search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சை"

    தஞ்சையில் அரசு கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மண்டல அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். தஞ்சை மண்டல தலைவர் ராஜராஜன், செயலாளர் கோவிந்தராசு, துணைத்தலைவர் நிலாவழகன், இணை செயலாளர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உண்ணாவிரதப்போராட்டத்தில், கிராமப்புற கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க விரைவில் ஆசிரியர் நியமிக்க வேண்டும். தர ஊதியம் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை பெறுவதற்கான அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும். எம்.பில், பி.எச்டி முடித்தவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

    2015-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முழு தகுதிச்சான்று, பணிவரன்முறை ஆணை வழங்க வேண்டும். உறுப்புகல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி அரசாணை வெளியிட வேண்டும். அரசு கல்லூரிகளின் பாதுகாப்புக்கென அறிவிக்கப்பட்ட சுற்றுச்சுவர் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டு ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பன்னீர்செல்வம், ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் கிட்டு, பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், மண்டல செயலாளர் சேவியர்செல்வகுமார், பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் இளமுருகு, அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கோதண்டபாணி ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர்.

    முடிவில் தஞ்சை மண்டல பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.
    குடிநீர் வினியோகம் செய்ய கோரி தஞ்சையில், காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜிப்பட்டி முத்துசாமிநகர், ராதாகிருஷ்ணன் நகர், வி.எஸ்.காலனி, ஏ.கே.எல்.காலனி ஆகியவற்றில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீரை ஏற்றி வைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 1 மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த 25-க்கும் மேற்பட்ட பெண்கள், காலிக்குடங்களுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஈஸ்வரிநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். குழந்தைகள் சிலரும் குடங்களுடன் பங்கேற்றனர். இதை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழுதான ஆழ்குழாய் கிணற்றை சரி செய்து, குடிநீர் வினியோகம் செய்ய உடனே நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது.

    இதையடுத்து பெண்கள், மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பெண்கள் சிலர் கூறும்போது, ஆறுகளில் தண்ணீர் நிரம்பி செல்லும் நேரத்தில் கூட நாங்கள் குடிநீருக்காக போராட வேண்டிய நிலை உள்ளது. குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப சிரமப்படுகிறோம். வீட்டு வேலைகளும் செய்ய முடியவில்லை. அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மறியலில் ஈடுபட்டோம் என்றனர். 
    பொறியியல் பிரிவுக்கான பணி நடைபெறுவதால் திருச்சி-தஞ்சை, தஞ்சை-திருச்சி இடையே ஓடும் பயணிகள் ரெயில் வருகிற 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முழுமையாக இயக்கப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
    திருச்சி:

    திருச்சி ரெயில்வே கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் பொறியியல் பிரிவுக்கான பணி நடக்கிறது. அதையொட்டி, திருச்சி-தஞ்சை, தஞ்சை-திருச்சி(வண்டி எண்:76824/76827) இடையே ஓடும் பயணிகள் ரெயில் 3 சனிக்கிழமைகளில், அதாவது வருகிற 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முழுமையாக இயக்கப்படுவது ரத்து செய்யப்படுகிறது. திருநெல்வேலி-மயிலாடுதுறை, மயிலாடுதுறை-திருநெல்வேலி (வண்டிஎண்: 56822/56821) இடையே ஓடும் பயணிகள் ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் 31-ந் தேதிவரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16234) ரெயில், ஆலக்குடி-தஞ்சை இடையே நடக்கும் பணி காரணமாக இன்று(புதன் கிழமை) முதல் 31-ந் தேதிவரை 60 நிமிடம் தாமதமாக வந்து மயிலாடுதுறையை சென்றடையும். சென்னை எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ் பிரஸ்(வண்டிஎண்:12635) ரெயில், 18-ந் தேதி, 20-ந் தேதி மற்றும் 21-ந் தேதி ஆகிய 3 நாட்கள் வழக்கமான நேரத்தை விட 20 நிமிடம் தாமதமாக திருச்சியை வந்தடையும். சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினல்-நாகர்கோவில் ஜங்ஷன் வாராந்திர எக்ஸ்பிரஸ்(வண்டி எண்:16351) ரெயில் 12-ந் தேதி, 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் அரியலூர் மற்றும் திருச்சிக்கு 15 நிமிடம் தாமதமாக வந்து சேரும்.

