search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai District"

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தாலுக்காக்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. கடந்த 16-ந்தேதி முதல் இது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. #ChennaiDistrict
    சென்னை:

    காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 42 உள்ளாட்சி அமைப்புகள் கடந்த 2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இதனால் இப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகளுக்கு சென்னை மாநகராட்சியையும், நிலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தையும் அணுக வேண்டிய நிலை இருந்தது.

    இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே நிர்வாக வசதிக்காகவும், பொது மக்களின் வசதிக்காகவும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்த பகுதிகளையும் சென்னை மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளை சென்னை மாவட்டத்துடன் அரசு இணைத்தது.

    அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தாலுக்காக்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. கடந்த 16-ந்தேதி முதல் இது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    ஆலந்தூர் தாலுக்காவில் உள்ள நந்தம்பாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், முகலிவாக்கம், மனப்பாக்கம், மீனம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், தலக்கனஞ்சேரி, மவுலிவாக்கம், உள்ளிட்ட பகுதிகள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஆலந்தூர் தாலுக்கா என்ற பெயரிலேயே செயல்படும்.

    இந்த தாலுக்காவில் இருந்த மூவரசம்பேட்டை பகுதி மட்டும் பல்லாவரம் தாலுக்காவுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

    இதேபோல் சோழிங்கநல்லூர் தாலுக்காவில் உள்ள உள்ளகரம், சோழிங்கநல்லூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, நீலாங்கரை, காரப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், ஒக்கியம், துரைப்பாக்கம், மடிப்பாக்கம் ஜல்லடியன் பேட்டை, செம்மஞ்சேரி, உத்தண்டி, சீவரம் பகுதிகள் சென்னை மாவட்டத்துடன் இணைந்துள்ளன. தொடர்ந்து சோழிங்கநல்லூர் தாலுக்கா என்ற பெயரிலேயே செயல்படும்.

    அந்த தாலுக்காவில் இருந்த பெரும்பாக்கம், சித்தலப்பாக்கம், ஒட்டியம் பாக்கம், வேங்கைவாசல், மேடவாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட 8 கிராமங்கள் தாம்பரம் தாலுக்காவுடன் இணைக்கப்பட்டு உள்ளன. #ChennaiDistrict

    62 வருவாய் கிராமங்களை சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்படுவதால் எல்லை வரையறை மறு சீரமைப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்குகின்றன.
    சென்னை:

    தமிழக அரசு கடந்த ஆண்டு இறுதியில் சென்னை மாவட்டம் மற்றும் சென்னை மாநகர எல்லையை விரிவாக்கம் செய்து அறிவித்தது.

    இதேபோல் சென்னை மாநகராட்சி என்று இருந்ததை பெருநகர மாநகராட்சியாக (கிரேட்டர் சென்னை) அறிவிப்பு வெளியிட்டது. சென்னை மாவட்டம் மற்றும் சென்னை மாநகர எல்லை விரிவாக்கம் பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    சென்னையையொட்டி உள்ள திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டப் பகுதிகள் சென்னை மாவட்டத்துடனும், சென்னை மாநகர எல்லையுடனும் இணைக்கப்படுகின்றன. ஏற்கனவே உள்ள இந்த மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமங்களுடன் புதிதாக வருவாய் கிராமங்கள் இணைக்கப்படுகின்றன.

    காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தாலுகாக்களில் சில வருவாய் கிராமங்களும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அம்பத்தூர், மாதவரம், மதுரவாயல், திருவொற்றியூர் தாலுகாக்களில் சில வருவாய் கிராமங்களும் என மொத்தம் 62 வருவாய் கிராமங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்படுகின்றன, இதன்மூலம் சென்னை மாவட்டத்தில் வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது.

    சென்னை மாவட்டத்தில் எல்லை வரையறை மறு சீரமைப்பு பணிகள் வருகிற ஜூலை மாதம் முறைப்படி தொடங்குகின்றன. இதற்கான பணிகளில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.

    எல்லை விரிவாக்கத்தின் மூலம் சென்னை பெருநகர மாநகராட்சி எல்லை 15 மண்டலங்களை உள்ளடக்கி 176 சதுர கி.மீ.-ல் இருந்து 426 சதுர கி.மீ. ஆக விரிவடைகிறது. கூடுதலாக 2 வருவாய் மண்டல அதிகாரிகள் இடம் பெறுகிறார்கள்.
    ×