search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvSPA"

    • உலகில் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்பதை வெளிப்படுத்தி வருகிறோம்.
    • இந்தியா இறுதிப்போட்டிக்கு வராததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

    பாரீஸ்:

    ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கியில் இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி வெண்கலம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், வெற்றி பெற்ற பிறகு இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் சிங் கூறியதாவது:

    இதில் பெரிய விஷயம் என்னவென்றால் நாங்கள் மீண்டும் வென்றுள்ளோம். இந்திய ஹாக்கி அணி வளர்ந்துள்ளது. எந்தப் பெரிய அணியையும் வீழ்த்த முடியும் என்பதை வெளிப்படுத்தி வருகிறோம். இது முழு நாட்டிற்கும் பெரிய விஷயம், எங்களுக்கும் பெரிய விஷயம் என நினைக்கிறேன்.

    நிறைய காத்திருக்க வேண்டிய நிலை இது. நீங்கள் பல கட்டங்களைச் சந்திக்க வேண்டும். ஒரு ஹாக்கி வீரராக, இது எளிதானது அல்ல.

    நாங்கள் ஒரு அணியாக விளையாடியதில் பெருமிதம் கொள்கிறோம். நாங்கள் ஒருவரை ஒருவர் நம்பினோம். பயிற்சியாளர்களுக்கு நன்றி.

    இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வராததற்கு ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டார்.

    பதக்கத்தின் நிறத்தை மேம்படுத்த அணி முயற்சி செய்யும். இங்கு தங்கப்பதக்கம் வெல்வதே எங்கள் கனவாக இருந்தது. அனைவரும் எங்களை நம்பினர்.

    எப்பொழுது மைதானத்திற்கு வந்தாலும் வெற்றி பெறத்தான் வருவோம் என்பதே நமது மனநிலை. சில நேரங்களில் முடிவுகள் நமக்கு சாதகமாக இருக்காது. இது எங்கள் விதி என்று நான் நினைக்கிறேன்.

    இந்தியாவில் ஹாக்கியின் வரலாறு மிகப் பெரியது. அதை முன்னோக்கிக் கொண்டு செல்லவும், நாட்டிற்காக அதிக பதக்கங்களை வெல்லவும் நாங்கள் முயற்சிக்கிறோம்.

    ஹாக்கிக்கு அன்பைக் கொடுங்கள், எங்களுக்கு ஆதரவளிக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த முறை இதை விட சிறப்பாகச் செய்து நாட்டிற்கு பதக்கங்களை வெல்வோம் என தெரிவித்துள்ளார்.

    நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் ஹர்மன்பிரித் சிங் மொத்தம் 10 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தனர்.
    • உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    சண்டிகர்:

    ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் இன்று மோதின.

    இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.

    ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும், உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் முதல் மந்திரியான பகவந்த்சிங் மான் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்துள்ள பஞ்சாப் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

    ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரித் சிங், துணை கேப்டன் ஹர்திக் சிங் உள்பட 10 வீரர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது.
    • இதன்மூலம் இந்திய அணி ஒலிம்பிக்கில் 4 வெண்கலம் வென்றுள்ளது.

    புதுடெல்லி:

    ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் இன்று மோதின.

    கடந்த முறை வெண்கலம் வென்ற இந்தியா அந்த பதக்கத்தை தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கியது.

    தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் முதல் பாதியில் 1-1 என சமனிலை வகித்தது. 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் ஒரு கோலும், 30-வது நிமிடத்தில் இந்தியா ஒரு கோலையும் பதிவு செய்தது. ஆட்டததின் 33-வது நிமிடத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றது.

    இறுதியில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், ஒலிம்பிக்கில் ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய ஹாக்கி அணியின் நிலைத்தன்மை, திறமை, ஒற்றுமை இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஹாக்கியில் ஆடவர் அணி பிரகாசமாய் ஒளிர்கிறது. உங்களின் வெற்றியை எதிர்வரும் தலைமுறைகள் கொண்டாடும். ஹாக்கியுடன் இந்தியர்கள் அனைவருக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வீரர்களின் ஆற்றல் மிகுந்த செயல்திறன் விளையாட்டின்மீது புது ஆர்வத்தைத் தூண்டும் என தெரிவித்தார்.

    ×