உணவு வகையான பொரியலை தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. அந்த வீடியோவில், ட்ரையன் தனது பார்வையாளர்களை அன்புடன் வணக்கம் என வாழ்த்து சொல்லி தொடங்குகிறார். பின்னர் கறிவேப்பிலை, துருவிய தேங்காய், பருப்பு, வதக்கிய காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்து பொரியலை தயாரிக்கும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது.

    இந்த வீடியோ வைரலாகி 18 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.

    ×