search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mupperum Vizha"

    • தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
    • பவள விழா ஆண்டில் புதிதாக மு.க. ஸ்டாலின் பெயரிலும் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.

    விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றுகிறார்.

    ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினம், செப்டம்பர் 17-ந்தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாளாகும். இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு, தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. எனவே, தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். இவ்விழாவில் பெரியார் விருதை பாப்பம்மாளுக்கும் அண்ணா விருது-அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கும் கலைஞர் விருது-ஜெகத் ரட்சகனுக்கும் பாவேந்தர் விருது-கவிஞர் தமிழ்தாசனுக்கும், பேராசிரியர் விருது-வி.பி.ராஜனுக்கும் ஸ்டாலின் வழங்குகிறார்.


    இதேபோல் பவள விழா ஆண்டில் புதிதாக மு.க. ஸ்டாலின் பெயரிலும் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருதை முதல்வரிடம் இருந்து எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெறுகிறார்.

    இதுதவிர, கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பண முடிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். அந்த வகையில், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு வரும் கட்சி நிர்வாகிகளுக்கு பண முடிப்பு வழங்கப்படுகிறது. மண்டல அளவில் 4 பேர் வீதம் 16 பேருக்கு இந்த பண முடிப்பு வழங்கப்படுகிறது. விருது மற்றும் பணமுடிப்பை வழங்கியபின் ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

    விழாவில், துணை பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, ஐ.பெரிய சாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிமணியன் வரவேற்புரையாற்றுகிறார்.

    இந்த விழாவில், தமிழகம் முழுவதில் இருந்தும் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார். இதையடுத்து, நேற்று மாலை முதலே தொண்டர்கள் வரத் தொடங்கி விட்டனர்.

    இதையடுத்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில், பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. அனைவரும் விழாவை முழுமையாக காணும் வகையில் பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும், 75 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சி கொடியை ஸ்டாலின் ஏற்றுகிறார். விழா நடைபெறும் வளாகத்தில் 75 ஆண்டு தி.மு.க. வரலாற்றை விளக்கும் 100 அடிகட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர, சென்னை அண்ணா அறிவாலயம், அன்பகம் ஆகிய தி.மு.க. அலுவலகங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொன்விழா இலச்சினை லேசர் ஒளி விளக்குகளால் ஒளிர்கின்றன.

    • நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தி.மு.க. பவள விழா நடைபெறுகிறது.
    • ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்!

    சென்னை:

    சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தி.மு.க. பவள விழா நடைபெறுகிறது. இதற்காக மாநாடு போன்ற பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பேரறிஞர் அண்ணாவால் 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி தொடங்கப்பட்ட தி.மு.க.வின் பவள விழா மற்றும் பெரியார், அண்ணா, கட்சி உதயமான நாள் ஆகிய முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.

    இதையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,

    "நான்தான் திராவிடன் என்று நவில்கையில்

    தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!"

    - எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது!

    தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து நிறுத்தத் தம்பிமார் படை உள்ளதென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள உடன்பிறப்புகளானோம் நாம்!

    ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்! தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்!

    இன்று மாலை பவள விழா - முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன்… என்று தெரிவித்துள்ளார்.

    • திமுக அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி.
    • மேடையில் இருப்பவர்கள் இடையேயான உறவு, வெறும் தேர்தல் உறவு அல்ல. கொள்கை உறவு.

    கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் திமுக முப்பெரும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த முறை நான் கலந்துக் கொண்ட கூட்டம் இந்தியா முழுவதும் டிரெண்டானது. 8 முறை பிரதமர் மோடி வந்து கட்டமைத்த பிம்பத்தை ஸ்வீட் பாக்ஸ் மூலம் ராகுல் முறியடித்தார்.

    நாற்பதும் நமதே என முழங்கினேன். நடக்குமா என கேள்வி எழுப்பினார்கள். என் நம்பிக்கைக்கு ஆதாரம் கூட்டணி தலைவர்கள். நாற்பது தொகுதிகளிலும் வெற்றி.

    40க்கு 40க்காக உழைத்த திமுக தொண்டர்கள், இந்தியா கூட்டணி கட்சியினருக்கு நன்றி. இது சாதாரண வெற்றி அல்ல. வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. 2004ல் 40க்கு 40 வெற்றியை பெற்று தந்தார் தலைவர் கலைஞர்.

    திமுக அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி. இது சாதாரண வெற்றி அல்ல, வரலாற்று சிறப்புமிக்க வெற்றி.

    மேடையில் இருப்பவர்கள் இடையேயான உறவு, வெறும் தேர்தல் உறவு அல்ல. கொள்கை உறவு.

    பாஜக 400 இடங்களை கைப்பற்றும் என்று சொன்னார்கள். அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை தலைகுனிய வைத்துள்ளோம்.

    இந்தியா கூட்டணி கட்சிகளிடையே பிளவுகளை ஏற்படுத்த பாஜக முயற்சித்தது. இவ்வளவு செய்தும் பாஜகவுக்கு கிடைத்தது வெறும் 240 இடங்களே, இது மோடிக்கு கிடைத்த தோல்வி.

    வாயால் வடை சுடுவதெல்லாம் உங்கள் வேலை. எங்கள் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கருத்துகளால் சுடுவார்கள். 237 எம்பிக்கள் எதிர்க்கட்சியாக இருப்பதால், பாஜகவால் நினைத்ததை செய்ய முடியாது. மக்களுக்கான குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது.

    நாடாளுமன்றத்தில் 9695 கேள்விகளை எழுப்பியவர்கள் எங்கள் எம்பிக்கள்.

    நாடாளுமன்றத்தில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக 40 எம்பிக்கள் செயல்பட வேண்டும்.

    பாஜகவை பாசிசி பாதையில் செல்ல விடாமல் எம்பிக்கள் தடுக்க வேண்டும். எப்போதும் கட்சி பற்றியே சிந்தித்த தலைவர் கலைஞருக்கு நூற்றாண்டு விழா பரிசே இந்த 40க்கு 40.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும், திமுக வேட்பாளர் தான் வெற்றி பெற போகிறார். தொடர் வெற்றி, இன்னும் உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளித்துள்ளது.

    எங்களை நம்பி பொறுப்பு கொடுத்துள்ள மக்களின் நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது. சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்வர் ஸ்டாலினின் அணுகுமுறை, உக்திகளே வெற்றிக்கு காரணம்.
    • கூட்டணி கட்சிகளுக்காக திமுக வென்ற தொகுதிகளை விட்டுக் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

    எனவே 40 தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, வரலாற்று வெற்றி தேடி தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் இன்று மாலை 4 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் தொடங்கியது. 

    இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., பங்கேற்றுள்ளனர்.

    மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.

    இவ்விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பாஜகவை தமிழகத்தில் கால்பதிக்க விமாமல் சாதித்து காட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் போன்ற தலைமை அரசியலில் அபூர்வம், அற்புதம்.

    கேரளாவில் ஒரு நடிகரை வைத்து, ஒரு இடத்தை பாஜக கைப்பற்றியுள்ளது. ஆனால், எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் பாஜகவால் தமிழகத்தில் வேரூன்ற முடியாது.

    ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு, பவன் கல்யானை வளைத்துப்போட்டு சில இடங்களில் பாஜக வென்றுள்ளது.

    இந்திய கூட்டணி தலைவர்களே, முதல்வர் ஸ்டாலினை வியந்து பார்க்கிறேன்றனர். சோனியா உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்.

    முதல்வர் ஸ்டாலினின் அணுகுமுறை, உக்திகளே வெற்றிக்கு காரணம்.

    2019க்கு முன் காவிரியை வைத்து முதல்வர் ஸ்டாலின் உருவாக்கிய கூட்டணி இன்றும் தொடர்கிறது.

    மழைக்கால தவளை போல் ஒருவர் தாமரை மலரும் மலரும் என்று கத்திக் கொண்டே இருக்கிறார். கூட்டணி கட்சிகளுக்காக திமுக வென்ற தொகுதிகளை விட்டுக் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுவாணி நதியும், நொய்யல் நதியும், கவுசிகா நதியும் பாழ்பட்டு கிடக்கின்றன.
    • மாநகரம் முழுக்க குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணி முறையாக நடைபெறுவதில்லை.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் வரும் 15-ந்தேதி (அதாவது நாளை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முப்பெரும் விழா நடத்தவிருப்பதாக அறிந்தேன். கல்வியிலும், தொழில் துறையிலும் கோலோச்சிய கோவை, தி.மு.க. ஆட்சியில் செயலிழந்து இருக்கிறது.

    கடந்த 30 வருடங்களாக, மறைந்த கருணாநிதி காலத்தில் இருந்து, தி.மு.க.வின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றுவோம் என்ற வரி மட்டும் தவறாமல் இடம்பெறும்.

    ஆனால், திட்டத்தை நிறைவேற்ற தி.மு.க. எந்த முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை.

    சிறுவாணி நதியும், நொய்யல் நதியும், கவுசிகா நதியும் பாழ்பட்டு கிடக்கின்றன. ஆனால் தி.மு.க.வுக்கு அவை குறித்து கவலை இல்லை. தி.மு.க. அரசின் மின்கட்டண உயர்வால், விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முடங்கி இருக்கிறது.

    கோவை மாநகருக்கு உடனடி தேவை, சாலை வசதிகளும், தண்ணீர்ப் பஞ்சத்துக்கான தீர்வுகளும்தான். அதுபோக, மாநகரம் முழுக்க குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணி முறையாக நடைபெறுவதில்லை.

    இதில் முப்பெரும் விழா என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இருந்து குப்பைகளைக் கொண்டு வந்து, கோவையை மேலும் குப்பைக் கிடங்காக ஆக்குவதுதான் இந்த விழாவின் விளைவாக இருக்கப் போகிறது.

    உண்மையிலேயே தி.மு.க.வுக்கு, கோவை மக்கள் மீது அக்கறை இருக்குமேயானால், கோவை மக்களின் அறுபது ஆண்டு கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும். கோவை பகுதி நீர்நிலைகளை சீரமைத்து, தண்ணீர் பஞ்சத்தை தடுத்திருக்க வேண்டும். சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள கம்யூனிஸ்டு அரசு தடுப்பணை கட்டுவதைத் தடுத்திருக்க வேண்டும்.

    கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு, தமிழக பா.ஜனதா சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில், பத்தில் ஒரு பங்கை தி.மு.க. அரசு நிறைவேற்ற முன்வந்தாலே, கோவையின் பல ஆண்டு கால ஏக்கம் தீரும். ஆனால், அதை விடுத்து வீண் விளம்பரத்துக்கு விழா எடுப்பதனால், மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×