search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selvi amman temple"

    முதுகுளத்தூர் செல்வியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் 6 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

    முதுகுளத்தூர்:

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் வடக்கு வாசல் செல்வியம்மன் கோவில் உள்ளது. இந்தப்பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    செல்வியம்மன் கோவிலில் வருடந்தோறும் பூச் சொரிதல் விழா மிக விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

    விழா தொடங்கிய நாளில் இருந்து அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.

    கடந்த 18-ந் தேதி வருஷாபிஷேகமும், புண்ணிய தானமும் நடந்தன. தொடர்ந்து விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    சிறப்பு நிகழ்ச்சியாக அம்மனுக்கு அபிஷேகங்கள் மற்றும் வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் பொது அன்னதானம் நடைபெற்றது. வெங்கடேசன் பூசாரி சக்தி கரகம் தூக்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றார். மனிதனை நல்வழிப்படுத்துவது ஆன்மீகமா, அறிவியலா என்ற தலைப்பில் இன்னிசை மழலையர் பட்டிமன்றம் நடந்தது.

    அன்று மாலை அக்னிசட்டி ஊர்வலம் நடைபெற்றது. 150-க்கும் மேற்பட்ட பெண்கள் சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து செல்வியம்மன் கோவிலுக்கு அக்னிசட்டி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் நேர்த்திக்கடன் இன்று நடந்தது. முதுகுளத்தூர் செல்வநாயகபுரம், எம்.தூரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாளை (27-ந் தேதி) காலை 6 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    நாளை மாலை 3 மணிக்கு அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும் தொடர்ந்து பூப்பல்லக்கில் வீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது.

    நாளை மறுநாள் (28-ந் தேதி) முளைப்பாரி ஊர்வலத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கவுரவத் தலைவர் பாலகுருசாமி, தலைவர் வடமலையான், துணைத்தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் முருகானந்தம், பொருளாளர் பெருமாள், கமிட்டி உறுப்பினர்கள் ராஜ மாணிக்கம், தூரி மாடசாமி, முருகேசன், சத்யநாதன், செல்வநாயகபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×