search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அமைச்சரவை"

    • அன்பில் மகேஷ்-க்கு ஒதுக்கப்படும் எனத் தகவல் வெளியானது.
    • ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

    அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் அவர் வகித்து வந்த உயர் கல்வித்துறை வேறு அமைச்சருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட இருந்தது. தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ்-க்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கதர் கிராம தொழில்கள் துறை அமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரண்டரை ஆண்டு காலத்தில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது.
    • ஜனவரியில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அது புரிந்துணர்வு ஒப்பந்தமாக கையெழுத்தாகும்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அனைத்து அமைச்சர்களும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    அந்த முடிவுகள் பற்றி தலைமைச் செயலகத்தில்பத்திரிகையாளர்களுக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய போட்டி போடுகின்றன. அந்த வரிசையில் புதிய தொழில் நிறுவனங்களும், ஏற்கனவே தொழிற்சாலைகளை நடத்தி வரும் நிறுவனங்களும் புதிய முதலீடுகளை செய்வதற்காக அரசுக்கு முன்மொழிவுகளை அளித்தனர்.

    அதற்கான அமைப்பு முறைகளான தொகுப்பு சலுகைகளை வழங்குவது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. செயின்ட் கொபைன், ஹான்பி டெவலப்மென்ட், ஹைக்வா டெக்னாலஜிஸ், மைலான் லேபரட்ரீஸ், ஏ.கே.டி.பி.எல்., செயன்யுபா, சுந்தரம் பாசினர்ஸ், இன்டர்நேசனல் ஏரோஸ்பேஸ் ஆகிய 8 நிறுவனங்கள் தொகுப்பு சலுகைகளை அமைப்பு முறையில் பெறுவதற்கும், தொழிற்சாலை விரிவாக்க பணிகளுக்கும் கருத்துரு ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கோவை ஆகிய மாவட்டங்களில் ரூ.7,108 கோடி முதலீடுகளில் 22 ஆயிரத்து 536 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டங்களுக்கு தொகுப்பு சலுகைகளை வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    மின்சார வாகன பாகங்கள், காலணி உற்பத்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், கண்ணாடி பொருட்கள், ஆராய்ச்சி மேம்பாடு ஆகிய துறைகளில் முதலீடுகள் செய்ய உள்ளனர். ஜனவரியில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அது புரிந்துணர்வு ஒப்பந்தமாக கையெழுத்தாகும்.

    தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை 2023-க்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 4 பெரிய துறைமுகங்களும், 17 சிறிய துறைமுகங்களும் உள்ளன. 2007-ம் ஆண்டு இருந்த சிறுதுறைமுகங்கள் கொள்கை தற்போது மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கையாக மாற்றப்பட்டுள்ளது. கடல் சார் வணிகத்தில் முதலீடுகளை ஈர்க்க பெரிய அளவில் போட்டிகள், மாநிலங்களுக்கு இடையே உள்ளன. தனியார் துறை முதலீடுகளை ஈர்க்கும் அளவில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

    கப்பல் மறுசுழற்சி, மிதவை கலங்கள் கட்டுதல், துறைமுக மேம்பாடு, வணிக ரீதியான அனுமதிகள் உள்ளடக்கிய கொள்கை அது. பெரிய கப்பல்களை நிறுத்த பெரிய முதலீடு அவசியம். கடல் புறம்போக்கு பகுதிகளை நீண்டகால குத்தகைக்கு விடவும் இந்த கொள்கை வழிவகுக்கும். நீர் சவால் விளையாட்டுகள், பசுமை துறைமுக திட்டங்கள், கடல்சார் வளர்ச்சி ஆகியவை அதில் உள்ளடக்கமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல புதிய தொழில்களை தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களுக்கான விரிவாக்கத்திற்கு அனுமதி கேட்டும் தமிழக அரசுக்கு பல விண்ணப்பங்கள் வந்துள்ளன.
    • உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்கு முன்பு சில தொழில்களுக்கான அனுமதியை அமைச்சரவை வழங்க வேண்டியுள்ளது.

    சென்னை:

    தமிழக தொழில்துறை சார்பில் வரும் ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில் பல புதிய தொழில்களை தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களுக்கான விரிவாக்கத்திற்கு அனுமதி கேட்டும் தமிழக அரசுக்கு பல விண்ணப்பங்கள் வந்துள்ளன.

    இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக அனைத்து அமைச்சருக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 31-ந் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்கு முன்பு சில தொழில்களுக்கான அனுமதியை அமைச்சரவை வழங்க வேண்டியுள்ளது. இந்த கூட்டத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • முதியோர் உதவித்தொகையாக தற்போது 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
    • மகளிர் உரிமைத்தொகை இவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகையை 1,200 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    இதேபோல், கைம்பெண் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான மாத ஓய்வூதியமும் உயர்த்தப்பட்டுள்ளது.

