search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi"

    • மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், நாணயத்தை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்று கொண்டார்.
    • தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் போட்டா போட்டி கொண்டு வாங்கினர்.

    சென்னை:

    நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்கள், அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாக்கள், நாட்டின் முக்கிய நிகழ்வுகள், மிகப்பெரும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மத்திய அரசு சிறப்பு நினைவு நாணயங்களை வெளியிட்டு கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக திருவள்ளுவர், காமராஜர், அண்ணா, சி.சுப்பிரமணியம், தஞ்சை பெரிய கோவில், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.ஜி.ஆர். ஆகியோருக்கு நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவருக்கு மத்திய அரசு கடந்த மாதம் 18-ந் தேதி 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு கவுரவப்படுத்தியது.

    அதற்கான விழா சென்னையில் நடந்தது. மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், நாணயத்தை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்று கொண்டார்.

    இது நினைவு நாணயம் என்பதால் புழக்கத்தில் விடப்படாது. ஆனால் அறிவாலயத்தில் இந்த நாணயம் ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றதால் அது விரைவில் தீர்ந்து போனது.

    இந்த நிலையில் மத்திய அரசின் https://www.spmcil.com/en/ என்ற இணையதளத்தில் நூற்றாண்டு நினைவு நாணயம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் போட்டா போட்டி கொண்டு வாங்கினர். அதனால் அவை அனைத்தும் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்துவிட்டன.

    மொத்தம் 1,500 நாணயங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், ஆனால் அவை உடனே விற்றுத் தீர்ந்து விட்டதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். அடுத்த வாரம் இந்த கருணாநிதி நினைவு நாணயங்களை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர உள்ளதாகவும் கூறினார். அந்த இணையதளத்தில் ஒரு 100 ரூபாய் நாணயம் ரூ.4,180 மற்றும் ரூ.4,470 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

    • அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என இறுதிவரை போராடியவர் பெரியார்.
    • மகளிருக்கு சொத்தில் சம உரிமை கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி.

    சென்னை:

    தந்தை பெரியார் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இந்த சொற்பொழிவில் பேச்சாளர்களாக திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன், திராவிடர் கழகத்தின் துணை பொது செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி, கெனித்ராஜ் அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விழாப்பேருரை ஆற்றினார்.

    விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், ஏன் தந்தை பெரியார் நினைவு கருத்தரங்கத்தை நடத்துகிறார்கள் என உங்களுக்கு கேள்வி இருக்கலாம். வாழ்வில் வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் விளையாட்டு போட்டிகளில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் சுறுசுறுப்பு, விடாமுயற்சி, துவண்டு போகாத மன உறுதி, பகுத்தறிய வேண்டிய ஆராய்ச்சி மனப்பான்மை மிக மிக அவசியம்.

    தந்தை பெரியாரிடம் இவை அனைத்துமே அடிப்படை குணங்களாக இருந்தன. பெரியார் மரணத்தின்போது பெரியார் தன் சுற்றுப்பயணத்தை தான் முடித்துக்கொண்டிருக்கிறார் நாம் தொடர்வோம் என்று கலைஞர் எழுதினார்.

    பெரியார் உடலால் மறைந்தாலும் அவருடைய கருத்துக்கள் என்றைக்கும் அழியாது. 95 வரை வாழ்ந்த பெரியார் இறுதி வரைக்கும் தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காக உழைத்தவர்.

    பகுத்தறிவு சமூகநீதி சுயமரியாதை கொள்கைகளை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தார்கள். அவருடைய கருத்துக்கள் என்றைக்கும் இளமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

    இங்கு ஏராளமான மாணவர்கள் அமர்ந்துள்ளீர்கள். ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட சிலர் தான் படிக்க வேண்டும். மற்றவர்கள் குலத்தொழிலை செய்ய வேண்டும் அவர்களெல்லாம் படித்தாலே தீட்டு என்று சொன்னார்கள்.

    குறிப்பாக மகளிர் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் பொது இடத்தில் சிரித்தால் கூட தப்பு என்றும் கூறினார்கள். இன்றைக்கு அந்த நிலைமை மாறியுள்ளது. எல்லோரும் படிக்கிறார்கள். எல்லோரும் வேலைக்கு செல்கிறார்கள்.

    யார் இந்த மாற்றத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது என எண்ணிப் பார்த்தால் அது தந்தை பெரியாராக தான் இருக்கும்.

