என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Online Fraud"

    • வரன் தேடும் இணையதளங்களில் பதிவு செய்து உள்ளவர்களின் சுயவிவரங்களின் உண்மைத்தன்மையை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
    • செல்போனில் ‘வீடியோ' அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    திருமண பந்தம் கை கூடுவதற்கு உறுதுணையாக இருக்கும் வரன் தேடும் இணையதளங்களிலும் 'ஆன்லைன்' மோசடி கும்பல் ஊடுருவி உள்ளது. இந்த இணையதளத்தில் புகைப்படம், வேலை, சம்பளம் போன்ற சுய விவரங்களை தவறாக பதிவிட்டு போலி கணக்கை உருவாக்கி பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    தமிழ்நாட்டில் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக 379 புகார்கள் பதிவாகி உள்ளன.

    இந்த மோசடி எவ்வாறு அரங்கேறுகிறது? இந்த மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி? என்பது குறித்து 'சைபர் கிரைம்' போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு வருமாறு:-

    திருமண தகவல் இணையதளத்தில் போலி கணக்குகளுடன் ஊடுருவி உள்ள மோசடி கும்பலை சேர்ந்தவர்களின் குறியில் சிக்குபவர்களிடம் (மணப்பெண் அல்லது மணமகன்), நான் உங்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று இனிக்க, இனிக்க பேசி வசியப்படுத்துவார்கள். திருமணத்துக்குபின்னர் நாம் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும். ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி விடுவார்கள்.

    அதன்பின்னர் அவர்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் போலி முதலீட்டு இணையதள முகவரியை பரிந்துரை செய்வார்கள். மோசடி கும்பலின் மாய வலையில் சிக்கி பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு முதலில் லாபத்தொகையை தருவது போன்று நம்பிக்கையை உருவாக்குவார்கள். பெரிய தொகையை முதலீடு செய்யும் போது 'அபேஸ்' செய்து அனைத்து தொடர்புகளையும் தூண்டித்துவிட்டு திருமண தகவல் இணையதளத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள்.

    எனவே வரன் தேடும் இணையதளங்களில் பதிவு செய்து உள்ளவர்களின் சுயவிவரங்களின் உண்மைத்தன்மையை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    செல்போனில் 'வீடியோ' அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 'ஆன்லைன்' மூலம் அறிமுகமானவரின் ஆலோசனையை ஏற்று ஒரு போதும் பணத்தை முதலீடு செய்ய கூடாது.

    இந்த மோசடி கும்பல் தங்கள் மோசடி திட்டத்துக்கு www.oxgatens.com, www.oxgatens.net, www.cityindexmain.com, www.cityindexlimited.com போன்ற போலி முதலீட்டு இணையதளங்களை பயன்படுத்துகின்றனர். இது போன்ற மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள், சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளை கண்டறிந்தவர்கள் 'சைபர் கிரைம்' போலீசாரின் 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம் என்றும் 'சைபர் கிரைம்' போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புனே :

    கொரோனா தடுப்பூசியை தயாரித்து வழங்கும் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவன தலைவராக இருந்து வருபவர் ஆதார் புனாவாலா. இவரது நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்து வருபவர் சதீஷ் தேஷ்பாண்டே. அண்மையில் இவருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆதார் புனாவாலா புகைப்படம் இட்ட குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், நான் மீட்டிங்கில் பிசியாக இருப்பதாகவும், என்னை அழைக்க வேண்டாம். நான் அனுப்பிய 8 வங்கி கணக்கிற்கு உடனடியாக பணத்தை அனுப்பி விடவும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை நம்பிய சதீஷ் தேஷ்பாண்டே சிறிதும் தாமதிக்காமல் அதில் குறிப்பிடப்பட்டு இருந்த வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 10 லட்சத்து 10 ஆயிரத்து 554-ஐ அனுப்பி விட்டார். மறுநாளில் தேஷ்பாண்டே நிறுவன தலைவர் ஆதார் புனாவாலாவிடம் செல்போனில் உரையாடியபோது பணம் அனுப்பிய தகவலை தெரிவித்தார். இதனை கேட்ட அவர் தான் எந்தவொரு குறுந்தகவலும் அனுப்பவில்லை என மறுப்பு தெரிவித்தார். இதன்பிறகு தான் அவர்கள் மோசடி போன விவகாரம் தெரியவந்தது.

