search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நன்கொடை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அன்னதானத்தில் சாதாரண நாட்களில் சுமார் 8 ஆயிரம் பேரும், விழா நாட்களில் 30 ஆயிரம் பேர் வரையிலும் உணவருந்திச் செல்கின்றனர்.
    • பக்தர்கள் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தங்களால் இயன்ற காணிக்கைகளை வழங்கி வருகின்றனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை மலைக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் மூலம் செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக பழனி கோவிலில் நாள் தோறும் அன்னதான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொறியல், அப்பளம், பாயாசம் ஆகியவற்றுடன் வழங்கப்படும் அன்னதானத்தில் சாதாரண நாட்களில் சுமார் 8 ஆயிரம் பேரும், விழா நாட்களில் 30 ஆயிரம் பேர் வரையிலும் உணவருந்திச் செல்கின்றனர்.

    பக்தர்கள் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தங்களால் இயன்ற காணிக்கைகளை வழங்கி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் கியூ.ஆர்.கோடு வசதி உள்ள நிலையில் பழனி கோவிலிலும் இது போன்ற வசதி தொடங்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


    ஏனெனில் ரெயில் நிலையம், வணிக வளாகங்கள் போன்றவற்றில் பணப்பரிவர்த்தனை முற்றிலும் குறைந்து கியூ.ஆர். கோடு வசதி மூலமே பணம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களும் குறைந்த அளவு பணம் கொண்டு வரும் சமயத்தில் அன்னதானம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நன்கொடை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தைப்பூசத் திருவிழா நெருங்கி வரும் நிலையில் பழனி மலைக்கோவிலில் கியூ.ஆர்.கோடு மூலம் நன்கொடை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவிலின் பல்வேறு இடங்களில் இது குறித்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல் ரோப் கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கியூ.ஆர். கோடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அமேசான் நிறுவனத்தின் தலைவரின் முன்னாள் மனைவி தனது சொத்தில் இருந்து ரூ.1¼ லட்சம் கோடியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குகிறார்.
    வாஷிங்டன்:

    உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 55).

    இவர், அமேசான் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு நாவலாசிரியரான மெக்கின்சியை (48) காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.

    இந்த தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.

    இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்துவந்த ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கின்சி ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

    அதனை தொடர்ந்து, ஜெப் பெசோஸ், தனது சொத்தில் 25 சதவீதத்தை மனைவி மெக்கின்சிக்கு ஜீவனாம்சமாக கொடுக்க முடிவு செய்தார்.

    அதன்படி 35 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி) மெக்கின்சிக்கு வழங்குவதாக அவர் அறிவித்தார்.

    இதன் மூலம் உலகிலேயே அதிக தொகையை மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்தவர் என்கிற பெருமைக்கு ஜெப் பேசோஸ் சொந்தக்காரர் ஆனார்.

    அதே போல் கணவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி பெற்றதன் மூலம் மெக்கின்சி, உலகின் 3-வது மிகப்பெரிய பெண் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

    மெக்கின்சியின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 37 பில்லியன் டாலர்களாக (ரூ.2 லட்சத்து 59 ஆயிரம் கோடி) உள்ளது.

    இந்த நிலையில் தனது சொத்தில் சரிபாதி தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குவதாக மெக்கின்சி உறுதிமொழி அளித்துள்ளார்.

    அதவாது 18.5 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் கோடி) நன்கொடையாக வழங்க இருக்கிறார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் வாழ்வதற்கு தேவையானதை விட கூடுதலாக, பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அதிகமான சொத்துகள் என்னிடம் உள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அவர் “எனது மனித நேய அணுகுமுறை தொடர்ந்து கொண்டே இருக்கும். அதற்கு சற்று காலம் ஆகும். ஆனால் நான் அதுவரை காத்திருக்க மாட்டேன். என்னிடம் இருப்பது காலியாகும் வரை நான் இதை தொடருவேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

    மெக்கின்சியின் இந்த கொடை உள்ளத்தை அவரது முன்னாள் கணவர் ஜெப் பெசோஸ் பாராட்டி உள்ளார். இது பற்றி அவர் டுவிட்டரில், “மெக்கின்சி, மனநேய அணுகுமுறையில் மிக சிறப்பாகவும், நல்ல சிந்தனையுடனும் செயல்படுகிறார். அவரை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
    அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க ரூ.5,029 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    தேர்தலின்போது அரசியல் கட்சிகளுக்கு முன்பு பணமாக வழங்கப்பட்டது. இதில் கருப்பு பணம் புழங்குவதாக புகார் எழுந்ததால் இதனை தடுக்க தேர்தல் பத்திரங்களாக வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. பதிவு பெற்ற அரசியல் கட்சிகளும், நாடாளுமன்ற, சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீதம் ஓட்டு வாங்கிய கட்சிகளும் இந்த தேர்தல் பத்திரங்களை பெறமுடியும்.

