என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poison gas"

    • கரூரில் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
    • சம்பவ இடத்திற்கு கருர் எஸ்.பி. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் சுக்காலியூர் காந்திநகர் பகுதியில் குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாக கான்கிரீட் வேலை நடந்துள்ளது.

    இந்நிலையில், அதில் போடப்பட்ட சவுக்கு குச்சிகள் மற்றும் கான்கிரீட் பலகைகளைப் பிரிப்பதற்காக கழிவுநீர் தொட்டியின் மேன்ஹோல் எனப்படும் மூடியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த மோகன்ராஜ், ராஜேஷ் ஆகிய 2 தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர்.

    இவர்களது அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு சென்ற சிவா என்ற மற்றொரு தொழிலாளியும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் மற்ற தொழிலாளர்கள் அங்கு வந்து பார்த்த போது, 3 பேரும் மயங்கி கிடப்பதைப் பார்த்து உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 3 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு கருர் எஸ்.பி. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வரும் கழிவுநீர் தொட்டியில் எவ்வாறு விஷவாயு தாக்கியது என்பது குறித்தும், அது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி தொகை அறிவித்தார்.
    • நிவாரணத் தொகையில் பாதி பணத்தை கேட்ட அமைச்சரை கண்டித்து எதிர்க் கட்சிகள் கண்டனம்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் சச்சினபள்ளியை சேர்ந்தவர்கள் அணில், வீர பிரம்மம், கொண்டல் ராவ். இவர்கள் 3 பேரும் கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி தனியார் ஓட்டல் அருகே உள்ள பாதாள சாக்கடையில் இறங்கி அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது விஷவாயு தாக்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி தொகை அறிவித்தார்.

    முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகையை பெறுவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் அம்பாடி ராம் பாபுவிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சென்றனர்.

    அப்போது அவர் ரூ 2. 50 லட்சம் கொடுத்தால் தான் காசோலையை தர முடியும் என திருப்பி அனுப்பி உள்ளார்.

    பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து அப்பகுதியில் உள்ள ஜனசேனா கட்சி நிர்வாகிகளிடம் தனது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் காசோலையை தராமல் கமிஷன் கேட்பதாக தெரிவித்தனர்.

    நிவாரணத் தொகையில் பாதி பணத்தை கேட்ட அமைச்சரை கண்டித்து ஜனசேனா கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    ஜெகன்மோகன் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது சாதாரணமாகிவிட்டது.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • சர்க்கரை ஆலை பாகு கழிவுகளை அகற்றும் பணியில் இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
    • விஷவாயு கசிவால் தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் புகளூரில் தனியாருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் கரும்புகள் இந்த ஆலையில் அரவைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது

    இந்நிலையில் இந்த சர்க்கரை ஆலையில் பாகு காய்ச்சி அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குழாய்கள் மூலம் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது தற்போது பொங்கல் விடுமுறை தினத்தை ஒட்டி தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.

    இன்று மீண்டும் சர்க்கரை ஆலையில் அரவைப் பணிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக தேங்கி கிடந்த சர்க்கரை ஆலை பாகு கழிவுகளை அகற்றும் பணியில் இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    ஒரு வாரமாக தேங்கியிருந்த கழிவுகளில் இருந்து திடீரென்று வாயு கசிவு ஏற்பட்டது. இதையடுத்து பணியில் இருந்த இரண்டு தொழிலாளர்களும் திடீரென மயங்கி விழுந்தனர். உடனடியாக அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வேலாயுதம் வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    நாமக்கல் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்தவர் பாலன் (வயது 40).

    இவர் கோவை உக்கடம் பகுதியில் தங்கியிருந்து தங்க துகள்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சாக்கடை கால்வாயில் மண்ணை அள்ளி அதில் தங்க துகள்கள் இருந்தால் அதனை பிரித்து எடுத்து விற்பனை செய்கிறார்.

    கடந்த சில நாட்களாக பாலனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தங்க துகள்கள் சேகரிக்க செல்லவில்லை என தெரிகிறது.

    இதனையடுத்து தனது தந்தைக்கு உதவி செய்வதற்காக பாலனின் மகன் விக்னேஷ் (13)நாமக்கல்லில் இருந்து கோவை வந்தார்.

    இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், விக்னேஷ் இன்று காலை தனது உறவினர்கள் சிலருடன் வெரைட்டிஹால் ரோடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் மண்ணை அள்ளி தங்க துகள்களை சேகரித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென சாக்கடையில் இருந்து விஷவாயு தாக்கியது. இதில் விக்னேஷ் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் சிறுவனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    விசாரணையில், தங்க நகை பட்டறைகளில் பயன்படுத்தப்படும் சிலவகை கெமிக்கல்கள் சாக்கடை நீரில் கலந்ததால் அதன் மூலம் விஷவாயு பரவி சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுப்பிரமணியத்தின் உடலை போலீசார் மீட்டனர்.
    • பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (65).இவர் கிருஷ்ணாபுரம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு வேலை செய்து வந்தார். நேற்று காலை வேலைக்கு சென்ற சுப்பிரமணி பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள கழிவு நீர் தொட்டிக்குள் சுப்பிரமணி பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை போலீசார் மீட்டனர். சுப்பிரமணி கழிவு நீர் தொட்டிக்குள் தவறி விழுந்தாரா? அல்லது விஷவாயு தாக்கியதா? என்பது குறித்து பொன்னேரி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • மோசஸ், தேவன் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானார்கள்.
    • கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

    திருநின்றவூர்:

    ஆவடி, ஓ.சி.எப். பகுதியில் உள்ள குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது தொழிலாளர்கள் மோசஸ், தேவன் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானார்கள். இது தொடர்பாக தேசிய தூய்மைபணியாளர்கள் பாதுகாப்பு ஆணைய தலைவர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

    மேலும் அவர்கள், ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

    • தொழிலாளி, வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள குலசேகரபுரம் லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ லிங்கம் (வயது 54), தொழிலாளி. இவரது மகன் செல்வா (19). நேற்று மாலை தந்தை-மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த செல்வா, தனது மோட்டார் சைக்கிளை அந்தப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் தள்ளி விட்டாராம். இதைதொடர்ந்து அவரது தந்தை ஸ்ரீ லிங்கம், மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை மீட்க அதே பகுதியை சேர்ந்த செல்வன் (34) என்பவர் கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். ஆனால் அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

    இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்க முயன்றபோது, கிணற்றுக்குள் விஷவாயு பரவி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் உடல்களை பல மணி நேரம் போராடி நள்ளிரவு மீட்டனர். பின்னர் 2 உடல்களும் கரைக்கு கொண்டு வரப்பட்டன.

    கிணற்றுக்குள் தள்ளி விடப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் கசிந்து கிணறு முழுவதும் விஷவாயு பரவி இருந்ததால் ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் மூச்சு திணறி பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் மற்றும் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அஞ்சு கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொட்டாரம் அருகே கிணற்றுக்குள் கிடந்த மோட்டார் சைக்கிளை மீட்கச் சென்ற தொழிலாளி-வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விஷ வாயு தாக்கியதால் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, ஆரோக்கியதாஸ், பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த பாதாள சாக்கடைகளில் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. ஒரு சில இடங்களில் வீடுகளில் கழிவுகளையும் நேரடியாக பாதாள சாக்கடைகளில் அனுப்புவதாக புகார்கள் உள்ளது.

    கழிவிலிருந்து கார்பன் மோனாக்சைடு, மீத்தேன் உட்பட விஷ வாயு உற்பத்தியாகும் சாத்தியக்கூறுகள் உள்ளது. இந்த நிலையில் ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து அனுப்ப கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    ரெட்டியார்பாளையம் கனகன் ஏரிக்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷவாயு உற்பத்தியாகி பாதாள சாக்கடை வழியாக வீடுகளில் உள்ள கழிவறைக்குள் புகுந்துள்ளது.

    இன்று காலை வழக்கம்போல ரெட்டியார்பாளையம் புதுநகர் 4-வது தெருவில் கழிவறைக்கு சென்றவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். 4-வது தெருவை சேர்ந்த செந்தாமரை(80) கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்தார். அவரின் மகள் காமாட்சி(45) தாய் விழுந்ததை கண்டு அவரை மீட்க சென்றார். அவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். காமாட்சியின் மகள் பாக்கியலட்சுமி(28)யும் மயங்கி விழுந்தார். அதே தெருவில் அடுத்த வீட்டில் வசிக்கும் ஆரோக்கியதாஸ் மகள் செல்வராணி(16) அவரும் கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்தார்.

    அதே பகுதியயை சேர்ந்த பாலகிருஷ்ணாவும் மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்த பகுதியில் கழிவறையிலிருந்து விஷவாயு வெளியேறும் தகவல் காட்டுத்தீயாக பரவியது. இதனால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினர்.

