search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்பூர்"

    ஆம்பூர் அருகே ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    ஆம்பூர் அருகே உள்ள பச்சக்குப்பம் மேல்பட்டி இடையேயான தண்டவாளத்தில் 55 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே ஊருக்குள் புகுந்து ஆடு, மாடுகளை கொன்று வரும் சிறுத்தைகளை பிடிக்க 2 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

    ஆம்பூர்:

    ஆம்பூர் வனச்சரகத்தில் ஆந்திர மாநிலத்தின் கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக்காடுகளை ஒட்டி உள்ள காரப்பட்டு காப்புக்காடுகள், துருகம் காப்புக்காடுகள், ஊட்டல் வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் சிறுத்தைகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இதனால் அபிகிரிப் பட்டரை, பொன்னப்பல்லி, மலையாம்பட்டு, காட்டு வெங்கடாபுரம், மத்தூர் கொல்லை, சுட்டக்குண்டா, பைரப்பள்ளி, பெங்கள மூலை போன்ற பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளைத் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.

    சில காலங்களுக்கு முன்பு வனப்பகுதிகளுக்கு ஆடு, மாடுகளை மேய்க்க ஓட்டிச் சென்றால் அவற்றை சிறுத்தைகள் வேட்டையாடின. ஆனால், வெள்ளாட்டு கொட்டகைகள், மாட்டுக் தொழுவங்களுக்கு வந்து சிறுத்தை கால்நடைகளை தூக்கி செல்வது தற்போது வாடிக்கையாகிவிட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாம்பட்டை சேர்ந்த வெங்கடேசன் ஆட்டுப்பட்டியில் நுழைந்த 2 சிறுத்தைகள் இரு ஆடுகளை தூக்கி சென்றன. அதேபோல் இரு நாட்களுக்கு முன்பு அபிகிரிப்பட்டறை கலைஞர் நகரை சேர்ந்த ராஜகோபால் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். அப்போது ஆடு ஒன்றை சிறுத்தை தூக்கி சென்றது.

    சிறுத்தை தொடர்ந்து வேட்டையாடி வருவதால் வனப்பகுதி எல்லையோரக் கிராமத்தில் வசிக்கும் பயனாளிகள் ஆடுகளை வளர்ப்பதில் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    எனவே, சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் விரைவான நடவடிக்கை எடுத்துள்ளனர். அபிகிரிபட்டறை, அரவகல் துருகம் ஆகிய கிராமங்களில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை கூண்டு வைத்தபோது சிறுத்தை சிக்கவில்லை.

    இந்த முறையாவது பிடிபடுமா என கண்காணித்து வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் முன்னாள் எம்எல்ஏ சுந்தரவேல் அவரது மனைவி மற்றும் கார் டிரைவர் ஆகியோர் பலியாகினர். #RoadAccident #AKCSundarvel
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே கண்டெய்னர் லாரிக்குள் கார் புகுந்து நொறுங்கியதில் முன்னாள் எம்.எல்.ஏ., அவரது மனைவி, டிரைவர் பரிதாபமாக இறந்தனர்.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் சுந்தரவேல் (வயது 71). அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தற்போது தினகரன் அணியில் அ.ம.மு.க. நகர செயலாளராக உள்ளார்.

    இவரது மனைவி விஜயலட்சுமி (65). இருவரும் இன்று காலை காரில் சென்னை ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றனர். டிரைவர் வீரமணி (40) காரை ஓட்டிவந்தார்.

    காலை 6 மணிக்கு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் அருகே விண்ண மங்கலம் என்ற இடத்தில் வந்தபோது முன்னாள் சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியை முந்திசெல்ல டிரைவர் முயன்றார்.

    அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி லாரிக்குள் புகுந்தது. கண்டெய்னர் லாரியின் அடிப்பகுதியில் கார் சிக்கியதால் நொறுங்கி தீப்பொறி பறந்தது.

    சுமார் 25 மீட்டர் தூரம் கார் இழுத்து செல்லப்பட்டது. அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர் திடீர் பிரேக் போட்டு லாரியை நிறுத்தினார்.



