search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus strike"

    • பழைய ஓய்வூதியம் உள்பட எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.
    • சட்டப்படியான நடவடிக்கைகளை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மற்ற ஊழியர்களை கொண்டு அரசு பஸ்களை இயக்கி வருகிறது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பெருமளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    ஆனாலும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிவித்தார்.

    இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சவுந்தர் ராஜனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரினோம். ஆனால் அரசு அதை கண்டு கொள்ளவில்லை. அதனால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எவ்வித பலனும் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள்.

    நியாயமாக எங்கள் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து இயன்றதை இப்போது செய்து இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால், மாறாக நிதிநிலைமையை காரணம் காட்டி எதையும் ஏற்க மறுப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமைச்சர் ஊடகங்களில் கூறுவது ஏமாற்று வேலை. அவர் பொதுமக்கள் மத்தியில் தங்கள் மீது தவறும் இல்லாதது போல காட்டிக் கொள்கிறார்.

    தொழிற்சங்கங்களுக்கு முறையான அழைப்பு கொடுக்க வேண்டும். மேலாண்மை இயக்குனர் அல்லது பொது மேலாளர் அலுவலகத்தில் இருந்து போன் செய்து எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது தான் முறை. ஆனால் அதற்கு மாறாக ஊடகங்கள் மத்தியில் கூறுவது எங்களை அவமதிக்கும் செயலாக கருதுகிறோம்.

    வேலைநிறுத்தத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அரசு வெளியாட்களை வைத்து பஸ்களை இயக்குகிறது. இதுவும் ஏமாற்று வேலை தான்.

    அதிக ஊழியர்கள் பணிக்கு வந்ததாக அமைச்சரை அதிகாரிகள் ஏமாற்றுகிறார்கள். சென்னையில் ஒரே பஸ், பல வழித்தடங்களில் இயக்கப்படும் நிலை தான் உள்ளது. 106 சதவீதம் பஸ்கள் ஓடுவதாக கூறுவது ஏமாற்று வேலை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது.
    • போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அழைத்துப் பேசி, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பொங்கல், ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசியப் பண்டிகைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்படுவதும், இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதும், அதனை தி.மு.க. அரசு வேடிக்கை பார்ப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஊதியக் குழு பேச்சுவார்த்தை, ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் தற்போது மேற்கொண்டு உள்ளனர்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது. மக்களின் அச்சத்தினை போக்கும் வகையிலும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அழைத்துப் பேசி, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வழக்கம் போல பஸ்கள் புறப்பட்டு சென்றன. ஆனால் பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தது.
    • பஸ் நிலையங்கள் மற்றும் டெப்போக்கள் முன்பு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இதையொட்டி சேலம் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இயக்கப்படும் 1060 அரசு பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் வழக்கம் போல பஸ்கள் புறப்பட்டு சென்றன. ஆனால் பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தது.


    2-வது நாளாக இன்றும் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடின. தொ.மு.ச. மற்றும் ஐ.என்.டி.யு.சி. உள்பட பல்வேறு தொழிற் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பஸ்களை இயக்கி வருகிறார்கள்.

    அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவர்களுக்கு பதில் மாற்று டிரைவர்கள், தனியார் பஸ், லாரி டிரைவர்களை நியமித்து போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் பாதிப்பின்றி பயணம் செய்து வருகிறார்கள்.

    மேலும் பஸ் நிலையங்கள் மற்றும் டெப்போக்கள் முன்பு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகம் முழுவதும் இன்று 97.7 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.
    • சென்னையில் மாநகர பஸ்கள் 97.68 சதவீதம் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையிலும், தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பஸ்கள் ஓடின. இன்றும் பஸ்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.

    தமிழகம் முழுவதும் இன்று 97.7 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் இயக்கப்பட வேண்டிய 15 ஆயிரத்து 226 பஸ்களில் 14 ஆயிரத்து 888 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மாநகர பஸ்கள் 97.68 சதவீதம் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில் பஸ்களை இயக்க தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அசல் உரிமம், ஆதார் அட்டையுடன் மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளை அணுக அரசு அறிவுறுத்தி உள்ளது.

