என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NIA"

    • இந்த வழக்கு தொடர்பாக கடந்த 19-ந்தேதி சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் 6 பேர் சரண் அடைந்தனர்.
    • நேற்று கைது செய்யப்பட்டவரின் வீட்டில் இருந்து ரூ.1 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர்.

    சென்னை:

    மண்ணடி அருகே உள்ள முத்தியால்பேட்டை, மலையப்பன் தெருவில் வசித்து வருபவர் முகமது அப்துல்லா. இவர் பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்துள்ளார்.

    கடந்த 13-ந்தேதி இவரது வீட்டுக்கு வந்த மர்மகும்பல் தாங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் என்று தெரிவித்தனர். மேலும் கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று கூறி வீடு மற்றும் செல்போன் கடைகளில் சோதனை நடத்தினர். பின்னர் ரூ.2 கோடியே 30 லட்சம், 6 செல்போன், லேப்-டாப், கம்ப்யூட்டர் சி.பி.யூ. ஆகியவற்றை எடுத்துச்சென்றுவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து விசாரித்த போதுதான் மர்ம நபர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து பணத்தை சுருட்டி சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து முத்தியால் பேட்டை போலீசில் முகமது அப்துல்லா புகார் செய்தார். முதலில் கொள்ளை போனது ரூ.20 லட்சம் என்று புகார் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.2 கோடியே 30 லட்சம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

    இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக கடந்த 19-ந்தேதி சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் 6 பேர் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த கொள்ளை தொடர்பாக மண்ணடி அங்கப்பன் தெருவை சேர்ந்த முகமது பாசில் என்பவரை இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

    அவரது வீட்டில் இருந்து ரூ.1 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரத்தை கைப்பற்றினர். கொள்ளை திட்டத்துக்கு மூளையாக செயல்பட்டது யார்? இதன் பின்னணி என்ன என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • அக்டோபர் மாதம் 23-ந் தேதி ஈஸ்வரன் கோவில் முன்பு கார் ஒன்று வெடித்தது.
    • இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கோவையில் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரில் இருந்த ஜமேஷா முபின் (வயது 29) என்பவர் உயிரிந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

    இந்த வழக்கு என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்டிருந்த பெரோஸ் கான், உமர் பாரூக், முகமது அசாருதீன், அப்சர் கான் மற்றும் பெரோஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் கோவையை சேர்ந்த சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல் கட்டமாக இன்று கேரளா முழுவதும் பாப்புலர் பிரண்ட் அமைப்பு, அதன் துணை குழுக்களின் அலுவலகங்கள் என 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • திருவனந்தபுரத்தில் 3 இடங்களிலும், எர்ணாகுளத்தில் 8 இடங்களிலும், மலப்புரம், ஆலப்புழாவில் தலா 4 இடங்களிலும் என 56 இடங்களில் சோதனை நடைபெற்றது.

    திருவனந்தபுரம்:

    பாப்புலர் பிரண்டு அமைப்பிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனை தமிழகத்திலும் நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைப்பற்றினர். இதையடுத்து அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இச்சோதனையை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். கேரளாவிலும் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களை தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு மேலும் பல துணை குழுக்கள் இருப்பது தெரியவந்தது.

    இத்துணைக்குழுக்கள் மூலம் இந்த அமைப்பினர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் தெரிவித்தனர். எனவே கைதானவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    இதில் பல முக்கிய தகவல்கள் என்.ஐ.ஏ.வுக்கு கிடைத்தது. அதன்அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் அமைப்பு மற்றும் இந்த அமைப்புக்கு தொடர்புடைய துணை குழுக்களின் அலுவலகங்களில் சோதனை நடத்த என்.ஐ.ஏ. முடிவு செய்தது.

    அதன்படி முதல் கட்டமாக இன்று கேரளா முழுவதும் பாப்புலர் பிரண்ட் அமைப்பு, அதன் துணை குழுக்களின் அலுவலகங்கள் என 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரத்தில் 3 இடங்களிலும், எர்ணாகுளத்தில் 8 இடங்களிலும், மலப்புரம், ஆலப்புழாவில் தலா 4 இடங்களிலும் என 56 இடங்களில் இச்சோதனை நடைபெற்றது. இதுபோல பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளிலும் இச்சோதனை நடைபெற்றது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
    • ஆயுதபயிற்சியில் என்னென்ன மாதிரியான பயிற்சிகளை அளித்தனர் என்ற கோணத்திலும் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    கோட்டைமேட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி அதிகாலை கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

    இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஜமேஷா முபின் மக்கள் கூட்டத்தில் புகுந்து வெடிகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

    இந்த வழக்கு தொடர்பாக முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி முபினுடன் தொடர்பில் இருந்த முகமது தவுபிக், உமர் பாரூக், பெரோஸ்கான், சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஜமேஷா முபின், சந்தன கடத்தல் வீரப்பன் பதுங்கிய சத்தியமங்கலம் காடுகளில் ரகசிய கூட்டங்கள் நடத்தியதும், இதில் தீவிரவாதத்திற்கு ஆட்கள் சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அளித்ததும் தெரியவந்தது.

