search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anmigam"

    • செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வேதமலை உள்ளது.
    • முப்பத்துமுக்கோடி தேவர்கள் முதலானோர் பூஜித்த பெருமைக்குரியது.

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வேதமலை மீது அமைந்துள்ள சொக்கநாயகி உடனாய வேதகிரீஸ்வரர் கோவிலும், மலை அடிவாரத்தில் தாழக்கோவில் எனப்படும் திரிபுரசுந்தரி உடனாய பக்தவத்சலேஸ்சவரர் கோவிலும் இருக்கின்றன.

    திருக்கழுக்குன்றத்திற்கு, கழுகாசலம், நாராயணபுரி, பிரம்மபுரி, இந்திரபுரி, உருத்திரகோடி, நந்திபுரி மற்றும் பட்சிதீர்த்தம் என பல சிறப்புப் பெயர்கள் உண்டு.

    வேதமலையின் மீது 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த தலம் பிரம்மன், இந்திரன், முப்பத்துமுக்கோடி தேவர்கள் முதலானோர் பூஜித்த பெருமைக்குரியது. மேலும் கழுகுகள் பூஜித்த பெருமையும் கொண்டது.

    நான்கு வேதங்களும் மலையாக அமைந்ததால், இந்த மலைக்கு 'வேதமலை', 'வேதகிரி' என்று பெயர். வேதகிரியின் மீது எழுந்தருளி அருள்பாலிப்பதால் இறைவனுக்கு வேதகிரீஸ்வரர் என்ற திருநாமம் உண்டானது.

    வேதகிரீஸ்வரரை வணங்கி அருள்பெற 567 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மலைப்பாதையில் ஏறும் போது வலது புறத்தில் கம்பாநதி சன்னிதி உள்ளது. மலைக் கோவில் கருவறையில் இறைவன் சுயம்புத் திருமேனியாக வேதகிரீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார்.

    பிரகாரத்தில் நர்த்தன விநாயகரும், சொக்கநாயகி அம்பாளும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வெளிப்பிரகார கருவறை கோஷ்டங்களில் புடைப்புச் சிற்பங்களாக அர்த்தநாரீஸ்வரர், சோமாஸ்கந்தர், யோக தட்சிணாமூர்த்தி உள்ளனர்.

    வழக்கமாக சிவாலயங்களில் கருவறைக்கு எதிரில் நந்தி இருக்கும். ஆனால் இத்தலத்தில் கருவறைக்கு எதிரில் பலிபீடமும், கொடிமரமும் மட்டுமே உள்ளன.


    பட்சி தீர்த்தம்

    கிரேதா யுகத்தில் சண்டன் - பிரசண்டன், திரேதா யுகத்தில் சம்பாதி - சடாயு, துவாபர யுகத்தில் சம்புகுந்தன் - மாகுந்தன் ஆகியோர் சாபத்தினால் கழுகுகளாக உருமாறி வேதகிரீஸ்வரரை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தார்கள்.

    கலியுகத்தில் பூஷா - விருத்தா ஆகிய முனிவர்கள், இத்தல இறைவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்கள் இருவரும் இத்தல இறைவனிடம் சாயுட்சய வரம் வேண்டும் என்று கேட்டதால், இறைவனின் அருளாசிப்படி கழுகாக மாறினர்.

    பின்னர் பல ஆண்டு காலம் பகல் வேளையில் வேதமலை வந்து இறைவனை வழிபட்டு அமுதுண்டு வந்தனர். இரண்டு கழுகுகள் வலம் வந்த காரணத்தால் இந்த ஆலயம் 'பட்சி தீர்த்தம்' என்ற பெயர் பெற்றது.


    சங்கு தீர்த்தம்

    மார்க்கண்டேய முனிவர் இவ்வாலயத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, சிவ பூஜை செய்ய முற்பட்டார். அப்போது 'ஓம்' என்ற ஒலியுடன் சங்கு ஒன்று தீர்த்தத்தில் தோன்றியது. அந்த சங்கைக் கொண்டு சிவபெருமானை, முனிவர் பூஜித்தார்.

    அன்று முதல் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த குளத்தில் சங்கு பிறக்கும் அதிசயம் நிகழ்ந்து வருகிறது. இதனால் இத்தீர்த்தம் 'சங்கு தீர்த்தம்' என்று அழைக்கப்படலாயிற்று. இத்தீர்த்தத்தில் கடந்த மார்ச் மாதம் சங்கு தோன்றியது குறிப்பிடத்தக்கது.


    வேதமலையின் சிறப்பு

    வேதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ள வேதமலையானது, சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. பல அரிய மூலிகைகள் நிறைந்த இந்த மலையை பவுர்ணமி நாளில் வலம் வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

    பவுர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த மலையை வலம் வருகிறார்கள். வேதகிரீஸ்வரரை தரிசிக்க வேதமலையில் ஏறும்போது மலைப்பாதையில் இடை இடையே ஓய்வெடுத்துச் செல்ல சிறு மண்டபங்கள் உள்ளன.

