என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chennai"
- சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் குடியிருக்கும் சுமதி என்பவர் வீட்டில் இருந்து சிலைகள் பறிமுதல்.
- நாகாத்தம்மன் உலோக சிலை, உலோக உடைவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 2 பழங்கால சிலைகள், உலோக வாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், பெண் சுமதி, பிரகாஷ், தங்கராஜ் மற்றும் ராஜேஷ் கண்ணன் என 4 பேர் கைது செய்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் குடியிருக்கும் சுமதி என்பவர் வீட்டில் இருந்து சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாகாத்தம்மன் உலோக சிலை, உலோக உடைவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சுமதியிடம் விசாரித்ததில், கோயிலில் இருந்து திருடப்பட்டதாகவும், சரியான நேரத்தில் விற்க காத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
சுமதியும், அவரது கணவர் பிரகாஷூம் சிலை குறித்து எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்காததால் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிலைகள் எந்த கோயிலில் இருந்து எடுக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- வழங்க வேண்டிய ஊதியத்தையே கடந்த 3 மாதங்களாக வழங்கவில்லை.
- ஊதிய நிலுவையை இம்மாத இறுதிக்குள் வழங்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7314 கவுரவ விரிவுரையாளர்கள் மதிப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
கல்லூரிகளின் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு தேவையான தகுதியும், அனுபவமும் இருக்கும் போதிலும், அவர்களுக்கு மாதம் ரூ.20,000 மட்டுமே மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு ஒரு பாட வேளைக்கு ரூ.1500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு கடந்த 28.1.2019-ம் நாள் ஆணையிட்டது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி கவுரவ விரி வுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டிய தமிழக அரசு, அவர்களுக்கு வழக்கமாக வழங்க வேண்டிய ஊதியத்தையே கடந்த 3 மாதங்களாக வழங்கவில்லை.
இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு தான். 15 ஆண்டுகளுக்கு முன் ரூ.10,000 என்ற ஊதியத்தில் பணியில் சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தான் ரூ.20 ஆயிரம் என்ற நிலையை எட்டியது.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் சமூகநீதியை வழங்கும் வகையில், அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவையை இம்மாத இறுதிக்குள் வழங்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையை செயல்படுத்தவும் தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
- மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் தடை.
சென்னை:
மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் கீழ்க்கண்ட இடங்களில் நாளை (22-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தண்டையார்பேட்டை நேதாஜி நகர், நேரு நகர், குமரன் நகர், சிவாஜி நகர், சுந்தரம்பிள்ளை நகர், இ.எச்.ரோடு, அன்னை சத்தியா நகர், பட்டேல் நகர், பரமேஷ்வரன் நகர், அஜீஸ் நகர், நாவலர் குடியிருப்பு, துர்காதேவி நகர், பேசின் ரோடு, பர்மாகாலனி, ராஜீவ்காந்தி நகர், கருணாநிதி நகர், இந்திராகாந்தி நகர், சி.ஐ.எஸ்.எப்.குடியிருப்பு, நெடுஞ்செழியன் நகர், வைத்தியநாதன் நகர், கார்னேசன் நகர், எழில் நகர், சந்திரசேகர் நகர், கே.எச்.ரோடு, மூப்பனார் நகர், மணலி சாலை, திருவள்ளுவர் நகர், மீனாம்பாள் நகர், அண்ணா நகர், ஜெ.ஜெ.நகர், சுண்ணாம்பு கால்வாய், வ.உ.சி. நகர், கருமாரியம்மன் நகர், மாதாகோயில் தெரு,
தியாகப்பசெட்டி தெரு, ஜீவா நகர், காமராஜ் நகர், சுதந்திரபுரம், சிகிரந்தபாளையம், மோட்சபுரம், பாரதி நகர், பாரதிநகர் குடியிருப்பு, ரிக்சா காலனி, புது சாஸ்திரி நகர். ஐ.டி.காரிடர் ஆனந்தா நகர், 200 அடி ரேடியல் ரோடு மற்றும் சாய்நகர் ஒரு பகுதி.
