search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fraud Woman"

    • விசாரணையில் தாய் மாமாவாக கூறப்பட்ட ரகுவரன் பெண்ணுக்கு 2-வது கணவர் என தெரியவந்தது.
    • உடனே சரண்யா, ரகுவரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் அம்மன் நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 23). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் சரண்யா என்ற இளம்பெண் பழக்கமானார்.

    இருவரும் போனில் பேசி வந்தனர். தொடர்ந்து பேசி வந்த நிலையில் ஸ்டீபனை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சரண்யா கூறினார்.

    உடனே தனது பெற்றோரிடம் ஸ்டீபன் தெரிவித்தார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி ஆத்தூரில் வைத்து சரண்யாவை, ஸ்டீபன் திருமணம் செய்தார். அப்போது சரண்யா தரப்பில் தாய்மாமா நாமக்கல் மாவட்டம் நடராஜபுரத்தைச் சேர்ந்த ரகுவரன் (32) என்பவர் வந்தார்.

    திருமணத்துக்கு பின்னர் ஸ்டீபன், சரண்யாவும் ஒரு மாத காலம் வாழ்ந்த நிலையில் சரண்யா அடிக்கடி வீட்டில் இருந்து வெளியே சென்று வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த தீபன் சரண்யாவுக்கு பல்வேறு நபர்களுடன் அவருக்கு பழக்கம் இருப்பதை அறிந்து கண்டித்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை சுருட்டிக்கொண்டு சரண்யா தலைமறைவானார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டீபன் ஆத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி சரண்யாவை தேடினார். அப்போது நாமக்கல் நடராஜபுரம் 4-வது தெருவில் உள்ள ரகுவரன் வீட்டில் இருந்த சரண்யாவை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் தாய் மாமாவாக கூறப்பட்ட ரகுவரன் அவருக்கு 2-வது கணவர் என தெரியவந்தது. உடனே சரண்யா, ரகுவரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை ஆத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் சரண்யா தனது பெயரை மாற்றிக்கொண்டு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர்களை வலையில் வீழ்த்தி திருமணம் செய்து நகை-பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது.

    அந்த வகையில் ஸ்டீபனை 4-வதாக திருமணம் செய்து கொண்டதும், அதற்கு 2-வது கணவரான ரகுவரன் தாய் மாமனாக நடித்ததும் தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில், சரண்யாவின் சொந்த ஊர் ஆத்தூர் சந்தனகரி. இவரது உண்மையான பெயர் அருள்ஜோதி. இவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருக்கு உறவினர்கள் திருமணம் செய்து வைத்தனர்.

    அங்கு முதல் கணவரிடம் இருக்கும்போது விபசார கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டு சில வாலிபர்களுடன் சரண்யா சுற்றி தெரிந்துள்ளார். அப்போதுதான் நாமக்கல்லை சேர்ந்த ரகுவரனை 2-வதாக திருமணம் செய்து கொண்டு கோவை வீரகேரளத்தில் வசித்து வந்தார்.

    அங்கிருந்தபோது சரண்யா வைத்து திருமண மோசடி செய்து பணம் சம்பாதிக்கலாம் என ரகுவரன் திட்டமிட்டார். அதன்படியே இருவரும் சேர்ந்து சென்னையை சேர்ந்த ஒரு வாலிபரை பேஸ்புக் மூலம் வலையில் வீழ்த்தி 3-வதாக திருமணம் செய்து ஏமாற்றியுள்ளனர்.

    4-வதாக ஆத்தூரில் ஸ்டீபனை திருமணம் செய்து 30 பவுன் நகை, 2 லட்சம் பணத்தை சுருட்டியுள்ளனர்

    தொடர்ந்து கைதான கல்யாண ராணி சரண்யாவிடம் இருந்து 12 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. மீதி நகை, பணத்தை என்ன செய்தார் என்பது குறித்தும் விசாரித்து வரும் போலீசார் இதுபோல் மேலும் வேறு யாரிடமும் ஏமாற்றினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். அப்போது வேறு சில நபர்களையும் இதுபோல ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து சரண்யாவை சேலம் பெண்கள் கிளை சிறையிலும், ரகுவரனை சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

    இன்று செல்போன் யுகமாகிவிட்ட நிலையில் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு வரன் பார்க்க செல்போன் ஆப் மற்றும் சமூக வலைதளங்களை நாடுகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி அவர்களை கும்பல் மோசடி செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    ஏற்கனவே நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், சேலம் மாவட்டம் எடப்பாடி, திருப்பூர், புதுவை உள்ளிட்ட இடங்களில் இதுபோன்ற மோசடிகள் நடந்துள்ளன. இது பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு அதிரிச்சியை ஏற்படுத்தி உள்ளன. இதனால் பெரும்பாலான கிராம மக்கள் தங்கள் கிராமத்தை சேர்ந்த வரன்கள், உறவு முறை பெண், பையன்களை பார்க்க தொடங்கி உள்ளனர். 

    ×