search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kallakurichi hooch tragedy"

    • கள்ளச்சாராய மரணங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது.
    • இந்தியா முழுதும் நீட் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது.

    பெரம்பலூர்:

    ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி., பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய உயிரிழப்பு சம்பவத்தில் மருத்துவர்கள், மருத்துவமனைகள், அரசாங்கமும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல்லது செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். இந்த நேரத்தில் இதில் அரசியல் ஆதாயம் தேட வேண்டி சர்ச்சை கருத்துக்களை சொல்லுவதோ, பரபரப்பு உருவாக்குவதற்காக மட்டமான அரசியல் செய்வதில் யாரும் ஈடுபட வேண்டாம்.

    இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது.

    மாவட்ட கலெக்டரை டிரான்ஸ்பர் செய்து உள்ளனர். மாவட்ட எஸ்.பி. மற்றும் மாவட்டத்தில் உள்ள முக்கியமான காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். இது மாத்திரம் இல்லாமல் சம்பந்தப்பட்ட குற்றவாளியையும், அவருக்கு உடந்தையாக இருந்த சில பேரையும் கைது செய்து உள்ளனர்.

    கடந்த 30, 40 வருடங்களாக தொடர்ச்சியாக கள்ளச்சாராய மரணங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. இது ஒரு நாடு தழுவிய ஒரு பிரச்சனை. பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பா.ஜ.க. ஆளுகின்ற குஜராத் மாநிலம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி இருக்கும் பீகாரிலும் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இது போன்ற கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனை போன்ற மோசமான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் அதற்கு உடந்தையாக இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கும் குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும். அதற்கேற்ப இந்த அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

    இன்று இந்தியா முழுதும் நீட் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது.

    மக்களவையில் எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்போது தமிழக மக்கள் மற்றும் திருச்சி தொகுதி மக்களுக்கான முக்கிய பிரச்சனைக்கு கண்டிப்பாக குரல் கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 16 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
    • சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 150-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவக் கல்லூாி மருத்துவமனைகள் மற்றும் புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 19-ந் தேதி 17 பேரும், 20-ந் தேதி 24 பேரும், 21-ந் தேதி 9 பேரும், நேற்று முன்தினம் 5 பேரும் என மொத்தம் 55 போ் உயிாிழந்தனா்.

    இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தை சோ்ந்த சவுந்தரராஜன் மகன் மதன் (வயது 46) என்பவா் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தொடர்ந்து மாலையில் சேஷசமுத்திரத்தை சேர்ந்த சாமுண்டி (70) என்பவர் சிகிச்சை இறந்து போனார்.

    இன்று காலை கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுவங்கூரை சேர்ந்த மணிகண்டன் (28) மற்றும் ஒரு பெண் இறந்து போனார்கள். பிரேத பரிசோதனை அறிக்கைப்படி கள்ளச்சாராய பலி 59 என அரசு அறிவித்துள்ளது.

    ஏற்கனவே மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன் (45), இளையராஜா (35) ஆகியோர் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக அவர்களது குடும்பத்தினர் கூறியுள்ளதால் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 61 ஆக உயா்ந்துள்ளது.

    மேலும் இன்று காலை 7 மணி நிலவரப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூாி மருத்துவமனையில் 109 பேரும், சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவ மனையில் 30 பேரும், புதுச்சரி ஜிப்மா் மருத்துவ மனையில் 12 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவ மனையில் 4 பேரும் என மொத்தம் 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 16 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் ஓய்வு பெற்ற ஐகோா்ட்டு நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா் ஆணையமும் விசாரித்து வருகிறது.

    • நாளை மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.
    • சென்னையில் ஜெயக்குமார், கோவையில் எஸ்.பி.வேலுமணி, மதுரையில் செல்லூர் ராஜூ ஆகியோர் போராட்டங்களில் பங்கேற்கின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தி.மு.க. அரசை கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

    சென்னையில் ஜெயக்குமார், கோவையில் எஸ்.பி.வேலுமணி, மதுரையில் செல்லூர் ராஜூ ஆகியோர் போராட்டங்களில் பங்கேற்கின்றனர்.

    • மரக்காணம் கள்ளச்சாராய விவகாரத்திலேயே, கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டதாக முதலமைச்சர் அறிவித்தார்.
    • காவல் துறையினரை ஆளங்கட்சியினர் செயல்படாமல் வைத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 56 பேர் பலியாகினர். மேலும், கள்ளக்குறிச்சி, முண்டியம்பாக்கம், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், புதுவை ஜிப்மர் மருத்துவமனையிலும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கள்ளக்குறிச்சிக்கு இன்று வந்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

    கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் பலியானது துயரமான சம்பவமாகும். மேலும், பலி எண்ணிக்கை உயரும் அபாயமும் உள்ளது. பலியானவர்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ள போது, கள்ளச்சாராய பலிக்கு இவ்வளவு தொகை அறிவிப்பது தவறான முன்னுதாரணமாக மாறி விடக்கூடாதென பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். இதனையும் அரசு பரிசீலிக்க வேண்டும்.