    இந்த திருக்கோவிலில் இறைவனை தரிசிக்க ஏறிச் செல்ல ஒரு மலைப்பாதையும், தரிசனத்தை முடித்துக் கொண்டு இறங்கி வர ஒரு பாதையும் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆலயமானது தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    செங்கல்பட்டில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் செல்லும் பேருந்துகள், திருக்கழுக்குன்றம் வழியாகவே செல்லும்.

    • அம்மனுக்கு பூரம் நட்சத்திரம் சிறப்புடையது.
    • பக்தர்களுக்கு வளையல், குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும்.

    பெரியபாளையம்:

    பூரம் நட்சத்திரம் என்பது ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் இருந்து சக்தி வெளிப்பட்ட நட்சத்திரம் ஆகும். சிவபெருமானுக்கு திருவாதிரை நட்சத்திரம் போன்று அம்மனுக்கு பூரம் நட்சத்திரம் சிறப்புடையாது.

    இந்ந நிலையில் அம்மன் கோவில்களில் நாளை ஆடிப்பூரம் விழா விமரிசையாக நடைபெற உள்ளது.

    திருவள்ளூரில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் உற்சவர் திருபுரசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் வளையல் பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்.

    வழிபாடு முடிந்ததும் பக்தர்களுக்கு வளையல், குங்கும பிரசாதமாக வழங்கப்படும். புட்லூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டியும் கர்ப்பிணி பெண்கள் அம்மனை வழிபட்டு வளையல் பிரசாதத்தை வாங்கி செல்வார்கள்.

    மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் விழா நேற்று தொடங்கியது. 2-வது நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று ஆடிப்பூரம் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப் பட்டது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு நாளை காலை அம்மனுக்கு 1008 கலச அபிஷேகம் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெற உள்ளது. திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    பெரியபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பவானி அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா தற்போது விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நாளை காலை சர்வ சக்தி மாதங்கி அம்மனுக்கு காயத்ரி ஹோமம், துர்கா ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.

    இதன் பின்னர் 108 பால்குட அபிஷேகம் நடக்கிறது. மூலவருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • முருகப்பெருனை `குகன்’ என்றும் அழைப்பார்கள்.
    • சிவலிங்கம் 5½ அடி உயரம் கொண்டது.

    கோவில் தோற்றம்

    கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகிலேயே இருக்கிறது இந்த குகநாதீஸ்வரர் கோவில். முருகப்பெருமானை `குகன்' என்றும் அழைப்பார்கள். அந்த குகன் வழிபட்ட சிவபெருமான் அருளும் ஆலயம் என்பதால், இது 'குகநாதீஸ்வரர் கோவில்' என்று அழைக்கப்படுகிறது.

    இவ்வாலயத்தில் இருக்கும் இறைவனுக்கு, `கோனாண்டேஸ்வரன்', `குகனாண்டேஸ்வரன்' என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இவ்வாலயத்தின் கருவறை குகை போன்று காணப்படுவதாலும், பிரகாரம் குறுகி இருப்பதாலும் இவ்வாலய இறைவன் `குகநாதீஸ்வரர்' என்று அழைக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

    இந்த கோவில் கருவறை, அர்த்த மண்டபம், முக மண்டபம், உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் என்னும் அமைப்பைக்கொண்டது. கோவிலின் முன்பு சிறிய தோட்டம் இருக்கிறது. இவ்வாலய மூலவர் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் சிவாலயங்களிலேயே, இந்த ஆலயத்தில் இருக்கும் சிவலிங்கம்தான் மிகப்பெரியது என்று சொல்கிறார்கள். இவ்வாலய சிவலிங்கம் 5½ அடி உயரம் கொண்டது. இங்கு அருள்பாலிக்கும் அன்னையின் திருநாமம், 'பார்வதி' என்பதாகும்.

    ஆலய தல விருட்சமாக வில்வ மரம் இருக்கிறது. இவ்வாலயத்தில் தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், கஜலட்சுமி, வள்ளி-தெய்வானை உடனாய முருகப்பெருமான், துர்க்கை, நவக்கிரகங்கள், காலபைரவர் ஆகியோர் பரிவார தெய்வங்களாக அருள்கின்றனர்.

    இங்குள்ள கல்வெட்டு ஒன்று, இவ்வாலய இறைவனை, `ராஜராஜப் பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டு புறத்தாயநாட்டு அழிக்குடி ராஜராஜேஸ்வர முடையார்' என்று நீண்ட அடைமொழியோடு குறிப்பிடுகிறது.

    இந்த கல்வெட்டு 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், பிற்காலச் சோழர்களின் ஆட்சி கன்னியாகுமரியில் நிலவியபோது, இந்த குகநாதீஸ்வரர் கோவிலுக்கு, அவர்கள் திருப்பணி செய்ததும் இந்த கல்வெட்டில் காணப்படுகிறது.

    10-ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த ஆலயத்தில் வழிபாடு நடந்திருக்கலாம் என்கிறார்கள், ஆய்வாளர்கள். இவ்வாலயத்தில் முதலாம் ராஜேந்திரன், இரண்டாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன் ஆகிய மன்னர்கள் கால கல்வெட்டுகளும் உள்ளன.

