search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parrot Fish"

    • ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 4 விசைப்படகுகள் நேற்று கரை திரும்பின.
    • வள்ளம், கட்டுமர மீனவர்கள் சாளை, நெத்திலி மீன்களை பிடிக்க செல்ல ஆர்வம் காட்டவில்லை.

    குளச்சல்:

    குளச்சலில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய இறால், புல்லன், கணவாய், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும். கட்டுமரம், வள்ளங்கள் அருகில் சென்று மீன்பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும்.

    இதில் சாளை, நெத்திலி, வௌ மீன்கள் பிடிக்கப்படுகிறது. கடலில் தொடர் சூறாவளிக்காற்று எச்சரிக்கை காரணமாக கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகுகள் கரை திரும்பிய பின்பு சீராக மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தற்போது குளச்சலில் மீன் பிடி சீசன் மந்தமாகி உள்ளதால் மீன் வரத்து குறைந்துள்ளது. குறைவான விசைப்படகுகளே கடலுக்கு சென்றுள்ளன.

    இதனால் கடந்த சில நாட்களாக குளச்சலில் மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது குளச்சல் கடல் பகுதியில் கேரை மீன்கள் சீசனாகும். ஆனால் ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகுகளில் கேரை மீன்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே கட்டுமரங்களில் பிடிக்கப்படும் சாளை, நெத்திலி போன்ற மீன்களும் கிடைக்கவில்லை. இதனால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் சாளை, நெத்திலி மீன்களை பிடிக்க செல்ல ஆர்வம் காட்டவில்லை.

    இந்நிலையில் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 4 விசைப்படகுகள் நேற்று கரை திரும்பின. இவற்றுள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. ஓரளவு செம்மீன் எனப்படும் கிளி மீன்கள் கிடைத்தன. இவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் வைத்து ஏலமிட்டனர். ஒரு கிலோ கிளி மீன் தலா ரூ.180 வரை விலைபோனது. இதனை வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.

    கிளி மீன் சீசன் தென்பட்டுள்ளது ஆறுதலாக உள்ளது. தொடர்ந்து கிடைக்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும் என மீனவர் ஒருவர் தெரிவித்தார். மேலும் சில கேரை மீன்களும், ஒரு சில சுறா மீன், 2 திருக்கை மீன்களும் கிடைத்தன. இதனால் மீனவர்கள் ஆறுதல் அடைந்தனர்.

    ×