என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medical waste"

    • தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது
    • விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில் கழிவுகளால் அப்பகுதி சுகாதார சீர்கேடான நிலைக்கு மாறி வருகிறது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பஸ் நிலையம் முன்பு கடந்த 2 மாதங்களாக தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. பல வாரங்களாக அகற்றப்படாமல் இருப்பதால் இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    தற்போது விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில் கழிவுகளால் அப்பகுதி சுகாதார சீர்கேடான நிலைக்கு மாறி வருகிறது.

    இங்கு அரசு அலுவலகங்கள், வங்கி, கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை உள்ளன. தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் இப்பகுதியில் மருத்துவகழிவுகள் கொட்டப்படுவதை பேரூராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் உள்ளது. இதுகுறித்து ெசயல்அலுவலர் சுந்தரியிடம் கேட்டபோது பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனியார் மருத்துவமனை கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் வந்துள்ளது.

    இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். மருத்துவகழிவுகள் கொட்டும் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • அண்டை மாநிலங்களிலிருந்து மருத்துவக் கழிவுகள்,கோழி கழிவுகள் போன்றவற்றை வாகனங்களில் ஏற்றி வரக்கூடாது.
    • கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் மனித உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுத்தும் மருத்துவக் கழிவுகள், நெகிழி குப்பைகள், சாயக்கழிவுகள், கோழிக்கழிவுகள் மற்றும் மீன்கழிவுகள் போன்றவை கொட்டப்படுகிறது.

    இதனை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் லாரி, சரக்கு வாகன உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து உட்கோட்ட காவல் துணை சூப்பிரண்டுகள் மற்றும் போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் டி.எஸ்.பி.க்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளதாவது;- கேரளா உள்ளட்ட அண்டை மாநிலங்களிலிருந்து மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கோழி கழிவுகள், மீன் கழிவுகள் போன்றவற்றை வாகனங்களில் ஏற்றி வரக்கூடாது. மேலும் அந்த கழிவுகளை ஏற்றி வந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களிலோ, தனியாருக்கு சொந்தமான இடங்களிலோ கொட்டவோ, குழி தோண்டி புதைக்கவோ கூடாது.

    அவ்வாறு சட்டவிரோதமாக கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வில்லையென்றால் புகார் அளிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ெதரிவித்துள்ளார்
    • பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வில்லையென்றால் புகார் தெரிவிக்கலாம்-கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தகவல் பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வில்லையென்றால் புகார் அளிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ெதரிவித்துள்ளார் மருத்துவக்கழிவுகளை பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து அதன் மூலமாகவே மருத்துவக்கழிவுகளை அகற்ற வேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படு த்தவில்லையென்றால் புகார் தெரிவிக்கலாம் என கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கூறினார்.பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து அப்புறப்படுத்துவது தொடர்பான கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பேசியதாவது:-

    மருத்துவக்கழிவுகள் பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மூலம் மட்டுமே எடுத்து செல்வதையும், பிற வாகனங்களில் எடுத்து செல்லாமல் இருப்பதையும் காவல்துறை கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையங்கள் இணையதள முகவரியில் பதிவு செய்து, அதன் பிறகு தங்கள் மருத்துவக்கழிவுகளை பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து அதன் மூலமாகவே மருத்துவக்கழிவுகளை அகற்ற வேண்டும்.

    மருத்துவக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் பொது இடங்களில் கொட்டுவதோ மற்றும் பொதுக்கழிவுகளுடன் கலந்து மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவது தெரிந்தால் பொதுமக்கள் அரியலூரில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை 8220051372 என்ற செல்போன் எண்ணிலும், deeary@tnpcb.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


    • வேளாண் நிலங்களில் இது போல் சட்ட விரோதமாக கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.
    • இறைச்சி மற்றும் திடக்கழிவுகள் கொண்டு வருவது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

    திருப்பூர் :

    கேரளாவிலிருந்து மருத்துவ மற்றும் திடக்கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுவது குறித்து திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்த கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- கேரளத்திலிருந்து மருத்துவ மற்றும் திடக்கழிவுகள் கொண்டு வந்து தமிழகத்தில் எல்லையோர கிராமங்களில் கொட்டப்படுகிறது. இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் கேரளாவுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் செக்போஸ்ட் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இது போன்ற கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்கள், அதன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.எல்லையோர கிராமங்களில் பயன்படாமல் உள்ள வேளாண் நிலங்களில் இது போல் சட்ட விரோதமாக கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.