    கோடை வெயில் அதிகரிக்கும் காலத்தில் இத்தல இறைவனுக்கு 1008 இளநீர் அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேக இளநீர், பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் 1008 சங்காபிஷேகம் நடைபெறும். அன்று கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், கோமாதா பூஜை, சங்கு பூஜையும் நடக்கும்.

    ஐப்பசி மாத பவுர்ணமியில் இத்தல இறைவனை வழிபட்டால் குடும்ப பிரச்சனை நீங்கும் என்கிறார்கள். கார்த்திகை சோம வாரத்தில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

    இவ்வாலயத்தில் காரைக்கால் அம்மையாருக்கு தனிச்சன்னிதி உள்ளது. ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமியில் காரைக்கால் அம்மையாருக்கு இத்தலத்தில் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது.

    மனமுருகி வேண்டும் எல்லா பிரார்த்தனைகளையும், இத்தல இறைவன் நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். திருமணத் தடை நீக்கும் ஆலயமாகவும் இத்தலம் உள்ளது.

    தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் இவ்வாலயம் திறந்திருக்கும்.

    • சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
    • சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரமோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆடிப்பூர பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு பராசக்தி அம்மன் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் கோமதி குணசேகரன், சினம் பெருமாள், மேலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர விழாவில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் மாடவீதி உலா நடைபெறும்.

    10-ம் நாள் கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். அதனை தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெறும். 

    • கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
    • அதிகாலை முதலே பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

    திருத்தணி:

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நேற்று ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. இன்று ஆடி பரணியை முன்னிட்டு அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலில் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.

    வெளியூர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் மயில்காவடி, புஷ்பக் காவடி, பன்னீர் காவடிகள் சுமந்தும். உடலில் வேல், அம்பு அலகு குத்தியும் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    குழந்தைகள் முதல் முதியவர் வரை பம்பை உடுக்கை முழங்க கிராமியக் கலையோடு ஆடி பாடி சென்று முருகனை வழிபட்டனர். இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காட்சி அளித்தது.

    பக்தர்கள் காவடி செலுத்துவதற்கு தனி மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏற்கனவே காவடி செலுத்த கட்டணம் ரத்து செய்யப் பட்டு இருந்ததை பக்தர்கள் வரவேற்று உள்ளனர்.

    பக்தர்கள் கூட்டத்தால் மலைக்கோவிலுக்கு செல்ல வாகனங்கள் அனுமதிக் கப்படவில்லை. கோவில் வாகனம் மட்டும் இயக்கப்பட்டது. பக்தர்கள் சரவணப் பொய்கை திருக்குளத்தில் புனித நீராடி படிக்கட்டுகளின் வழியாகவும் சென்று சுவாமியை தரிசித்தனர்.

    வாகன நெரிசலை தவிர்க்க திருத்தணி நகரத்தின் நான்கு எல்லைகளிலும் அனைத்து பஸ்களும், வாக னங்களும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் வசதிக்காக அந்தந்த பகுதிகளில் இருந்து கோயில் சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தன.

    ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு மலைக்கோயில், திருக்குளம், மலைப்பாதை, கோபுரம், உள்ளிட்ட அனைத்து பகுதி களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

    பக்தர்கள் நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்வ தற்கு கோவில் சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. பிரசாதம். குடிநீர். கழிப்பிட வசதிகள் சுகாதாரம் உள்ளிட்டவை சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    காவடி கொண்டு வரும் பக்தர்கள் திருக்குளத்தில் வீசி செல்லும் பூமாலைகளை அகற்றுவதற்கும், மலைக் கோயில். மலை பாதை பகுதிகளில் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் அகற்றவும் சுழற்சி முறையில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் இணை ஆணயர் அருணாச்சலம் (பொறுப்பு) அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதரன் மற்றும் அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ் பாபு, நாகன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் செய்து உள்ளனர்.

    மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தமிழ்மாறன் மேற்பார்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முக்கிய இடங்களில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைத்தும், கண்காணிப்பு காமிராக்கள் அமைத்தும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    • கலியுகத்தில் திருப்பாதம் பதித்து, திருக்காட்சி அளிப்பேன்.
    • கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு மலைகளுக்கு நடுவில் இயற்கை எழில் சூழ சுயம்பு தேவியாக சொர்ண ரேகையுடன் வெளிப்பட்டவள், தேவி கருமாரி. இந்த தேவியை கருவாக வைத்து எழுப்பப்பட்டதே, தேவி கருமாரி அம்மன் ஆலயம். இது பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது.

    தல வரலாறு

    ஆதியும் அந்தமுமாகி அனைத்து உலகையும் காத்தருள்பவள், அன்னை ஆதிசக்தி. இவளே கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகங்களிலும் தாயாக நின்று உயிர்களை காத்தருளியவள். இதனையடுத்து, நான்காவது யுகமான, கலியுகம் மிகவும் கொடுமைகள் நிறைந்தது.

