search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kallakurichi hooch tragedy"

    • உடுமலை மாவடப்பு மலைக்கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் சாராயம் காய்ச்சி விற்றது தெரியவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை:

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே மஞ்சநாயக்கனூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). ஆனைமலை ஒன்றிய பா.ஜனதா செயலாளர். அதே ஊரை சேர்ந்தவர் மகேந்திரன்(40). கட்டிட தொழிலாளி. இவர்கள் 2 பேருக்கும் நேற்று முன்தினம் திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், அதே ஊரை சேர்ந்த சிலருடன் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மாவடப்பு மலைக்கிராமத்தில் இருந்து கடந்த 27-ந் தேதி சாராயம் வாங்கி வந்து குடித்ததும், அவர்களை தவிர மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து நடந்த அடுத்தக்கட்ட விசாரணைக்கு பிறகு ரவிச்சந்திரன், மகேந்திரன் ஆகியோருக்கு சாராயம் குடித்ததால் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், மதுவில் கொசு மருந்து கலந்த தண்ணீரை கலந்து குடித்ததால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    இருப்பினும் அவர்களுக்கு சாராயம் விற்றது யார்? என்று ஆழியாறு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உடுமலை மாவடப்பு மலைக்கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் சாராயம் காய்ச்சி விற்றது தெரியவந்தது. அவர் மீது ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளச்சாராயம் குடித்ததால் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
    • மலைவாழ் மக்களிடமும் விசாரணை நடத்தினர்.

    உடுமலை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மஞ்சநாயக்கனூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 55). ஆனைமலை ஒன்றிய பா.ஜனதா செயலாளராக உள்ளார். அதே ஊரை சேர்ந்த கட்டிட தொழிலாளி மகேந்திரன்(40).இவர்கள் இருவருக்கும் நேற்று முன்தினம் திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட 2பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து ஆழியாறு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மாவடப்பு மலைக்கிராமத்தில் இருந்து ரவிச்சந்திரன், மகேந்திரன் மட்டுமின்றி அதே ஊரை சேர்ந்த லட்சுமணன்(49), செந்தில்குமார்(48), ராமகிருஷ்ணன்(40), மணிகண்டன்(30) ஆகியோரும் சாராயம் வாங்கி வந்து கடந்த 27-ந்தேதி குடித்தது தெரியவந்தது. இதில் ரவிச்சந்திரன், மகேந்திரன் ஆகியோரை தவிர மற்ற 4 பேருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதன் மூலம் சாராயம் குடித்ததால் 2பேருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் மது குடித்த இடத்தில் ஆய்வு செய்ததில், அங்கு சுகாதாரமற்ற தண்ணீர் இருப்பது தெரியவந்தது. அந்த தண்ணீரை மதுவில் கலந்து குடித்ததால் அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அந்த தண்ணீரை போலீசார் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விவரமும் தெரியவரும் என்றனர்.

    இந்தநிலையில் சாராயம் வாங்கிய உடுமலை மாவடப்பு செட்டில்மெண்ட் கிராமத்துக்கு திருப்பூா் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார், கோவை மாவட்டத்தில் இருந்து 25-க்கும் மேற்பட்ட போலீசார், உடுமலை வனச்சரகா் மணிகண்டன் தலைமையிலான வன அலுவலா்கள் சென்று கள்ளச்சாராயம் ஏதும் விற்கப்படுகிறதா என்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மலைவாழ் மக்களிடமும் விசாரணை நடத்தினர். இதனால், ஆத்திரமடைந்த மலைவாழ் மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

    வாக்குவாதம் முற்றியதையடுத்து, போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள காட்டுப்பட்டி செட்டில்மெண்ட் கிராமத்தில் தங்கி விசாரணையை தொடா்ந்தனா்.

    இது குறித்து போலீசார் கூறுகையில் மஞ்சநாயக்கனூா் கிராமத்தில் ஒரு சிலா் அருந்திய சாராயம் மாவடப்பு கிராமத்தில் இருந்துதான் சென்றுள்ளது என தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மாவடப்பு கிராமத்தில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.

    • கைதான கண்ணுக்குட்டியிடம் போலீசார் மாமுல் வாங்கியதாக குற்றச்சாட்டப் பட்டுள்ளது.
    • கள்ளச்சாராய விவகாரத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

    கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உபாதைகளால் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 135 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.