    மூதாட்டி செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி, செல்வராணி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 3 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    விஷ வாயு தாக்கியதால் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, ஆரோக்கியதாஸ், பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. பொதுப்பணித்துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

    பாதாள சாக்கடை வழியாக விஷவாயு பரவியதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கழிவறை வழியாக விஷவாயு பரவலாம் என முன்னெச்சரிக்கை விடப்பட்டது. அரசு தரப்பில் உடனடியாக அப்பகுதியில் 10 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது.

    இதனால் அங்கிருந்த மக்கள் வெளியேறினர். பாதிக்கப்பட்ட 4-வது தெரு மட்டும் சீல் வைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் வசித்த மக்கள் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் முக கவசம் அணிந்துள்ளனர்.

    • விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • உடனடியாக அப்பகுதியில் 10 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது.

    புதுச்சேரியில் உள்ள ரெட்டியார்பாளையம் கனகன் ஏரிக்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷவாயு உற்பத்தியாகி பாதாள சாக்கடை வழியாக வீடுகளில் உள்ள கழிவறைக்குள் புகுந்துள்ளது.

    இதனால் ரெட்டியார்பாளையம் புதுநகர் 4-வது தெருவில் கழிவறைக்கு சென்றவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதில் மூதாட்டி செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி, செல்வராணி ஆகியோர் உயிரிழந்தனர்.

    விஷ வாயு தாக்கியதால் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, ஆரோக்கியதாஸ், பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கழிவறை வழியாக விஷவாயு பரவலாம் என முன்னெச்சரிக்கை விடப்பட்டது. அரசு தரப்பில் உடனடியாக அப்பகுதியில் 10 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது.

    இந்நிலையில், விஷவாயு தாக்கி உயிரிழந்த, மூவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்த சிறுமிக்கு ₹30 லட்சம், இறந்த 2 பெண்களுக்கு தலா ₹20 லட்சம் என அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    • அடுத்தடுத்து உள்ள சிறிய வீடுகளில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர்.
    • மேன்ஹோலில் உருவான விஷ வாயு கழிவறை வழியாக வெளியேறி உயிரிழப்பு.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகரில் வீட்டு கழிவறையில் வெளியேறிய விஷ வாயுவால் தாய், மகள், சிறுமி என 3 பேர் இறந்தனர்.

    வீட்டு கழிவறையில் விஷ வாயு பரவியது எப்படி? என பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுவை நகர் மற்றும் நகரை அடுத்துள்ள புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் பாதாள சாக்கடையில் இணைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வெளியேறும் கழிவுநீர், குழாய்கள் வழியாக பாதாள சாக்கடையின் மேன்ஹோலுக்கு செல்கிறது. அங்கிருந்து கழிவுநீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்கிறது.

    அங்கு திட கழிவுகளை தனியாக பிரித்து கழிவுநீரை சுத்திகரித்து வாய்க் காலில் விடுகின் றனர். சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை உறிஞ்சி எடுக்கும் போது, குழாயில் சில இடங்களில் காற்று வெற்றிடம் உருவாகும்.

    அங்கு விஷ வாயு உருவாகி வெற்றிடத்தை நிரப்பும். சில நேரம் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்படும்போது மேன்ஹோலில் தேங்கி நிற்கும் கழிவுகளால் மீத்தேன், நைட்ரஜன் சல்பைடு, அமோனியா போன்ற வாயுக்கள் உருவாகும்.

    ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் அடுத்தடுத்து உள்ள சிறிய வீடுகளில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்கு கழிப்பறை கட்டவே இடம் போதாத நிலை உள்ளது. அதோடு பலர் கழிவறையில் இருந்து பாதாள சாக்கடைக்கு செல்லும் குழாயில் வாயு வெளியே வராதபடி எஸ் அல்லது பி பென்ட் வடிவ அமைப்பை ஏற்படுத்த வில்லை.

    இதனால் மேன்ஹோலில் உருவான விஷ வாயு கழிவறை வழியாக வெளியேறி உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

    ஒவ்வொரு வீட்டிலும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க பொதுப்பணித்துறையிடம் தகவல் தெரிவித்து, அங்கீகரிக்கப்பட்ட பிளம்பர் மூலம் பணிகளை செய்ய வேண்டும். இணைப்புகள் சரியாக கொடுக்கப்பட்டுள்ளதா? துர்நாற்றம், விஷவாயு வெளியேறாமல் இருக்க எஸ் அல்லது பி பென்ட் அமைக்கப் பட்டுள்ளதா? என சரி பார்க்க வேண்டும்.

    கழிப்பறையில் இருந்து செல்லும் குழாய்க்கும், பாதாள சாக்கடையில் இணைக்கும் குழாய்க்கும் உள்ள இடைவெளியில் சிறிய சதுர தொட்டி கட்டி காற்று வெளியேற வென்ட் அமைத்தால் இதுபோன்ற விஷ வாயு தாக்கத்தை தவிர்க்கலாம்.