    • மொத்தம் இயக்கப்பட வேண்டிய 15 ஆயிரத்து 226 பஸ்களில் 14 ஆயிரத்து 888 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • சேலம் பணிமனைகளில் இருந்து 794 பஸ்களில் 775 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையிலும், தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பஸ்கள் ஓடின. இன்றும் பஸ்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று காலை 8 மணி நிலவரப்படி 97.7 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் இயக்கப்பட வேண்டிய 15 ஆயிரத்து 226 பஸ்களில் 14 ஆயிரத்து 888 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் மாநகர பஸ்கள் 97.68 சதவீதம் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் பணிமனைகளில் இருந்து 1779 பஸ்களில் 1763 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சேலம் பணிமனைகளில் இருந்து 794 பஸ்களில் 775 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை பணிமனைகளில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 1870 பஸ்களில் 1787 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    • தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பஸ்கள் ஓடின.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் 1.35 லட்சம் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, அகவிலைப்படி வழங்குதல், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யு.சி. சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் ஒருசில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டாலும் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    பொதுமக்கள் உள்ளூர், வெளியூர் பயணம் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் அசு முழு அளவில் பஸ்களை இயக்கி வருகிறது.

    சென்னையில் இருந்து வழக்கமாக பல்வேறு நகரங்களுக்கு புறப்பட்டு செல்லக்கூடிய பஸ்கள் இயக்கப்பட்டன.

    அதேபோல வெளியூர்களிலும் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. அரசு, தனியார் அலுவலகங்களுக்கு செல்வோர் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்கள் வழக்கம் போல பஸ்களில் பயணித்தனர்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது. மேலும் 12-ந் தேதி முதல் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும். சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு டிரைவர், கண்டக்டர்கள் முழு அளவில் பணியில் இருக்க வேண்டும்.

    அதனை கருத்தில் கொண்டு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அழைப்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் போராட்ட களத்தில் தீவிரமாக உள்ளன.

    இதற்கிடையே வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர், பஸ்களை மறிப்போர், ஊழியர்களை தாக்குவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

    வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் சில தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் தொடர்பு கொண்டு பணிக்கு திரும்புமாறு கூறி வருகின்றனர்.

    ஆனாலும் அவர்கள் பிடிவாதமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பஸ் நிலையங்களுக்கு சென்று பஸ்களை இயக்க விடாமல் மறிப்பது, ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையொட்டி ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வரும் ஊழியர்களின் பட்டியல் தயாரித்து அவர்களுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு போக்குவரத்து கழக நிர்வாகத்தின்கீழ் செயல்படும் டெப்போக்களில் எத்தனை பேர் வேலைக்கு வரவில்லை என்ற விவரங்களை சேகரிக்க உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    அதன்படி 8 போக்குவரத்து கழகங்களிலும் வேலைக்கு வராத ஊழியர்கள் பெயர் விவரங்கள் தற்போது சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

    விரைவில் அவர்களுககு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. 15 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 'நோ ஒர்க், நோ பே' என்ற அடிப்படையில் ஸ்டிரகை்கில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளம் ரத்து செய்வதோடு துறை ரீதியான சட்ட நடவடிக்கையும் பாயும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மிக குறைந்த அளவில் தான் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் மேலாண்மை இயக்குனர் ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

    • தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • எந்த பாரபட்சமும் இன்றி துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பஸ் இயக்கத்தை தடை செய்யும் வகையில் முற்றுகையிடவோ சிறைபிடிக்கவோ முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்சங்கங்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எந்த பாரபட்சமும் இன்றி துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காலை 6 மணி நிலவரப்படி 112 சதவீத வரை மாநகர பஸ்கள் இயக்கக்கப்பட்டுள்ளன.
    • பல இடங்களில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை காட்டிலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியிருப்பதாவது:

    * சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இன்று வழக்கம்போல் பஸ்கள் முழுமையாக இயக்கப்படுகின்றன.

    * சென்னை மாநகரில் வழக்கத்தைவிட கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை 6 மணி நிலவரப்படி 112 சதவீத வரை மாநகர பஸ்கள் இயக்கக்கப்பட்டுள்ளன.