    இந்த கலியுகத்தின் தீமைகளை உணர்ந்து அச்சம் அடைந்த தேவர்கள், இந்த யுகத்திலும் உலக உயிர்களைக் காத்தருள வேண்டுமென, மீண்டும் ஒருமுறை ஆதிசக்தியிடம் சரண் அடைந்தனர். குழந்தையின் அழுகுரலுக்கு ஓடோடி வரும் தாயான ஆதிசக்தி, அதற்கான வழியையும் கூறினாள்.

    "யுகங்கள் தோன்றுவதற்கு முன்பே நான், என்னுடைய பரமனுடன் ஒன்றிணைந்து திருவடி பதித்து, எனக்கான இடத்தை தேர்வு செய்துள்ளேன். ஏழு மலைகளால் சூழ்ந்திருக்கும் எழிலார்ந்த அந்த வனத்தில், எம் வருகைக்காக அருவுருவமாக அமர்ந்து தவம் செய்யுங்கள். காலம் கனியும்போது அந்த புனித மண்ணிற்கு இக்கலியுகத்தின் நாயகியாக நான் வருகைபுரிவேன். அங்கே என் விஸ்வரூபக் காட்சியை தங்களுக்கு அருள் பாலிப்பேன்" என்றாள்.

    மேலும் தேவி கூறுகையில், "அத்திருவடி அருட்கோட்டத்தில் நேரில் வந்து என்னை மனமுருகி வழிபட்டு செல்வோருக்கு, ருத்ரனின் திருநீற்று சாம்பலை நான் சிருஷ்டித்த தவசீலர்கள் மூலம் வழங்கி அனைவருக்கும் அருள் தருவேன். அதன் மூலம் அவர்களின் துயரங்களையும், துன்பங்களையும் அகற்றுவேன்" என்றாள்.

    இக்கலியுகத்தில் திருப்பாதம் பதித்து, திருக்காட்சி அளிப்பேன் என தேவர்களுக்கு, ஆதிசக்தி அளித்த திருவாக்கின் காலம் கனிந்தது. அதன்படி, சிவபெருமானின் திருக்கர செங்கோலை தம் கரம் பற்றினாள்.

    அதன்பின் ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தொழில்களை தமதாக்கி, பக்தர்களை ஆட்கொள்ளும் தனித்துவத்துடன் கரிய நாகரூபம் கொண்டாள். தமது திருவிளையாடலுக்காக படைத்த புனிதமான பெண் மணியை தீண்டினாள்.

    இறந்தவளின் சடலத்தில், தான் உள் ஒளியாய் வெளிப்பட்டாள். எரி மயானச் சுடலையில் உதித்தாள். பரம்பரை தெய்வமாய் கலியுக நாயகி கருமாரி என்னும் திருநாமத்தில் நடமாடி வரம் தரும் சக்தியாய், வட வேதாரண்யம் எனும் திருவேற்காடு திருத்தலத்தில் தம் பாதம் பதித்தாள்.

    தம்பு சுவாமிகள் வழியாக திருவாய் மலர்ந்து, திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் தேவஸ்தானம் எனும் திருக்கோவில் கண்டாள்.

    இந்த கருமாரி தேவியே, தன் அருளாணைப்படி, ஏழு சக்திகளும் ஏழு மலைகளாக காவல் புரியும், மகா ஆரண்யத் திருத்தலம் வந்தாள். அப்போது அங்கே விண்ணுக்கும், மண்ணுக்குமான உயரத்தில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள் ஒன்று சேர்ந்த ஒளி வெள்ளமாய் பிரகாசித்தாள்.

    அங்கே தேவி விஸ்வரூபக் காட்சி தந்து, தன் திருவடி பதித்த முழு முதற் தலம் இதுவே என்பதை பிரகடனப்படுத்தினாள்.

    ஆதிசக்தி மகாஜோதியாய் காட்சி தந்து அடையாளம் காட்டிய இடம், அன்றைய வேகவதி ஆற்றின் பழங்கால பயணப்பாதை என்பது புவியியல் வரலாறு.

    அங்கே 13 அடி ஆழத்தில் ஆவுடையார் அமைக்க கடைக்காலுக்கு இயந்திரங்களைக் கொண்டு மண் தோண்டப்பட்டது. அப்போது, வேகவதியின் நீரோட்டத்தை உறுதி செய்யும் விதமாக, தோண்டி முடித்தவுடன் நன்னீர் நீரூற்று பொங்கி எழுந்தது. அதில் மற்றுமொரு அதிசயமும் நிகழ்ந்தது.

    நீருற்றில் குருதியும் கொப்பளிக்க , மூன்று சுவர்ண ரேகைகள் கொண்ட சுயம்புத் திருமேனியாக தேவி தன் பக்தர்களின் கண்முன்னே வெளிப்பட்டாள். இந்த ஆதிசக்தியான, தேவி கருமாரியம்மனே, தன்னை நாடி வந்து வழிபடுவோரின் துன்பங்களையும் துயரங்களையும் நீக்கி, வளத்தையும், நலத்தையும் தந்து கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள்.