    பாதாள சாக்கடை மென்ஹோலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்ள வேண்டும். கழிவுநீர் குழாய்களில் நாப்கின், துணி, பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட மக்காத குப்பைகளை போடக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஹைட்ரஜன் சல்பைடு வாயு

    விஷ வாயு தாக்கி உயிரிழப்பு ஏற்பட்ட புதுநகர் பகுதியில் புதுவை மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமையிலான நிபுணர்கள், பாதாள சாக்கடை மேன்ஹோல், உயிரிழப்பு ஏற்பட்ட வீட்டின் கழிவறையில் விஷ வாயு தாக்கம் எவ்வளவு உள்ளது என நவீன எந்திரங்கள் மூலம் அளவீடு செய்தனர்.

    வீட்டின் கழிவறைகளில் விஷ வாயு ஏதும் இல்லை. மேன்ஹோலில் வழக்கமான அளவை விட ஹைட்ரஜன் சல்பைடு வாயு அதிகமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. உயிரிழப்பு ஹைட்ரஜன் சல்பைடு வாயு மூலம் ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த வாயு வெளியேற மேன்ஹோல்கள் உடனடியாக திறந்து வைக்கப்பட்டது.

    • 3 பெண்கள் மரணத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
    • பாதாள சாக்கடை திட்டம் எங்களுக்கு தேவையில்லை என்று கூறி பொதுமக்கள் விழுப்புரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரில் கழிவறையில் வெளியான விஷ வாயுவால் 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

    இறந்த 3 பெண்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று உடல்கூராய்வு நடந்தது. இதனிடையே முதலமைச்சர் ரங்கசாமி, இறந்த செந்தாமரை, காமாட்சி ஆகியோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், சிறுமி செல்வராணி குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சமும் என மொத்தம் ரூ.70 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    இந்த நிவாரண தொகை போதாது என்றும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். தேசிய நெடுஞ்சாலையில் கம்பன் நகரில் தரையில் அமர்ந்து கட்சி கொடிகளோடு கோஷம் எழுப்பி மறியல் செய்தனர். போராட்டம் நடத்தியவர்கள், 3 பெண்கள் மரணத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாக சீர்கேட்டுக்கு பொறுப்பேற்று அரசு பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது.விழுப்புரத்திலிருந்து வந்த பஸ்கள் மூலக்குளம் வழியாக திரும்பிச்சென்றன. மறுபுறத்தில் இந்திராகாந்தி சிலை வரை பஸ்கள் செல்ல முடியாமல் நின்றது.

    சுமார் அரைமணிநேரம் மறியல் போராட்டம் நடந்தது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தின்போது மூலக்குளம் வழியாக ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்சிற்கு மறியலில் ஈடுபட்டவர்கள் வழிவிட்டனர்.

    நேற்று இரவில் பாதாள சாக்கடை திட்டம் எங்களுக்கு தேவையில்லை என்று கூறி பொதுமக்கள் விழுப்புரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக மீண்டும் மறியல் போராட்டம் நடந்துள்ளது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வருவாய்த்துறை மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
    • 4-வது தெருவில் உள்ள மேன்ஹோல்கள் வழியாகத்தான் விஷ வாயு பரவியது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரெட்டியார் பாளையம் புதுநகரில் நேற்று முன்தினம் கழிவறையில் இருந்து விஷ வாயு பரவியது.

    விஷ வாயு பரவியதால் புதுநகர் 4-வது தெருவில் வசிக்கும் செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி மற்றும் பள்ளி மாணவி செல்வராணி ஆகிய 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர். மேலும் 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அந்த பகுதி மக்கள் வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அப்பகுதியில் வீடுகளில் உள்ள கழிவறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப பள்ளி அருகே தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    வருவாய்த்துறை மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மேலும், அந்த பகுதியின் இறுதியில் கனகன் ஏரி கரையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    4-வது தெருவில் உள்ள மேன்ஹோல்கள் வழியாகத்தான் விஷ வாயு பரவியது. இதனால் பொதுப்பணித் துறையினர் மேன்ஹோல்கள் மூடிகளை அகற்றியுள்ளனர். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்களை சீரமைக்கும் பணியும் தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் 4-வது தெருவில் வசிக்கும் புஷ்ப ராணி (வயது38) கழிவறைக்கு சென்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

    அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மக்கள் திரண்டு நிற்கின்றனர். போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் புதுநகர் பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கு வரும் 17-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ×