என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fog"

    • திடீரென பெய்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி
    • கடும் பனிமூட்டம் நிலவியதால் இரவு போல் காட்சியளித்தது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. கொடைக்கானலில் வெயில் அதிகரித்த நிலையில் நேற்று அதிகாலையில் சாரலாக தொடங்கிய மழை பின்னர் கனமழையாக பெய்தது.

    தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகள் சிரமமடைந்தனர். பகல் பொழுதிலேயே கடும் பனிமூட்டம் நிலவியதால் இரவு போல் காட்சியளித்தது.

    இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். மேல்மலை பகுதியில் பெய்த மழை சாகுபடி பணிக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    மேலும் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வந்தது. இதனை அணைக்க வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். தற்போது பெய்துள்ள மழை காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவும் என அவர்கள் தெரிவித்தனர். கோடைகால சீசன் தொடங்க உள்ள நிலையில் மழைப்பொழிவு குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இருந்தபோதும் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திண்டுக்கல் 20, காமாட்சிபுரம் 13.2, நிலக்கோட்டை தாலுகா 17, நிலக்கோட்டை 16.20, சத்திரப்பட்டி 7.2, வேடசந்தூர் தாலுகா அலுவலகம் 8.4, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 8.2, பழனி 7, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 13, பிரையண்ட் பூங்கா 14 என மாவட்டம் முழுவதும் 124.20 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும் கடும் பனிமூட்டம் நிலவியது.
    • தேசிய நெடுஞ்சாலையில் பகலிலும் வாகனங்கள் விளக்கை போட்டபடி சென்றன.

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்திலிருந்து கடும் பனி கொட்டுகிறது. இதனால் சாலைகள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு உள்ளன.

    அதிகபட்சமாக இன்று அதிகாலை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடும் பனி கொட்டியது. இதனால் சென்னை- அரக்கோணம் - காட்பாடி- ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும் ரெயில்கள் வழக்கத்தை விட தாமதமாக சென்றன.

    இன்று காலையில் சென்னை நோக்கி வந்த காவேரி, மைசூர், சேரன், நீலகிரி, திருவனந்தபுரம்- ஏலகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னையில் இருந்து அரக்கோணம் காட்பாடி வழியாக சென்ற கோவை, சப்தகிரி, டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் 4 மின்சார ரெயில்கள் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    கடும் பனிமூட்டம் காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் குறைக்கப்பட்டது. அதனால் தாமதம் ஏற்பட்டது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும் கடும் பனிமூட்டம் நிலவியது. தேசிய நெடுஞ்சாலையில் பகலிலும் வாகனங்கள் விளக்கை போட்டபடி சென்றன.

    வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். பனிமூட்டத்தால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

    கடும் பனி காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் தெருக்களில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். டீ கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. சாலையோரங்களில் சொட்டர் விற்பனை களைகட்டியது.

    • டெல்லியில் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், 4 நாட்கள் அடர் பனி மூட்டம் நீடிக்கும்.
    • டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சுமார் 100 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஆனது.

    டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனி மூட்டம் நிலவுகிறது.

    டெல்லியில் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், 4 நாட்கள் அடர் பனி மூட்டம் நீடிக்கும் என இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடர் பனி மூட்டத்தால் ரெயில், விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    பனிப்பொழிவு காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சுமார் 100 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஆனது.

    மேலும் இரவு 11.45 மணிக்கு ஒரு ஸ்பைஸ் ஜெட் விமானம் மற்றும் அதிகாலை 2.15 மணிக்கு ஒரு இண்டிகோ விமானம் ஆகிய 2 விமானங்கள் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டன. இந்த சீசனில் மூடு பனி காரணமாக விமானங்கள் திருப்பிவிடப்படுவது இது முதல் முறையாகும்.

    இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், விமானங்கள் திட்டமிடப்பட்ட நேரத்தில் வருவது அல்லது புறப்படும் நேரத்தில் இருந்து 15 நிமிடங்களுக்கு மேல் மாற்றம் ஏற்பட்டால் அது தாமதம் என வகைப்படுத்தப்படும் என்றார்.