    இதில் முகமது தல்கா, சேக் இதயத்துல்லா, முகமது ரியாஸ் நவாஸ், முகமது தவுபிக், சனோபர் அலி, பெரோஸ் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர்.

    அதன்படி முகமது தல்கா, ஷேக் இதயத்துல்லா, முகமது ரியாஸ் நவாஸ், முகமது தவுபிக், சனோபர் அலி, பெரோஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை காவலில் எடுக்க என்.ஐ.ஏ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி 6 பேரையும் 17-ந் தேதி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

    சத்தியமங்கலம் காட்டில் நடந்த ரகசிய கூட்டத்தில் யார்? யார் எல்லாம் பங்கேற்றனர். அவர்களின் பின்னணி என்ன? ரகசிய கூட்டத்தில் பங்கேற்றவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்தது யார்? எனவும் விசாரிக்கின்றனர்.

    மேலும் அந்த ரகசிய கூட்டத்தில் அவர்கள் என்ன திட்டம் திட்டினார்கள். வேறு எங்காவது இதுபோன்ற செயல்களை அரங்கேற்றுவது குறித்து பேசப்பட்டதா? முபின் என்ன மாதிரியான ஆலோசனைகளை வழங்கினார்.

    ஆயுதபயிற்சியில் என்னென்ன மாதிரியான பயிற்சிகளை அளித்தனர் என்ற கோணத்திலும் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் இந்த கூட்டத்தில், வெளிநாட்டு தீவிரவாதிகள் யாராவது கலந்து கொண்டவர்களா? அவர்கள் இவர்களுக்கு பயிற்சி அளித்தனரா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

    தொடர்ந்து காவலில் எடுத்த 6 பேரையும் கோவை அழைத்து வந்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

    இதுதவிர அவர்கள் ரகசிய கூட்டம் நடத்திய சத்தியமங்கலம் காடுகளுக்கும் 6 பேரை அழைத்து சென்று விசாரிக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விரைவில் கோவைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடக்கும் என தெரிகிறது.

    சத்தியமங்கலம் காட்டில் நடந்த கூட்டத்தில் பலர் பங்கேற்று இருப்பதால் இவர்கள் 6 பேரிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் மேலும் பலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஹூரியத் மாநாட்டு அலுவலகத்துக்கு இன்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சென்றனர்.
    • ஹூரியத் மாநாட்டின் அலுவலகத்தை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்ய உத்தரவு.

    காஷ்மீரில் உள்ள ஹூரியத் மாநாட்டு கட்சி தலைவர் நயீம் கான் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்த வழக்கில் ஸ்ரீநகரின் ராஜ்பாக்கில் உள்ள அனைத்து கட்சி ஹூரியத் மாநாட்டின் அலுவலகத்தை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்ய டெல்லி கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

    இதையடுத்து ஹூரியத் மாநாட்டு அலுவலகத்துக்கு இன்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சென்றனர். அங்கு அலுவலகத்தை சீல் வைத்து அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர்.

    • மிரட்டல் கடிதம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
    • நகரின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    மும்பை:

    மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த போவதாக தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) இ-மெயில் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.

    இக்கடிதத்தை அனுப்பிய நபர், தான் தலிபான் என்றும் தலிபான் அமைப்பின் முக்கிய தலைவரான சிராஜூதீன் ஹக்கானியின் உத்தரவின் பேரில் மும்பையில் வெடிகுண்டு தாக்குதலை நடத்த போவதாகவும் குறிப்பிட்டு இருந்தது.

    மிரட்டல் கடிதம் குறித்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள், மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மும்பை முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் படியும் தீவிர சோதனையில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து மும்பையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். நகரின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். ரெயில், பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

    மும்பைக்கு தீவிரவாத மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உஷார் படுத்தப்பட்டன. நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் கேட்டு கொள்ளப்பட்டனர்.