    எதிர்கட்சிகள் இது தொடர்பாக சிபிஐ வேண்டும் என வலியுறுத்திய நிலையில், தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக இரண்டு டிஎஸ்பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 டி.எஸ்.பி.க்கள் உட்பட 9 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    கைதான கண்ணுக்குட்டியிடம் போலீசார் மாமூல் வாங்கியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. கருணாபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடந்து வருவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதுவரை கள்ளச்சாராய விவகாரத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • 3 பேரின் கல்வி செலவை அ.தி.மு.க. ஏற்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
    • தாயையும், தந்தையையும் கள்ளச்சாராயத்துக்கு பறி கொடுப்போம் என்று கோகிலா கனவிலும் நினைத்து பார்த்துக் இருக்க மாட்டாள்.

    கோகிலாவுக்கு ஏற்பட்டு இருக்கும் சோகம் உலகில் யாருக்கும் ஏற்பட கூடாது. அந்த சிறுமிக்கு தற்போது 16 வயதே ஆகிறது.

    உலகம் எப்படிப்பட்டது? உறவினர்கள் எத்தகையவர்கள்? நட்பு வட்டாரங்களின் நோக்கம் என்ன? என்பது போன்ற எதுவுமே தெரியாத பருவம். சுருக்கமாக செல்ல வேண்டுமானால் வஞ்சகம் நிறைந்த இந்த உலக வாழ்க்கையின் எந்த ஒரு பாகத்தையும் அனுபவித்து அறியாத பருவத்தில் இருப்பவள்.

    மற்ற சிறுவர்-சிறுமிகள் ஓடியாடி துள்ளி விளையாடி துளியும் கவலை இல்லாமல் வாழும் நிலையில் மனதில் அந்த சிறுமி பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஏற்பட்ட இந்த சோகத்துக்கு காரணம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்.

    அந்த சம்பவத்தில் பலியான 64 பேரில் கோகிலாவின் தாயும், தந்தையும் அடங்குவார்கள். ஒரே நாளில் தனது தாயையும், தந்தையையும் கள்ளச்சாராயத்துக்கு பறி கொடுப்போம் என்று கோகிலா கனவிலும் நினைத்து பார்த்துக் இருக்க மாட்டாள்.

    அவளது தந்தை சுரேஷ். பெயிண்டர். தாய் வடிவுக்கரசி. பண்ணையில் வேலை பார்தது வந்த கூலித்தொழிலாளி. அவர்கள் இருவரும் சேர்ந்து குடும்பத்தை நடத்தி வந்தனர். 20க்கு 20 அடி வாடகை வீட்டில் வசித்த வந்த அவர்கள் தினசரி உழைத்தால்தான் சாப்பாடு என்ற நிலையில் காலத்தை தள்ளியவர்கள்.


    அவர்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை நட்சத்திரம் மகள் கோகிலா. 2 மகன்கள் ஹரிஸ், ராகவன். கோகிலாவுக்கு 16 வயது. ஹரிசுக்கு 15 வயது, ராகவனுக்கு 14 வயது.

    இந்த இளம் வயதில் இந்த 3 பிஞ்சுகளையும் தவிக்க விட்டுவிட்டு சுரேசும், வடிவுக்கரசியும் கள்ளச்சாராயத்துக்கு பலியாகி உள்ளனர். இவர்களில் சுரேஷ் தினமும் உடல்வலி நீங்குவதற்காக கள்ளச்சாராயம் குடிப்பதை பழக்கத்தில் வைத்திருந்தார்.

    சம்பவத்துன்று கள்ளச்சாராயத்தை அவர் ரகசியமாக ஒளித்து வைப்பதற்காக வேறு ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்திருந்தார். வடிவுக்கரசி அதை ஏற்கனவே தான் வாங்கி வைத்திருந்த ஓமம் தண்ணீர் என்று தவறுதலாக நினைத்து குடித்து விட்டார். விளைவு கணவன்-மனைவி இரண்டு பேருமே உயிரை பறிக்கொடுத்து விட்டனர்.

    இந்த பரிதாபத்தால் தற்போது குடும்ப பொறுப்பு 16 வயது கோகிலா மீது விழுந்துள்ளது. 15 வயது ஹரிசையும், 14 வயது ராகவனையும் படிக்க வைத்து ஆளாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பை கோகிலா ஏற்று இருப்பதாக கூறி உள்ளாள். ஆனால் துரதிஷ்டவசமாக சிலர் அவளுக்கு இடையூறு ஏற்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.