    ஆதார் புனாவாலாவின் செல்போன் நம்பரை மர்மகும்பல் 'ஹேக்' செய்து குறுந்தகவல் அனுப்பி பணமோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக பந்த்கார்டன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் படி போலீசார் பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை சரிபார்த்தனர்.

    இதில், மோசடி ஆசாமிகள் தங்கள் பெயரை எங்கும் குறிப்பிடாமல் பணம் பரிமாற்றம் செய்து உள்ளனர். இதைத்தவிர பீகார், அசாம், ஒடிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் எனவும், பணம் டெபாசிட் ஆன பின்னர் மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதனால் தொடர்புடைய அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது.

    வங்கி கணக்கு வைத்திருந்த செல்போன் நம்பரை கொண்டு விசாரித்ததில் 7 பேரின் அடையாளம் தெரியவந்தது. இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜூவ்குமார் பிரசாத், சந்திரபூஷன் ஆனந்த் சிங், கன்னையா குமார், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த ரவீந்திரா குமார், மத்திய பிரதேச மாநிலம் ரபி கவுசல் குப்தா, யாசிர் நசீம் கான், ஆந்திராவை சேர்ந்த பிரசாத் சத்தியநாராயணா ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

    இதில் பிரசாத் சத்தியநாராயணா என்பவர் சாப்ட்வேர் என்ஜினீயராகவும், ரபி கவுசல் குப்தா வணிக வங்கி ஊழியராகவும் இருந்து வந்தனர். இவர்களின் உதவியுடன் பணமோசடி நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாம் இழப்பது பணம் மட்டும் அல்ல மானமும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.
    • சைபர் கிரைம் என்ற மாய வலையில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

    'சைபர்' குற்றம் என்றால் என்ன தெரியுமா?

    சாலையில் நடந்து போகிறோம். எதிரே வந்து ஒருவர் திடீர் என்று கத்தியைக் காட்டி மிரட்டி, ''சத்தம் போட்டால் குத்திக்கொன்றுடுவேன். எடு மணிப் பர்சை'' என்கிறார்.

    பயத்தால் பர்சை கொடுக்கிறோம், அவர் பறந்துவிடுகிறார்.

    இதை வழிப்பறி என்கிறோம். இதுபோன்ற செயல்களை மனிதர்கள் செய்வதால், இதை மனிதக்குற்றம் என்று சொல்லலாம்.

    கம்ப்யூட்டர், செல்போன்கள் உதவியோடு வலைத்தள வழிகளில் இதுபோன்று நடைபெறுவதுதான் தொழில்நுட்ப வழிப்பறி. இதை சைபர் குற்றம் என்கிறோம்.

    இந்த இரண்டு வழிப்பறிகளையும் மனிதர்கள்தான் செய்கிறார்கள். முதல் வழிப்பறியை மனிதன் நேரடியாகச் செய்கிறான். இரண்டாவதை தொழில்நுட்பங்களில் நுழைந்து அவனே செய்கிறான். இரண்டிலும் நாம் பணத்தை இழக்கிறோம். பயமுறுத்தப்படுகிறோம். அவமானப்படுகிறோம்.

    இன்று மின்னணு தொழில்நுட்பம் (டிஜிட்டல் டெக்னாலஜி) வளர்ந்து, இணைய தளத்தின் பயன்பாடு எழுச்சி அடைந்து வருவதுடன், சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

    * வங்கி ஏ.டி.எம். கார்டு காலாவதியாக போகிறது. அதனை புதுப்பிப்பதற்கு உங்களது ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணை கொடுங்கள் என்று தமிழ் கலந்த இந்தியில் பேசி வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகிறார்கள்.