பல்லாவரம் மல்லிகா நகர், பி.வி. வைத்தியலிங்கம் ரோடு, கட்டமொம்மன் நகர், ஆர்.கே.வி. அவின்யு, திருமுருகன் நகர், மாணிக்கம் நகர், வேல்ஸ் காலேஜ் மெயின் ரோடு மற்றும் பங்காரு நகர் கிழக்கு ஒரு பகுதி. அடையார் காந்திநகர் 2-வது மெயின் ரோடு, காந்திநகர் 2-வது குறுக்குத் தெரு மற்றும் காந்திநகர் 3-வது மெயின் ரோடு ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
- 910 மீட்டர் நீளத்திற்கு துளையிடும் பணிகள் இன்று தொடங்கியது.
- உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு பணியினை தொடங்கி வைத்தார்.
சென்னை:
மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் ராயப்பேட்டையில் மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-வது கட்டம், வழித்தடம் 4-ல் பவானி என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் ராயப்பேட்டை முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வரை சுரங்கம் அமைக்கப்படுகிறது.
இதற்காக 910 மீட்டர் நீளத்திற்கு துளையிடும் பணிகள் இன்று தொடங்கியது. இந்த பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு பணியினை தொடங்கி வைத்தார்.
அப்போது அவரிடம் அதிகாரிகள் மெட்ரோ ரெயில் பணிகள் குறித்து விளக்கி கூறினார்கள். இதன் பிறகு ஆலப்பாக்கம் இரண்டு அடுக்கு மெட்ரோ ரெயில் பாதை, பூந்தமல்லி புறவழி மெட்ரோ ரெயில் நிலையம் பூந்தமல்லி மெட்ரோ பணிமனை ஆகியவற்றில் நடைபெற்ற பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் எம்.பி., சென்னை மேற்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, சேப்பாக்கம் மதன் மோகன் உள்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற சுமார் 100 விசைப்படகுகள் கரைதிரும்பின.
- காசிமேடு மீன்பிடி துறைமுகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
ராயபுரம்:
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று காலை கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற சுமார் 100 விசைப்படகுகள் கரைதிரும்பின. இதனால் மீன்கள்வரத்து அதிகமாக இருந்தது. வஞ்சிரம், வவ்வால், கடமா, இறால், உள்ளிட்ட மீன்கள் அதிகமாக குவிந்து விற்பனை செய்யப்பட்டது. இறால், கடமா, நண்டுகள் வரத்து சற்று குறைவாகவே இருந்தது.
மேலும் கொடுவா மீன்கள் வரத்து இல்லை. தற்போது ஆடி மாதம் என்பதால் ஏராளமானோர் அம்மனுக்கு கூழ் ஊற்றுவார்கள். இதனால் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
காசிமேடு மீன்பிடி துறைமுகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மீன்வியாபாரம் களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த வாரத்தை விட சங்கரா மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததால் ரூ.200-க்கு விற்கப்பட்டது. இதேபோல் வஞ்சிரம், வவ்வால் உள்ளிட்ட மீன்களின் விலையும் குறைந்து விற்கப்பட்டதால் மீன் பிரியர்கள் போட்டி போட்டு மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கி சென்றனர்.
காசிமேட்டில் மீன்விலை (கிலோவில்)வருமாறு:-
வஞ்சிரம் - ரூ.900
வவ்வால் மீன் - ரூ.500
சைனீஸ் வவ்வால் - ரூ.1300
சங்கரா - ரூ.200
ஷீலா - ரூ.200
இறால் - ரூ.400
கடமா - ரூ.400
நண்டு - ரூ.300
சிறிய மீன்கள் - ரூ.50 முதல் 100 வரை.
- அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- சாதி வளையம் வைத்து சாதி கொலையாக மாற்ற துடிப்பது சமூக ஆரோக்கியம் இல்லை.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். கொலை சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி இயக்குனர் பா.ரஞ்சித் தலைமையில் சென்னையில் நேற்று மாலை மாபெரும் பேரணி நடந்தது. இந்நிலையில் பிரபல சினிமா இயக்குனர் பேரரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒருவர் கொலை செய்யப்பட்டால் ஏன் கொலை செய்யப்பட்டார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையின் பின்னணி என்ன? என்பதை ஆராய்வதை விட, அதை அரசியல் கொலையாகவும், சாதி கொலையாகவும் மாற்றிவிடவே பலர் துடிக்கின்றனர். அனுதாபம் காட்டுவதை விட சுயலாபம் காணவே பலர் துடிக்கின்றனர்.
ஒரு கட்சி இன்னொரு கட்சிமீது பழி சுமத்துவது, இறந்தவர் மீது சாதி வளையம் வைத்து சாதி கொலையாக மாற்ற துடிப்பது இதெல்லாம் சமூக ஆரோக்கியம் இல்லை.
சட்ட ஒழுங்கு பின்னடைவு என்பது வேறு. கொலைக்கு ஆளும் கட்சி காரணம் என்பது வேறு. கொலைக்கு நியாயம் கேட்பது வேறு! கொலையில் சுயலாபம் பார்ப்பது வேறு! கொலை செய்யப்பட்டவர் யார்? கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான உண்மையான காரணம் என்ன? இந்த விடையை நோக்கித்தான் அனைவரும் நகர வேண்டும்.
சிலரின் யூகங்கள் சமூகத்தில் தேவையில்லாத சலசலப்பை உருவாக்கும். எல்லாவற்றுக்கும் சாதியை முன்னிறுத்துவது
நாட்டை நூறு வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து விடும்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நிதி ஆயோக் அமைப்பு 4-வது ஆய்வு அறிக்கையை அண்மையில் வெளியிட்டது.
- தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தலைசிறந்து விளங்குகிறது.
சென்னை:
2023-24-ம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகள் பற்றிய 4-வது ஆய்வு அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.
நிதி ஆயோக் நிறுவனத்தின் 2018, 2019 மற்றும் 2020 ஆகிய மூன்றாண்டுகளின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சிக் குறியீடுகளை எல்லாம்விட, இந்த 2023-24-ம் ஆண்டிற்கான அறிக்கை திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது என்பதைப் பறைசாற்றியுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி தொலைநோக்குச் சிந்தனைகளுடன் செயல்படுத்தி வரும் சீரிய திட்டங்களால் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இன்று இந்தியாவிலேயே முதல் இடம் பெற்றுச் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது.
காலநிலை மாற்றம்-சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசிலா எரிசக்தி இரண்டிலும் தேசிய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உயர்ந்துள்ளது. மேலும்,
* பொருளாதாரம் மற்றும் சிறந்த வேலைவாய்ப்பு,
* மக்கள் நலம் மற்றும் சுகாதார வாழ்வு,
* தொழில் வளர்ச்சி-புத்தாக்கத் தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்,
* தூய்மையான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல்,
* அமைதியைக் காத்தல், நீதி நிர்வாகம், வலுவான நிறுவனங்கள்
* பாலின சமத்துவம், ஆகிய இனங்களில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உயர்ந்து சிறந்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களான, மகளிர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி தொடரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மகளிர்க்குக் கட்டணமில்லாப் பேருந்து விடியல் பயணத் திட்டம், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், சமத்துவத்தை நிலைநாட்டும் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கேற்ற திறன்களை வழங்கும் நான் முதல்வன் திட்டம் முதலான சமூகநீதித் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களால் குடும்பப் பொருளாதாரம் உயர்ந்து வறுமை ஒழிப்பில் கடந்த காலங்களைவிட மாபெரும் வளர்ச்சி கண்டு இந்தியாவிலேயே வறுமையை ஒழிப்பதில் தமிழ்நாடு தலைசிறந்த முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்பதை இந்த நிதி ஆயோக் அறிக்கை நிரூபித்துள்ளது.