    மேலும் காரைக்கால்-திருச்சி இடையே ஓடும் பயணிகள் ரெயில்(வண்டி எண்:56711) 11-ந் தேதி முதல் 16-ந் தேதிவரை காரைக்காலில் வழக்கமாக பகல் 12.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 45 நிமிடம் தாமதமாக, அதாவது 1.15 மணிக்கு புறப்படும்.

    மேற்கண்ட தகவல் திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    தஞ்சை, நாகை மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக புகார்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
    திருவாரூர்:

    கோவை சாய்பாபா காலனியில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுக்களை அச்சடித்த கும்பல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிக்கியது. அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகம் மற்றும் கேரளாவில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதன் எதிரொலியாக ரூ.2000 நோட்களை வாங்க வியாபாரிகள் அஞ்சுகின்றனர்.

    டெல்டா மாவட்டங்களில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகளில் தினமும் மதுவாங்க கூட்டம் நிரம்பி வழிவதால் டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 கள்ள நோட்டுக்களை மாற்ற முயற்சி செய்வது தெரியவந்துள்ளது.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நானலூர் பகுதியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (வயது 35). இவர் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை விலைக்கு வாங்கி அதனை வெளியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்.

    இவர் நேற்று களப்பாலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி கொண்டு ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்துள்ளார். அதனை வாங்கி பார்த்த சூப்பர்வைசர் ராஜசேகரன் அது கள்ள நோட்டு போல் இருந்ததால் களப்பால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஹரி கிருஷ்ணன் கொடுத்த ரூ.2 ஆயிரம் நோட்டை ஆய்வு செய்தனர். இதில் அது கள்ள நோட்டு என்பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரி கிருஷ்ணனை கைது செய்தனர்.

    டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் கள்ள நோட்டு புழக்கத்தில் விடுவது தெரியவந்ததுள்ளதால் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கைதான ஹரி கிருஷ்ணனிடம் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டை கொடுத்தது யார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் தஞ்சை, நாகை மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக புகார்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    தஞ்சையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற யோகா பயிற்சியில் 340 இளநிலை போலீசார் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பணியாற்றும் போலீசாருக்கு அதிகளவில் பணிசுமை உள்ளதாகவும், இதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போலீஸ் அதிகாரிகள் முதல் போலீஸ்காரர் வரை தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்தன. இது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    உயர் அதிகாரிகளின் டார்ச்சர் மற்றும் பணிசுமை காரணமாக மன அழுத்தம் போலீசாருக்கு ஏற்பட்டு தற்கொலைக்கு தூண்டப்படுவதாக தெரிய வந்தது.

    இதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள போலீசாருக்கு அவ்வப்போது யோகா பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த யோகா பயிற்சி காரணமாக மன அழுத்தம் குறைந்து தற்கொலைக்கு தூண்டப்படுவது தவிர்க்கப்படுகிறது. மேலும் போலீசார் புத்துணர்ச்சியுடன் பணியாற்றவும் உதவுகிறது.

    இந்த நிலையில் தஞ்சையில் உள்ள இளநிலை போலீஸ் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான யோகா பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் தஞ்சை, வல்லம், திருவையாறு ஆகிய சப்-டிவிசன்களில் இருந்து இளநிலை போலீசார் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 340 பேர் கலந்து கொண்டனர். காவலர்களுக்கு யோகா செய்வது குறித்த பயிற்சியை திருச்சி யோகா மாஸ்டர் ராமசாமி வழங்கினார்.

    மாமன்னன் ராஜராஜ சோழன் சிலை தஞ்சை பெரிய கோவிலுக்கு இன்று கொண்டு வரப்படுவதையடுத்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு திருட்டு போன ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்தரசி லோகமாதேவி ஐம்பொன் சிலைகள் குஜராத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன்படி தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை போலீசார் சிலைகளை மீட்டுள்ளனர். ரூ.150 கோடி மதிப்பிலான இந்த 2 சிலைகளும் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ரெயில் மூலம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

    இந்தநிலையில் இன்று தஞ்சை பெரிய கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

    50 வருடங்களுக்கு முன்பு திருட்டு போன ராஜ ராஜ சோழன் சிலை, அவரது பட்டத்தரசி லோகமாதேவி சிலை தஞ்சை பெரிய கோவிலில் இருந்ததா? என்பது கூட பல பேருக்கு தெரியாது. இந்த திருட்டு சம்பவம் அவ்வாறு மூடி மறைக்கப்பட்டு இருந்தது. சிலைகள் திருட்டு போனது தெரிய வந்ததால் தமிழக சிலை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக செயல்பட்டு தற்போது சிலைகளை மீட்டுள்ளனர்.