    தந்தை சுரேசுக்கு கடன் கொடுத்து இருப்பதாகவும் எனவே அரசு தரும் ரூ.10 லட்சம் நிதி உதவியை தங்கள் கடனை கழிக்க தர வேண்டும் என்றும் மிரட்ட தொடங்கி இருக்கிறார்களாம்.

    இந்த 3 பேரின் கல்வி செலவை அ.தி.மு.க. ஏற்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். அந்த பணத்தையும் சிலர் கேட்டு மிரட்டுகிறார்களாம். இதனால் கோகிலா மிரண்டு போய் இருக்கிறாள்.

    திக்கு தெரியாமல் தவிக்கும் அந்த சிறுமி ஒரே ஒரு உதவிதான் கேட்கிறாள். சொந்தமாக குடியிருக்க வீடு இல்லை. முதலமைச்சர் தனக்கு ஒரு வீடு தந்தால் பிழைத்துக் கொள்வோம் என்று அவள் கண்ணீர் மல்க சொன்னது நெஞ்சை கடப்பாரையால் குத்துவது போல் இருக்கிறது.

    சிறு வயதிலேயே இப்படி ஒரு பாரத்தை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கோகிலா நிச்சயம் போராடி ஜெயிப்பேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறாள். அவளுக்கு உற்சாகம் கொடுத்தாலே போதும் 3 குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி விட முடியும்.

    • போலீசார் இதுவரை சுமார் 86 பேரை கைது செய்துள்ளனர்.
    • கைது செய்யப்பட்ட 3 பேரும் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே கள்ளச்சாராயத்தை தடுக்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் வியபாரம் செய்வோர் மற்றும் அதனை கடத்துபவர்களை உடனடியாககைது செய்ய வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜித் சதுர்வேதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து போலீசார் இதுவரை சுமார் 86 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பிரபல கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் (வயது42) என்பவரை சங்கராபுரம் போலீசார் கள்ளச்சாராய வழக்கில் அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் போலீஸ் நிலையத்திலிருந்து திடீரென தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த தகவல் வெளியானதால் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் தப்பிஓடிய கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டனை தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஏற்கனவே சேஷசமுத்திரம் கிராமத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 40-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் அக்கிராமத்தில் மட்டும் 4 பேர் இதுவரை உயிரிழந்தனர். இதனிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சின்னதுரை, செந்தில், ராஜா ஆகிய 3 பேரும் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிவாரணம் வழங்கப்பட்டது கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு அல்ல.
    • மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் சிறிது அதிகரித்திருக்கலாம்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரம் ஊராட்சி வைகல் கிராமத்தில் உள்ள வைகல்நாதர் சாமி கோவிலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தனது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தபோது கூறியதாவது:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 61 பேர் உயிரிழந்ததும் ஒரு வகையில் விபத்து தான். நிவாரணம் வழங்கப்பட்டது கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு அல்ல. அவரால் வருமான இழப்புக்கு ஆளாகி தவிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு தான். எனவே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது சரியா தவறா என்று விமர்சிப்பது தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்ப்பதை போன்றது. எனவே நான் அது குறித்து விமர்சிக்க விரும்பவில்லை.

    தமிழ்நாடு அரசு படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் நேரில் வந்து பார்த்தால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அர்த்தம் இல்லை. அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் அங்கு பார்வையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளன.

    இதனை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தான் செய்யும். இடைத்தேர்தலில் போட்டியிடாமல் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் போது தேர்தல் நியாயமாக நடக்காது என்று காரணம் கூறுவது இந்திய, தமிழக அரசியலில் வாடிக்கையான ஒன்றுதான். மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் சிறிது அதிகரித்திருக்கலாம். ஓ.பி.எஸ், தினகரன், ஏசி சண்முகம் போன்ற கூட்டணியில் நின்ற கட்சித் தலைவர்கள், பா.ம.க. உடன் வைத்துக்கொண்ட கூட்டணி ஆகியவற்றின் காரணமாக வாக்கு சதவிகிதம் அதிகரிப்பதை வைத்து பா.ஜ.க. வானத்துக்கும், பூமிக்கும் குதிக்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, முண்டியம்பாக்கம், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
    • மேலும் 10 பேருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, முண்டியம்பாக்கம், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி நேற்று வரை 59 போ் உயிாிழந்தனா்.