    கோவிலின் தனிச்சிறப்பு

    இத்திருக்கோவிலின் தனிச்சிறப்பு, இங்கு பரிகார பூஜைகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. தேவி கருமாரியம்மனை நேரில் வந்து வேண்டிக் கொண்டாலே வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பின்பு, அவசியம் மீண்டும் ஒரு முறை நேரில் வந்து அம்மனுக்கு நன்றி கூற வேண்டும்.

    இந்த வளாகத்தில், ஒரே கல்லினால் உருவான 51 அடி உயர தேவி கருமாரியின் சிலை, ஒரே இடத்தில் 108 திவ்ய தேசக்கோவில்கள், பய உணர்வுகளைப் போக்கும் பைரவர், நாக தோஷங்கள் நீக்கும் சர்வ கரிய நாக சொரூபிணி ஆலயம் ஆகியவையும் அமைந்துள்ளன. இதுதவிர தற்போது, 163 அடி உயர கோடி லிங்கமும் எழுப்பப்பட்டு வருகிறது.

    இவ்வாலயத்தில் சித்ரா பவுர்ணமி மூன்று நாட்கள், வைகாசியில் மும்முடிசேவை, ஆடி ஞாயிறுக்கிழமை வழிபாடு, நவராத்திரி போன்றவை குறிப்பிடத்தக்க விழாக்களாக உள்ளன. இந்த கோவில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

    அமைவிடம்

    செங்கல்பட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும், திருப்போரூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், பசுமையான ஏழு மலைகளுக்கு நடுவில் இத்திருக்கோவில் அமைந்திருக்கிறது. பேருந்தில் வருவோர் திருவடிசூலம் என்ற இடத்தில் இறங்கி, 2 கிலோமீட்டர் உள்ளே வர வேண்டும். திருவடிசூலம் தேவாரத்தலத்தினை அடுத்து இக்கோவில் அமைந்துள்ளது. திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் நேரடி பஸ் வசதி உள்ளது.

    • வியாசரால் வழிபடப்பட்ட ஈசனே தவளகிரீஸ்வரர்.
    • இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம் இந்திர தீர்த்தம்.

    திருமாலுக்கும், பிரம்மனுக்கும் திருவண்ணாமலையில், ஆதி அந்தம் இல்லாத பெருஞ்ஜோதியாக நின்று காட்சி கொடுத்தவர், சிவபெருமான். அவர் தனது மகன் முருகப்பெருமானுக்கு, ஜோதி ரூபமாக திருக்காட்சி கொடுத்த திருத்தலம் தான், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெண்குன்றம். இந்த ஊரை 'தவளகிரி' என்றும் அழைப்பார்கள்.

    உலக மக்கள் அனைவரும் அறிந்துணரும் வகையில், வேதங்களின் கருத்துக்களை மக்களிடையே பரப்பும்படி, வியாச மகரிஷிக்கு சிவபெருமான் உத்தரவிட்டார். அந்த பணியை செய்வதற்கு முன்பாக வியாசர், பூலோகத்தில் பல்வேறு புண்ணிய தலங்களை தரிசிக்க எண்ணினார்.

    அப்படி அவர் வந்த போது தென் திசையில் வெண்ணிற மலை ஒன்றைக் கண்டார். அங்கே சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, அந்த தீர்த்த நீரில் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார்.

    வியாசரால் வழிபடப்பட்ட ஈசனே, 'தவளகிரீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். 'தவளம்' என்பதற்கு 'வெண்மை' என்று பொருள். வெண்மையான மலையில் வீற்றிருப்பதால், இத்தல இறைவனுக்கு இப்பெயர் வந்தது. வியாச முனிவரால் உருவாக்கப்பட்ட இங்குள்ள தீர்த்தம், 'வியாச தீர்த்தம்' என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

    ஒரு முறை கங்காதேவி இந்த ஆலயத்திற்கு வந்தாள். பலரும் தன் நதியில் நீராடுவதால் ஏற்பட்ட பாவத்தை போக்குவதற்காக கங்காதேவி இவ்வாலயம் வந்து, வியாச தீர்த்தத்தில் நீராடி, இத்தல சிவபெருமானை வழிபட்டு தூய நிலையை அடைந்ததாக சொல்லப்படுகிறது.

    இதுதவிர இந்திரன் மற்றும் தேவர்கள் ஆகியோரும் இங்கு வந்து தவளகிரீஸ்வரரை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம், 'இந்திர தீர்த்தம்' என்ற பெயரில் இங்கு உள்ளது.

    தாரகாசுரன் என்ற அசுரனை அழித்த பிறகு, முருகப்பெருமான் பல்வேறு தலங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபாடு செய்தார். அதன்படி அருணகிரி எனப்படும் திருவண்ணாமலை வந்து ஈசனை வழிபட்டார்.

    பின்னர் அவரை ஜோதி வடிவில் வழிபட வேண்டும் என்ற எண்ணத்தில் ஈசனை நினைத்து தியானித்தார். அப்போது அங்கே தோன்றிய சிவபெருமான், "குமரா! முன்பொரு சமயம் திருமாலும், பிரம்மனும் காணுமாறு ஆதியந்தமில்லா பெருஞ்ஜோதியாக இங்கே நான் நின்றேன்.

