search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanchipuram mayor"

    • மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
    • நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராக உள்ளார்.

    மாநகராட்சியில் மொத்தம் தி.மு.க.வில் 33 பேர், காங்கிரஸ்-1, அ.தி.மு.க.-8, த.மா.கா-1, பா.ம.க.-2, பா.ஜனதா-1, விடுதலை சிறுத்தைகள்-1, சுயேட்சைகள்-4 உறுப்பினர்கள் உள்ளனர். துணை மேயராக காங்கிரசை சேர்ந்த குமரகுருநாதன் உள்ளார்.

    மேயர் மகாலட்சுமி யுவராஜிக்கு சொந்த கட்சியான தி.மு.க. கவுன்சிலர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். மேயருக்கு எதிராக மொத்தம் 33 கவுன்சிலர்கள் இருந்தனர்.

    அவர்கள், மகாலட்சுமி யுவராஜ் மேயர் பதவியில் இருந்து விலககோரி மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனரிடம் புகார் மனு அளித்தனர். தி.மு.க. எதிர்ப்பு கவுன்சிலர்களை கட்சி மேலிடம் அழைத்து சமாதானம் செய்தும் அவர்கள் தங்களது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

    இதைத்தொடர்ந்து மேயருக்கு எதிராக இன்று (29-ந்தேதி) நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் அது தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் மொத்தம் உள்ள 51 கவுன்சிலர்களில் 30-க்கும் மேற்பட்டோர் சொகுசு பஸ்சில் காஞ்சிபுரத்தில் இருந்து சுற்றுலா சென்றனர்.

    அவர்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டுகளில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்து இருந்தது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் சரியாக காலை 10 மணிக்கு தனது இருக்கையில் வந்து அமர்ந்தார். அவரது இருக்கை அருகில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களிக்க பூட்டு போடப்பட்ட பெட்டியும் தயாராக இருந்தது.

    ஆனால் மாநகராட்சி கூட்டத்திற்கு கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. அதிகாரிகள் மட்டும் வந்திருந்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் வெறிச்சோடி கிடந்தது.

    சிறிது நேரத்திற்கு பின்னர் அதிருப்தி தி.மு.க. கவுன்சிலரான 34-வது வார்டு உறுப்பினர் பிரவீன் குமார் மாநகராட்சி கூட்டத்திற்கு வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர் இருக்கையில் அமராமல் நேராக கமிஷனர் செந்தில் முருகனிடம் சென்று கடிதம் ஒன்றை கொடுக்க முயன்றார். ஆனால் அதனை கமிஷனர் வாங்க மறுத்தார். மேலும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னர் கடிதத்தை வழங்கும் படி தெரிவித்தார்.

    ஆனால் கவுன்சிலர் பிரவீன்குமார் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட வில்லை. மேலும் அவர் தான் கொண்டு வந்த கடிதத்தை கமிஷனர் செந்தில் முருகன் இருந்த மேஜை மீது வைத்து விட்டு சென்றார். அதனை கமிஷனர் கண்டுகொள்ள வில்லை. அதனை எடுத்து பார்க்கவும் இல்லை.

    மேயர் மகாலட்சுமி யுவராஜிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து போர்க்கொடி தூக்கிய கவுன்சிலர்கள் மற்றும் மேயருக்கு ஆதரவான கவுன்சிலர்கள் யாரும் கூட்டத்தில் பங்கேற்காததால் தொடர்ந்து பரபரப்பான நிலை நிலவியது. மேயரும் கூட்டத்திற்கு வரவில்லை.

    மேயரை பதவி நீக்கம் செய்ய 5-ல் 4 பங்கு கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். ஆனால் உறுப்பினர்கள் யாரும் கூட்டத்தில் பங்கேற்காததால் நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் அது தொடர்பான விவாதம், வாக்கெடுப்புக்கு ஏற்கப்பட வில்லை. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் மகாலட்சுமி யுவராஜின் மேயர் பதவி தப்பியது.

    கட்சியின் தலைைமக்கு கட்டுப்பட்டு மேயர் மகாலட்சுமி யுவராஜிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சி முன்பு டி.எஸ்.பி.முரளி தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    ×