    இந்தியாவை சேர்ந்த தனிநபரோ அல்லது நிறுவனங்களோ இந்த தேர்தல் பத்திரத்தை வாங்கி தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிக்கு நன்கொடையாக கொடுக்கலாம். அவர்கள் வங்கி கணக்கு மூலம் அந்த பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம். இந்த தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே வழங்கும். இந்த நடைமுறை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது.

    இந்நிலையில், மும்பையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் மனோரஞ்சன் ராய் என்பவர், இதுவரை எத்தனை தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது, அதன் மதிப்பு எவ்வளவு? வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பெயர் என்ன? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டிருந்தார்.

    இதற்கு பாரத ஸ்டேட் வங்கியின் உதவி பொது மேலாளர் நரேஷ்குமார் ரஹேஜா பதில் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    மே 4-ந் தேதி வரை மொத்தம் ரூ.5,029 கோடி மதிப்புள்ள 10,494 தேர்தல் பத்திரங்கள் 9 கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் வாங்கிய தனிநபர் அல்லது நிறுவனங்கள் பெயரை வெளியிட தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அதனை தெரிவிக்க முடியாது. வெளியிட்ட 10,494 தேர்தல் பத்திரங்களில் 10,388 பத்திரங்கள் பணமாக மாற்றப்பட்டுவிட்டது. அதன் மதிப்பு மட்டும் ரூ.5,011 கோடி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த தகவல் பற்றி கருத்து தெரிவித்த மனுதாரர் மனோரஞ்சன் ராய் கூறியதாவது:-

    தேர்தல் பத்திரங்கள் அதிகரித்திருப்பது அரசியல் கட்சிகளுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள தூய்மையற்ற தொடர்பை சட்டபூர்வமாக்கியது தானே தவிர வேறு ஒன்றுமில்லை. இது நாட்டில் பெரிய அளவிலான ஊழலுக்கு தான் வழிவகுக்கும். தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கிய தனிநபர் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டு இருந்தால் இந்த அழிவு சற்று குறையும்.

    பெரு நிறுவனங்கள் இவ்வளவு பெரிய தொகையை சமுதாய பொறுப்புள்ள திட்டங்களுக்கோ, ஏழைகள் மற்றும் தேவையுள்ள பயனாளிகளுக்கோ செலவழித்து இருக்கலாம். மற்றபடி இந்த நன்கொடை அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு தான் பயன்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அண்ணா பதக்க பரிசுத் தொகை ரூ.10 ஆயிரத்துடன் ரூ.5 ஆயிரத்தை சேர்த்து தான் படித்த அரசு பள்ளிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நன்கொடை வழங்கினார்.
    சென்னை:

    பொன்னேரியை அடுத்த பெரியகாவனம் கிராமத்தை சேர்ந்தவர் டி.ராஜாங்கம். இவர் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.

    இவரது பணியை பாராட்டி சமீபத்தில் தமிழக அரசு இவருக்கு அண்ணா பதக்கம் வழங்கி கவுரவித்தது. ரூ.10 ஆயிரம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. அந்த பரிசு தொகையுடன் ரூ.5 ஆயிரத்தையும் சேர்த்து ரூ.15 ஆயிரம் ரூபாயை தான் படித்த சின்னகாவனம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு அவர் நன்கொடையாக வழங்கினார்.

    தனது பள்ளி கால நண்பர்களுடன் தான் படித்த பள்ளிக்கு சென்றார். அங்கு பள்ளி தலைமை ஆசிரியை லதா ராஜேஷிடம் அந்த தொகையை வழங்கினார்.

    இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில், பள்ளியில் 1975-ம் ஆண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை படித்தேன். அப்போது என்னுடன் 30 மாணவர்கள் படித்தனர்.

    உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி படிப்பை பொன்னேரி மேல் நிலைப்பள்ளியில் படித்தேன். அண்ணா பதக்கத்துக்காக எனக்கு கிடைத்த பரிசு தொகையை நான் படித்த பள்ளியின் வளர்ச்சிக்காக வழங்கினேன். சில நாட்களுக்கு முன்பு என்னுடன் படித்த சில நண்பர்களை சந்தித்தேன். அப்போது எங்களது பள்ளி கால நினைவுகள் குறித்து மனம் விட்டு பேசி மகிழ்ந்தோம் என்றார்.

    பள்ளி தலைமை ஆசிரியை லதா ராஜேஷ் கூறும் போது, “பள்ளியின் மீதான நம்பிக்கையே பழைய மாணவர்களை ஒன்றிணைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழங்கிய நன்கொடை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இப்பள்ளிக்கு பெற்றோர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்” என்றார்.

    பள்ளிக்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வளாகத்தை சுற்றிப் பார்த்தார். பள்ளியில் நடந்த தனது குழந்தை கால அனுபவங்களை நினைவு கூர்ந்தார்.
    தொண்டர்கள் நன்கொடையில்தான் பா.ஜனதாவை நடத்த வேண்டும் என பா.ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #BJP #Donation #AmitShah
    புதுடெல்லி:

    டெல்லியில், தீனதயாள் உபாத்யாயா நினைவு தினத்தையொட்டி, பா.ஜனதா ஊழியர்கள் கூட்டம் நடந்தது. அதில், அக்கட்சி தலைவர் அமித் ஷா பேசியதாவது:-

    தொண்டர்கள் நன்கொடையில்தான் பா.ஜனதாவை நடத்த வேண்டும். தொண்டர்கள் தங்கள் வருவாயில் ஒரு பகுதியை கட்சிக்கு தர வேண்டும். ஒரு வாக்குச்சாவடிக்கு தலா 2 பேராவது, தலா ஆயிரம் ரூபாயை பிரதமரின் ‘ஆப்’ மூலமாகவோ, காசோலை மூலமாகவோ நன்கொடையாக அளிக்க வேண்டும்.

    அதை விட்டுவிட்டு, பண முதலைகள், கட்டுமான அதிபர்கள், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ஆகியோரின் நன்கொடையை சார்ந்து இருந்தால், நமது லட்சியம் களங்கப்பட்டு விடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தேசிய கட்சிகளுக்கு பெயரை வெளியிட விரும்பாத நிறுவனங்கள், தனிநபர்கள் ரூ.689 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர். #Income #NationalPoliticalParties #UnknownSource
    புதுடெல்லி:

    நமது நாட்டில் உள்ள பாரதீய ஜனதா, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய 6 தேசிய கட்சிகள், கடந்த நிதி ஆண்டில் அளித்துள்ள வருமான வரி கணக்குகளை ஏ.டி.ஆர். என்று அழைக்கப்படுகிற ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆராய்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

    * 2017-18 நிதி ஆண்டில் 6 தேசிய கட்சிகளுக்கு வந்துள்ள மொத்த நன்கொடை ரூ.1,293 கோடியே 5 லட்சம் ஆகும்.

    * இந்த நன்கொடையில் ரூ.689 கோடியே 44 லட்சம், பெயர் வெளியிட விரும்பாத நிறுவனங்கள், தனி நபர்களிடம் இருந்து வந்தது ஆகும். மொத்த நன்கொடைகளில் இது 53 சதவீதம் ஆகும்.

    இதில் பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டும் வந்த தொகை ரூ.553 கோடியே 38 லட்சம் ஆகும்.

    * பெயர் வெளியிட விரும்பாதவர்கள் வழங்கிய ரூ.689 கோடியே 44 லட்சத்தில் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக வழங்கப்பட்ட தொகை ரூ.215 கோடி.

    * 6 தேசிய கட்சிகளும், ரூ.20 ஆயிரத்துக்கு குறைவாக தானாக வந்த இத்தகைய நன்கொடை மூலம் பெற்ற தொகை ரூ.354 கோடியே 22 லட்சம் ஆகும்.

    * தேசிய கட்சிகளுக்கு ‘பிற வகைகளில்’ என்ற பிரிவில் வந்த தொகை ரூ.4½ கோடிதான்.

    * 6 தேசிய கட்சிகளுக்கு பெயர் சொல்லி வழங்கிய நன்கொடையாளர்கள் மூலம் வந்த தொகை ரூ.467 கோடியே 13 லட்சம்.