    பின்பு கார்த்திகை பவுர்ணமி நாளில் இத்தலத்து அர்த்தநாரி ஆனோம். இதே தலத்தில் மீண்டும் ஜோதி வடிவை காட்டுவதற்கு பதிலாக, நீ தவளகிரியில் என்னுடைய ஜோதி வடிவத்தை காணலாம்" என்று கூறி மறைந்தார்.

    அதன்படி தவளகிரி சென்ற முருகப்பெருமான், அங்குள்ள தவளகிரீஸ்வரரை வழிபட்டு, தன்னுடைய கூரிய வேலால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, ஈசனுக்கு அபிஷேகம் செய்தார். அவ்வேளையில் குன்றின் மீது சிவபெருமான் ஜோதிரூபமாக தோன்றி காட்சி அளித்ததுடன், அங்கேயே சிவலிங்க ரூபமாக மாறிப்போனார்.

    முருகப்பெருமானுக்கு திருக்காட்சி நல்கிய அந்த சிவபெருமான், இன்றும் இவ்வாலயத்தில் 'அருணாசலேஸ்வரர்' என்ற பெயரில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    முருகப்பெருமானால் உண்டான தீர்த்தம் 'குமார தீர்த்தம்' என்று வழங்கப்படுகிறது. பல்வேறு ரிஷிகளும், சித்தர்களும் இத்தல தவளகிரீஸ்வரரை வழிபட்டிருக்கிறார்கள்.

    இவ்வாலயத்தில் இரண்டு பழங்கால கல்வெட்டுகள் உள்ளன. அவை பல்லவர் காலத்து கல்வெட்டுகளாகும். இவ்வாலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா அன்று அதிகாலை 4 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள கயிலாசநாதர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பிறகு முருகப்பெருமான் மலையடிவாரத்திற்கு எழுந்தருளுவார்.

    தொடர்ந்து மலைக் கோவிலில் எழுந்தருளியுள்ள தவளகிரீஸ்வரருக்கும், ஆறுமுகப்பெருமானுக்கும், இதர மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெறும். பின்னர் மாலை 6 மணியளவில் தவளகிரி மீது திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

    பெரிய இரும்பு கொப்பரை முழுவதும் நெய் நிரப்பி ஏற்றப்படும் இந்த தீபம், சுற்றுவட்டாரத்தில் 10 கிலோமீட்டர் தூரத்துக்குத் தெரியும் என்கிறார்கள். 3 நாட்கள் தொடர்ந்து எரியும் இந்த தீபத்தை தரிசிப்பதன் மூலம் ஈசன் மற்றும் அவரது மகன் முருகனின் அருளையும் சேர்த்துப் பெறலாம்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள், தவளகிரீஸ்வரரை வேண்டி விரதம் இருப்பதுடன், உப்பு, மிளகு எடுத்துச் சென்று மலையில் உள்ள குன்றின் உச்சியில் போட்டுவிட்டு நேர்த்திக்கடன் முடிப்பார்கள். குறிப்பாக தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.

    அமைவிடம்

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வெண்குன்றம் கிராமம். இங்கே சுமார் 1,500 அடி உயரத்தில் தவளகிரி மலை உள்ளது. இந்த மலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    • திருகார்த்திகை என்றாலே இரண்டு விசயம் கண்டிப்பாக இருக்கும்.
    • பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை.

    தென் தமிழகத்தில் திருகார்த்திகை என்றாலே இரண்டு விசயம் கண்டிப்பாக இருக்கும். முதலாவது கொழுக்கட்டை அதுவும் பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை. இரண்டாவது வீட்டை சுற்றி விளக்கு வைப்பது. கொஞ்சம் விடலை பசங்க இருந்தா மூன்றாவதாக சொக்க பனை.

    திருகார்த்திகை அன்று காலையில் எழுந்ததும் நமக்கு கொடுக்கிற முக்கியமான வேலையே எங்கேயாவது இரண்டு சருவை பனை ஓலை வாங்கிட்டு வந்துரு என்பது தான். ஒரு சருவை ஓலை என்பது ஒரு பனை மட்டையில் உள்ள ஓலையில் பாதிக்கும் கொஞ்சம் குறைவு. இரண்டு சருவை ஓலை என்றால் கிட்ட தட்ட முக்கால்வாசி ஓலை. ஆனால் ஒரே மட்டையில் இரண்டு சருவை ஓலையை வெட்டமாட்டார்கள். முத்தின ஓலையில் கொழுக்கட்டை செய்தால் கொழுக்கட்டையில் இலைவாசம் அதிகமாக இருக்கும். கொஞ்சம் குருத்தோலை அல்லது சமீபத்தில் வெளிவந்த ஓலை தான் வெட்ட வேண்டும். அப்படி பார்த்தால் அதிகபட்சமாம 4 ஓலை தான் தேரும். அதற்கு மேல் வெட்டினால் அது மரத்தை மொட்டை அடிப்பதற்கு சமம்.