    நில உரிமையாளர்கள் இதற்கு துணை போகக் கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போல் கேரளாவிலிருந்து மருத்துவ, இறைச்சி மற்றும் திடக்கழிவுகள் கொண்டு வருவது குறித்து பொதுமக்கள் பின் வரும் எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

    திருப்பூர் கலெக்டர் - 0421 297 1100, எஸ்.பி., - 0421 297 0017, மாசு கட்டுப்பாட்டு வாரியம் - 0421 - 223 6210 மற்றும் 04255 - 252225, பறக்கும் படை - 0421-224 1131.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள் அங்கு குவிந்து காணப்படுகிறது.
    • கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினம் தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்த ஆஸ்பத்திரியில் மகப்பேறுக்கு மட்டும் தனி கட்டிடம் ஒதுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்டிடத்திற்கு பின்புறம், மருத்துவனை முழுவதும் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள் அங்கு குவிந்து காணப்படுகிறது.

    குறிப்பாக அறுவை சிகிச்சை செய்யும் கழிவுகள், மற்றும் அவசர சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருத்துவ பாதுகாப்பு கவச கழிவுகள் உள்ளிட்டவற்றை பணியாளர்கள் ஆங்காங்கே கொட்டுவதால் மருத்துவமனை முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. திருவள்ளூர் நகரத்தின் மையப் பகுதியில் உள்ள இந்த ஆஸ்பத்திரியில் மருத்துவ கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலையரசன் கொசு ஒழிப்பு ஊழியராக தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 28). இவர் மரவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு ஊழியராக தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரை மணப்பாறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு வரச் சொல்லி உள்ளனர். அதன்படி பணிக்கு வந்த கலையரசன் மருத்துவ கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்து மாத்திரைகளை எரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவரின் சட்டையில் திடீரென தீப்பிடித்து எரியவே என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த அவர் எரியும் நெருப்புடன் சட்டையை கழற்றி வீசியபடி மருத்துவமனை வளாகத்தில் ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தீக்காயம் அதிக அளவில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கலையரசன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏழ்மை நிலையில் வாழும் குடும்பம் என்ற நிலையில் கலையரசன் இந்த துயர சம்பவத்தில் இறந்து விட்டதால் அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

    • முதியவர்கள், குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு மற்றும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருவதாக தெரிகின்றது.
    • மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக நகராட்சி சார்பில் கொட்டி எரித்து சென்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை 4-வது வார்டில் அமைந்துள்ள எரிவாயு தகன மேடை அருகே உள்ள தலக்காஞ்சேரி குப்பை மேட்டில் கொட்டி வருகின்றனர்.

    இதனால் அப்பகுதியில் சுமார் 50,000 டன்னிற்கும் மேலாக இமயமலை போல் குப்பைகள் உயர்ந்து உள்ளது. அந்த குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என நகராட்சி நிர்வாகத்தினர் தரம் பிரிக்காமல் அங்கே கொட்டி வருகின்றனர்.

    மேலும் திருவள்ளூர் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருந்து நாள்தோறும் 1 டன்னுக்கு மேலாக லாரிகளில் மருத்துவக் கழிவுகள் எடுத்து வந்து தலக்காஞ்சேரி பகுதியில் கொட்டப் பட்டதால் அப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டு வருகின்றது. திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பல்வேறு சிகிச்சைக்கு 500 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளியின் படுக்கையில் இருந்து நாளொன்றுக்கு ஒரு கிலோ வரை கழிவுகள் சேருகின்றன.

    இந்த மருத்துவக் கழிவுகள் 4வது வார்டில் அமைந்துள்ள எரிவாயு தகன மேடை அருகே உள்ள தலக்காஞ்சேரி குப்பை மேட்டில் கொட்டி வருகின்றனர். அதில் பல்வேறு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருந்து பாட்டில்கள், சிரிஞ்சுகள், ரத்தம் உறைந்த பஞ்சுகள், கையுறைகள், முக கவசம் போன்ற மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக நகராட்சி சார்பில் கொட்டி எரித்து சென்றனர்.

    4-வது வார்டை சுற்றி தலக்காஞ்சேரி, எடப்பாளையம், சின்ன ஈக்காடு உள்ளிட்ட பகுதியில் 3000 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் முதியவர் மற்றும் குழந்தைகள் வசிக்கின்றன.

    மேலும் பெரும்பாலானோர் வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். அந்த கால்நடைகள் மற்றும் பறவைகள் மருத்துவக் கழிவுகளை தின்பதால் நோய் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் வசித்து வரும் முதியவர்கள், குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு மற்றும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருவதாக தெரிகின்றது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வனவிலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி பகுதியில் ஆந்திரா, கர்நாடகா செல்லும் சாலையின் இருபுறமும் அடர்ந்த காடுகள் உள்ளது.

