என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Barrier"

    • கடல் சீற்றம் அதிகமாகி 15 அடிக்கும் மேல் அலை எழும்பி கிராமத்துக்குள் கடல்நீர் புகுந்தது.
    • கடற்கரையில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் உள்ள கடைக்கோடி கிராமமான சந்திரபாடியில் 2500 -க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    மீன்பிடித்தொழிலை மட்டுமே நம்பியுள்ள இக்கிராமத்தில் மழை வெள்ளம், புயல் ஏற்படும் போதும் கடல் சீற்றமாக காணப்படும் காலங்களில் கடல்நீர் உட்புகுந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகமாகி 15 அடிக்கும் மேல் அலை எழும்பி கிராமத்திற்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள தரங்கம்பாடியில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளதால், தங்கள் பகுதியில்கடல் சீற்றத்தி ன்போது கடல் நீர் உட்புகுந்து பாதிக்கப்படுவதாகவும் சந்திரபாடி கடற்கரையில் கருங்கல் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

    எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து முகத்துவாரத்தை தூர்வாரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புயல் கரையை கடந்த போது அதனுடைய தாக்கத்தில் சின்னங்குடி மீனவர்களின் 20-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தது.
    • கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கைகள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம், மருதம்பள்ளம்‌ ஊராட்சி, சின்னங்குடி மீனவ கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் மாண்டஸ் புயல் சென்னையில் கரையை கடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சின்னங்குடி கிராமம், மீனவர்கள் படகுகளை கரைகளில் வரிசையாக அடுக்கி வைத்து பாதுகாத்து வந்தனர்.

    புயல் கரையை கடந்த போது அதனுடைய தாக்கத்தில் சின்னங்குடி மீனவர்களின் 20-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தது.

    அது மட்டுமல்லாமல் மழைக்காலங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும்போது கடல்நீர் வீட்டுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதற்கு தடுப்பு சுவர் அல்லது கருங்கல் கொட்டி தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கைகள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற நிலைகளில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு சின்னங்குடி கடற்கரையில் தடுப்புச் சுவர் அல்லது கற்களை கொண்டு தடுப்பு நடவடிக்கை எடுக்குமாறும், சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்கவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விவசாய நிலங்களுக்குள்ளும் கடல்நீர் புகுந்ததால் பயிர்கள் சேதம்.
    • கடல்நீர் உட்புகாமல் இருக்க கருங்கற்களால் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வடக்குபொய்கைநல்லூர் ஊராட்சியில் கடலோர முள்ள மண்டுவாகரை உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிர், கடலை, கத்தரி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகு அதன் தாக்கத்தால் கடலில் இருந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

    மேலும் விவசாய விளை நிலங்களுக்குள்ளும் கடல் நீர் புகுந்தது.

    சுமார் 100 ஏக்கர் அளவுக்கு பயிர்களை கடல் நீர் சூழந்துள்ளதால் அவைகள் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.

    இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறும்போது,

    நாகை மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் கடுமையாக சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், பல்வேறு கடலோர கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்தது.

    அதன் ஒரு பகுதியாக வடக்கு பொய்கைநல்லூர் பகுதியில் விவசாய நிலங்களுக்குள்ளும் கடல் நீர் புகுந்ததால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

    கல்லாரில் பாலம் கட்டுமான பணிக்காக அடைக்கப்பட்ட தடுப்புகள் மற்றும் மணல் திட்டுகள் இதுவரை அகற்றப்படாமல் உள்ளதால் கடல் நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    புயல் கரையை கடந்து 5 நாட்களாகியும் கடல் நீர் வடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மேலும் கடல் நீர் உட்புகுந்ததின் காரணமாக தொடர்ந்து 5 ஆண்டுக்கு தங்களது விளை நிலத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.

    மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு மட்டுமின்றி, தொடர்ந்து சாகுபடி செய்வதற்கு தொழில்நுட்ப வல்லூர்கள் மூலம் உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

    இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக கடல் நீர் உட்புகாமல் இருக்க கருங்கற்களால் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜிடம் கேட்டபோது, உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலரை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    • மீன்பிடி துறைமுகம் 2-வது முறையாக‌ சேதமடைந்துள்ளது.
    • தூண்டில் வளைவில் தடுப்புச்சுவர் பாதைகள் பல்வேறு இடங்களில் விரிசல்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2019 ஆம் ஆண்டு நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ. 120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்காக 1070 மீட்டர் தூரம் 15அடி உயரம், 6 மீட்டர் அகலத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்ட கட்டுமான பணிகள் கடந்த 2020ல் ஏற்பட்ட புயலின் போது தூண்டில் வளைவுக்காக கொட்டப்பட்டிருந்த கருங்கல் தடுப்பு சுவரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.

    இந்நிலையில் கரையைக் கடந்த மாண்டஸ் புயல் காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் 2வது முறையாக‌ சேதமடைந்துள்ளது. கருங்கற்களால் ஆன 20 அடி உயரம் உள்ள தடுப்பு சுவர் மீது ஆறு மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாதை கடல் சீற்றம் காரணமாக 8 அடியில் இருந்து 10 அடி உயரம் கடலலைகள் எழும்பி தூண்டில் வளைவு தடுப்பு சுவர் மீது மோதியதால் தூண்டில் வளைவில் தடுப்பு சுவர் பாதைகள் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்வாங்கி சேதமடைந்து உள்ளது.