    இதையடுத்து முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் அனுப்பியது யார்? எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.

    மேலும் மும்பை போலீசாரும் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே மும்பையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள், தீவிரவாதிகள் தாக்குதல் ஆகியவை நடந்து உள்ளன. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் தான் மும்பைக்கு தலிபான்கள் பெயரில் மிரட்டல் கடிதம் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பழனி அடுத்துள்ள நெய்க்காரபட்டியைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர் வீட்டில் இன்று சோதனை நடைபெற்றது.
    • ராஜா முகமது வீட்டுக்கு இன்று காலை உள்ளூர் போலீசாருடன் வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    பழனி:

    நாடு முழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் மற்றும் அவர்களது வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி பழனி அடுத்துள்ள நெய்க்காரபட்டியைச் சேர்ந்த ராஜா முகமது (வயது 35) என்பவர் வீட்டிலும் இன்று சோதனை நடைபெற்றது. இவர் தனது தந்தையுடன் அதே பகுதியில் வசித்து வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை அவரது வீட்டுக்கு உள்ளூர் போலீசாருடன் வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் இதே பகுதியைச் சேர்ந்த டீ மாஸ்டரான பி.பி.ஐ. அமைப்பின் முன்னாள் நிர்வாகியிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி சென்றது குறிப்பிடத்தக்கது. 

    • மயிலாடுதுறையில் முகம்மது பைசல் என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 4 இடங்களில் சோதனை நடந்தது.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    இதில் காரில் இருந்த உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் முபின் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததும், கோவையில் நாசவேலையை அரங்கேற்றும் நோக்கத்தில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையிலேயே முகாமிட்டு, கார் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவுபிக், உமர் பாரூக், பெரோஸ்கான், சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் அனைவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஐ.எஸ். தொடர்புடையவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

    கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த சில வாரங்களில், கர்நாடக மாநிலம் மங்களூருவிலும் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இது தொடர்பாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என மொத்தம் 60 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தில் சென்னை, நெல்லை, கோவை, மயிலாடுதுறை என 40 இடங்களில் சோதனை நடக்கிறது.

    இதில் கோவையில் மட்டும் கோவை கோட்டைமேடு, புல்லுக்காடு, உக்கடம், பிருந்தாவன் நகர், பாரத் நகர், குனியமுத்தூர், டி.கே.செட்டி வீதி, வசந்தா நகர் என 15 இடங்களில் சோதனை நடந்தது.

    இந்த வழக்கில் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளில் 16 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    காலை 6 மணி முதல் இந்த சோதனையானது நடந்து வருகிறது.

    சோதனையின் போது வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டின் கதவுகளை பூட்டி கொண்டு வீடு முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.

    இதபோல் பொள்ளாச்சியில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த சையது ரகுமான் என்பவரது வீட்டிலும் சோதனை நடக்கிறது.

    சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியுள்ளன. இருப்பினும் சோதனை முடிவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் தெரியவரும்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் தொடர்புடைய முகமது அசாருதீன் உள்பட 7 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் பல தகவல்களையும் கூறியுள்ளனர்.

    அவர்களிடம் பெற்ற ஆதாரங்கள், வீடியோக்களின் அடிப்படையிலேயே இன்று இந்த சோதனையானது நடந்தது.

    சென்னையில் இன்று 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். கொடுங்கையூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. சோதனையின் போது சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    மயிலாடுதுறையில் முகம்மது பைசல் என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 4 இடங்களில் சோதனை நடந்தது. டவுன் கரிக்காத்தோப்பைச் சேர்ந்த அன்வர்தீன், ஏர்வாடி கட்டளைத் தெருவைச் சேர்ந்த கமாலுதீன், தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் ஒருவர் வீடு, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஆரீஸ் என்பவர் வீட்டில் இந்த சோதனை நடந்தது.

    ஒரே நேரத்தில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் 60 இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, சண்டிகர், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோத சக்திகளுக்கும் இடையே உள்ள தொடர்பை வேர் அறுக்கும் வகையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடு முழுவதும் 50 இடங்களில் நடத்திய சோதனையில் பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோத கும்பல்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து நடந்த விசாரணையின் மூலம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ரகசியமாக இந்தியாவில் உள்ள சமூக விரோத கும்பல்களுக்கு பல்வேறு வகைகளில் உதவிகள் செய்வது தெரியவந்தது.