     பச்சரிசியை நனையவச்சி இடிச்சி பெருங்கண் சல்லடையாள் (மாவு பரபரன்னு இருக்கும்) சலிச்சி வச்சிக்கனும். கிராமங்களில் கொழுக்கட்டை முன்றுவித சுவைகளில் செய்வார்கள். சர்க்கரையில் (அச்சுவெல்லம்) செய்த கொழுக்கட்டை கொஞ்சம் வெளீரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். சீனியில் செய்த கொழுக்கட்டை வெண்மையாக இருக்கும். கருப்பட்டியில் செய்தது கொஞ்சம் அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும். மூன்றின் சுவையும் வெவ்வேறானவை.

    இதற்கு மேலும் சுவைக்காக தேங்காய்பூ, சிறுபயத்தம் பருப்பு, ஏலக்காய் எல்லாம் சேர்துக்கலாம். இடித்தமாவோடு தேங்காய்ப்பூ, பயத்தம் பருப்பு, ஏலக்காய் சேர்த்து அதோடு சீனி, சர்க்கரை, கருப்பட்டியை தனித்தனியாக விரசி (கலந்து) கெட்டியா வச்சிப்பாங்க. கொஞ்சம் மாவு கலவையை எடுத்து நறுக்கி வைத்த பனை ஏட்டில் சரியாக மத்தியில் வைச்சி, இன்னொரு இலையால் மூடனும். மூடினதும் நூல் போல் கிழித்துவைத்திருந்த பனை இலக்கை (ஒலை) வைத்து கட்டி தனியாக வைக்கனும். இதுல கொஞ்சம் டெக்னிக்கல் விசயம் எல்லாம் இருக்கு.

    மாவுக்கலவையில் நிறைய நீர் விடக்கூடாது. அடுத்து ஓலையில் மாவும் நிறைய வைக்க கூடாது. கட்டிய ஓலையை நீராவியில் போட்டு வேக வைக்கும் பொழுது அதனுளிருக்கும் சர்க்கரை, சீனி, கருப்பட்டி மூன்றும் உருக ஆரம்பிக்கும் அப்பொழுது மாவோடு சேர்ந்து இரண்டு பக்கமும் சிறிது தூரம் ஓடும். அதிகமான மாவும், அதிகமான தண்ணீரும் மாவை ஓலையை விட்டு வெளியே தள்ளிவிடும். மாவு வைத்து கொடுக்கும் வேலைக்கு என்னைய கூப்பிட மாட்டாங்க. நமக்கு கையும் வாயும் சும்மா இருக்காது. வச்சிமுடிக்கிறதுக்குள்ள கால்வாசி மாவு காணாம போய்டும். எனக்கு கொடுக்குற டிபார்ட்மெண்ட், மாவு ஓலைய இன்னொரு ஒலைய வச்சி மூடி கட்டு போடறது தான். எல்லா ஓலையையும் வச்சி கட்டி முடிச்சதும் மீதி ஏதாவது மாவு இருந்தா அதில் மா(வு)விளக்கு வைப்பார்கள்.

    இரண்டடி உயரம் உள்ள ஒரு பானைய எடுத்து அதுக்குள்ள வைக்கிற கொழுக்கட்டை ஓலை கீழே இறங்காம இருக்க கால்வாசி பானையில சிறிய கம்பு வைத்து ஊடுகட்டி, அதுக்குள்ள நறுக்கி உபயோகமில்லாமல் போன ஓலைய போட்டு பரப்பி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, கொழுக்கட்டை ஓலைய அடுக்கி வச்சி துணிய வச்சி வண்டுகட்டி அதுக்கு மேல ஒரு மூடிய போட்டு அடுப்பில் வச்சிட்டா, நீராவியிலே வெந்துடும். வெந்ததும் ஓலைய பிரிச்சி கொழுக்கட்டைய உடைஞ்சிடாம தனியா எடுத்து ஒரு தட்டில் வச்சி முதல்ல சாமிக்கும், பிறகு முன்னோருக்கும் படச்சிட்டு, ஆசாமிகிட்ட நீட்டுனா உடனே காலியாயிடும். பொதுவா கொழுக்கட்டைய அடுத்தநாள் சாப்பிட்டா சுவை அதிகமா இருக்கும்.

    இந்த வேலை நடந்துக்கிட்டு இருக்குறப்பவே, இன்னொருபக்கமாக வீட்டை அலங்காரம் செய்யும் வேலையும் நடக்கும். வேற ஒன்னும் இல்ல வீட்டுக்குள்ள அங்க அங்க மாக்கோலம் போட்டு வைப்பாங்க. இந்த மாக்கோலம் போடுறது கூட ஒரு கலை தான்.

    பச்சரிசிய ஊறவச்சி அம்மியில மை போல அரைக்கனும் கூடவே கொஞ்சம் மஞ்சளும், நிறத்திற்காக. மை போல அரச்ச அரிசியில நீர் சேர்த்து கொஞ்சம் கட்டியாவும் கட்டியா இல்லாத மாதிரியும் கலக்கி வச்சிக்குவாங்க.

    சிறிய வெள்ளை துணியை எடுத்து இந்த கலவையில முக்கி பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் பிடித்து கோலம் போடனும். இந்த கோலம் ஒரு ரெண்டு வாரத்துக்கும் மேலே அழியாம இருக்கும். அதுக்கு அப்புறமும் கோலம் போட்ட தடம் அந்த இடத்தில் இருக்கும்.