    தங்கள் மீதான குற்றச்சாட்டை நிருபிக்க முடியுமா என தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் கூறியுள்ளனர். வரும் தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகளே இதற்கு நிருபனமாக அமையும். தி.மு.க.வினருக்கும், கள்ளச்சாராயத்திற்கும் சம்மந்தமில்லை எனில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு வந்திருக்கலாமே என்று கேள்வி எழுப்பினார்.

    காவல் துறையினரை ஆளங்கட்சியினர் செயல்படாமல் வைத்துள்ளனர். கள்ளச்சாராய விற்பனையில் ஆளுங்கட்சி தலையீடு உள்ளது என அனைத்து தரப்பு மக்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். மரக்காணம் கள்ளச்சாராய விவகாரத்திலேயே, கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டதாக முதலமைச்சர் அறிவித்தார். ஆனால், கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் பின்புறம் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதால் தான் எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயனுக்கு தொடர்பு உள்ளதாக பொதுமக்களே பேசுகின்றனர். இதைத்தான் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    எனவே, இது தொடர்பாக சி.பி,ஐ விசாரணை நடத்த வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்துகிறது. அப்போதுதான் கள்ளச்சாராய வியாபாரிகளும், அதற்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகளும் பிடிபடுவார்கள். இது மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தண்ணீரில் கலந்து விற்கப்பட்டு தான் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயத்தை குடித்து 56 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இது பெரிய நெட்வொர்க்காக செயல்பட்டு வந்தது தெரிந்ததை அடுத்து பத்துக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுவருவதுடன், 6 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பண்ருட்டியில் ஜோதி சிப்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வரும் சக்திவேல் என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். தன்னுடைய ஜி.எஸ்.டி. பில்லை மாதேஷ் பயன்படுத்த அனுமதி அளித்ததால் கைது செய்யப்பட்டார். சக்திவேலின் ஜி.எஸ்.டி. பில்லை தான் பயன்படுத்தி மாதேஷ் 'மினரல் டர்பன்டன் ஆயில்'என்ற பொருளை வாங்கியுள்ளார். இதை தண்ணீரில் கலந்து விற்கப்பட்டு தான் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    • சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோவையில் பா.ஜ.க. தலைமை அலுவலகம் முன்பு அனுமதியின்றி 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தி.மு.க. அரசை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபங்களில் தங்க வைத்தனர்.

    இந்நிலையில், சென்னை மற்றும் கோவையில் அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க.வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் பா.ஜ.க. தலைமை அலுவலகம் முன்பு அனுமதியின்றி 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னையில் 3 பிரிவுகளிலும், கோவையில் 4 பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • 30 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 48 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏற்கனவே 17 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கருணாபுரம் மதன் (46) என்பவர் இன்று அதிகாலை 3.30-மணிக்கு இறந்துவிட்டார்.

    இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து தொடர்ந்து 30 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு-

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் சிவா (30), கருமாபுரம் அருண் (38), கிருஷ்ணமூர்த்தி (55), கருணாபுரம் பெரியசாமி (65), கள்ளக்குறிச்சி மாதவசேரி சந்திரசேகரன் (27), கள்ளக்குறிச்சி திருவாங்கூர் கலியன் (64), கள்ளக்குறிச்சி ஏமப்பேர் செல்வராஜ் (37), கள்ளக்குறிச்சி முத்து (55), கருணாபுரம் கணேசன் (59), கருணாபுரம் சுரேஷ் (47 ), கருணாபுரம் சரசு (52), கருணாபுரம் ரவி (44), சங்கராபுரம் மனோஜ்குமார் (21), சங்கராபுரம் நரசிம்மன் (21), சின்னசேலம் கருப்பன் (62), நாகலூர் சண்முகம், கள்ளக்குறிச்சி கோட்டைமேடு ஜான்பாஷா (52), கள்ளக்குறிச்சி அன்பு (50), கோட்டைமேடு பார்த்திபன் (27), கருணாபுரம் பாஸ்கர் (51), கள்ளக்குறிச்சி மணி வண்ணன் (48), கருணாபுரம் விஜயகுமார் (42), ரஞ்சித்குமார் (37 ), மணிவண்ணன், (60), கார்த்திக்கேயன் (36) , விளான்தாங்கல் ரோடு நசீர் (53), முடியலூர் சாமிதுரை, சங்கராபுரம் சாமுண்டி (70), மாரிமுத்து (55) ஆகிய 30 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    • தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விட 2½ மடங்கு அதிகமாக டாஸ்மாக் கடைகள் உள்ளன.
    • இந்தியாவிற்கே தமிழகம் உதாரணம் என்று கூறிய காலம் போய் இன்று இந்தியாவின் முன் தமிழகம் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம்.