    * பல இடங்களில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை காட்டிலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    * 2025 பஸ்கள் இயக்கப்பட வேண்டிய சூழலில் 2263 பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    • தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையும், ஐ.என்.டி.யூ.சி. சங்கமும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.
    • சென்னையில் வழக்கத்தைவிட கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதே சமயம் பெரும்பாலான தொழிலாளர்களை கொண்ட தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையும், ஐ.என்.டி.யூ.சி. சங்கமும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.

    இதனால் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையிலும், தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பஸ்கள் ஓடியதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி மாநிலம் முழுவதும் 96 சதவீத பஸ்கள் ஓடியதாக அவர்கள் கூறியுள்ளனர். சென்னையை பொறுத்தவரையில் 97 சதவீத பஸ்கள் ஓடியதாக அறிவிக்கப்பட்டன.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னையில் வழக்கத்தைவிட கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை 6 மணி நிலவரப்படி 112 சதவீதம் வரை மாநகர பஸ்கள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    • பஸ்சில் இருந்த ஒரு சில பயணிகள் கைகளை கோர்த்து சங்கிலி போன்ற அமைப்பு ஏற்படுத்தி அங்கிருந்து வெளியேறினர்.
    • மூதாட்டி ஒருவர் அந்தப் பஸ்சிற்குள் சிக்கிக்கொண்டார். அவரை மீட்கும் முயற்சியில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அரசு பஸ் டிரைவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் இதனை தற்காலிக டிரைவர் மணி கண்டன் பஸ்சை ஓட்டி சென்றார். இந்த பஸ் திண்டிவனம் இந்திரா காந்தி பழைய பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக அங்குள்ள தரைப் பாலத்தை கடந்த பொழுது ஏரியில் திறக்கப்பட்ட உபரிநீர் அதிகரித்து சாலையில் ஓடியது. இதில் பஸ் பழுதாகி வெள்ளநீரில் சிக்கிக் கொண்டது.

    பஸ்சில் இருந்த ஒரு சில பயணிகள் கைகளை கோர்த்து சங்கிலி போன்ற அமைப்பு ஏற்படுத்தி அங்கிருந்து வெளியேறினர். மூதாட்டி ஒருவர் அந்தப் பஸ்சிற்குள் சிக்கிக்கொண்டார். அவரை மீட்கும் முயற்சியில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

    கிடங்கல் ஏரியில் நீர் அதிகரித்ததால் போலீசார் அப்பகுதியில் தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர். ஆனால் வேன் டிரைவர்கள் வாகனத்தை கழுவுவதற்காக தடுப்புகளை அகற்றியதாக கூறப்படுகிறது.

    இதனை அறியாத பஸ் டிரைவர் தரைப்பாலத்தின் வழியே வந்ததாலும், நீர்வரத்து அதிகரிப்பாலும், பஸ் பழுதாகி நீரில் சிக்கிக் கொண்டது. இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அகவிலைப்படி உயர்வு கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற மாதத்திற்கு சுமார் ரூ.20 கோடி மட்டுமே கூடுதலாக செலவாகும்.
    • போக்குவரத்துத் தொழிலாளர்கள் அரசுக்கு எதிரிகள் அல்ல.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    15-ம் ஊதிய ஒப்பந்த பேச்சுகளை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு கடந்த 96 மாதங்களாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.


    வேலை நிறுத்தத்தால் பாதிப்பு இல்லை என்றும், மாநிலம் முழுவதும் 93.90 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டாலும் கள நிலைமைவேறாக உள்ளது. நகரப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் கூட, ஊரகப்பகுதிகளில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற மாதத்திற்கு சுமார் ரூ.20 கோடி மட்டுமே கூடுதலாக செலவாகும். இந்தக் கோரிக்கையைக் கூட நிதிநிலையை காரணம் காட்டி நிறைவேற்ற மறுப்பது நியாயமல்ல.