    அதன் அடிப்படையில் அடுத்தடுத்து பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். உத்தரபிரதேசத்தில் பிலிபிட் நகரில் ஆயுத வியாபாரி ஒருவர் வீட்டில் நடந்த சோதனையில் பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்ட ஆயுதங்கள் சமூக விரோத கும்பல்களுக்கு விற்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் 72 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். இன்று அதிகாலை முதல் இந்த சோதனை நடந்து வருகிறது.

    உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, சண்டிகர், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி மாநிலங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோத சக்திகளுக்கும் இடையே உள்ள தொடர்பை வேர் அறுக்கும் வகையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இன்று நடந்து வரும் சோதனையில் பல இடங்களில் ஆயுதங்கள் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆயுதங்களை வாங்கியதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ள தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள்.

    இன்று பஞ்சாப்பில் மட்டும் 30 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. சமூக விரோத மற்றும் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் 4-வது முறையாக இந்த சோதனையை அதிரடியாக மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கேரள மாநிலத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.
    • பாப்புலர் பிரண்ட் அமைப்பு, உடற்கல்வி, யோகா என்ற போர்வையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்ததாகவும் அதில் தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நாடு முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிரடி சோதனை நடத்தியது.

    இந்த சோதனையில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டனர். அந்த அமைப்பின் செயல்பாட்டுக்கு தடையும் விதிக்கப்பட்டது.

    கேரள மாநிலத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. தீவிர விசாரணை நடத்தி வந்தது. இதன் முடிவில் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், சுமார் 50 பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாப்புலர் பிரண்ட் அமைப்பு, உடற்கல்வி, யோகா என்ற போர்வையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்ததாகவும் அதில் தெரிவித்துள்ளது.

    அதோடு இந்தியா முழுவதும், ஐ.எஸ். பயங்கரவாதத்தை பரப்ப பாப்புலர் பிரண்ட் அமைப்பு முயற்சித்ததாகவும் குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ தெரிவித்து உள்ளது.

    • தமிழகத்தின் கோவையில் கோவிலை தகர்க்க சதி நடந்தது.
    • புதுவையின் பிராந்தியமான கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ள மாகீ பிராந்தியத்திலும் இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நடந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மங்கலம் தொகுதி பாஜக பொறுப்பாளர் செந்தில்குமரன் கடந்த 26-ந் தேதி வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இவர் புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினர் ஆவார். வில்லியனூர் கண்ணகி பள்ளி அருகே டீ கடையில் நின்றிருந்தபோது ஒரு கும்பல் 2 நாட்டு வெடிகுண்டை வீசி தலையில் அரிவளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த படுகொலை தொடர்பாக ரவுடி நித்தியானந்தம் உட்பட 7 பேர் திருச்சி கோர்ட்டில் சரணடைந்தனர். இவர்களை வில்லியனூர் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்த பதுக்கி வைத்திருந்த மேலும் 2 நாட்டு வெடிகுண்டுகளை கோர்க்காடு பகுதியில் உள்ள காலிமனையில் இருந்து போலீசார் மீட்டனர்.

    சரணடைந்தவர்களிடம் விசாரணை முடிந்து இன்று மீண்டும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

    இந்த நிலையில் பா.ஜனதா பிரமுகர் கொலை குறித்து என்.ஐ.ஏ. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் விசாரணையில் இறங்கி உள்ளனர். பெங்களூருவில் இருந்து 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் புதுவைக்கு வந்தனர். புதுவையில் போலீஸ் காவலில் இருந்த நித்தியானந்தம் உட்பட 7 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    பின்னர் சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கிருந்து வெடிகுண்டு துகள்களையும் கைப்பற்றினர். புதுவை போலீசாரிடமும் விளக்கம் கேட்டறிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளையும் பார்வையிட்டனர்.

    இன்றும் அவர்கள் 2-வது நாளாக தொடர் விசாரணை நடத்துகின்றனர். தேசிய புலனாய்வு முகாமை தானாகவே முன்வந்து பா.ஜனதா பிரமுகர் கொலையை விசாரணைக்கு எடுத்துள்ளது. ஏனெனில் தமிழகம், கேரளா மாநிலங்களில் சமீபகாலமாக தொடர்ந்து பா.ஜனதா நிர்வாகிகள், இந்து அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொலைகள் அரங்கேறி வருகிறது.

    இந்து அமைப்பினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளது.

