என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 100684"
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் மெயின் பஜார் வீதியை சேர்ந்தவர் மாதவன் (வயது52). டீக்கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்படவே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
தேனி:
தேனி அருகே பழனிசெட்டிபட்டி வடக்கு ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் சின்னத்துரை மகள் அமுதா(வயது14). இவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு விரக்தி அடைந்தார்.
வீட்டில் இருந்த அமுதா திடீரென மாயமானார். அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை சின்னத்துரை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
தேனி:
கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் கம்பம் மெட்டு 18-ம் கால்வாய் பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்ற சிவசாமி மற்றும் கேரளாவை சேர்ந்த சாபு ஆகியோர் தப்பி ஓட முயன்றனர். இதில் சாபுவை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் தேனி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் தலைமையிலான போலீசார் உழவர்சந்தை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா விற்ற இளங்கோவன் என்பவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் கஞ்சா எங்கிருந்து விற்பனைக்கு வாங்கி வந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே கோம்பை அரண்மனைத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 42). குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.
இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. மனைவி கண்டித்த போதும் பாண்டியராஜன் தொடர்ந்து மது குடித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டுக்கு போதையில் தள்ளாடியபடியே வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி தினமும் குடித்து விட்டு வருகிறீர்களே என்று கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த பாண்டியராஜன் விஷம் குடித்து மயங்கினார். உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தேனிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பாண்டியராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள புலிக்குத்தி நடுத்தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் ரம்யா (வயது23).
இவருக்கும் சருத்து பட்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ரெங்கராஜ் (28) என்பவருக்கும் நேற்று முன்தினம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணம் முடித்து நேற்று காலை மணமக்கள் புலிக்குத்தியில் உள்ள பாண்டியன் வீட்டிற்கு வந்தனர்.
பின்னர் பாண்டியன் மகளையும் மருமகனையும் அருகில் உள்ள பழமையான தந்தை வீட்டிற்கு செல்லுமாறு கூறினார். மணமக்களை ரம்யாவின் உறவினர் முத்துகிருஷ்ணன் (27) என்பவர் அழைத்து சென்றார்.
அப்போது ரெங்கராஜிக்கு செல்போன் அழைப்பு வரவே மனைவியை முன்னே செல்லுமாறு கூறி விட்டு பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் சென்றபோது மனைவி ரம்யாவும், உடன் வந்த அவரது உறவினர் முத்துகிருஷ்ணனும் மயங்கிய நிலையில் கிடந்தனர்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து சத்தம்போட்டார். உடனே உறவினர்கள் ஓடிவந்து விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த அவர்களை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். முத்துகிருஷ்ணனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான மறுநாளே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இரு வீட்டாரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
தேனி:
தேனி அருகே உத்தமபாளையம் ராமசாமி நாயக்கன்பட்டி ரேசன் கடை தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரித்திகா (வயது 22). இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளான். சம்பவத்தன்று முத்துப்பாண்டி வேலைக்கு சென்று விட்டார்.
தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்ற பிரித்திகா மகனை அங்கு விட்டு விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு தரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் நண்பர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர்.
எங்கும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
தேனி அருகே தேவாரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மோகன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ஜெயா (வயது 43). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு யுவன் பிரசன்னா (19) என்ற மகனும் சஞ்சனா (14) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியை ஜெயா, அவரது மகன், மகள் மற்றும் உறவினர்கள் நிறைவுமதி, யாசிகா ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதில் ஜெயா மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
மற்றவர்கள் தேவாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயா பரிதாபமாக உயிரிழந்தார். அவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாக உறவினர்கள் தெரிவித்தனர்.
மேலும் காய்ச்சல் பாதிக்கப்பட்ட மற்ற 4 பேரின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆசிரியை ஜெயாவின் மகன், மகள் மற்றும் உறவினர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருக்குமோ என உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனை முடிவு கிடைத்த பிறகே அவர்கள் என்ன காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வரும்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. அதில் ஒருவர் இறந்தது அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue
தேனி:
தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒரிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் சோதனை நடத்திய அதிகாரிகள் அங்கிருந்து ரூ14,500 பணத்தை கைப்பற்றினர்.
நேற்று மாலை 6.30 மணிக்கு பழனிசெட்டிபட்டியில் உள்ள தேனி மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு மதுரை மண்டல வருவாய்த்துறை சிறப்பு ஆய்வுக்குழு அலுவலர் அசோக்குமார் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வந்தனர். இரவு 9.15 மணி வரை 3 மணி நேரம் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன் செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி இயக்குனர் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர். சோதனையின் போது அலுவலகத்தின் நாற்காலிகளுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.80,200 பணத்தை போலீசார் கைப்பற்றினர். இந்த பணம் கணக்கில் காட்டப்படாத பணம் என தெரிய வந்தது.
விசாரணை நடந்து கொண்டு இருந்த போது அலுவலக மஸ்தூர் பணியாளர் வெளியே சென்றார். அவரை மீண்டும் அழைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை செய்து பினனர் வெளியே அனுப்பினர்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக பல்வேறு அலுவலகங்களில் தொடர் சோதனை நடத்தி வருவதால் அடுத்து எந்த அலுவலகத்துக்கு வருவார்களோ என அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர்.
பழனி:
பழனி முருகன் கோவிலில் நூற்றுக்கணக்கானோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஓய்வூதியம் பெறும் நபர்கள் ஆண்டு தோறும் தங்கள் அடையாளத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்காக பழனி கோவில் தங்கும் விடுதியில் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம் முன்னிலையில் ஆள் அறிதல் புதுப்பிப்பு முகாம் நடந்தது.
இந்த முகாமில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து டி.எஸ்.பி. சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் அங்கு வந்த போலீசார் கணக்கில் வராத ரூ.34 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஓய்வூதிய பலன்கள் வழங்குவதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டது தெரிய வந்ததால் பணத்தை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தேனி லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையில் அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலக பணியாளர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.14 ஆயிரத்து 680-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்தவர்களிடம் தீபாவளி இனாமாகவும், வேறு பெயர்களைச் சொல்லியும் வசூல் செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. #Vigilance
கூடலூர்:
வடகிழக்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் முல்லைப் பெரியாறு, வைகை அணை உள்பட தேனி மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வடகிழக்கு பருவமழை தாமதமானது.
நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டததில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஆங்காங்கே சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.
இந்த மழை அடுத்த போக சாகுபடிக்கு கைகொடுக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். கேரளாவில் சாரல் மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து 1,268 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1,990 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 132.75 அடியாக உள்ளது.
வருஷநாடு மலை மற்றும் வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த வரும் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து 2,168 கன அடியாக உள்ளது. அது அப்படியே திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 69 அடியாகவே நீடிக்கிறது.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.30 அடியாக உள்ளது. 20 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையில் நீர் மட்டம் 126.11 அடியாக உள்ளது. 30 கன அடி நீர் வருகிறது. அது அப்படியே திறந்து விடப்படுகிறது.
தேக்கடி 5.2, கூடலூர் 1.4, சண்முகா நதி அணை 2, உத்தமபாளையம் 0.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
தேனி:
தேனி அருகே கோடாங்கிபட்டி போடி மெயின்ரோடு பகுதியில் தனியார் மசாலா கம்பெனி உள்ளது. இங்கு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 12 சீரக மூட்டைகளை மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்தது.
இது குறித்து அதன் மேலாளர் ஜெகதீசன் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டி பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தையா. இவர் கம்பம் மெயின்ரோட்டில் அரிசி கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை மூடிச் சென்றார். மறுநாள் காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம் பக்கத்தினர் முத்தையாவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது 31 அரிசி மூட்டைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து உத்தமபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்