    பெரியார் பேசிய அத்தனை வடிவங்களுக்கும் செயல் வடிவம் கொடுத்தது பேரறிஞர் அண்ணா. முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு தான் இன்றைக்கும் அந்த பணியை நம்முடைய முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார்.

    எல்லோருக்கும் சம வாய்ப்பு வேண்டும். உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் உரிமைகள் வேண்டும் என்ற பெரியாரின் பிறந்த நாளை நம் முதலமைச்சர் சமூக நீதி நாளாக அறிவித்தார்.

    சுயமரியாதை திருமணம் செல்லும் என அண்ணா சட்டம் கொண்டு வந்தார். மகளிர் குடும்ப சொத்தில் சம உரிமை உண்டு என கலைஞர் சட்டம் கொண்டு வந்தார். காவல்துறை ராணுவத்தில் பெண்கள் வரவேண்டும் என பெரியார் சொன்னார்.

    இந்தியாவிலேயே முதல்முறையாக 50 வருடத்திற்கு முன்னாடியே தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணியாற்றலாம் என்கிற நிலையை ஏற்படுத்தியவர் கலைஞர் தான். இன்றைக்கு பெண்கள் உயர் கல்வி படிக்க வேண்டும். என்ற எண்ணத்தோடு புதுமைப்பெண் திட்டத்தை நம் முதலமைச்சர் தந்துள்ளார்.

    உங்களில் பல பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வருகிறது. வறுமை காரணமாக கல்வியை விட்டு விடக்கூடாது என தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. மகளிர் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். சுயமரியாதையோடு வாழ வேண்டும். அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும் என்று பெரியார் போராடினார்.

    அதற்கு செயல் வடிவம் கொடுக்கிற விதமாக இந்தியாவிலேயே முதல் முறையாக தான் மகளிர் சுய உதவி குழுக்களை கலைஞர் தொடங்கினார். மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்திட நம்முடைய முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கொண்டு வந்தார். எல்லோரும் நல்ல வேலைக்கு போக வேண்டும் என்ற பெரியாரின் கனவை நினைவாக்க நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நீதிபதி மாதிரியான உயர் பதவிகளுக்கு ஏழை எளிய கிராம பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்கள் வரவேண்டும் என வாழ்நாள் முழுக்க போராடியவர் தந்தை பெரியார்.

    அதனை செயல்படுத்தும் விதமாக நம்முடைய முதலமைச்சர் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகிற மாணவர்கள் இளைஞர்களுக்கு மாதம் ரூ.7,500 நிதி உதவி வழங்குகிறார். அது மட்டுமல்லாமல் முதல் நிலை தேர்வில் வென்றால் 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை கொடுக்கிறார்கள்.

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்கிற நிலையை ஏற்படுத்த பெரியார் இறுதிவரை போராடினார். அது முடியாமல் போனபோது பெரியாரின் நெஞ்சில் தைத்த அந்த முள்ளை எடுக்கும் விதமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஏன் பெண்களும் அர்ச்சகராக பணியாற்றலாம் என்கிற நிலையை நம் முதலமைச்சர் ஏற்படுத்தினார்.

    பெரியார் இல்லாமல் நாம் யாரும் இல்லை என்று அறிஞர் அண்ணா சொன்னார். என்னை எத்தனையோ பெயர்களை சொல்லி புகழ்ந்தாலும் பெரியார் வழியை பின்பற்றும் மானமிகு சுயமரியாதைக்காரன் என்று சொல்லும்போது பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றார் கலைஞர்.

    பெரியார் இறந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் அவருடைய கருத்துக்களும் சிந்தனைகளும் இன்றைக்கு சமகாலத்தில் ஒத்துப்போகும் அளவிற்கு உள்ளது. அது என்றைக்கும் இருக்கும் ஆகவே தான் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர் எழிலன், மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மாநில எஸ்.சி. எஸ்.டி. ஆணையத்திலும் அஜேஷ் புகார் அளித்திருந்தார்.
    • எஸ்.சி. எஸ்.டி. சட்டப் பிரிவுடன் சேர்ந்து 4 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருணாநிதி பற்றி அவதூறு பாடல் ஒன்றை பாடினார்.

    இது தொடர்பாக பட்டாபிராம் பகுதியை சேர்ந்த அஜேஷ் என்பவர் பட்டாபிராம் போலீசில் புகார் அளித்திருந்தார். அதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை அவமதித்து விட்டதாக சீமான் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மாநில எஸ்.சி. எஸ்.டி. ஆணையத்திலும் அஜேஷ் புகார் அளித்திருந்தார். இதை தொடர்ந்து எஸ்.சி. எஸ்.டி. ஆணையம் சீமான் மீது நடவடிக்கை எடுக்க பட்டாபிராம் போலீசுக்கு உத்தரவிட்டது. இதன்படி சீமான் மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எஸ்.சி. எஸ்.டி. சட்டப் பிரிவுடன் சேர்ந்து 4 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது.

    • முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
    • மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார்.

    முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று இரவு நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

    இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட உள்ளார். இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார். இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

    கலைஞர் நினைவு நாணயம் வெளியிடப்படுவதற்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அறிக்கை ஒன்றை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். அதில், "கலைஞரின் தொலைநோக்குப் பார்வை கோடிக்கணக்கான மக்கள் கண்ணியமாக வாழ வழி வகுத்தது. அவரது ஆட்சியின் கீழ் தமிழ்நாடு ஒரு தைரியமான பாதையில் பயணித்தது. அவரது கொள்கையில் இருந்த தெளிவு தமிழ்நாடு, முன்னோடியாக திகழ உதவியது. அவருக்கு நினைவு நாணயம் வெளியிடுவதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.

    கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடுவதற்கு வாழ்த்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

    அவரது பதிவில், "கலைஞரின் கனவை நனவாக்க நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றுவோம்" என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • தமிழகத்தில் தி.மு.க. ஆழமான கட்டமைப்பை பெற்றுள்ளது.
    • சந்திரசேகர ராவ் பின்னடைவை சந்திப்பதால் அவருடைய கட்சி நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போகிறது.


    தெலுங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்த பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து ஆட்சியை பறி கொடுத்தார்.

    அதற்கு பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்தார். பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி தனித்துப் போட்டியிட்ட சந்திரசேகரராவ் கட்சிக்கு தொடர்ந்து தெலுங்கானாவில் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

    அவருடைய கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலர் ஆளுங்கட்சியான காங்கிரசில் சேர்ந்து வருகின்றனர்.

    சந்திரசேகர ராவின் மகள் கவிதா மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சந்திரசேகர ராவ் பின்னடைவை சந்திப்பதால் அவருடைய கட்சி நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போகிறது.

    கட்சியை எப்படி வலுப்படுத்துவது என வழி தெரியாமல் சந்திரசேகர ராவ் திண்டாடி வருகிறார். இந்த நிலையில் அவருடைய பார்வை தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வின் பக்கம் திரும்பி உள்ளது.

    கருணாநிதி மறைவிற்குப் பிறகு கூட தி.மு.க. மாபெரும் வெற்றியை தேர்தலில் சந்தித்து வருகிறது.


    தி.மு.க.வின் கட்சி கொள்கை, செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அதனை பின்பற்ற சந்திரசேகரராவ் முடிவு செய்துள்ளார்.

    இதற்காக அவருடைய கட்சியின் முக்கிய தலைவர்களான முன்னாள் எம்.பி. பால்க சுமன், முன்னாள் விளையாட்டு ஆணைய தலைவர் ஆஞ்சநேயலு கவுட், ரவீந்தர் ரெட்டி ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 11 மற்றும் 12-ந் தேதிகளில் சென்னை திருவள்ளூர் உட்பட தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க.வின் கட்சி செயல்பாடுகள் கட்டமைப்புகளை ஆய்வு செய்தனர்.

    தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தி.மு.க. தலைவர்களிடம் அமைப்பு மற்றும் பலம் குறித்து கேட்டறிந்தனர்.

    தி.மு.க. மற்றும் பி.ஆர்.எஸ். ஆகிய இரு கட்சிகளும் மாநில அளவில் தனி கொள்கை, கலாச்சாரம் மொழிகளை மேம்படுத்து வது போன்ற ஒற்றுமைகளை கொண்டுள்ளன.

    தி.மு.க.வில் கருணாநிதியைப் போல பி.ஆர்.எஸ். கட்சிக்கு சந்திரசேகர ராவ் பலமான தலைவராக உள்ளார்.

    இதனால் தி.மு.க.வின் செயல்பாடுகளை பின்பற்றி எளிதில் தெலுங்கானாவில் கட்சியை வலுப்படுத்த முடியும் என சந்திரசேகர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் ஆய்வு செய்த சந்திரசேகர ராவ் கட்சி முக்கிய தலைவர்கள் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. ஆழமான கட்டமைப்பை பெற்றுள்ளது. தி.மு.க.வில் கிராமம், தொகுதி, மாவட்டம் மற்றும் மாநில அளவில் கிட்டத்தட்ட 2 கோடி உறுப்பினர்கள் மற்றும் குழுக்கள் உள்ளன. குழு உறுப்பினர்கள் மாவட்டத்திற்கு 2 அல்லது 3 முறை தொடர்பு கொள்கிறார்கள்.