    கோவை:

    கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜனதா தொண்டர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்காகவும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் இன்று (நேற்று) மதுரை ஆரம்பித்து, சென்னை, கோவை என அனைத்து பகுதிகளிலும் தொண்டர்கள், தலைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை தடுத்து, கைது செய்துள்ளனர்.

    மக்கள் பிரச்சனைக்காகவும், கள்ளச்சாராய சாவுக்காகவும், தமிழகத்தில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்காக ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.க. தலைவர்கள் அந்தந்த மாவட்ட போலீஸ் அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி கடிதம் கொடுத்து உள்ளார்கள். கோவையில் எந்த இடம் என்றாலும், எந்த நேரம் என்றாலும் சொல்லுங்க அந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்று போலீசாரிடம் தெரிவித்து இருந்தோம்.

    ஆனால் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து, பெண்கள் உள்பட அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் 4,661 நூலகங்களும், 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. ஆனால் 5,329 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

    தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விட 2½ மடங்கு அதிகமாக டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் வெளிப்பாடு தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாக இருக்க கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள்.

    கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் இறந்து உள்ளனர். இவர்களில் 53 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் கண்பார்வை இழந்து உள்ளனர். இந்தியாவிற்கே தமிழகம் உதாரணம் என்று கூறிய காலம் போய் இன்று இந்தியாவின் முன் தமிழகம் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம். தமிழகம் முழுவதும் நாங்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்த கடிதத்தை நிராகரித்து இருக்கிறார்கள். எங்களது கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கவர்னரிடம் தொலைபேசியில் முறையிட்டேன்.

    இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பா.ஜ.க. கட்சி குழு கவர்னரை சந்திக்க உள்ளது. இந்த குழு கவர்னரை சந்தித்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு, நாங்கள் நேரிடையாக கள்ளக்குறிச்சி சென்று பார்வையிட்டது என அனைத்தையும் கவர்னரிடம் தெரிவிக்க உள்ளோம். இந்த சம்பவத்தில் தி.மு.க.விற்கு உள்ள தொடர்பு குறித்து கவர்னரிடம் அறிக்கையாக சமர்பிக்க உள்ளோம். எங்களது கருத்துரிமையை பறிக்க கூடிய தி.மு.க. அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமா என்ற கேள்வியை கவர்னர் முன்வைப்போம். இந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணையை வலியுறுத்துவோம்..

    தி.மு.க.விற்கும், கள்ளச்சாராய கும்பலுக்கும் உள்ள தொடர்பை வெளிகொண்டு வர சி.பி.ஐ. விசாரணை தேவைப்படுகிறது. தமிழகத்திற்கு சி.பி.ஐ. வர வேண்டும் என்றால் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் வாரந்தோறும் கள்ளச்சாராயம் குறித்த கண்காணிப்பு கூட்டம் நடைபெறும் என்று கடந்த ஆண்டு முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி எத்தனை ஆய்வு கூட்டங்கள் நடைபெற்றது என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். வேறு மாநிலங்களில் ஏதாவது ஒரு தவறு நடைபெற்றால் இங்கு உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவார்கள். ஆனால் ஒரு கண்டன குரல் கூட வரவில்லை. கள்ளக்குறிச்சிக்கு இன்னும் ஏன் முதலமைச்சர் செல்லவில்லை.

    தேசிய பட்டியலின ஆணையம் தமிழகத்திற்கு உடனடியாக வர வேண்டும் என மத்திய அரசிடம் தெரிவித்து உள்ளோம். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கோர்ட்டு அனுமதி பெற்று மீண்டும் தேதி அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மரக்காணத்தில் கள்ளச்சாராயத்துக்கு 23 பேர் பலியாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயத்துக்கு 55 பேர் பலியாகி உள்ளனர்.
    • கள்ளச்சாராயத்தை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

    மதுரை:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 55 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 100-க்கும் அதிகமானவர்கள் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் கள்ளச்சாராய விவகாரத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க. குற்றம் சாட்டி வருகிறது. இதையொட்டி பா.ஜ.க.வின் பல்வேறு தலைவர்களும் தி.மு.க. அரசை விமர்சித்து வருகின்றனர்.