    மகளிர் உரிமைத் தொகை 1000 ஆயிரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது முதியோர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் முதியோர், கைம்பெண், ஆதரவற்ற பெண்களுக்கான உயர்த்தப்பட்ட மாத ஓய்வூதியம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம்கள் சென்னையில் நடந்து வருகிறது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    அமைச்சரவை கூட்டத்தில் தொழில் துறை உள்பட பல முக்கிய துறைகளுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பாக ஒரகடத்தில் அமைய இருக்கும் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி கொடுப்பது பற்றி பேசப்பட்டது.

    மேலும் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் தற்போதைய நிலை தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. தற்போதைய அரசியல் சூழ்நிலை, மணிப்பூர் விவகாரம், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    அமைச்சரவை கூட்டம் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் தங்கம் தென்னரசு அது தொடர்பான தகவல்களை நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியங்கள் உயர்த்தப்படுகிறது. முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    முதியோர் மாத உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படுகிறது. முதியோர் உதவித்தொகை மூலம் 30 லட்சம் பயனாளிகள் பலன் பெறுவார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.845.91 கோடி கூடுதல் செலவினம் ஆகும்.

    பல்வேறு துறைகளில் உள்ள பயனாளிகளுக்கு இது சென்று சேரும். தொழிலாளர் நல வாரியம், கட்டுமான தொழிலாளர் வாரியம் உள்ளிட்ட துறைகளில் உள்ள பயனாளிகள் பலன் பெறுவார்கள். கைம்பெண் மாத உதவித்தொகை ரூ.1,200 ஆக உயர்த்தப்படுகிறது.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம்கள் சென்னையில் நடந்து வருகிறது. மற்ற இடங்களில் 24-ந்தேதி தொடங்க உள்ளது. இந்த முகாம்கள் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    ரேசன் கடைகள் ஒரு அலகுகளாக வைத்துக்கொண்டு முதல் கட்டமாக 21,031 முகாம்கள், 2-வது கட்டமாக 14,194 என 35 ஆயிரத்து 925 முகாம்கள் ஆகஸ்டு மாதத்துக்குள் 3 கட்டங்களாக நடத்தப்படும்.

    விண்ணப்பங்கள், டோக்கன் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது சுமார் 50 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. முகாம்கள் சுமூகமாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதில் அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மணிப்பூர் விவகாரம் பற்றி அ.தி.மு.க. இதுவரை வாய் திறக்காதது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.

    இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதியோர் உதவித்தொகையாக தற்போது 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது
    • மகளிர் உரிமைத்தொகை இவர்களுக்கு வழங்கப்படமாட்டாது

    தமிழக அரசு சார்பில் முதியோர்களுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதை 1200 ரூபாயாக உயர்த்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    மகளிர் உரிமைத் தொகை 1000 ஆயிரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது முதியோர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
    • புதிய தொழில்கள், தொழில் விரிவாக்கத்திற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

    கலைஞர் உரிமைத்தொகை திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களின் செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.

    புதிய தொழில்கள், தொழில் விரிவாக்கத்திற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளது. கவர்னர் செயல்பாடு, அமலாக்கத்துறை சோதனை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

    அமலாக்கத்துறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் கோருவது குறித்தும் பரிசீலிக்க வாய்ப்பு உள்ளது.

    • கவர்னரின் செயல்பாடுகள், அமலாக்கத்துறை சோதனைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
    • அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு, மத்திய அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி கைது மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை என தமிழக அரசியலில் பரபரப்பு நிலவும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவது, கவர்னரின் செயல்பாடுகள் மற்றும் அமலாக்கத்துறை சோதனைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும், அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு, மத்திய அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது. அது குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    • மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.
    • பாஜகவுக்கு எதிரான கட்சிகள் பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தின.

    சென்னை:

    தமிழகத்தில் வரும் 22ம் தேதி அமைச்சரவை கூடுகிறது. 22ம் தேதி காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை, ஆளுநர் செயல்பாடு, அமலாக்கத்துறை நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தின. இதில் 26 கட்சிகள் பங்கேற்றன. இந்த கட்சிகளுக்கான கூட்டணி பெயர் அறிவிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். இதேபோல் தமிழகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை, செந்தில் பாலாஜியிடம் நடைபெற்று வரும் விசாரணை என அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழக அமைச்சரவை கூடுகிறது.

    • முன்னாள் மத்திய மந்திரியும் தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
    • பூண்டி கலைவாணன் எனது நண்பர்.

    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரியும் தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது குறித்து டி.ஆர்.பாலு கூறுகையில், "எங்கள் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லெண்ணங்களை, எதிர்பார்ப்புகளை மிக சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்ற வகையில் நல்ல அமைச்சர் என்ற பெயரை டி.ஆர்.பி.ராஜா எடுக்க வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்" என்றார்.

    அவரிடம் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட சிலர் அதிருப்தியில் இருப்பதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டி.ஆர்.பாலு கூறுகையில், "பூண்டி கலைவாணன் எனது நண்பர். எங்கள் மாவட்ட செயலாளர். டி.ஆர்.பி. ராஜா அமைச்சர் ஆவதற்கு அவரும் ஒரு காரணம்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
    • தங்கம் தென்னரசுக்கு பழனிவேல் தியாகராஜன் வகித்து வந்த நிதி இலாகா வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை :

    புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவருக்கான இலாகா ஒதுக்கீட்டு விவரத்தை கவர்னரின் முதன்மை செயலாளர் அறிவிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டார்.