    அவர்கள் வங்கியில் இருந்துதான் பேசுகிறார்கள் என்று நினைத்து ரகசிய குறியீடு எண்களை கொடுத்து, பணத்தை இழந்தவர்கள் ஏராளம்.

    * வங்கியில் ஆதார் கார்டு எண்ணை இணைக்காவிட்டால், வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுவிடும், மின் கட்டணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் மின் சேவை நிறுத்தப்படும், போக்குவரத்து விதிமீறல் அபராத கட்டணத்தை செலுத்துங்கள் என செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயிலுக்கு அனுப்பும் மோசடி 'லிங்க்'குகள் மூலம் நிழல் உலகில் இருந்து கொண்டு மோசடி மன்னர்கள் பணம் பறித்து வருகிறார்கள்.

    * நெட் பேங்கிங் வசதி துண்டிக்கப்பட்டுவிடும், பகுதி நேர வேலைவாய்ப்பு, ஆன்லைன் திருமண மோசடி, ஆபாச வீடியோ கால் அழைப்பு, முக்கிய பிரமுகரின் பெயரில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை தொடங்கி, அந்த நபரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் பறித்தல் என மாறு வேடங்களில் நம்மை சுற்றியே அலைகிறது சைபர் குற்றங்கள்.

    * கேரளாவில் 68 வயது முதியவரை சமூக ஊடகம் மூலம் உல்லாச வலையில் வீழ்த்தி ரூ.23 லட்சம் பறித்த ரஷிதா என்ற பெண் சிறைச்சாலையில் தற்போது கம்பி எண்ணுகிறார்.

    * கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியை பார்ப்பதற்கு 50 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்குவதாக 'லிங்க்' ஒன்றை சமூக ஊடகங்களில் மோசடிக்காரர்கள் அனுப்பினார்கள். இதன் தீய நோக்கத்தை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசார் எச்சரித்தனர்.

    சைபர் கிரைம் குற்றவாளிகள், ஆசையை தூண்டும் விதமாக தூண்டிலை வீசி, அதில் மாட்டிக்கொள்பவர்களை லாவகமாக அமுக்கிவிடுகிறார்கள். இதனால் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, பலர் நொடிப்பொழுதில் இழந்து தவிக்கிறார்கள்.

    சிலந்தி வலை போன்று பின்னிக்கிடக்கும் இணைய வலையில், விழுந்தால் நாம் இழப்பது பணம் மட்டும் அல்ல மானமும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

    'சைபர் கிரைம்' குற்றவாளிகள் உள்ளூர் முதல் சர்வதேச அளவில் பல கொள்ளை கும்பல்கள் செயல்படுகின்றன. அந்த கும்பலை சேர்தவர்கள் யார்? என்று அடையாளம் காண்பதில்தான் சிக்கல் இருக்கிறது.

    புதுப்புது அவதாரம் எடுக்கும் சைபர் கிரைம் குற்றவாளிகளை ஒடுக்குவது என்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலான பணியாகும். எனவே பொதுமக்கள்தான் சைபர் கிரைம் என்ற மாய வலையில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். அப்போதுதான் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையை சைபர் (பூஜியம்) ஆக்கமுடியும்.

    சைபர் கிரைமில் பணியாற்றிய போலீஸ் துணை கமிஷனர் (தலைமை அலுவலகம்) எஸ்.ஆர்.செந்தில்குமார்:- சமூக ஊடகங்களை பயன்படுத்தும்போது, சுயவிவரங்கள் அடங்கிய 'புரோபைல்', பகிரும் தகவல்களை நம்பிக்கையானவர்கள் மட்டும் பார்க்கும் வகையில் 'லாக்' செய்து வைக்க வேண்டும். சமூக ஊடகம் என்பது பரந்து விரிந்தது. அதில் பெண் என்ற பெயரில் ஆண் கூட இருக்கலாம். அதனால் யாரிடம் பழகும்போதும், குறிப்பாக பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். யாராவது தனிப்பட்ட படங்களை திருடி 'மார்பிங்' செய்து, 'பிளாக்மெயில்' செய்தால் சைபர் கிரைம் போலீசில் தைரியமாக புகார் தெரிவிக்க வேண்டும். புகார் தெரிவிப்பவர்கள் வேண்டுகோள் விடுத்தால், அவர்களின் தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்படும்.