அதாவது, வறுமை ஒழிப்புத் திட்டத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தலைசிறந்து விளங்குகிறது என்பது உட்பட
11 இனங்களில் தமிழ்நாடு நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகளில் தேசிய சராசரியைவிட அதிகமாக வளர்ச்சி பெற்று முன்னணி மாநிலமாகவும், இரண்டு இனங்களில் தேசிய சராசரிக்கு இணையாகவும் வளர்ச்சி பெற்று 13 இனங்களில் மிகவும் சிறந்துள்ளது தமிழ்நாடு.
இவையெல்லாம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியின் தொலைநோக்குச் சிந்தனைகளுடன் கூடிய சிறந்த சீரிய திட்டங்களால் தமிழ்நாடு பெற்றுள்ள வளர்ச்சிக்கான சான்றுகளாகும் என்று பலரும் பாராட்டுகின்றனர்.
- ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் அறிவாலயத்தில் இன்று மாலை நடக்கிறது.
- பல்வேறு செயல்வடிவம் குறித்து பேசப்படுகிறது.
சென்னை:
தி.மு.க.வில் 2026 சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளார்.
இந்த குழுவில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள 5 பேரும் அண்ணா அறிவாலயத்தில் கூடி அடுத்து என்னென்ன பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
வர இருக்கும் 2026 சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க.வில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை செய்ய தி.மு.க. தலைவருக்கும், தலைமைக்கும் பரிந்துரைப்பது, கட்சி நிர்வாகிகளிடம் இருந்து வரும் புகார்களை விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி அமைப்பு ரீதியாக மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மாவட்டங்களை மேலும் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள இருக்கிறது.
இதன் காரணமாக ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு செயல்வடிவம் குறித்து பேசப்படுகிறது.
- கடந்த 10-ந் தேதி முதல் ஆலோசனை நடத்தி வருகிறாா்.
- 2026 சட்டசபை தேர்தலில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்.
சென்னை:
பாராளுமன்ற தோ்தல் தோல்வி தொடா்பாக தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி, நிா்வாகிகளுடன் கடந்த 10-ந் தேதி முதல் ஆலோசனை நடத்தி வருகிறாா்.
முதல் நாள் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளை வரவழைத்து கருத்துக்களை கேட்டறிந்தார்.
11-ந்தேதி சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை தொகுதி நிர்வாகிகளுடனும், 12-ந்தேதி அரக்கோணம், தஞ்சாவூர், திருச்சி நிர்வாகிகளுடனும், 13-ந்தேதி சிதம்பரம், மதுரை, பெரம்பலூர் நிர்வாகிகளுடனும், 1-ந்தேதி நாகை, மயிலாடு துறை, கிருஷ்ணகிரி தொகுதி நிர்வாகிகளுடனும், 16-ந் தேதி ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க.வினரிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்தார்.
இதையடுத்து நேற்று 7-வது நாளாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் பொள்ளாச்சி, நீலகிரி, கோவை தொகுதிகளின் நிா்வாகிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.
அப்போது அ.தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
நீலகிரி தொகுதியின் நிா்வாகிகள், பாராளுமன்றத் தோ்தலில் வலுவான தொகுதி கூட்டணி அமைக்காததால் தான் தோல்வி அடைந்ததாக கூறியுள்ளனா். அதற்கு, வரும் சட்டப்பேரவை தோ்தலில் வலுவான கூட்டணி அமையும்.
அதேநேரம், கூட்டணியை நம்பியும் நாம் இருக்கக் கூடாது. மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அ.தி.மு.க.வினா் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளாா்.
கோவை தொகுதி நிா்வாகிகள் பாராளுமன்றத் தோ்தலில் 3-ம் இடத்துக்கு வந்தது குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளனா். அதை ஏற்காத எடப்பாடி பழனிசாமி, கோவை அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.