    தமிழகத்தின் கோவையில் கோவிலை தகர்க்க சதி நடந்தது. இந்த சதி செயல் தொடர்புடையவர்களை என்.ஐ.ஏ. அமைப்பினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுவையின் பிராந்தியமான கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ள மாகீ பிராந்தியத்திலும் இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நடந்துள்ளது. இதனால் பா.ஜனதா பிரமுகர் செந்தில்குமரன் கொலையில் பயங்கரவாத இயக்கத்தினருக்கு தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகளா? என்ற கேள்வி எழுந்ததின் அடிப்படையிலேயே அவர்களை தனித்தனியாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் புதுவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
    • தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அப்பாசை விசாரணைக்காக அழைத்துச் சென்றுவிட்டனர்.

    மதுரை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பணம் திரட்டியது, பணப்பரி மாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக 16 பேர் அடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் இன்று அதிகாலை மதுரைக்கு வந்தனர். அவர்கள் 4 குழுக்களாக சென்று நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் ஆகிய 3 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    நெல்பேட்டையில் மட்டும் 2 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்தனர். 4 வீடுகளிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த கம்ப்யூட்டர், லேப்-டாப், செல்போன்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றினர்.

    இதற்கிடையே அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    மதுரையில் அதிகாலை நேரத்தில் சோதனை நடத்தப்பட்டதால் மேற்கண்ட தகவல் யாருக்கும் தெரியவில்லை.

    மதுரை நெல்பேட்டையில் அப்பாஸ் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியபோது ஆவணங்கள், செல்போன், லேப்-டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அப்பாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர்கள் முழுமையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அப்பாசை விசாரணைக்காக அழைத்துச் சென்றுவிட்டனர். மதுரை மாவட்டத்தில் அப்பாசிடம் எங்கு வைத்து விசாரணை நடத்தப்படுகிறது? என்பது பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    இந்தியா முழுவதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக விரோத கும்பல்களுக்கு உடந்தையாக இருந்த பல்வேறு அமைப்புகள் தடை செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நாடு முழுவதிலும் அந்த அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மதுரையிலும் சோதனை நடத்தப்பட்டது.

    இதில் தீவிரவாத இயக்கங்களுக்கு பணம் திரட்டியதாகவும், வெளி நாட்டில் இருந்து பணம் பெற்றதாகவும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அவர்களுக்கு குற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில் நம்பகமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. அதன் பின்னர் சமீபத்தில் மதுரைக்கு மீண்டும் வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நெல்பேட்டையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஆட்டோ டிரைவர் வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கூறியதாவது:-

    மதுரையில் கைதான 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்களிடம் தீவிரவாத இயக்கத்துக்கு பணம் திரட்டியது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப் பட்டன. இதில் சில தகவல் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் தான் மதுரை நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் ஆகிய 3 இடங்களில் உள்ள 4 வீடுகளில் இன்று சோதனை நடத்தினோம்.

    நெல்பேட்டை அப்பாசிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் ஒரு அமைப்பில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். அவரிடம் கூட்டு விசாரணை நடத்திய பிறகு தான் அவர் தவறு செய்தாரா, இல்லையா? என்பது பற்றிய விவரம் தெரியவரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மதுரை மாநகரில் தங்கி இருந்து அதிரடி வேட்டை நடத்தினர். இதற்கிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசா ரணைக்காக மதுரைக்கு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைப்புகள் மாவட்டம் முழுவதிலும் ஆட்களை திரட்டி அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு எதிராக அந்தந்த இடங்களில் போராட்டம் நடத்தினர்.

    இந்த முறை அது மாதிரி நடக்கக் கூடாது என்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முடிவு செய்த னர். அதன்படி அவர்கள் நேற்று மதியம் மதுரைக்கு வந்தனர். இதனை தொடர்ந்து மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.

    மதுரையில் 4 இடங்களில் அதிரடி சோதனை நடத்த வேண்டியது தொடர்பான தகவல் போலீஸ் கமிஷனரி டம் நள்ளிரவு நேரத்தில் தான் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து தெப்பக்குளம், மதிச்சியம், கீரைத்துறை ஆகிய பகுதிகளில் உள்ள போலீஸ் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். மதுரை மாநகரில் தெப்பக் குளம், வில்லாபுரம், நெல்பேட்டை ஆகிய 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்த வந்தபோது, உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் மட்டுமின்றி மத்திய போலீஸ் உளவு அமைப்பு அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருந்தனர்.

    எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளில் பிரச்சினை எதுவும் நடக்கவில்லை. மதுரை மாநகரில் 4 வீடு களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அப்பாஸ் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×