    சமூக ஊடக கணக்குகளை முடக்கி, அதில் தொடர்பில் இருப்பவர்களுக்கு பணம் அனுப்புமாறு தகவல் வந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக தன்னுடைய வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், எஸ்.எம்.எஸ். உள்பட வெவ்வேறு ஊடகங்களின் மூலமாக தங்களுடைய தொடர்புகளுக்கு, யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று தகவல் தெரிவிக்க வேண்டும். வங்கிகள் ஒருபோதும் வாடிக்கையாளர்களிடம் 'ஓ.டி.பி'. கேட்பது இல்லை. எனவே எந்த காரணத்தை கொண்டும் 'ஓ.டி.பி.'யை யாரும் பகிரக்கூடாது. முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் 'லிங்க்'குகளை ஒருபோதும் திறக்கக்கூடாது. பொதுமக்கள் விழிப்புணர்வாக இருந்தால் சைபர் குற்றங்களை தவிர்க்கலாம்.

    பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக செய்வது எப்படி?

    * இணையதள வங்கி பரிவர்த்தனைகளுக்காக தரமான மற்றும் 'லைசென்ஸ்' பெற்ற 'ஆபரேட்டிங் சிஸ்டத்தை' பயன்படுத்தவேண்டும்.

    * தகவல்களை உள்ளீடு செய்வதற்கு முன்பு, எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் மூலமாக பெறப்படும் 'யூ.ஆர்.எல்.'களை பரிசோதிக்கவேண்டும்.

    * பொதுவாக பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் மற்றும் பாதுகாப்பு இல்லாத இணைய இணைப்புகளை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

    * இ-மெயில், இ-காமர்ஸ் தளங்களில் பயன்படுத்தப்படும் கணக்குகளில் இருந்து வேறுபட்டு இருக்கும் வகையில், யாரும் எளிதில் கண்டுபிடிக்காத வகையில் 'பாஸ்வேர்டு'களை தேர்வு செய்யவேண்டும்.

    உங்களுக்கு தெரியுமா?

    இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகை 139 கோடி. இவர்களில் சுமார் 55 கோடி பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். நமது நாட்டில் நடப்பாண்டு முதல் காலாண்டில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 198 சைபர் கிரைம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2-வது காலாண்டில் 15.3 சதவீதம் அதிகரித்து, 2 லட்சத்து 37 ஆயிரத்து 658 ஆக உள்ளது. தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பதிவாகிய சைபர் குற்றங்களின் எண்ணிக்கை வெறும் 748 மட்டும்தான். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் சைபர் குற்றங்கள் 'ஜெட்' வேகத்தில் உயர்ந்துகொண்டே செல்கின்றது. கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் பதிவான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 707 ஆகும்.

    சைபர் குற்றங்களுக்கு கடிவாளம் போட்டால் மட்டுமே, வங்கி கணக்குகளில் இருக்கும் பணம் தப்பிக்கும் என்பதே நிதர்சனம். சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

    • அவ்வப்போது மிரட்டி பணம், விலை உயர்ந்த பொருட்களைப் பெற்றுள்ளார்.
    • டொனால்டு அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிடம் புகார் செய்தார்.

    புதுடெல்லி :

    அமெரிக்காவின் பிரபலமான பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருப்பவர் டொனால்டு (பெயர் மாற்றித்தரப்பட்டுள்ளது.).

    இவர் இந்தியாவில் உள்ள ரோஷி என்ற பெண்ணுடன் (பெயர் மாற்றித்தரப்பட்டுள்ளது) 'பேஸ்புக்' மூலம் தொடர்பு கொண்டு அறிமுகமானார்.