    இன்று ராஜ ராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்திற்கு காலை 10 மணிக்கு கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

    ராஜராஜ சோழன் சிலை மற்றும் லோகமாதேவி சிலைகளை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேரில் பார்க்க ஆவலாக உள்ளனர். மேலும் மீட்ட சிலைகள் பெரிய கோவிலில் வைக்கப்படுவதால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சிலைகள் எப்பொழுதும் பார்க்கும் வகையில் பாதுகாப்பான இடத்தில் வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பால சுப்பிரமணியன் கூறியதாவது:-

    சிலை மீட்பு நிச்சயமாக வரலாற்று சாதனை தான். பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை மீட்பு குழுவினர் திறமையாக செயல்பட்டு சாதித்து காட்டியுள்ளனர். அவர்களின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று கூறலாம். இதுபோல் பல கோவில் சிலைகள் காணாமல் போய் உள்ளன. இந்த சிலைகளையும் இந்த அரசு மீட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே கூறியதாவது:-

    தஞ்சையில் உலக புகழ் பெற்ற பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சிலை அவருடைய பட்டத்தரசி லோகமாதேவி சிலை ஆகியவை மீட்கப்பட்டு இருப்பதால் தஞ்சை பகுதி மக்கள் மட்டுமின்றி உலகமே மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த சிலைகளை மீட்க பல கால கட்டங்களில் பலர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனாலும் சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மற்றும் அவரது குழுவினர் சிறப்பான முயற்சி எடுத்து சிலைகளை மீட்டுள்ளனர். அவர்களின் இந்த செயல் நிச்சயம் தஞ்சை வரலாற்றில் இடம்பெறும்.

    தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கூறியதாவது:-

    மாமன்னன் ராஜ ராஜ சோழன் சிலை மீண்டும் தஞ்சைக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இழந்த தமிழர்களின் பெருமையை மீட்டுள்ளனர். ராஜராஜ சோழன் சிலை பெரிய கோவில் வளாகத்தில் மக்கள் பார்வைக்காக பாதுகாப்பாக வைக்க வேண்டும். பழமையை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டுள்ள இந்திய தொல்பொருள் துறையினர் ஏற்கனவே பெரிய கோவிலில் எந்த இடத்தில் சிலை இருந்ததோ அந்த இடத்தில் மீண்டும் சிலை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிற்ப கலை, கட்டடக் கலையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் ராஜ ராஜ சோழன். தஞ்சை பெரிய கோவிலில் இருந்து அவருடைய ஒரிஜினல் சிலை காணாமல் போய்விட்டது. அவருடைய போலி சிலையை தான் இதுவரை நாம் வழிபட்டு வந்தோம்.

    இந்நிலையில் கொள்ளை போன ராஜராஜ சோழன் சிலையை, மீட்டு தஞ்சை பெரிய கோவிலுக்கு கொண்டு வர முயற்சி செய்த முன்னாள் எம்.பி சுவாமி நாதன், நீதிபதி மகாதேவன் மற்றும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தஞ்சையில் மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் வங்கி துறையில் செயல்பட்டு வரும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒன்பது தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    1.11.2017 முதல் வழங்கப்பட வேண்டிய 11-வது ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் எந்தவித நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் 2 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்க முடியும் என்று கூரிய இந்திய வங்கி நிர்வாகத்தை கண்டித்தும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இன்னும் ஒரு சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு வங்கியில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் வியாபாரிகள் மற்றும் சுப காரியங்கள் வைத்திருப்போர் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பணம் எடுக்க முடிவில்லை.

    தஞ்சையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தனர். தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மண்டலத் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், இந்திய வங்கி ஊழியர் செயலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சை மாவட்டத்தில் 30 தலைமை வங்கிகள் உள்ளன. 275 கிளை வங்கிகள் செயல்பட்டு வருகிறது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். தற்போது 11-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் ஏற்படாததாலும் 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் தஞ்சை மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தஞ்சையில் முன்னாள் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்கு வாசல் ஏ.வி.பதிநகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி என்ற புண்ணியமூர்த்தி (வயது 30). இவருக்கு திருமணம் முடிந்து விட்டது. புண்ணிய மூர்த்தி மீது 2011-ம் ஆண்டு தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்குகள், கொள்ளை வழக்குகள் உள்பட பல வழக்குகள் இருந்தன.