    கள்ளச்சாராய சம்பவத்தில் 55 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    அதேபோல் மரக்காணத்தில் கள்ளச்சாராயத்துக்கு 23 பேர் பலியாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயத்துக்கு 55 பேர் பலியாகி உள்ளனர். இருந்த போதிலும் கள்ளச்சாராயத்தை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

    இந்த சூழலில் கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா உள்பட அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள திருவள்ளூர் சிலை அருகே பா.ஜ.க. சார்பில் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரம் தலைமையில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதற்கிடையில் இறந்தவரை தூக்கி செல்லும் பாடையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தமிழக அரசை கண்டித்து சிலர் பாடையை எடுத்து வந்து போராட்டம் நடத்த முயற்சித்தனர்.

    பின்னர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

    இதுதொடர்பாக தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜ்குமார், கருட கிருஷ்ணன், நவீன், வேல்முருகன், ஓம்சக்தி தனலட்சுமி, ஊடகப்பிரிவு தலைவர் வேல்பாண்டியன் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • கள்ளச்சாராயம் விற்று வருவதாக மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கைதான 2 பேரையும் போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    மத்தூர்:

    மத்தூர் அருகே உள்ள சின்ன ஆலேரஹள்ளி பகுதியில் கள்ளத்தனமாக மாந்தோப்பில் சாராய ஊரல் வைத்திருந்த சாராயம் விற்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சின்னலேரஅள்ளி பகுதியில் மாந்தோப்பில் சாராய ஊறல் வைத்திருந்து கள்ளச்சாராயம் விற்று வருவதாக மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் சின்னஆலேரஅள்ளி பகுதியில் உள்ள மாந்தோப்பு பகுதியில் சுமார் 150 லிட்டருக்கும் மேற்பட்ட சாராய ஊறலை வைத்திருந்து மத்தூர் அருகே உள்ள மூக்கா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது36 ), அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (44) ஆகிய 2 பேரும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே மத்தூர் போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 150 லிட்டருக்கும் மேற்பட்ட சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். பின்னர் கைதான 2 பேரையும் போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • கள்ளச்சாராய விவகாரம் தெரிந்த உடன் 24 மணிநேரத்தில் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.
    • சாராய வியாபாரி கண்ணுக்குட்டி தி.மு.க. பிரமுகர் இல்லை.

    சென்னை:

    கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புள்ளதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், சட்டசபை வளாகத்திற்கு வெளியே தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    * உண்மைக்கு மாறானவற்றை கூறும் ராமதாஸ், அன்புமணி ராமதாசுக்கு கண்டனம்.

    * கள்ளச்சாராய விவகாரம் தெரிந்த உடன் 24 மணிநேரத்தில் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.

    * கள்ளச்சாராயம் குடித்து பலியோனோரின் குடும்பத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

    * இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறாமல் அங்கு சென்றும் மலிவான அரசியல் செய்கிறார் அன்புமணி.

    * எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்து விலக தயார். அதேபோல் அவர்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறினால் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவார்களா?

    * சாராய வியாபாரி கண்ணுக்குட்டி தி.மு.க. பிரமுகர் இல்லை. வீட்டில் தி.மு.க. ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் கண்ணுக்குட்டி தி.மு.க பிரமுகராகிவிடுவாரா?

    * ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மக்களின் உயிர் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை.
    • தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை முற்றிலுமாக பரவி இருக்கிறது.

    ஊட்டி:

    மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி எல்.முருகன் நீலகிரி மாவட்டத்திற்கு வந்தார்.

    அவருக்கு பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக இன்றைக்கு கள்ளக்குறிச்சியில் 50க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை பலி கொடுத்திருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்து 2 நாட்களை கடந்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் மக்களை வந்து பார்க்கவில்லை. மக்களின் உயிர் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாராய விவகாரத்தில் நேரடியாக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.

    கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத செயலிழந்த அரசாக, இந்த தி.மு.க அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது.

    கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளிகளின் வீடுகளில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களின் படங்கள் தான் இடம்பெற்றுள்ளது. இதனால் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை முற்றிலுமாக பரவி இருக்கிறது. தி.மு.க அரசு மக்களை போதைப் பொருட்களால் அழித்துக் கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஜனநாயக முறைப்படி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும்போதும், அதற்கு பதிலளிக்க தி.மு.க.வினர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். வருகிற உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையாக இருக்க வேண்டும். அதற்காக தற்போது இருந்தே வேலைகளை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×