    இருவரிடையே நட்பு மலர்ந்தது. அந்த நட்பு, அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்கிறவரை வளர்ந்தது. இவர்கள் அடிக்கடி 'வீடியோ சாட்' மூலம் ஆபாசமாக பேசிக்கொள்வதும், ஆபாசமாக தோன்றுவதும் தொடர்ந்துள்ளது.

    இதைத் தகவல் தொழில்நுட்ப வசதியால் மோப்பம் பிடித்த டெல்லி அசோலா பகுதியை சேர்ந்த ராகுல் குமார் என்பவர் பதிவு செய்தார். அதைத் தனக்கு சாதகமாக அவர் பயன்படுத்த முடிவு செய்தார்.

    இது தொடர்பாக அவர் அமெரிக்க பேராசிரியர் டொனால்டுடன் தொடர்பு கொண்டார். " நீங்கள் அந்தப் பெண்ணுடன் ஆபாசமாகப்பேசியது, நடந்து கொண்டது தொடர்பான அனைத்தையும் நான் பதிவு செய்து வைத்துள்ளேன்.

    நீங்கள் எனக்கு இந்தத் தொகையை பேபால் கணக்கின் (ஜி பே போன்றது) வழியாக அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பாவிட்டால் சமூக ஊடகங்களில் உங்கள் லீலைகள் அடங்கிய வீடியோ காட்சிகளை வெளியிட்டு விடுவேன்" என இ-மெயில் வாயிலாக மிரட்டி உள்ளார்.

    இப்படி அவ்வப்போது மிரட்டி பணம், விலை உயர்ந்த பொருட்களைப் பெற்றுள்ளார். 48 ஆயிரம் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.39 லட்சம்) இப்படி மிரட்டியே ராகுல்குமார் கறந்துள்ளார்.

    ஆனாலும் அவர் பேராசிரியர் டொனால்டுவை மிரட்டுவதை நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் 'பொறுத்தது போதும், பொங்கியெழு' என்ற நிலைக்கு பேராசிரியர் டொனால்டு போனார்.

    அவர் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிடம் (எப்.பி.ஐ.), இந்தியர் ஒருவரால் தான் மிரட்டி பணம் பறிக்கப்படும் பிரச்சினை பற்றி புகார் செய்தார். அந்த அமைப்பினர், புகாரை டெல்லி சி.பி.ஐ.யின் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து ராகுல் குமார் வீடடில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தினர். முக்கிய தடயங்களை கைப்பற்றினர். மேலும் ராகுல் குமாரை கைது செய்தனர்.

    அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தி டெல்லி ரவுஸ் அவினியு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் போட்டோவை மார்பிங் செய்ததை அறிந்த மோகனசுந்தரி அதிர்ச்சியில் மன உளைச்சலுக்கு ஆளானார்.
    • வெங்கடாசலம் நம்பியூர் போலீசில் மாயமான மனைவியை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்துள்ளார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் இருகலூரை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (42). இவரது மனைவி மோகன சுந்தரி (39). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    நம்பியூர் அரசு போக்குவரத்துக்கு கழக கிளையில் வெங்கடாசலம் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மோகனசுந்தரி ஆன்லைன் செயலி மூலமாக கடன் பெற்றிருந்தார்.

    இந்த நிலையில் ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் மோகனசுந்தரியின் செல்போனை ஹேக் செய்து அதில் இருந்த அனைத்து போன் நம்பர்களையும் எடுத்து அனைவருக்கும் அவரது போட்டோவை மார்பிங் செய்து அனுப்பி உள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மோகனசுந்தரி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக குழந்தைகளிடம் கூறிவிட்டு சென்ற மோகனசுந்தரி அதன் பின் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதையடுத்து வெங்கடாசலம் நம்பியூர் போலீசில் மாயமான மனைவியை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மோகன சுந்தரியை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் நம்பியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டில் இருந்த நகையை அடகு வைத்து ஏமாந்த அவலம்
    • பொதுமக்கள் எந்த காரணத்தை கொண்டும் ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    வேலூர்:

    வேலூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு வீட்டிலிருந்தே வேலை தருவதாக கூறி ஆன்லைனில் விளம்பரம் வந்தது.

    அதனை வாலிபர் பின் தொடர்ந்தார். அப்போது மர்ம நபர்கள் செல்போனுக்கு ஒரே லிங்க் அனுப்பினர்.

    அதில் அதிக பொருட்கள் மற்றும் ஓட்டல்களை காட்டி இதில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என தெரிவித்தனர். முதலில் 100 ரூபாய் 150 ரூபாய் என வாலிபர் அந்த லிங்கில் முதலீடு செய்தார்.

    அதில் அவருக்கு இரண்டு முதல் 3 மடங்கு லாபம் கிடைத்ததாக கணக்கு காட்டியது.

    அதிக பணம் கிடைக்கும் என்று ஆசையில் தொடர்ந்து வாலிபர் தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் ஆன்லைனில் முதலீடு செய்து கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்த பணம் தீர்ந்து போனது.

    இதனால் வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து பணத்தை கொண்டு வந்து ஆன்லைனில் முதலீடு செய்தார். மேலும் வங்கியில் கடன் வாங்கியும் அவர் பணம் கட்டியுள்ளார். ரூ.32 லட்சம் வரை வாலிபர் பணத்தை கட்டிய பிறகு அதனை எடுக்க முயன்றார்.

    ஆனால் முடியவில்லை. ஆன்லைன் முதலீடுகளை முழுவதாக முடித்தால்தான் பணத்தை எடுக்க முடியும் என அதில் தெரிவித்தனர்.

    அப்போதுதான் வாலிபர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இது குறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா மற்றும் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் வரும் வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தி பொதுமக்கள் எந்த காரணத்தை கொண்டும் ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • பிரபு (வயது 31). இவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலில், ஆன்லைனில் வேலை தருவதாக கூறப்பட்டு இருந்தது.
    • குறுந்தகவல் வந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது அது போலியானது என்பது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி நாகப்பன் மெயின் ரோடு புதுதெரு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் பிரபு (வயது 31). இவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலில், ஆன்லைனில் வேலை தருவதாக கூறப்பட்டு இருந்தது.

    அதை உண்மை என நம்பிய பிரபு, குறுந்தகவலில் கொடுக்கப்பட்ட லிங்கில் சென்று பார்த்தபோது, சில நிபந்தனைகளை பணம் கட்டி நிறைவேற்றினால் உடனடியாக வேலை தருவதாக கூறினர்.

    இதையடுத்து பிரபு, மேற்கண்ட நபர்கள் கூறிய வங்கி கணக்கில் ரூ.2,01959 செலுத்துள்ளார். ஆனால் அவருக்கு எந்த ஒரு வேலையும் தராததால் சந்தேகம் அடைந்த பிரபு, மேற்கண்ட குறுந்தகவல் வந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது அது போலியானது என்பது தெரியவந்தது.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்த பிரபு, இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமித்சர்மா அனுப்பிய கியூ.ஆர்.கோடை பூர்ண சந்திரராவ் ஸ்கேன் செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகிறார்கள்.

    பெங்களூரு :

    பெங்களூரு விஜயநகர் பகுதியில் வசித்து வருபவர் பூர்ண சந்திரராவ் (வயது 41). என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பூர்ண சந்திரராவ் வீட்டில் ஒரு பழைய குளிர்பதன பெட்டி (பிரிட்ஜ்) இருந்தது. அதனை விற்று விட்டு புதிதாக வாங்க முடிவு செய்தார். இதையடுத்து, தனது வீட்டில் உள்ள அந்த குளிர்பதன பெட்டியை புகைப்படம் எடுத்து, அது விற்பனைக்கு இருப்பதாக கூறி ஆன்லைன் நிறுவனமான 'ஓ.எல்.எக்ஸ்.' என்ற இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார்.