    அதன்படி புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் தொழில்துறை மந்திரி என்று அழைக்கப்படுவார்.

    இதுவரை தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பழனிவேல் தியாகராஜன் வகித்து வந்த நிதி இலாகா வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் திட்டம், மனிதவள மேம்பாடு, பென்ஷன், புள்ளியியல் மற்றும் தொல்லியல் துறைகளையும் தங்கம் தென்னரசு கவனிப்பார். அவர் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

    செய்தித்துறை அமைச்சராக இருந்த சாமிநாதன் வசம் கூடுதல் இலாகாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர் தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தகவல், பட தொழில்நுட்பம் உள்ளிட்ட பொறுப்புகளை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இனி செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

    பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறை விலக்கப்பட்டுள்ளது. அவருக்கு தகவல் தொழில் நுட்பம், டிஜிட்டல் சேவை துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவர் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

    இதுவரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜனிடம் இருந்து அந்த துறை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு பால்வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் பால்வளத்துறை அமைச்சராக அழைக்கப்படுவார்.

    இவ்வாறு கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று நேற்று முன்தினம் இரவு கவர்னர் மாளிகையில் இருந்து அமைச்சரவை மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
    • கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் இருக்கைகள் போடப்பட்டு அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டன.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ந் தேதி பதவி ஏற்றது.

    அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 35 பேர் பொறுப்பில் உள்ளனர்.

    கடந்த ஆண்டு 2 தடவை அமைச்சரவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றி அமைத்தார். முதல் மாற்றத்தின்போது ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்து துறை சிவசங்கருக்கு மாற்றப்பட்டது.

    2-வது முறை அமைச்சரவை மாற்றத்தின் போது உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

    மேலும் கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. இது தவிர வீட்டு வசதி துறையில் இருந்து சி.எம்.டி.ஏ. பிரிக்கப்பட்டு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவிடம் கொடுக்கப்பட்டது.

    தி.மு.க. அரசு 3-வது ஆண்டை தொடங்கியுள்ள நிலையில் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் வரும் என்று தகவல்கள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரை விடுவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். அதேசமயத்தில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி எம்.எல்.ஏ.வு மான டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று நேற்று முன்தினம் இரவு கவர்னர் மாளிகையில் இருந்து அமைச்சரவை மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து புதிய அமைச்சர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் இருக்கைகள் போடப்பட்டு அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டன.

    இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு புதிய அமைச்சர் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகைக்கு 10.23 மணிக்கு வருகை தந்தார். அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சரியாக 10.29 மணிக்கு தர்பார் மாளிகைக்கு கவர்னர் வந்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் தேசியகீதம் இசைக்கப்பட்டது. பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

    மேடையில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் இறையன்பு இருந்தனர். 10.31 மணிக்கு டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி கவர்னரை தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து டி.ஆர்.பி. ராஜா எழுந்து பதவியேற்க தயாரானார். 10.34 மணிக்கு அவருக்கு கவர்னர் ஆர்.என். ரவி அமைச்சராக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது:-

    டி.ஆர்.பி.ராஜா எனும் நான் சட்டப்படி அமைக்கப் பெற்ற இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும் தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக உண்மையாகவும் உளச்சான்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியலமைப்பிற்கும், சட்டத்துக்கும் இணங்க அச்சமும் ஒருதலை சார்பும் இன்றி விருப்பு வெறுப்பை விலக்கி பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்.

    இவ்வாறு டி.ஆர்.பி.ராஜா கூறி பதவியேற்றுக்கொண்டார். அதற்கான ஆவணத்திலும் அவர் கையெழுத்திட்டார்.

    இதையடுத்து அவர் கவர்னரிடமும், முதலமைச்சரிடமும் வாழ்த்து பெற்றார். அவர்களுக்கு டி.ஆர்.பி.ராஜா பூங்கொத்துகளை வழங்கி வணக்கம் தெரிவித்தார்.

    பதிலுக்கு கவர்னரும், முதலமைச்சரும் புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார்கள். அதன்பிறகு கவர்னர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிரித்தபடி பூங்கொத்து வழங்கி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    10.38 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுபெற்றது. இறுதியில் தேசியகீதம் பாடப்பட்டது. 8 நிமிடங்களில் பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவுபெற்றது. அதன்பிறகு முதலமைச்சரும், அமைச்சர்களும் கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

    நிகழ்ச்சியில் அனைத்து அமைச்சர்கள், சபாநாயகர் அப்பாவு, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு எம்.பி., மேயர் பிரியா, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உதயசந்திரன், கார்த்திகேயன், கிருஷ்ணன், டி.ஜி.பி.சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றனர். புதிய அமைச்சராக பதவி ஏற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×