    பின்னர் தொடர்ந்து அந்த வழக்குகளை முடித்து விட்டு தற்போது பன்றிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் வடக்கு வாசல் பகுதியில் பன்றி இறைச்சி கடையும் வைத்து நடத்தி வந்தார்.

    தினமும் காலையில் பன்றி விற்பனைக்காக வெளியில் சென்று விட்டு பிற்பகல் வீட்டிற்கு வருவார். பின்னர் இரவு கடை வைப்பதற்கு தயாராகி பின்னர் கடைக்கு சென்று விடுவார். இதை தான் புண்ணியமூர்த்தி வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அவர் 2011-ல் ரவுடியாக சுற்றிதிரிந்ததை மறந்து திருந்தி வாழ்ந்து கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை புண்ணியமூர்த்தி வீட்டில் இருந்து வெளியே வந்து அவரது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தர்.

    அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் புண்ணியமூர்த்தியை வழிமறித்து அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே புண்ணியமூர்த்தி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதைத் தொடர்ந்து அந்த வழியாக சென்றவர்கள் புண்ணியமூர்த்தி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து தஞ்சை மேற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இந்த கொலை குறித்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.

    பின்னர் இந்த கொலையில் யார் ஈடுபட்டனர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். புண்ணிய மூர்த்தி முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    கொலையாளிகளை பிடிக்க சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் வரை ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில்ரேகையை பதிவு செய்தனர்.

    அதிகாலை நேரத்தில் மர்ம நபர்களால் முன்னாள் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த வல்லம், குறும்பூண்டியை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி ஹேமா (வயது 35). இவர்கள் மோட்டார் சைக்கிளில் திருமலைசமுத்திரம் சென்றனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஹேமா மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த பரிதாப சம்பவம் குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சையில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

    சுவாமிமலை:

    தஞ்சை வடக்கு மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் திருபுவனம் பேரூர் அ.தி.மு.க. சார்பில் கடைவீதியில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நகர செயலாளரும், திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்க தலைவருமான சிங் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

    மயிலாடுதுறை எம்.பி ஆர்.கே.பாரதிமோகன், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய தலைவருமான ஏ.வி.கே.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சரும், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான இரா.துரைக்கண்ணு கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு, நீர் மோர், தர்பூசணி, இளநீர், ரஸ்னா, பலாப்பழம் வழங்கினார்.

    இந்த விழாவில் திருபுவனம் நகர துணைச்செயலாளர் எல்.எஸ்.ஜோதி, தலைமை கழக பேச்சாளர் கோகி.பாஸ்கர், திருபுவனம் வேளாண்மைக் கூட்டுறவு வங்கி தலைவர் முத்துக்குமார், திருவள்ளுவர் பட்டுக்கூட்டுறவு சங்க தலைவர் ஜி.பன்னீர்செல்வம், மாவட்ட மகளிரணி துணைச்செயலாளர் வரலெட்சுமி, நகர பேரவை இணைச்செயலாளர் ஜி.மயில்வேல், ஆட்டோசங்கர், தியாகராஜன், நகர பாசறை செயலாளர் ராஜன், ராஜசேகரன், வெங்கடேஷ், தேவசகாயம், ஆனந்தன், ஜெயராமன், பழவண்டி நாகராஜன், குமரேசன், சிங் ரமேஷ் மற்றும் திருபுவனம் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தஞ்சையில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை எல்.ஐ.சி. காலனி மேற்கு விரிவாக்கப் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 60). இவர் கடந்த 14-ந்தேதி தஞ்சை பாஸ்போர்ட் அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளில் சாலையை கடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சுகுமார் தூக்கிவீசப்பட்டு பலத்தகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுகுமார் நேற்று இறந்தார். இது குறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பழனியப்பன் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தஞ்சைக்கு வந்தார்.

    அவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். இதை நோட்டமிட்டு கொண்டிருந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இந்நிலையில் வீடு திரும்பிய வெங்கடேஷ் கொள்ளை நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் தஞ்சை தமிழ் பல்கலைக் கழக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×