    இந்த நிலையில், பூர்ண சந்திரராவை தொடர்பு கொண்டு ஒருநபர் பேசினார். அப்போது அவர் தனது பெயரை அமித் சர்மா என்று கூறிக் கொண்டார். மேலும் தான் ஒரு ராணுவ வீரர் என்றும், உங்களது குளிர்பதன பெட்டியை வாங்க தான் முடிவு செய்திருப்பதாகவும் பூர்ண சந்திரராவிடம் அமித் சர்மா கூறினார். இதனை அவரும் நம்பினார்.

    மேலும் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் அதிக பணத்தை பரிமாற்றம் செய்ய முடியாது, தான் அனுப்பும் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்து உங்களது வங்கி கணக்கு தகவல்களை தெரிவித்தால், அதன் மூலமாகவே பணம் அனுப்புவதாக கூறினார். இதையடுத்து, அமித்சர்மா அனுப்பிய கியூ.ஆர்.கோடை பூர்ண சந்திரராவ் ஸ்கேன் செய்தார்.

    அப்போது அவரது கணக்கில் இருந்த ரூ.99 ஆயிரத்தையும் எடுத்து மர்மநபர் மோசடி செய்து விட்டார். இதனால் பூர்ண சந்திரராவ் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகிறார்கள்.

    • ஓட்டல், மால் போன்றவை தொடர்பாக ரேட்டிங் கொடுத்தால் கமிஷன் வழங்கப்படும் என மெசேஜ் வந்தது.
    • சதீஷ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை இருகூர் தீபம் நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 31). இவர் பகுதி நேர வேலை தேடி வந்தார். சதீஷின் வாடஸ் அப்பிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஓட்டல், மால் போன்றவை தொடர்பாக ரேட்டிங் கொடுத்தால் கமிஷன் வழங்கப்படும்.

    இதனை பகுதி நேரமாக அதிகம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில் இலவச டாஸ்க் என்ற பெயரில் ரூ. 150 கமிஷன் பெற்றார். பின்னர் ரூ.1000 செலுத்தி கமிஷனாக ரூ.1300 ரூபாயும், பின்னர் ரூ 5 ஆயிரம் கட்டி ரூ.6500 பெற்றார்.

    இதை தொடர்ந்து சதீசை தொடர்பு கொண்ட ஒரு நபர் டாஸ்க்கில் அதிக முதலீடு செய்யுமாறு கேட்டு கொண்டார்.

    பல்வேறு தவணைகளில் சதீஷ் ரூ.14.45 லட்சம் செலுத்தினார். அதற்கு பின்னர் இவர் முதலீடு செய்த தொகையும் கிடைக்கவில்லை. கமிஷனும் வழங்கப்படவில்லை.

    இவரை தொடர்பு கொண்டு பேசிய நபரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி விட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லோகநாதன் ஆன்லைனில் கொடுத்த இலக்கை முடித்தால் பணம் இரட்டிப்பாக தரப்படும் என கூறியதை நம்பி ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை அனுப்பினார்.
    • பாலாஜி ஆன்லைனில் சம்பாதிக்க அதிகவாய்ப்பு என்ற வாட்ஸ்அப் தகவலை நம்பி ரூ.2 ¾ லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மூலகுளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியத்திடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மோசடிக்காரர்கள் கூறினர்.

    இதனை நம்பி அவர்களின் வங்கி கணக்கில் ரூ.9 லட்சத்து 13 ஆயிரத்து 274 செலுத்தினார். அதன்பின் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    இதேபோல லோகநாதன் ஆன்லைனில் கொடுத்த இலக்கை முடித்தால் பணம் இரட்டிப்பாக தரப்படும் என கூறியதை நம்பி ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை அனுப்பினார். அவருக்கு பணம் திரும்பி வரவில்லை.