    • ஜெங்சின் ஹுவாங்கே மேம்பாலம் முழுவதையும் பனி மூடியிருந்தது.
    • மேம்பாலத்தில் வேகமாக சென்ற சில கார்கள் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதின.

    பீஜிங்:

    சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தின் ஜெங்சோவ் நகரில் ஜெங்சின் ஹுவாங்கே என்கிற மிகப்பெரிய மேம்பாலம் உள்ளது.

    மஞ்சள் ஆற்றின் குறுக்கே செல்லும் இந்த மேம்பாலம் ஜெங்சோவ் மற்றும் அண்டை நகரான சின்சியாங்கை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை ஜெங்சோவ் நகரில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. ஜெங்சின் ஹுவாங்கே மேம்பாலம் முழுவதையும் பனி மூடியிருந்தது.

    இதனால் அந்த மேம்பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல தடைவிதித்து உள்ளூர் போக்குவரத்து போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் அதை பொருட்படுத்தாமல் மேம்பாலத்தின் இருதிசையில் இருந்தும் வாகனங்கள் தொடர்ந்து பயணித்தன. ஒருகட்டத்தில் முன்னால் செல்லக்கூடிய வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் அதிகமானது.

    இதனால் மேம்பாலத்தில் வேகமாக சென்ற சில கார்கள் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதின. அதனை தொடர்ந்து பின்னால் வந்த கார்கள், லாரிகள் உள்ளிட்ட டஜன் கணக்கான வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின.

    பாலத்தின் இருதிசையில் இருந்தும் வந்த வாகனங்கள் பல பாலத்தின் நடுப்பகுதியில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கின. சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் மோதிக்கொண்டே இருந்தன. இதில் பல கார்கள் மற்றும் லாரிகள் நொறுங்கி, ஒன்றன் மேல் ஒன்றாக குவிந்தன.

    இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.

    கிட்டத்தட்ட 200 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படும் நிலையில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இதனிடையே ஜெங்சின் ஹுவாங்கே மேம்பாலத்தில் சங்கிலி தொடர் விபத்து ஏற்பட்டதை காட்டும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.

    • பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் சிறிதளவு பாதிக்கப்பட்டன.
    • ஏர் இந்தியா விமானம் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாததால் சிறிது நேரம் வானில் தொடர்ந்து வட்டமடித்தது.

    ஆலந்தூர்:

    சென்னை புறநகர் பகுதியில் இன்று காலை பனிமூட்டம் அதிகமாக இருந்தது.

    இந்நிலையில் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் சிறிதளவு பாதிக்கப்பட்டன.

    மும்பையில் இருந்து 129 பயணிகளுடன் இன்று காலை 7.45 மணிக்கு சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாததால் சிறிது நேரம் வானில் தொடர்ந்து வட்டமடித்தது.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்பு அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    அதேபோல் மலேசியா நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த 2 விமானங்கள், 2 பெங்களூர் விமானங்கள் கொல்கத்தா, கோவை, ஐதராபாத் ஆகிய 7 விமானங்கள் சிறிது நேரம் வானில் வட்டமடித்து பறந்துவிட்டு தாமதமாக தரையிறங்கின.

    அதோடு சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான மஸ்கட், லண்டன், கோலாலம்பூர், செயின் டென்னிஸ், கொல்கத்தா, புனே, பெங்களூர் ஆகிய 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. மொத்தம் 14 விமானங்கள் வருவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது.

    • அவர்கள் முகப்பு விளக்குகளை போட்டபடி மெதுவாக சென்றனர்.
    • தீ விபத்து ஏற்பட்டு புகை வருவது போல் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மார்கழி மாதத்தில் பனி அதிகமாக பெய்யும். கடந்த ஒரு வாரமாக பனி குறைந்துவிட்ட நிலையில் இன்று காலை திடீரென பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சாலை தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். அவர்கள் முகப்பு விளக்குகளை போட்டபடி மெதுவாக சென்றனர். இந்த பனிமூட்டம் காலை 8 மணி வரை நீடித்தது. ஏற்கனவே பனிமூட்டம் ஊருக்கு வெளியில் மட்டும் தெரியும். ஆனால் தற்போது ஊரில் உள்ளேயும் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இந்த பனிமூட்டம் எங்கோ தீ விபத்து ஏற்பட்டு புகை வருவது போல் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேல்மலையனூரில் இன்று காலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு ஒளிரவிட்டபடி சென்றனர்.நேற்று முன்தினம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் சாரல் மழை பெய்தது. ஆனால் இன்று பனிமூட்டம் காணப்படுகிறது

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை பனிமூட்டம் அதிகமாக இருந்தது.
    • அதிகாலையில் ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனி படர்ந்து காணப்பட்டது.

    ஆலந்தூர்:

    வடகிழக்கு பருவமழையின்போதே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக பனியின் தாக்கம் குறைந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. புகைபோல் காலை 8 மணி வரை பனியின் தாக்கம் நீடித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலையும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. அதிகாலையில் சாலையே தெரியாத அளவுக்கு புகைபோல் காட்சி அளித்தது.

    வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றன. தாம்பரம், ஓரகடம், படப்பை, ஆலந்தூர், மீனம்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் காலை 8 மணி வரை பனிமூட்டம் நீடித்தது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதிகாலையில் ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் மும்பை மற்றும் பெங்களூருவில் இருந்து வந்த விமானங்கள் சென்னைக்கு சுமார் அரைமணி நேரம் தாமதமாக வந்தது.

    இதேபோல் சென்னையில் இருந்து அதிகாலையில் புறப்பட்ட சில விமானங்களும் தாமதமாக சென்றன.

    • திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலைகள் முழுவதும் பனிப்பொழிவு காரணமாக புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது.
    • பனிப்பொழிவின் காரணமாக திருவாரூர் ெரயில் நிலையத்தை முழுமையாக பனிமூட்டம் மூடி மறைத்துள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலைகள் முழுவதும் பனிப்பொழிவு காரணமாக புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது.

    காலை 8 மணிக்குப் பின்னரும் பனிமூட்டம் கடுமையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சாலை தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி தங்களது வாகனங்களில் செல்கின்றனர்.

    மேலும் அன்றாட பணிகளுக்கு செல்வோரும் பாதசாரிகளும் உடற்பயிற்சி மேற்கொள்வோரும் இந்த பனிப்பொழிவு காரணமாக கடும் அவதிக்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    குறிப்பாக திருவாரூர், கூத்தாநல்லூர், மாங்குடி, நன்னிலம், கொரடாச்சேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.

    பனிப்பொழிவின் காரணமாக திருவாரூர் ெரயில் நிலையத்தை முழுமையாக பனிமூட்டம் மூடி மறைத்துள்ளது.

    மேலும் தற்போது சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்கள் முழுவதுமாக பனிமூட்டம் மூடி மறைத்துள்ளது.

    இதேபோன்று திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான கமலாலயக் குளம் முழுவதும் பனி மூட்டத்தின் காரணமாக குளம் முழுவதும் மூடுபனியால் மறைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடுமை யான பனிப் பொழிவின் காரணமாக கோவிலுக்குச் செல்ப வர்களும்மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சாலையில் செல்பவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்து வருகின்றனர்.

    • கடந்த வாரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன.
    • சென்னையில் உள்ள மாநகராட்சி பூங்காக்களில் அதிகாலை 5 மணி முதல் நடைபயிற்சியில் பொதுமக்கள் ஈடுபடுவார்கள்.

    சென்னை:

    பருவமழை காலம் முடிந்த போதிலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பனியும் குளிரும் வாட்டி வதைக்கிறது. வழக்கமாக ஜனவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கிறது.

    தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்பட்ட போதிலும் அதிகாலை வேளையில் ஒருசில மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.

    கடந்த வாரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன.