    இந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏசுதாஸ் (வயது 39) என்பவா் சிகிச்சை பலனின்றி பாிதாபமாக உயிாிழந்தாா். இதனால் இச்சம்பவத்தில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 60 ஆக உயா்ந்துள்ளது.

    மேலும் 10 பேருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • அ.தி.மு.க. நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்களுக்குஒரே எதிரி தி.மு.க.தான்.
    • எவ்வளவு பணம் கொட்டப்பட்டாலும் விக்கிரவாண்டி மக்கள், நியாயத்தின் பக்கம் இருப்பார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து ராதாபுரத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர்பேசியதாவது:-

    நமக்கு சமூகநீதி கிடைக்க இத்தேர்தல் ஒரு வாய்ப்பு. பா.ம.க. வெற்றி பெற்றால் பின்தங்கிய சமுதாயம், தாழ்த்தப்பட்ட சமுதாயம் முன்னேறும், நமக்கு சமூகநீதி கிடைக்கும், அடுத்த மாதமே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், 10.5 சதவீத இடஒதுக்கீடும் கிடைக்கும், இது உறுதி. தமிழ்நாட்டின் வாழ்க்கை பிரச்சனை விக்கிரவாண்டி தொகுதி மக்களின் கையில் உள்ளது.

    மேடைக்கு மேடை நாங்கள்தான் சமூகநீதிக்கு சொந்தக்காரர்கள் என்று தி.மு.க.வினர் பேசுகின்றனர். ஆனால் சமூகநீதிக்கும், இன்றைய ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 2019 இடைத்தேர்தலின்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவோம் என்றார்.

    அந்த வாக்குறுதி என்னவாயிற்று? மத்திய அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால்தான் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கொடுக்கமுடியும் என்கிறார். அப்படியென்றால் எதற்கு அரசாணை பிறப்பித்தீர்கள்?, உச்சநீதிமன்றத்தில் ஏன் மேல் முறையீடு செய்தீர்கள்? தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுக்க எந்ததடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் சொல்லி 2 ஆண்டுகளாகிறது. ஆனால் நம்மை தி.மு.க. ஏமாற்றி வருகிறது. எங்களிடம் தரவுகள் இல்லை என்பதால் கொடுக்க முடியாது என்று ஸ்டாலின் கூறுகிறார்.

    ஆனால் எங்களிடம் தரவுகள் இருக்கிறது, 20 சதவீத விழுக்காட்டில் 10.5 சதவீதத்துக்கு மேல் வன்னியர்கள் இடம்பெறுகிறார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் கூறுகிறார். இது என்ன மோசடி, யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்?

    கள்ளக்குறிச்சியில் நடந்த சாராயபலிகள் சம்பவம் வெட்கக்கேடானது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 22 பேர் சாராயம் குடித்து இறந்தனர். அதன் பிறகும் இந்த அரசு, பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இதற்கு ஆளும்கட்சியை சார்ந்த அரசியல்வாதிகள் தான் காரணம். அங்கிருக்கிற 2 எம்.எல்.ஏ.க்கள்தான் காரணம் என பள்ளி குழந்தைகள் கூட சொல்கிறார்கள். இவர்கள் நம்மீது வழக்கு போடுகிறார்கள், நாங்கள் சந்திக்க தயாராகத்தான் இருக்கிறோம், எங்களிடம் எல்லா ஆதாரங்களும் இருக்கிறது, தேவைப்பட்டால் ஒவ்வொன்றாகவெளியிடுவோம்.

    58 உயிர்கள் இறந்த பிறகுதான் கைது நடவடிக்கை, சாராய ஊறல் அழிப்பு நடவடிக்கை எடுக்கிறார்கள். அதனால்தான் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறோம். சி.பி.ஐ. விசாரணை நடந்தால் தான் கடந்த 30 ஆண்டுகளாக யார், யார் சாராயம் விற்றார்கள், யாரெல்லாம் ஆதரவாக இருந்தார்கள் என்ற முழு விவரமும் தெரியும்.