கடைசி நாளான இன்று காலையில் விழுப்புரம், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தர்மபுரி தொகுதி கூட்டம் பிற்பகலில் நடைபெறுகிறது. இன்றுடன் எடப்பாடி பழனி சாமியின் முதல் கட்ட ஆய்வு நிறைவு பெற்றது.
இதுவரை அவர் 23 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி முடித்துள்ளார். இதர 16 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் தொடா்பாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் தொகுதி நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, வருகிற சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து செயல்படுங்கள். அப்போதுதான் வெற்றிபெற முடியும். கூட்டணியை பற்றி கவலைப்படாதீர்கள். அதனை நான் பார்த்துக் கொள்கிறேன்.
விழுப்புரம் தொகுதியில் கட்சியினர் இன்னும் வேகமாக செயல்பட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் தலைமையின் கவனத்துக்கு நிர்வாகிகள் உடனே தெரியப்படுத்த வேண்டும்.
தகவல் தொழில் நுட்ப பிரிவினர் இப்போது செயல்படுவதை விட மேலும் சிறப்புடன் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
- மாநில அரசுகளின் ஆலோசனைகளை பெறவில்லை.
- சட்டங்களை சமஸ்கிருத மயமாக்கி உள்ளனர்.
சென்னை:
இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷைய அதினியம் என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த புதிய சட்டங்கள் கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
இந்த புதிய சட்டங்களை எல்லாம் எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்தநிலையில், இந்த சட்டங்களை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட் டில், தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்றத்துக்குள் கண்ணீர் புகை குண்டு வீசிய சம்பவத்தை கண்டித்ததால், இரு சபைகளில் இருந்தும் 150 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்த காலக்கட்டத்தில், எந்த ஒரு விவாதமும் இல்லாமல் இந்த 3 சட்டங்களை அவசர கதியில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய சட்டங்களை இயற்றுவதற்கு முன்பு மாநில அரசுகளின் ஆலோசனைகளை பெறவில்லை. சில பிரிவுகளை மாற்றம் செய்து, சட்டங்களை சமஸ்கிருத மயமாக்கி உள்ளனர். இது பல தரப்பினருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில், அரசு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை குற்றமாக்கியுள்ளது. குற்றங்களுக்கு தண்டனைகளை அதிகரித்துள்ளது. ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் எனக் கூறியுள்ளதன் மூலம், தண்டனை குறைப்பு வழங்கும் ஜனாதிபதி, கவர்னர் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது.
பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தில், போலீசாருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. கொலை, ஆசிட் வீச்சு வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களுக்கு கைவிலங்கு பூட்டுவதன் மூலம் தனிநபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது.
எனவே, ஏராளமான முரண்பாடுகளுடன் இயற்றப்பட்டுள்ள இந்த 3 சட்டங்களை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, அரசியலமைப்பு சட்டப்படி ஆங்கிலத்தில் மட்டுமே சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு சமஸ்கிருதத்தில் சட்டங்களை நிறைவேற்றியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என வாதிட்டார்.
இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுத்தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஸ் விவேகானந்தன் ஆகியோர் கால அவகாசம் கேட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், ''மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. சிவில் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த போதும் இதேபோல எதிர்ப்பு இருந்தது. எனவே, சட்டத்தை இயற்றுவதற்கு முன்பு சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும்'' என்று கருத்து தெரிவித்தனர்.
- 14 சட்ட மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
- மசோதாக்களில் அவர் கையெழுத்திட்டதும் அது சட்டமாகி விடும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள் அனைத்தும் கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
அந்த மசோதாக்களில் அவர் கையெழுத்திட்டதும் அது சட்டமாகி விடும். ஆனால் கடந்த சில வருடங் களாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களில் ஒருசில மசோதாக்களில் கையெழுத் திடாமல் விளக்கம் கேட்டு அரசுக்கே திருப்பி அனுப்பிய சம்பவமும் அரங்கேறியது.