    இந்த நிலையில் இன்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் காணப்பட்டது. சாலைகள் தெரியாத அளவுக்கு பனியின் தாக்கம் இருந்ததால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

    காலை 7 மணிவரை பனிப்பொழிவு இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை பயன்படுத்தினார்கள். எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். நகரின் முக்கிய சாலைகள், வீதிகளில் மட்டுமின்றி பூங்காக்களிலும் பனிமூட்டம் காணப்பட்டதால் நடைபயிற்சி செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

    சென்னையில் உள்ள மாநகராட்சி பூங்காக்களில் அதிகாலை 5 மணி முதல் நடைபயிற்சியில் பொதுமக்கள் ஈடுபடுவார்கள். பனிமூட்டத்தின் காரணமாக நடைபாதையே தெரியாததால் வயதானவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    தலையை துணியால் முழுமையாக மூடியவாறு நடந்து சென்றனர். தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல் அதிகம் பாதிக்கப்படுவதால் பனியில் வெளியே வருவதை தவிர்க்கின்றனர்.

    • 2 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது
    • அறுவடை செய்வதற்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்தது

    போளூர்:

    போளூர் பகுதியில் கடந்த வாரம் திடீரென்று தொடர்ந்து 5 நாட்கள் கோடை மழை பெய்தது.

    இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பம் தனிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது. ஒரு சில பகுதியில் அறுவடை செய்வதற்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்தது.

    இந்த நிலையில் 2 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது இன்று காலை ஒரே பனிமூட்டமாகவும் இருந்தது இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக காணப்பட்டது.

    • கேரளாவில் இருந்து வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
    • சுற்றுலாப் பயணிகள் குளுகுளு காலநிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும், உலக நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

    வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்திருந்த நிலையில், தற்போது கேரளாவிலிருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். கேரளாவில் இருந்து வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் முக்கிய சுற்றுலாத் தலங்களான தூண்பாறை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கேரள சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    கொடைக்கானலில் காலை முதல் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகன ஓட்டிகள் வாகனங்களை செலுத்தி வருகின்றனர். மலைச்சாலை முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.

    கடும் பனி மூட்டத்தால் சுற்றுலாத்தலங்களில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காணமுடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தபோதும் குளுகுளு காலநிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர். 

    • குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பருவமழை காரணமாக இதுவரை 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.
    • ஒருசில நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி தொடக்கம் வரை வெளுத்து வாங்குவது வழக்கம். அதன்படி அங்கு தற்போது கனமழை பெய்து வருகிறது.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பருவமழை காரணமாக இதுவரை 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் 23 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன.

    இதுதவிர மலைப்பாதையின் பல்வேறு பகுதிகளில் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

    இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மேக கூட்டங்கள் தரைக்கு மிகவும் அருகே தவழ்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

    அதிலும் குறிப்பாக குன்னூர் பகுதியில் பகல் நேரங்களில் கூட மேகமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. எனவே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை மெதுவாக இயக்கி வருகின்றனர். இதனால் குன்னூர் மலைப்பாதையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

    குன்னூர் பகுதியில் நேற்று முதல் மழைச்சாரலுடன் மேகமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது.

    இதுதொடர்பாக குன்னூர் மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    குன்னூரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அடர்பனிமூட்டம் ஏற்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் வரலாறு காணாத அளவில் அதிகப்படியாக பனிமூட்டத்தை பார்க்க முடிகிறது. மேலும் அங்கு காலநிலை மாற்றமும் ஏற்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் அங்கு ஒருசில நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. எனவே நாங்கள் அச்சத்துடன் வாகனங்களில் பயணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    குன்னூரில் இன்று காலை 10 மணியை கடந்த பின்னரும் அடர் பனி மூட்டம் காணப்பட்து. இதனால் அங்கு கடும் குளிர் நிலவுகிறது. பொதுமக்கள் குளிரை தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். குன்னூருக்கு வந்த சுற்றுலாபயணிகள் வெளியே செல்ல முடியாமல் ஓட்டல்களிலேயே முடங்கிப் போய் உள்ளனர்.

    ×