    கட்சி நிகழ்ச்சிகளை திறம்பட ஏற்பாடு செய்கிறார்கள். உள்ளூர் பிரச்சனைகளை விவாதிக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிளைகள் உள்ளன. இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மாணவர் பிரிவுகள் மகளிர் அணி என கிராமங்கள் தோறும் கமிட்டிகள் உள்ளன.

    மாநிலத்தில் 38 மாவட்டங்கள் இருந்தாலும் தி.மு.க. கிட்டத்தட்ட 70 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வின் செயல்பாடுகளை பின்பற்றி அடிமட்டத்தில் இருந்து பி.ஆர்.எஸ். கட்சியை வலுப்படுத்த விரும்புகிறோம்.

    தி.மு.க. செயல்பாடுகள் குறித்து அறிக்கை தயார் செய்து வருகிறோம். இதனை எங்களுடைய கட்சி செயல் தலைவர் கே.டி.ராமராவிடம் சமர்ப்பிப்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழ்ப்புதல்வன் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக முதலமைச்சர் என்னிடம் நன்றி கூறினார்.
    • கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    கோவை:

    கோவை அரசு கலைக்கல்லூரியில் நடந்த தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சிறிது நேரம் பேசினார். பின்னர் அது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்ப்புதல்வன் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னிடம் நன்றி கூறினார். தமிழ்ப்புதல்வன் திட்டம் மிகவும் நல்ல திட்டம். இந்த பணத்தை மாணவர்கள் போதை பழக்கத்திற்கு பயன்படுத்தாமல் இருந்தால் சிறப்பான திட்டம் தான்.

    கோவை விமான நிலையம் மற்றும் எனது தொகுதிக்கு உட்பட்ட டவுன்ஹால், காந்திபுரம் பகுதியில் மல்டிலெவல் கார் பார்க்கிங் உள்பட தொகுதி சார்ந்த உள்கட்டமைப்பு பிரச்சினைகள் மற்றும் விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக பேசுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் வந்து பாருங்கள் என்று சொன்னார்.

    அதோடு வருகிற 18-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்று என்னிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதற்கு நான் கட்சியில் சொல்கிறேன் என்று தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுகிறார்கள்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலமாக உக்கடம் புறப்பட்டு சென்றார்.

    கோவை:

    தமிழகத்தில் பெண்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.

    இந்தநிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயின்று வரும் கல்லூரி மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இந்த திட்டத்திற்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் என பெயர் சூட்டப்பட்டது.

    அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான தமிழ்ப்புதல்வன் திட்டம் மாநில அளவில் இன்று தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்கவிழா கோவையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் கார் மூலமாக தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழா நடைபெற்ற கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்திற்கு சென்றார்.

    அங்கு அவரை அமைச்சர்கள், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா மேடைக்கு சென்றார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் விழா தொடங்கியது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். விழாவில் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடர்பான சிறு வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது.

    அதனை தொடர்ந்து கோவை செம்மொழி பூங்கா வளாகத்தில் அமைக்கப்படும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் ஆகிய புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    அதேபோல் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறைகளுக்கான புதிய கட்டிடங்கள் மற்றும் கோவை வ.உ.சி மைதானம் அருகே ரூ.1 கோடியில் கட்டப்பட்ட உணவு வீதி, புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தையும் முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்து பேசினார்.

    அதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலமாக உக்கடம் புறப்பட்டு சென்றார். அங்கு உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான ரூ.481 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அத்துடன் அந்த மேம்பாலத்தில் காரிலும் பயணித்தார்.

    கோவை மாநகரில் 2 நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் கருமத்தம்பட்டி கணியூர் இந்திரா நகர் பகுதிக்கு சென்றார். அங்கு 8 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் வெண்கல சிலையை திறந்து வைத்து பார்வையிட்டார்.

    தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அறிவுசார் நூலகத்தை திறந்து வைத்து, 116 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியினையும் ஏற்றி வைத்தார்.

    இந்த விழாக்களில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநகர மேயர், கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதேபோல் முதலமைச்சர் சென்ற அனைத்து இடங்களிலும் தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வந்து கைகளில் உதய சூரியன் சின்னம், தி.மு.க கொடியை பிடித்தபடி சாலையின் இருபுறங்களிலும் நின்று உற்சாகத்துடன் வரவேற்றனர்.

    முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்பட அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழா நடைபெறும் இடமான அரசு கலைக்கல்லூரி பகுதி, உக்கடம், கணியூர், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவையில் 3 விழாக்களையும் முடித்துக் கொண்டு பிற்பகலில் கோவை விமான நிலையத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலமாக மீண்டும் சென்னை செல்கிறார்.

    • கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.
    • கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர்கள், கனிமொழி எம்.பி., திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.

    ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு கீழ் உள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை திமுக சார்பில் அமைதிப்பேரணி நடைபெற்றது. பேரணியில் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, எல்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பேரணியை தொடர்ந்து மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர்கள், கனிமொழி எம்.பி., திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • கலைஞர் சிலைக்கு கீழ் உள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை திமுக சார்பில் அமைதிப்பேரணி நடைபெற்றது.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.

    ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு கீழ் உள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து சென்னை அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை திமுக சார்பில் அமைதிப்பேரணி நடைபெற்றது.

    அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, எல்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • காட்டூரில் மறைந்த தி.மு.க. தலைவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
    • கருணாநிதியின் நினைவு நாளில் சிலை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    சென்னை:

    திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவெறும்பூரை அடுத்த காட்டூரில் மறைந்த தி.மு.க. தலைவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சிலையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் சென்னையில் இருந்தபடி காணொளி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவருடன் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்றனர்.

    திருச்சியில் காணொளி வாயிலாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இனிகோ இருதய ராஜ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று இருந்தனர்.

    கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாளில் இந்த சிலை திறக்கப்பட்டதால் அங்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் கழக நிர்வாகிகளும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • அன்பை மட்டுமே விதைத்து தமிழ்நாட்டு அரசியலைப் பிழைக்க வைத்தவர் நமது கலைஞர்.
    • நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஒப்பீட்டு எல்லையை இந்திய ஒன்றியம் தாண்டி, உலக நாடுகள் வரை கொண்டு சேர்த்தது.

    சென்னை:

    திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,

    சொல்லாகவும் - செயலாகவும் நம் நினைவெல்லாம் நிறைந்து, நாள்தோறும் வழி நடத்திக் கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 6-ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று.

    மக்களிடையே வெறுப்பினை பரப்பியேனும் அரசியலில் பிழைத்திருக்க நினைப்போர் பலருண்டு; அன்பை மட்டுமே விதைத்து தமிழ்நாட்டு அரசியலைப் பிழைக்க வைத்தவர் நமது கலைஞர்.

    கலைஞர் அவர்களின் தொலைநோக்கு, நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஒப்பீட்டு எல்லையை இந்திய ஒன்றியம் தாண்டி, உலக நாடுகள் வரை கொண்டு சேர்த்தது.

    கலைஞர் அவர்களின் கொள்கை உறுதி, சமூக நீதி - மாநில சுயாட்சி - மொழி உரிமை எனும் தமிழ்நாட்டின் அரசியல் முழக்கத்தை, பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கச் செய்திருக்கிறது.

    ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல்; வளர்ச்சியை நோக்கிய நிர்வாகம் என திராவிட இயக்கக் கொள்கைககளின் வழியில் திராவிட மாடலுக்கு அடித்தளம் அமைத்தவர் நம் கலைஞர் அவர்கள்.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் உழைத்து, கழகத்தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க, இந்நாளில் உறுதியேற்போம்.

    கலைஞர் புகழ் பரவட்டும்! என்று தெரிவித்துள்ளார்.

    • கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினம் வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது.
    • அமைதிப் பேரணி புறப்பட்டு காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் சென்றடைகிறது.

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினம் வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பல்வேறு கட்சித்தலைவர்கள், பொது மக்கள் வருகை தருவார்கள் என்பதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கருணாநிதியின் நினைவு நாளையொட்டி வரும் 7ம் தேதி திமுக அமைதிப் பேரணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை அண்ணாசாலையில் இருந்து கடற்கரை வரை நினைவிடம் வரை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெறுகிறது.

    அன்றைய தினம் காலை 7 மணிக்கு அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலை அருகில் இருந்து அமைதிப் பேரணி புறப்பட்டு காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் சென்றடைகிறது.

    அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட தி.மு.க. முன்னணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்கின்றனர்.

    கலைஞரின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் என தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

    ×