    இது குறித்து மீனவர்கள் கூறுகையில்மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணியை தரமாக அமைக்காத காரணத்தால் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதில் நவீன தொழில்நுட்பம் செயல்படுத்தாமல் உள்ளது என மீனவர்கள் குற்றசாட்டி உள்ளனர்.

    இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • சேதமடைந்து தடுப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக தரைமட்ட பாலமாகவே உள்ளது.
    • வாகன ஓட்டிகள் கைபிடி சுவர் இல்லாததால் வாய்க்காலில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை -கும்பகோணம் பிரதான சாலையில் பாபநாசம் பகுதியில் உள்ள அன்னுகுடி பாசன வாய்க்கால், அன்னுகுடி பிரிவு வாய்க்கால் மீது கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவர் சேதமடைந்து தடுப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக தரைமட்ட பாலமாகவே உள்ளது. அதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள், கைபிடி சுவர் இல்லாததால் சில நேரங்களில் வாய்க்காலில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.

    ஆகையால் பொதுப்பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தரைமட்ட நிலையில் உள்ள அன்னுகுடி, வாய்க்கால் மற்றும் பிரிவு வாய்க்கால் பாலத்தின் மீது தடுப்பு அமைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாகன ஓட்டிகள் மணலில் சறுக்கி விழுந்து காயம் ஏற்படுகிறது.
    • விபத்தை தடுக்க சாலையில் இடையே தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சேது சாலையில் 3 அரசு வங்கிகள், எம்.எல்.ஏ. அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம், திருமண மண்டபங்கள், வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், அரசு போக்குவரத்து கழக பணிமனை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைந்துன்ன.

    விழா காலங்களில் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    கடந்த ஆண்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது சாலையில் மணல் தேங்கி நிற்பதால் பஸ் மற்றும் லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் போது இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மணலில் சறுக்கி விழுந்து காயம் ஏற்படுகிறது.

    வாகனங்கள் சேதமடைந்து விடுகிறது.

    விபத்தை தடுக்க சாலையில் இடையே தடுப்பு சுவர் (சென்டர் மீடியன்) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர் துரைராஜன் கூறும்பேது, இவ்வழியே அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகள் சைக்கிளில் செல்லும் போது மணல் சறுக்கி விழுந்து விடுகின்றனர்.

    இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் பேருந்து மற்றும் லாரிகளுக்கு வழிவிட்டு ஓரமாக செல்லும் போது மணலில் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர்.

    காயங்கள் ஏற்படுகிறது. சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவலநிலை ஏற்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மணலை அப்புறப்படுத்தி விபத்துகளை தடுக்க வேண்டும் என்றார்.

    • 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகின்றது.
    • ஒரு சில இடங்களில் உள்ளே இருக்கும் கம்பிகள் முழுவதும் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளது.

    கடலூர்:

    கடலூர் கம்மியம்பேட்டை சாலையில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று செல்கிறது. இந்த பாலம் வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் கடலூர் மாநகரத்திற்குள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் கடலூர் செம்மண்டலம் மற்றும் கடலூர் ஜவான்பவன் சாலை வழியாக அனைத்து கனரக வாகனங்களும் இந்த பாலம் வழியாக தான் சென்று வருகின்றது. இதன் காரணமாக இவ்வழியாக 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகின்றது. இந்நிலையில் இந்த பாலமானது கம்மியம்பேட்டை பாலத்தின் இருபுறமும் விபத்து ஏற்படாத வகையில் சிமெண்ட் தடுப்பு கட்டைகள் அமைத்து இருந்தன.

    ஆனால் தற்போது சிமெண்ட் கட்டைகள் பெயர்ந்து வருகின்றது. மேலும் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிகமான அதிர்வுகள் ஏற்படுவதால் சிமெண்ட் காரைகள் சாலையில் விழுந்தும், பல இடங்களில் விரிசல் ஏற்பட்டும், ஒரு சில இடங்களில் உள்ளே இருக்கும் கம்பிகள் முழுவதும் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளது. இதனால் ெபரிய அளவிலான விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், சமூக அலுவலர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே பெரிய அளவிளான சேதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் இதில் தலையிட்டு பாலத்தின் சிமெண்ட் தடுப்பு கட்டைகளை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை மின் தடை அறிவிக்கபட்டுள்ளது
    • காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    பேராவூரணி:

    பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பேராவூரணி, கொன்றைக்காடு, குருவி க்கரம்பை, பூக்கொல்லை, கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், திருவத்தேவன், குப்பத்தேவன், உடையநாடு, சேதுபாவாசத்திரம், மல்லிபட்டிணம், மரக்காவலசை, நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, செருபாலக்காடு, ஒட்டங்காடு, கட்டயங்காடு, திருச்சிற்றம்பலம், துறவிக்காடு, சித்துக்காடு, வா.கொல்லைக்காடு, குறிச்சி, ஆவணம், சாணாகரை, பைங்கால், படப்பனார்வயல், மணக்காடு, பட்டத்தூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நாளை ஜூலை.1 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனவும், மின் தடை தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர்க மலக்கண்ணன் தெரிவித்து ள்ளார்.