    போக்குவரத்துத் தொழிலாளர்கள் அரசுக்கு எதிரிகள் அல்ல. அவர்களின் ஒற்றைக் கோரிக்கையை நிறைவேற்றி மற்ற கோரிக்கைகள் தொடர்பாக வாக்குறுதி அளித்து வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மேட்டுப்பாளையம் உள்பட அனைத்து பஸ் நிலையங்கள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தொழிறங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்தாலும் தமிழகத்தில் வழக்கம் போல பஸ்கள் இயங்கின.

    கோவை:

    தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலனை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தன.

    இதையடுத்து தமிழக அரசு தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இன்று திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு சிரமமின்றி அரசு பஸ்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்து இருந்தது.

    தொழிறங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தி வந்தாலும் தமிழகத்தில் வழக்கம் போல பஸ்கள் இயங்கின. அதன்படி கோவை மாவட்டத்திலும் வழக்கம் போல இன்று பஸ்கள் இயங்கின.

    கோவை மாவட்டத்தில் கோவை உப்பிலிபாளையம், கருமத்தம்பட்டி, அன்னூர், மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தலைமை பணிமனை, சுங்கம் 1,2, உக்கடம் 1,2, பொள்ளாச்சி 1,2,3, வால்பாறை என மொத்தம் 17 டெப்போக்கள் உள்ளன.


    இந்த டெப்போக்களில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் மட்டும் 602 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர சேலம், திருப்பூர், ஈரோடு, திருச்சி, நெல்லை, மதுரை, தூத்துக்குடி, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட அனைத்து வெளியூர்களுக்கும் 349 பஸ்கள் என மொத்தம் கோவை மாவட்டத்தில் இருந்து 951 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தம் அறிவித்து இருந்தாலும் கோவை மாவட்டத்தில் உள்ள காந்திபுரம், காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், சிங்காநல்லூர், உக்கடம், காந்திபுரம் விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் காலை முதல் வழக்கம் போல பஸ்கள் இயங்கின.

    பஸ்கள் வழக்கம் போல இயங்கியதால் மக்களும் எந்தவித சிரமமும் இன்றி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.

    பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் என அனைவரும் எந்தவித சிரமமும் இன்றி பஸ்களில் பயணம் செய்தனர்.

    வால்பாறையில் இருந்து அங்குள்ள எஸ்டேட் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு 38 டவுன் பஸ்களும், பொள்ளாச்சி, கோவை, பழனி, சேலம், திருப்பூர், மன்னார்காடு போன்ற பகுதிகளுக்கு 6 பஸ்களும் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் அனைத்தும் இன்று காலை வழக்கம் போல பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

    கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு டவுன் பஸ்களும், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் என 43 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த 43 பஸ்களும் வழக்கம் போல அதிகாலை முதலே இயங்கின.

    இதேபோல் மேட்டுப்பாளையம் பகுதிகளில் 50 சதவீத பஸ்களும், அன்னூரில் 90 சதவீத பஸ்களும் இயக்கப்பட்டன. காரமடை, சூலூர், சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் வழக்கம் போல பஸ்கள் இயங்கியதால் மக்கள் எந்தவித சிரமமும் இன்றி பயணித்தனர்.

    தொழிற்சங்கங்கள் போராட்டத்தையொட்டி, காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம் உள்பட அனைத்து பஸ் நிலையங்கள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து போக்குவரத்து துறையினர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் வழக்கம் போல பஸ்கள் இயக்கப்பட்டன. காலை 6 மணி நிலவரப்படிக்கு புறப்பட்ட வேண்டிய 581 பஸ்களும் வழக்கம் போல புறப்பட்டு சென்றன. பஸ்கள் இயங்குவதால் மக்கள் அச்சப்பட வேண்டாம். பஸ் நிலையத்திற்கு வந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாம் என்றனர்.

    நீலகிரி மாவட்டத்திலும் வழக்கம் போல பஸ்கள் இயங்கியது. ஊட்டியில் இருந்து குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளுக்கும், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை முதல் வழக்கம் போல பஸ்கள் இயங்கின. இதேபோல் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் இருந்து வழக்கம் போல பஸ்கள் இயங்கியது.

    போராட்டத்தையொட்டி அனைத்து பஸ் நிலையங்கள், பணிமனைகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×