    சொத்து விற்பனை, பத்திரிகை விற்பனை, உறுப்பினர் கட்டணம், வங்கி வட்டி உள்ளிட்டவை மூலம் வந்த தொகை ரூ.136 கோடியே 48 லட்சம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், தேசிய கட்சி என்றாலும்கூட, அந்த கட்சியின் வருமான வரி கணக்கு விவரங்கள் கிடைக்கப்பெறாததால், இந்த பட்டியலில் அந்த கட்சிக்கு வந்த நன்கொடைகள் சேர்க்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
    பொதுவாக மாமியாருக்கும், மருமகளுக்கும் சுமூகமான உறவு இருக்காது. இருவரும் கருத்து வேறுபாடுகளுடன்தான் இருப்பார்கள். இத்தகைய கால கட்டத்தில் மருமகளுக்கு மாமியார் சிறுநீரகம் கொடுத்து உயிர் அளித்த சம்பவம் நடந்துள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள காந்திநகரை சேர்ந்தவர் சோனிகா (32). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார்.

    டெல்லியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் அவரது 2 சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டன. எனவே, சிறுநீரக மாற்று ஆபரேசன் அல்லது டயாலிசிஸ் செய்தால்தான் அவர் உயிர் பிழைக்க முடியும் என டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.

    நீண்டநாள் டயாலிசிஸ் செய்ய முடியாது. சிறுநீரக மாற்று ஆபரேசன் தான் ஒரே வழி என டாக்டர்கள் கூறிவிட்டனர். எனவே சோனிகாவின் தாயாரை தொடர்புகொண்டு சிறுநீரகம் தானம் வழங்கும்படி கேட்டனர்.

    அதற்கு தாயார் மறுத்து விட்டார். பின்னர் அவரது தந்தை மற்றும் சகோதரர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களும் சிறுநீரகம் தர மறுத்துவிட்டனர்.

    ஆனால் சோனிகாவின் மாமியார் கனிதேவி (60) தனது மருமகளுக்கு சிறுநீரக தானம் வழங்கமுன்வந்தார். சோனிகாவை தனது மகளாக பார்க்கிறேன் என்றார். பல பரிசோதனைகளுக்கு பிறகு கடந்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

    தற்போது சோனிகா உடல் நலத்துடன் இருக்கிறார். தனக்கு சிறுநீரகம் கொடுத்து உயிர்காத்த மாமியாரை தாயாக பார்க்கிறேன்’’ என்றார்.
    கொச்சியை அடுத்த மஞ்சுமால் பகுதியில் உள்ள இமாக்குலேட் மாதா ஆலய நிர்வாகம், மாதாவுக்கு காணிக்கையாக வந்த 25 பவுன் தங்க நகையை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்துள்ளனர். #KeralaFloodRelief
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த மாதம் பெய்த பெருமழையால் சுமார் ரூ.20 ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டது.

    கேரளாவின் மறுகட்டமைப்பு பணிகளுக்கு நிவாரண நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதற்காக வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வாழும் மலையாளிகள் தாராளமாக நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.

    தமிழகத்தில் இருந்தும் ஏராளமானோர் நிதி உதவி வழங்கி வருகிறார்கள். சினிமா நடிகர், நடிகைகளும் வெள்ள நிவாரண நிதி வழங்கி உள்ளனர். ஏழை, எளிய மக்களும் தங்களால் இயன்ற நிதியை அளித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொச்சியை அடுத்த மஞ்சுமால் பகுதியில் உள்ள இமாக்குலேட் மாதா ஆலய நிர்வாகம், மாதாவுக்கு காணிக்கையாக வந்த தங்க நகையை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்துள்ளனர்.

    இந்த மாதா சிலை 19-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டில் இருந்து கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அதனை மஞ்சுமாலில் உள்ள ஆலயத்தில் நிறுவினர். ஆலயத்திற்கு வரும் மக்கள் மாதாவுக்கு காணிக்கையாக தங்க நகைகளும், வெள்ளிப் பொருட்களும் வழங்கினர்.

    இதில் மாதாவுக்கு 25 பவுன் எடையில் தங்க நெக்லஸ் செய்யப்பட்டு மாதாவின் கழுத்தில் அணிவிக்கப்பட்டது. தற்போது கேரளாவில் ஏற்பட்ட சேதங்களுக்காக திரட்டப்படும் நிவாரண நிதிக்கு இந்த தங்க நெக்லசை வழங்க ஆலய நிர்வாகம் முன் வந்தது.