    • தமிழக அரசு சொகுசு விரைவு பஸ் நேற்று இரவு புறப்பட்டு வந்தது.
    • கண்டக்டராக மேகநாதன் இருந்து வந்தார்.

    புதுச்சேரி:

    சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழக அரசு சொகுசு விரைவு பஸ் நேற்று இரவு புறப்பட்டு வந்தது. பஸ்சை அரியலூரைச் சேர்ந்த ராஜராஜன் என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக மேகநாதன் இருந்து வந்தார்.

    புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் காலாப்பட்டு அருகே தமிழக பகுதியான பிள்ளைச்சாவடி பகுதியில் இன்று அதிகாலை வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை தடுப்பு கட்டையில் அதிவேகமாக மோதியது. இதில் டிரைவரின் அருகில் அமர்ந்து வந்த கண்டக்டர் மேகநாதன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    பஸ்சில் இருந்த பயணிகளும் இடிபாடுகளில் சிக்கினர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்க அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

    பின்னர் இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த விபத்தில் காயமடைந்த பஸ் டிரைவர் ராஜராஜன், கண்டக்டர் மேகநாதன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த தினகர், மயிலாடு துறை இளையராஜா, சீர்காழி ஜெயராஜ், நாகப்பட்டினம் முத்தரசன், பாபநாசம் சவுமியா, ரகுநாத் உள்ளிட்ட 8 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பஸ்சை ஓட்டி வந்த ராஜராஜன் புதுச்சேரி எல்லையான காலாப்பட்டு பகுதியை கடந்த போது முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்றதால் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து பஸ் சாலையின் தடுப்பு கட்டையில் மோதியது தெரியவந்தது.

    விபத்தில் பஸ்சின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்ததால் கிரேன் மூலம் பஸ்சை போலீசார் அப்புறபடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • தேசிய நெடுஞ்சாலையில் 56-வது மைல் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது
    • பஸ்சில் இருந்த பயணிகள் அபயக்குரல் எழுப்பினர்.

    கூடலூர்:

    தமிழக எல்லையான குமுளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் பகுதிக்கு கேரள அரசு பஸ் சென்றது. இதில் 43 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் குமுளி அருகே வண்டிபெரியாறு தேசிய நெடுஞ்சாலையில் 56-வது மைல் பகுதியில் அய்யப்பா கல்லூரி அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    மேலும் ஓரத்தில் இருந்த தடுப்புச்சுவரை இடித்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அபயக்குரல் எழுப்பினர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடி பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதனால் அவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். பஸ் அந்தரத்தில் தொங்கிய இடத்தின் கீழ் ஒரு வீடு உள்ளது.

    பஸ் கவிழாமல் நின்றதால் அந்த வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • சேலம், நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. கோடை காலம் தொடங்கியதும் வெப்ப அலை வீசியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே தினமும் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக நேற்றும் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, தம்மம்பட்டி, சேலம் மாநகர பகுதிகளில் மழை பெய்தது. இதனால் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது. சேலம் மாநகரில் 17.4 மி.மீ. மழை பெய்தது. மேலும் ஏற்காட்டில் 6.6 மி.மீ. மழையும், தம்மம்பட்டியில் 8 மி.மீ. மழையும் என மாவட்டம் முழுவதும் 43 மி.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்தது.

    நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் மோகனூர், ராசிபுரம், திருச்செங்கோடு, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    மோகனூர்-34, பரமத்திவேலூர்-1, புதுச்சத்திரம்-12, ராசிபுரம்-4, திருச்செங்கோடு-11.20, கலெக்டர் அலுவலகம்-3.50, கொல்லிமலை-2. என மாவட்டம் முழுவதும் 66.70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    இதற்கிடையே பேரிடர் மேலாண்மை துறையிடம் இருந்து இன்று முதல் 21-ந் தேதி வரை 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டதை அடுத்து நாமக்கல் வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கொல்லிமலை சுற்றுலா பகுதிகளான ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, புளியஞ்சோலை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் மேற்கண்ட சுற்றுலா தலங்களுக்கு வரவேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இனி வரும் நாட்களில் பெய்யும்மழையின் அளவினை பொறுத்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா அறிவித்து உள்ளார்.

    • மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பிரம்மா, விஷ்ணு ,சிவன் ஆகியோர் ஒருங்கே பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உடுமலை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மேலும் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகின்றனர்.

    இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    கடந்த வாரம் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வாரம் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து குறைந்ததும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    அமராவதி அணையில் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை நெருங்கியதால் ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பாலாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக திருமூர்த்திமலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதையடுத்து அங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சலிங்க அருவிக்கு செல்லவும் தடை விதித்துள்ளனர். கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் வெள்ள நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர். 

    ×