    அடுத்து பப்பாளி மரத்தில் இருந்து நல்ல இளம் பிச்சி இலையா ஒரு இலைய பறிச்சி இலையும் காம்பும் சேரும் இடத்துல சின்ன அளவு வட்டமா வெட்டிக்கிட்டு, நரம்பு தவிர உள்ள இருக்குற பச்சை இலையை வெட்டி எடுத்துக்கணும். இது எதுக்குன்னு கேக்கறியலா, இத அப்படியே அந்த கலைவையில தொட்டு கதவில் ஒரு அமுத்து அமுத்தி எடுத்தா கதவில் ஒரு நட்சத்திரம் இருக்குற மாதிரி தெரியும். அதுக்கு நடுவுல ஒரு குங்கும பொட்டு. இப்படி கதவுல நல்லா இடம் விட்டு வச்சா பார்க்க அழகா இருக்கும்.

    அடுத்தது சொக்கப்பனை. நல்லா இருட்டுனதும் ஊருல இருக்குற கோவிலுக்கு முன்னாடி சொக்க பனை ஏத்தனும். ஒரு 8 அடி நீளமான கம்பு அல்லது தென்னம்மட்டைய ஒலை இல்லாம எடுத்துக்கனும். காய்ந்த பனை ஓலைய கொய்து (சின்ன சின்னதா நீளவாக்கில்) வச்சிக்கனும். இப்போ பனை ஒலையை தென்னமட்டையில வச்சி கட்டணும். முதல் கட்டு உச்சியில வச்சி கட்டணும். அடுத்த கெட்டு அதுக்கு அடியில வச்சி கெட்டனும்.

    கிட்ட தட்ட பூ இதழ் இருக்குமே அதுமாதிரி ஒரு ஒரு வட்டமா வச்சி கீழ ஒரு 2 அடி இடம் விட்டுட்டு கட்டணும். அப்படி கட்டும் போது நடு நடுவுல சில்லாட்டைய (பனை மட்டையின் கீழ் வலை போன்று மரத்தை கவ்வி பிடிக்க இருக்கும் ஒரு அமைப்பு) வச்சிக்கனும் கூடவே கொஞ்சம் உப்பு. இதை ரொம்ப இருக்கி கெட்ட கூடாது. கட்டுன மாதிரியும் இருக்கனும், கட்டாத மாதிரியும் இருக்கனும்.

    7 மணிக்கு கோவில் பூசை முடிஞ்சதும் பூசாரி ஒரு கற்பூரத்தை கொளுத்தி நீட்டுவார், அதுல இன்னொரு ஓலைய (கைப்பந்தம்) நீட்டி தீ வாங்கி அப்படியே நட்டு வச்சிருக்க சொக்க பனையின் மேல் பாகத்தில் (உச்சியில) நெருப்ப வச்சிடனும். மெதுவா எரிஞ்சிகிட்டே வரும். நாம் உப்பு போட்டு வச்சிருப்போமே அங்க வந்ததும் இந்த உப்பு எல்லாம் வெடிக்க ஆரம்பிக்கும் அது வெடிக்கும் போது இதுவரைக்கும் எரிஞ்சி கனகனன்னு இருக்கும் ஒலை எல்லாம் நெருப்பு பொரியா பறக்கும். அடுத்து சில்லாட்டை வர்ர இடமும் அப்படி நெருப்பு பொரி பறக்கும்.

    கும்மிருட்டுள சொக்கபனை மட்டும் எரியும் அப்போ அப்போ நெருப்பு பொரி (புஸ்வானம்) பறக்கும். பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.

    எங்க தாத்தா-பூட்டன் காலத்துல பாதி பனைமரத்த வெட்டி வச்சி எரிப்பாங்களாம், ராத்திரி பூரா நின்னு எரியுமாம். இப்படி பனைய வெட்டி எரிச்சதால இதற்கு பெயர் சொக்கபனை. சொக்கன் பனை என்பது மருவி சொக்கப்பனை ஆகியிருக்கவும் வாய்ப்பிருக்கு. இப்போ ஒரு பனை இலைக்கை (ஓலையில் ஒரு இலை) கூட கொழுத்த முடியாது. ஏன்னா இப்போ பனைமரமே இல்லப்பா!

    அடுத்தநாள் காலையிலே கொழுக்கட்டை பரிமாற்றங்கள் வேறு நடக்கும். சுற்றத்தார் வீட்டுக்கு கொடுக்குறதும் அவங்க நமக்கு கொடுக்கறதும், ஏன் இவங்க வீட்டுல கொலுக்கட்ட இவ்வளவு சின்னதா இருக்கு, ஏன் இனிப்பே இல்லை, ஏன் இவ்ளோ இனிப்பு போட்டுருக்காங்க, இந்த கொழுக்கட்டைய கடிக்க முடியலேயே பல்லு போய்டும் போல இருக்கு என்று எல்லார் வீட்டிலும் அங்கலாச்சிக்குவாங்க. அது ஒரு தனிக்கதை.

    ×