    இந்தப் காப்பு காட்டில் மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள், ஊசி மற்றும் மருந்துகளை மர்ம கும்பல் கொட்டிவிட்டு செல்கின்றனர்.

    இந்த சம்பவம் அடிக்கடி நடக்கிறது.

    அதேபோல் கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளதால் அதிகளவில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

    இதனால் வனப்பகுதியில் வசிக்கும் குரங்குகள் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவக் கல்லூரிகளால் வனவிலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே தமிழக எல்லையில் உள்ள வன சோதனை சாவடியில் வாகனங்களை முழுமையாக சோதனை செய்ய வேண்டும்.

    மருத்துவக் கழிவுகளை வனப்பகுதியில் கொட்டப்படுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு, இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கேரளாவில் இருந்து வருகின்ற கனரக வாகனங்களில் மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்து சாலை ஓரங்களில் கொட்டி வருகின்றனர்.
    • கழிவுகளை கொட்டும் டிரைவர்கள், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் காமராஜ் தலைமையில் நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ் வினோத் மற்றும் நிர்வாகிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்ட எல்லையான காவல் கிணறு இஸ்ரோவில் இருந்து பணகுடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், வாகைகுளம் மற்றும் நாங்குநேரி செல்லும் வழி ஆகிய இடங்களிலும் நான்கு வழி சாலைகளில் கேரளாவில் இருந்து வருகின்ற பெரும்பாலான கனரக வாகனங்களில் கோழி இறைச்சி, மீன் கழிவு, மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்து சாலை ஓரங்களில் கொட்டி வருகின்றனர்.

    இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்லும் நிலையில் துர்நாற்றம் ஏற்பட்டு அவர்களுக்கு உடல் ரீதியில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கேரளா கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் டிரைவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரிகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • குழித்துறை பழைய பாலத்தின் மேற்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தயாராக அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது.
    • வாகனத்தை பொதுமக்கள் துரத்தி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குழித்துறை:

    கேரளா மாநிலத்தில் இருந்து இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை வாகனங்களில் ஏற்றி கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், சாலையோரங்கள் மற்றும் வேளாண் நிலங்களில் கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

    கேரளாவில் இருந்து குமரி மாவட்ட சோதனை சாவடிகள் வழியாக கொண்டு வரப்படும் கழிவுகள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வீசிச்செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுத்து நிறுத்தும படி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதுடன், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

    ஆனால் கேரளாவில் இருந்து வாகனங்களில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு குமரி மாவட்டத்திற்குள் கொட்டப்படுவது நின்றபாடில்லை. இந்நிலையில் இன்று அதிகாலையில் குமரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடி வழியாக கேரளா மாநிலத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு கூண்டு வாகனம் ஒன்று வந்தது.

    படர்ந்தாலுமூடு பகுதியை தாண்டி சென்று கொண்டிருந்த அந்த வாகனத்தை பார்த்த பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் துரத்தி சென்றனர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது. இதனையடுத்து அவர்கள் அந்த பகுதி முழுவதுமாக கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை தேடினர்.

    அப்போது குழித்துறை பழைய பாலத்தின் மேற்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தயாராக அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த பொதுமக்கள், அந்த வாகனத்தை சிறை பிடித்தனர். இதுகுறித்து குழித்துறை நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராம திலகம் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கழிவுகள் ஏற்றிவந்த அந்த வாகனத்துக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை குழித்துறை நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்அதை பொதுமக்கள் துரத்தி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மீண்டும் கேரளாவிற்கு எடுத்துச் செல்லும் நடைமுறைகள் இன்று தொடங்கியது.
    • கேரளாவில் இருந்து 25 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வந்தடைந்தனர்.

    நெல்லை:

    கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு புளியரை சோதனை சாவடி வழியாக நெல்லை மாவட்டத்தில் சுத்தமல்லி அருகே உள்ள கோடக நல்லூர், கொண்டாநகரம், சீதபற்பநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் மூட்டை மூட்டைகளாக மருத்துவக் கழிவுகளான ஊசிகள், கையுறைகள், ரத்தம் படிந்த பொருட்கள், மருந்து பாட்டில்கள் என மலைபோல் கொட்டப்பட்டு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த கழிவுகளால் பொது சுகாதாரத்திற்கு கேடும், நோய் தொற்று பரவும் அபாயமும், நீர் நிலைகள் மாசுபடும் அபாயமும் இருந்ததால் இது சம்பந்தமாக முக்கூடல், சீதபற்பநல்லூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒரு வழக்கும், சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது.