இதனால் கவர்னருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் இந்த பிரச்சனை கோர்ட்டு வரை சென்றது.
இந்த சூழலில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கவர்னர் நடவடிக்கைகளில் சிறிது மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் மொத்தம் 14 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த 14 சட்ட மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி இப்போது ஒப்புதல் வழங்கி உள்ளார்.
புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்திய மசோதா, ஊரக உள்ளாட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் போது அப்பகுதியில் வரும் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை மாற்றம் செய்வதற்கான சட்ட திருத்த மசோதா.
சென்னையில் தனியார் வளாகம் அல்லது ஒரு தனியார் தெருவின் மிக அருகில் உள்ள இடத்தில் இருந்து 30 மீட்டர் தூரத்துக்குள் கழிவுநீரை வாரியத்தின் கழிவுநீர் பாதையில் வெளியேற்றுவதற்கு இணைப்பு பெறுவதை கட்டாயமாக்கும் திருத்த மசோதா, சென்னை மாநகர காவல் சட்டத்தை மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கான சட்ட திருத்த மசோதா, உள்ளிட்ட 14 மசோதாக்களுக்கும் கவர்னர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
- மாநகர பஸ் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.
- பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்துவதால் பெரும் சிரமம்.
சென்னை:
சென்னையில் பஸ் நிறுத்தங்களில் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் மாநகர பஸ் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.
மாநகர பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும் நிறுத்தங்களில் ஆட்டோக்களை நிறுத்துவதால் பஸ் டிரைவர்கள் பஸ்சை நிறுத்தும் இடத்தை கடந்தோ, அல்லது சாலையின் நடுப்பகுதிகளில் நிறுத்தும் நிலை உள்ளது.
இதனால் பஸ்சின் பின்னால் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை நகரின் எல்லா பகுதியிலும் ஆட்டோ டிரைவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்துவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
இதனால் மாநகர பஸ்கள் சரியான இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் 110 பஸ் நிறுத்தங்களை கண்டறிந்து போக்குவரத்து போலீசார் ஆட்டோக்களை அகற்றினர். ஒவ்வொரு இடத்திலும் 6 முதல் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சென்னை போக்குவரத்து போலீசுக்கு வந்த 2000 புகார்களில் 800 புகார்கள் போக்குவரத்து விதிமீறல் தொடர்பானவை. அவற்றில் கணிசமான எண்ணிக்கையில் சட்ட விரோத வாகன நிறுத்தம் சம்பந்தப்பட்டது.
பரங்கிமலை-பூந்தமல்லி சாலை போன்ற இடங்களில் மெட்ரோ ரெயில் பணி நடைபெறுவதால் சாலை குறுகலாக உள்ளது. இந்த பகுதிகளில் ஆட்டோக்களை நிறுத்துவதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஷேர் ஆட்டோக்களில் ஆட்கள் வரும் வரை நிறுத்தி விடுகின்றனர். இதனால் பஸ் டிரைவர்களுக்கும், ஆட்டோ ஓட்டுனருக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. பொதுமக்கள் புகார் கூறினாலும் சண்டைக்கு வருகிறார்கள்.
இதுகுறித்து மாநகர பஸ் டிரைவர் கூறும்போது, `பஸ் நிறுத்தங்களில் ஆட்டோவை நிறுத்துவதால் ஆட்டோ டிரைவர்களுக்கும் எங்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. பஸ் நிறுத்தங்களில் இருந்து 20 முதல் 30 மீட்டர் தொலைவில் நிறுத்துகிறோம் என்றனர்.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கூறுகையில், பிரச்சினைக் குரிய இடங்களை கண்ட றிந்து அங்கு நிறுத்தப்படும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இதில் கோடம்பாக்கம், கிண்டி, அண்ணாநகர், நுங்கம் பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள பஸ் நிறுத்தங்களும் அடங்கும். விதிகளை மீறி னால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்