    இந்த நேரத்தில் அ.தி.மு.க. நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்களுக்குஒரே எதிரி தி.மு.க.தான். அதற்கு உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நீங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள். உங்களுடைய எதிரி, மக்களின் எதிரி, விவசாயிகளின் எதிரி, முக்கியமாக பெண்களின் எதிரி தி.மு.க., இதையெல்லாம் அனைவரும் சிந்தியுங்கள். தி.மு.க.விடம் பணம் மட்டும்தான் இருக்கிறது.

    நம்மிடம் மக்கள் சக்தி, நியாயம் இருக்கிறது. எவ்வளவு பணம் கொட்டப்பட்டாலும் விக்கிரவாண்டி மக்கள், நியாயத்தின் பக்கம் இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழக தொழில்துறை, கலால்துறை, காவல்துறை அமைச்சர்கள பொறுபேற்க வேண்டும்.
    • மெத்தனால் என்ற வேதிப்பொருள் சாராயத்தில் கலக்கப்பட்டதால் அதனை அருந்திய பலர் மரணமடைந்துள்ளதாக தெரிகிறது.

    புதுச்சேரி:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் சாவுக்கு காரணமான தமிழக தி.மு.க. அரசை கண்டித்தும், கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதை கண்டித்தும், புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணாசிலை அருகில் இன்று நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    தமிழகம் முழுவதும் கள்ளசாராய விற்பனை அரசுக்கும், காவல் துறைக்கும் தெரிந்தே விற்பனை செய்யப்படுகிறது. ஆளும் திமுக அரசின் ஆதரவோடு விற்பனை செய்யப்படுவதால் பல இடங்களில் காவல்துறையினர் கண்டும் காணாமல் உள்ளனர்.

    இந்த துயர சம்பவத்திற்கு தமிழக தி.மு.க. முதலமைச்சர் ஸ்டாலின் முழு பொறுப்பேற்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற வேதிப்பொருள் சாராயத்தில் கலக்கப்பட்டதால் அதனை அருந்திய பலர் மரணமடைந்துள்ளதாக தெரிகிறது.

    இதற்கு தமிழக தொழில்துறை, கலால்துறை, காவல்துறை அமைச்சர்கள பொறுபேற்க வேண்டும். ஆனால் அதை விடுத்து தமிழக முதலமைச்சர், இந்த சாராயம் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்டதாகவும், ஆந்திராவில் இருந்து தொழில்சாலைகளுக்கு கொண்டு வரப்பட்ட மெத்தனால் என்றும் சட்டமன்றத்தில் உண்மையை மூடி மறைக்கும் விதத்தில் ஆதராமற்ற குற்றச்சாட்டை கூறினார்.

    இந்த சம்பவத்தில் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக தமிழக முதலமைச்சர் கூறுவது உண்மை என்றால் விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும். மனதை உலுக்கும் இந்த சட்டவிரோத சம்பவத்தை தமிழக சி.பி.சி.ஐ.டி.யே விசாரணை நடத்துவது எந்த விதத்தில் நியாயம்..?

    அகில இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய இந்த பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியினுடைய தேசிய தலைவர்கள் சோனியா, ராகுல், கார்கே உள்ளிட்டவர்களும், கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய தலைவர்களும், தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளும் வாய் திறக்காமல் மக்களுக்கு அறிவுரை வழங்கி தி.மு.க. அரசுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றனர்.

    • ஜெயமுருகன் உடலை அவரது குடும்பத்தினர் புதைத்தனர். இதுபோல் இளையராஜா உடலை எரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
    • பிரேத பரிசோதனை முடிந்து அறிக்கை தயாரித்த பின்னரே ஜெயமுருகன் கள்ளச்சாராயம் குடித்து இறந்தாரா என்பது தெரிய வரும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகில் உள்ள மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெய முருகன் (45) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த இளைய ராஜா (35) ஆகிய இருவரும் கடந்த 18-ந் தேதி கருணாபுரம் கிராமத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்ததில் 2 பேரும் இறந்து போனார்கள்.

    இதையடுத்து ஜெயமுருகன் உடலை அவரது குடும்பத்தினர் புதைத்தனர். இதுபோல் இளையராஜா உடலை எரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் இறந்து போன ஜெயமுருகன் மற்றும் இளையராஜா குடும்பத்திற்கு அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண உதவி கேட்டு உறவினர்கள் மாவட்ட கலெக்டர் பிரசாந்திடம் முறையிட்டனர்.