    வாணரப்பேட்டையை சேர்ந்த பாலாஜி ஆன்லைனில் சம்பாதிக்க அதிகவாய்ப்பு என்ற வாட்ஸ்அப் தகவலை நம்பி ரூ.2 ¾ லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டார். நெல்லித்தோப்பு ரமேஷ் ஆன்லைன் வீடியோவை பார்த்து லைக் செய்தால் பணம் கிடைக்கும் என கூறியதை நம்பி ரூ.1.3/4 லட்சம் செலுத்தி ஏமாந்தார்.

    ஏனாம் பிராந்தியம் தீபக்குமார் ஆன்லைன் முதலீடு ஆசை வார்த்தையை நம்பி ரூ.2 ¾ லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார். முத்தியால்பேட்டை பிரபாகரன் பான்கார்டு புதுப்பித்தல் என நம்பி வங்கி தகவலை தெரிவித்ததால் ரூ.24 ஆயிரத்து 986 இழந்தார்.

    இவர்கள் உட்பட கடந்த 2 நாட்களில் மட்டும் புதுவை முழுவதும் 19 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதவிர புதுவை நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என நம்பி ரூ.5.72 லட்சம் முதலீடு செய்தார். இந்த நிறுவனத்தில் 40-க்கும் மேற்பட்டேர் ரூ.2 கோடி வரை செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி நூதனம்
    • வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர், தொரப்பாடியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆகிய இருவரின் செல்போன் வாட்ஸ்-அப் எண்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த தகவலில் `ஆன்லைனில்' பகுதி நேர வேலையில் பங்கேற்று அதிகம் சம்பாதிக்க முடியும் என கூறியுள்ளனர்.

    ஆர்வம் உள்ளவர்கள் அவர்கள் அனுப்பிய இணைப்பில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறி இருந்தனர்.

    அதனை உண்மை என நம்பிய 2 பேரும் தங்களது முழு விவரத்தையும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.

    மேலும் அவர்களுக்காக தனி கணக்கு தொடங்கி அதில் முதலீடு செய்து அவர்கள் அளித்த வேலையை செய்து முடித்துள்ளனர்.

    அவர்கள் கொடுத்த வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்ததால் அவர்கள் முதலீடு செய்த பணத்துக்கு கூடுதல் தொகையும் சேர்ந்துள்ளது.

    அதன்படி சேவூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழிய தனது வங்கி கணக்கிலிருந்து கடந்த மாதம் மொத்தம் ரூ.13.64 லட்சமும், தனியார் பள்ளி ஆசிரியரும் தனது வங்கி கணக்கில் இருந்து கடந்த 30, 31- ந் தேதிகளில் ரூ.6.15 லட்சமும் அனுப்பியுள்ளனர்.

    அவர்கள் கூறியபடி முதலீடு செய்த பணத்துக்கு கூடுதல் தொகை கிடைத்ததும் அதை தங்களது வங்கி கணக்கு இருவரும் மாற்ற முயன்றனர்.

    ஆனால் அந்தப் பணத்தை மாற்ற முடியாததால் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் இருவரும் வேலூர் மாவட்ட சைர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மும்பையில் இருந்து தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பி இருக்கிறீர்கள் என கூறி உள்ளார்.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்த 29 வயதான சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் நீங்கள் மும்பையில் இருந்து தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பி இருக்கிறீர்கள் என கூறி உள்ளார்.

    அதற்கு அவர் நான் எந்த பார்சலும் அனுப்பவில்லை என தெரிவித்தார். மறுமுனையில் பேசியவர் நாங்கள் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி, உங்கள் பெயரில் தான் பார்சல் சென்றுள்ளது. அதனால் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.27 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டினார்.

    இதனால் பயந்து போன சாப்ட்வேர் என்ஜினீயர் 3 தவணைகளாக ரூ.8 லட்சத்து 29 ஆயிரத்து 348-ஐ அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ஆன்லைனில் அனுப்பினார். தொடர்ந்து கூடுதல் பணம் கேட்டு அந்த கும்பல் மிரட்டியது.

    இதனால் சந்தேகம் அடைந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது உத்தரபிரதேசத்தை சேர்ந்த மோசடி கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×