    கார் நொறுங்கியதால் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரவேல் அவரது மனைவி விஜயலட்சுமி, டிரைவர் வீரமணி இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் லாரிக்குள் கார் சிக்கியதால் உடல்களை மீட்கமுடியவில்லை.

    இதனையடுத்து ஆம்பூர் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கிரேன் மூலம் லாரியை நகற்றி காரை வெளியே கொண்டுவந்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 3 பேர் உடல்களும் மீட்கப்பட்டது.

    உடல்களை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆம்பூர் தாலுகா போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் பெங்களூரு-சென்னை மார்க்கத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சுந்தரவேல் 1991-96 வரை திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் 2001 முதல் 2006 வரை திருப்பத்தூர் நகர மன்ற தலைவராகவும் இருந்தார். அவருக்கு 1 மகள் உள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ. இறந்த தகவலை அறிந்த அ.ம.மு.க.வினர் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர் இறந்தது கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #RoadAccident #AKCSundarvel
    ஆம்பூர் அருகே மூதாட்டியிடம் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள மேல்கிருஷ்ணாபுரம் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் மணி இவரது மனைவி பத்மாவதி (வயது 62). இவர் இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக நடந்து வந்த ஒரு மர்ம நபர் திடீரென பத்மாவதி அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு ஓடினார். அதிர்ச்சியடைந்த பத்மாவதி கூச்சலிட்டார். அதற்குள் அந்த நபர் தலைமறைவாகிவிட்டார்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் இறந்தன. கால்நடைத்துறையினர் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் வெள்ளாடுகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து கால்நடை மற்றும் சுகாதாரத் துறையினர் அப்பகுதிகளில் முகாமிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆம்பூர் அருகே மிட்டாளம், பைரப்பள்ளி, பந்தேரப்பள்ளி, வன்னிய நாதபுரம், ரகுநாதபுரம், மேக்கனாம்பல்லி, ராள்ளக்கொத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர்.

    அதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசு இலவசமாக வழங்கிய வெள்ளாடுகளையும் வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் இறந்தன.

    இந்நிலையில் மிட்டாளம், பைரப்பள்ளி பகுதிகளுக்கு கால்நடைத்துறையினர் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கால்நடைத்துறை நோய்கள் புலனாய்வு இணை இயக்குனர் டாக்டர் ஸ்ரீஹரி தலைமையில் கால்நடை டாக்டர்கள் ரமேஷ்குமார், பிரவீன்குமார் உள்ளிட்ட குழுவினரும், பொது சுகாதாரத்துறை வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமையில் மாவட்ட பூச்சியியல் நிபுணர் காமராஜ், வட்டார சுகாதார அலுவலர் ரஷீத், சுகாதார ஆய்வாளர் பிரேம் உள்ளிட்ட குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதுகுறித்து கால்நடை துறையின் நோய்கள் புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் ஸ்ரீஹரி கூறியதாவது:-

    வழக்கத்தை காட்டிலும் அதிக பனிப்பொழிவே வெள்ளாடுகள் இறப்புக்கு காரணம். திறந்த வெளியில் உள்ள பட்டிகளில் வெள்ளாடுகளை அடைக்கக்கூடாது. கூரை மேய்ந்த கொட்டகைகளில் மட்டுமே ஆடுகளை அடைத்து பாதுகாக்க வேண்டும்.

    ஆடுகளுக்கு நோய் தாக்குதல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். நோய் தாக்கி வெள்ளாடுகள் இறந்தால் அவற்றை குழி தோண்டி புதைக்க வேண்டும். உணவுக்காக சம்மந்தப்பட்ட வெள்ளாட்டின் இறைச்சியை பயன்படுத்தக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், நோய் தாக்குதலுக்கு ஆளான வெள்ளாட்டு கொட்டகைகளை பார்வையிட்டனர். வெள்ளாடுகளின் சளி, சாணம் போன்றவற்றை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

    ஆம்பூர் அருகே வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் கோகுல் (வயது 25). இவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் இன்று காலை அவரது வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது கோகுல் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது.