    இளையராஜா உடலை எரித்து விட்டதால், புதைக்கப்பட்ட ஜெயமுருகன் உடலை மட்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதன்படி சென்னை மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் இருந்து மருத்துவக் குழுவினர் நேற்று மாலை மாதவச்சேரி சுடுகாடு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஜெயமுருகன் உடலை வருவாய்துறையினர் மற்றும் போலீசார் முன்னிலையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் வருவாய் துறை மற்றும் போலீசார் முன்னிலையில் தோண்டி எடுத்தனர்.

    பின்னர் பிரதே பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேதபரிசோதனை முடிந்து அறிக்கை தயாரித்த பின்னரே ஜெயமுருகன் கள்ளச்சாராயம் குடித்து இறந்தாரா என்பது தெரிய வரும்.

    • கள்ளச்சாராய மரணங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது.
    • இந்தியா முழுதும் நீட் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது.

    பெரம்பலூர்:

    ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி., பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய உயிரிழப்பு சம்பவத்தில் மருத்துவர்கள், மருத்துவமனைகள், அரசாங்கமும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல்லது செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். இந்த நேரத்தில் இதில் அரசியல் ஆதாயம் தேட வேண்டி சர்ச்சை கருத்துக்களை சொல்லுவதோ, பரபரப்பு உருவாக்குவதற்காக மட்டமான அரசியல் செய்வதில் யாரும் ஈடுபட வேண்டாம்.

    இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது.

    மாவட்ட கலெக்டரை டிரான்ஸ்பர் செய்து உள்ளனர். மாவட்ட எஸ்.பி. மற்றும் மாவட்டத்தில் உள்ள முக்கியமான காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். இது மாத்திரம் இல்லாமல் சம்பந்தப்பட்ட குற்றவாளியையும், அவருக்கு உடந்தையாக இருந்த சில பேரையும் கைது செய்து உள்ளனர்.

    கடந்த 30, 40 வருடங்களாக தொடர்ச்சியாக கள்ளச்சாராய மரணங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. இது ஒரு நாடு தழுவிய ஒரு பிரச்சனை. பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பா.ஜ.க. ஆளுகின்ற குஜராத் மாநிலம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி இருக்கும் பீகாரிலும் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இது போன்ற கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனை போன்ற மோசமான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் அதற்கு உடந்தையாக இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கும் குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும். அதற்கேற்ப இந்த அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

    இன்று இந்தியா முழுதும் நீட் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது.

    மக்களவையில் எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்போது தமிழக மக்கள் மற்றும் திருச்சி தொகுதி மக்களுக்கான முக்கிய பிரச்சனைக்கு கண்டிப்பாக குரல் கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 16 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
    • சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 150-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவக் கல்லூாி மருத்துவமனைகள் மற்றும் புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 19-ந் தேதி 17 பேரும், 20-ந் தேதி 24 பேரும், 21-ந் தேதி 9 பேரும், நேற்று முன்தினம் 5 பேரும் என மொத்தம் 55 போ் உயிாிழந்தனா்.

    இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தை சோ்ந்த சவுந்தரராஜன் மகன் மதன் (வயது 46) என்பவா் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தொடர்ந்து மாலையில் சேஷசமுத்திரத்தை சேர்ந்த சாமுண்டி (70) என்பவர் சிகிச்சை இறந்து போனார்.

    இன்று காலை கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுவங்கூரை சேர்ந்த மணிகண்டன் (28) மற்றும் ஒரு பெண் இறந்து போனார்கள். பிரேத பரிசோதனை அறிக்கைப்படி கள்ளச்சாராய பலி 59 என அரசு அறிவித்துள்ளது.

    ஏற்கனவே மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன் (45), இளையராஜா (35) ஆகியோர் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக அவர்களது குடும்பத்தினர் கூறியுள்ளதால் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 61 ஆக உயா்ந்துள்ளது.

    மேலும் இன்று காலை 7 மணி நிலவரப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூாி மருத்துவமனையில் 109 பேரும், சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவ மனையில் 30 பேரும், புதுச்சரி ஜிப்மா் மருத்துவ மனையில் 12 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவ மனையில் 4 பேரும் என மொத்தம் 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 16 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் ஓய்வு பெற்ற ஐகோா்ட்டு நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா் ஆணையமும் விசாரித்து வருகிறது.

    ×