    அதில் திருவனந்தபுரத்தில் உள்ள சில நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அங்குள்ள கழிவுகளை ஏற்றி வாகனத்தில் கொண்டு வந்து அரசு வழிமுறைகளை பின்பற்றாமல் சுத்தமல்லி பகுதிகளில் கொட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக சுத்தமல்லியை சேர்ந்த மாயாண்டி, மனோகர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் கழிவுகளை கொட்டியவர்கள் யார் என்பது குறித்து அதிரடி விசாரணையில் போலீசார் இறங்கினர். சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில் கழிவுகளை லாரியில் கொண்டு வந்து கொட்டிய சேலம் மாவட்டம், நடுபட்டி, இலத்தூர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லதுரை (37) என்பவரை போலீசார் நேற்று கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கேரளாவில் செயல்பட்டுவரும் தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையாளரான கேரள மாநிலம், கன்னூர், இடாவேலியை சேர்ந்த ஜித்தன் ஜேர்ச் (40) என்பவரை கைது செய்தனர்.

    இதனிடையே பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த கழிவுகள் தொடர்பாக விசாரணை நடத்தி, அவை அனைத்தையும் 3 நாட்களுக்குள் கேரள அரசே அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான முழு செலவையும் கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து வசூலித்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.

    அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கேரளா வில் இருந்து அந்த கழிவுகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பின்னர் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனுடன் ஆலோசனை நடத்தினர்.

    தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி கழிவுகளை மீண்டும் கேரளாவிற்கு எடுத்துச் செல்லும் நடைமுறைகள் இன்று காலை தொடங்கியது.

    இதற்காக கேரளாவில் இருந்து சப்-கலெக்டர் ஆல்பர்ட் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வந்தடைந்தனர்.

    பின்னர் கேரள அதிகாரிகள் ஆய்வு செய்த இடத்தில் இருந்து கழிவுகளை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. மேலும் கழிவுகளை ஏற்றி செல்வதற்காக கேரள பதிவெண் கொண்ட 16 லாரிகள் நெல்லை மாவட்டத்திற்கு புறப்பட்டன.

    இதில் முதல் கட்டமாக திருவனந்தபுரம், நாகர்கோவில் நாங்குநேரி வழியாக 8 கேரளா லாரிகளும், கோட்டயம், புளியரை, செங்கோட்டை, தென்காசி வழியாக 3 கேரளா லாரிகளும் என மொத்தம் 11 லாரிகள் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது.

    அதனைத்தொடர்ந்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அர்பித் ஜெயின் முன்னிலையில் நடுக்கல்லூர் அரசு பள்ளியில் வைத்து கேரள அதிகாரிகள் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் நெல்லை மாவட்ட உதவி கலெக்டர் அம்பிகா ஜெயின், திருவனந்தபுரம் மாவட்ட உதவி கலெக்டர் சாக்ஷி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    அதன் பின்னர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அந்த லாரிகளில் கழிவுகள் ஏற்றப்பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அவை கேரளாவுக்கு செல்வதை உறுதி செய்ய தமிழக-கேரள எல்லைகள் வரை தமிழக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. 

    • மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த பசுமை தீர்ப்பாயம் கெடு விதித்தது.
    • இன்றுடன் கெடு முடிவடையும் நிலையில், கேரள உயர்நீதிமன்றம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள், திடக்கழிவுகள், கோழிக் கழிவுகள் இரு மாநில எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில் கேரள மாநிலத்தினர் கொட்டிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

    இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், நடக்கல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் 6 இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன.

    இது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் புகார் அளிக்க, தேசிய பசுமை தீர்பாயம் கழிவுகளை இன்னும் 3 நாட்களில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கேரள அரசுக்கு உத்தரவிட்டது. பசுமை தீர்ப்பாயத்தின் கெடு இன்றுடன் முடிவடைகிறது.

    பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையடுத்து கேரள மாநில உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இது தொடர்பாக விசாரண நடத்தியது.

    அப்போது மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் கேரள மாநில அரசு தோல்வியைடந்து விட்டது. மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்தது. அத்துடன் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    பசுமை தீர்பாயத்தியன் உத்தரவை தொடர்ந்து கேரள அரசு கொட்டப்பட்ட கழிவுகள் தொடர்பாக ஆய்வு நடத்த அதிகாரிகள் குழுவை அனுப்பியது. இந்த குழு ஆய்வு செய்த நிலையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் அபாயகரமானது அல்ல எனத் தெரிவித்தது. இந்த குழு அரசிடம் அளிக்கும் அறிக்கையை தொடர்ந்து கேரள அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கலாம்.

    ×