    போலீசார் நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து கோகுலை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    ஆம்பூர் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்ததில் ரஜினி பட டெக்னீசியன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். #Accident

    ஆம்பூர்:

    சென்னை பட்டாபிராம் அண்ணா நகரை சேர்ந்தவர் சுந்தர் (வயது 34). இவர் ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான 2.0 படத்தில் கிராபிக்ஸ் டெக்னீசியனாக பணியாற்றி உள்ளார். இவரது மனைவி மாயா (25). இவர்களது குழந்தை கீர்த்தி (2).

    சுந்தர் தனது குடும்பத்துடன் இன்று காலை பெங்களூருக்கு காரில் புறப்பட்டு சென்றார். ஆம்பூர் அடுத்த மின்னூர் என்ற இடத்தில் கார் சென்ற போது நிலை தடுமாறி சாலை ஓரம் இருந்த தரைமட்ட கிணற்றில் கார் கவிழ்ந்தது. இதில் சுந்தர், மாயா, குழந்தை கீர்த்தி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    கிணற்றுக்குள் கிடந்ததால் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பது தெரியாமல் 3 பேரும் தவித்தனர். அங்கிருந்து கத்தி கூச்சலிட்டனர். யாரும் காப்பாற்ற வரவில்லை. சுந்தர் தனது செல்போன் மூலம் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து காருடன் விபத்துக்குள்ளாகி கிணற்றில் கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் போலீசார் உதவியுடன் வந்த அங்கு தேடி பார்த்தனர். அவர்களுக்கும் காயமடைந்த 3 பேரும் இருந்த இடம் உடனடியாக தெரியவில்லை. தற்சமயமாக விபத்து நடந்த கிணற்றில் எற்றி பார்த்த போது அவர்கள் அங்கு இருப்பது தெரியந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடனடியாக அவர்களை மீட்டனர். சுந்தர் அவரது குடும்பத்துடன் 1½ மணி நேரம் கிணற்றுக்குள் தவித்தனர். கிணற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருந்ததால் அவர்கள் உயிர் தப்பித்தனர்.

    அவர்கள் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  #Accident

    ஆம்பூர் அருகே பைக் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் பேபி காலனி பகுதியில் ஆம்பூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகபடும்படி சுற்றிதிரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த முகமது முஸ்தபா (வயது 18). தன்சூர் அகமது (19). நூரில் அமின் (23). என்பது தெரிய வந்தது.

    மேலும் ஆம்பூர் சுற்று வட்டார பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் கோவில் உண்டியலை உடைத்து மர்ம கும்பல் பணத்தை திருடி சென்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் கிருஷ்ணாபுரம் பகுதியில் பெருமாள் கோவில் உள்ளது. அதன் அருகிலேயே 9-வது தெருவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சேர்ந்து முருகர் கோவில் கட்டினர்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு முருகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    5 நாட்களுக்க முன்பு தான் கோவில் கும்பாபிஷேகம் நடந்ததால் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என கோவில் நிர்வாகிகளுக்கு தெரியவில்லை.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் மணல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் வெங்கிளி, ஜமீன் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிரே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து லாரி டிரைவர் அமரேசன் (வயது 30). என்பவரை கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்து ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    ஆம்பூர் அருகே வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த தோட்டாளத்தை சேர்ந்த சாமிநாதன் மகன் ரமேஷ் (வயது 27). வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக ஆம்பூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் ரமேஷ் வீட்டில் திடீர் சோதனை செய்தனர்.

    வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து ரமேசை கைது செய்தனர்.

    ஆம்பூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த நரியாம்பட்டு பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி ரஜினா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சுசிலா (வயது 14). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பும், அவரது தங்கை சுஸ்மிதா (12). 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை சகோதரிகள் 2 பேரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென கைகலப்பாக மாறியது.

    இதனை கண்ட ரஜினா, சுசிலாவை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சுசிலா வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் உடலை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×