    இதுபற்றி ஆலய பங்கு தந்தை வர்க்கீஸ் தனிச்சக்காட்டு கூறும்போது, மாதா அணிந்த நகையை நன்கொடையாக வழங்க முன் வந்தது மூலம் மற்றவர்களும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தாராளமாக உதவுவார்கள் என்று நம்புகிறோம். மாதா ஆலயம் அமைந்துள்ள மஞ்சுமால் பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே இங்கு நிவாரண பணிகளுக்காக நாங்கள் இதனை நன்கொடையாக வழங்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே வாரப்புழா ஆர்ச் டயோசீஸ் ஆயரும் அவரது அதிகாரத்தின் கீழ் வரும் அனைத்து ஆலயங்களிலும் நடைபெறும் விழாக்களை ரத்து செய்து விட்டு அதற்கான பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க அறிவுறுத்தி உள்ளார்.

    மேலும் ஆயர் பயன்படுத்தி வந்த காரையும் ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.  #KeralaFloodRelief
    கேரளாவை சேர்ந்த சகோதரர்கள் தங்களது ஒரு ஏக்கர் நிலத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர். #KeralaFlood #Teenage #OfferLand
    திருவனந்தபுரம்:

    கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவி வழங்கி வருகிறார்கள். பலர் பொருட்களாகவும், பணமாகவும் தங்களது ஆதரவுக்கரத்தை நீட்டி வருகிறார்கள்.



    கேரளாவை சேர்ந்த சகோதரர்கள் தங்களது ஒரு ஏக்கர் நிலத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர்.

    வடக்கு கன்னூர் மாவட்டம் பையனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர் சுவாகாவும், அவரது தம்பியும் சேர்ந்து கேரள முதல்-மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர். இதுதொடர்பாக பள்ளி முதல்வர் மூலமாக அவர்கள் அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இதற்கு சகோதரர்களின் தந்தையும் சம்மதம் தெரிவித்து உள்ளார்.

    சகோதரர்கள் ஒரு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்க இருப்பதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகிறது.  #KeralaFlood #Teenage #OfferLand
    வெள்ளச் சேதத்தால் தள்ளாட்டம் போடும் கேரளா அரசின் துயர் துடைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆந்திர அரசு பணியாளர்கள் 20 கோடி ரூபாய் நன்கொடை அறிவித்துள்ளனர். #Keralaflood #Keralafloodrelief
    ஐதராபாத்:

    வரலாறு காணாத பேரழிவில் சிக்கியுள்ள கேரள மக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

    அவ்வகையில், ஆந்திர அரசில் பணியாற்றும் என்.ஜி.ஓ.க்கள் ( Non-Gazetted Officers) சார்பில் கேரளா அரசின் துயர் துடைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆந்திர அரசு பணியாளர்கள் 20 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்படும் என அம்மாநில என்.ஜி.ஓ.க்கள் சங்கத் தலைவர் அசோக் பாபு இன்று தெரிவித்துள்ளார்.

    அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு இந்த தொகை அனுப்பப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், தங்களது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக அளிக்க ஆந்திர மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கமும் முன்வந்துள்ளது. #Keralaflood #Keralafloodrelief
    கேரளா வெள்ள நிவாரணத்துக்கு அதிமுக கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #EdappadiPalaniswami
    சென்னை:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.  மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. நேற்று மட்டும் 33 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரளா வெள்ள நிவாரணத்துக்கு அதிமுக கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு அதிமுக கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிதியாக தருவார்கள். மேலும், கேரளாவுக்கு உணவு, உடை உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #EdappadiPalaniswami
    மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரிடரை சந்தித்துள்ள கேரள மாநிலத்தின் துயர் துடைப்பு பணிகளுக்கு 10 கோடி ரூபாய் நிவாரணத்தொகையாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. #KejriwalannouncesRs10cr #floodhitKerala
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மழை பாதிப்பால் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், 100 வருடங்களில் இல்லாத இந்த மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்து வருவதாகவும் பிணராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரிடரை சந்தித்துள்ள கேரள மாநிலத்தின் துயர் துடைப்பு பணிகளுக்கு 10 கோடி ரூபாய் நிவாரணத்தொகையாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவில், கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சகோதர-சகோதரிகளுக்கு அனைவரும் தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு கேட்டு கொண்டுள்ளார். #KejriwalannouncesRs10cr #floodhitKerala
    ×