என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மீடூ"
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் எம். எல்.ஏ.வுமான தமிமூன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கி விட்டதால் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இரண்டாவது கட்ட தூர்வாரும் பணிகளை ஆறுகள் மற்றும் ஏரிகளில் செய்யவேண்டும். சபரிமலை விவகாரத்தில் இந்து மக்கள் மற்றும் இந்து மதத் தலைவர்களின் கருத்துக் களைத்தான் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மத சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் உணர்ச்சிப்பூர்வமாக உத்தரவை பிறப்பிக்காமல் அறிவுரை கூறுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சபரிமலை கோவிலுக்குள் உள்ளே நுழைய முயன்ற சமூக ஆர்வலர் ரெகனாவிற்கும், முஸ்லிம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது. அவர் 2016-ம் ஆண்டு மதமாற்றம் ஆகிவிட்டார். மனிதநேய ஜனநாயக கட்சி தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. நல்லது செய்தால் வரவேற்போம். குறைகளை சுட்டிக்காட்டுவோம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அரசில் தொய்வு இருந்தது உண்மை. எடப்பாடி அரசு 6 மாதத்திற்குள் கவிழ்ந்து அனைவரும் நினைத்தது போன்று எனது எம்.எல்.ஏ. பதவியும் போய்விடும் என்று நான் பயந்தேன். ஆனால் அதையெல்லாம் முறியடித்து அ.தி.மு.க. அரசு ஒன்றரை ஆண்டு காலம் ஆட்சி நீடித்து வருகிறது.
தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழக அரசின் செயல்பாடு குறித்து இன்னமும் 6 மாதம் கழித்துதான் கருத்து கூற முடியும். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் நான் கோரும் கோரிக்கைகள் 90 சதவீதம் அரசால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
காமராஜர் ஆட்சிக்கு பிறகு நடைபெற்ற அனைத்து ஆட்சியிலும் ஊழல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டு தான் வந்துள்ளது. எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள் வரிப் பணத்தில் தான் சாலை பணிகள் உட்பட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. எனவே எந்த அரசு வந்தாலும் அதை நினைவில் வைத்துக் கொண்டு பணிகளை செய்ய வேண்டும்.
தற்போது நடைபெற்று வரும் அரசியல் சதுரங்க விளையாட்டில் நாளை என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எம்.எல்.ஏ. கருணாஸ் கூறிய கருத்துக்கள் ஏற்புடையது அல்ல . ஆனால் அவர் மன்னிப்பு கேட்டும் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு எச். ராஜா மற்றும் எஸ்.வி. சேகர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான்.
மீ டூ விவகாரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வெளிவருவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கண்டிப்பாக வெற்றி பெறப்போவது கிடையாது. மனிதநேய ஜனநாயக கட்சி யாருடன் கூட்டணி என்பதை அந்த நேரத்தில்தான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார். #thamimunansari #metoo
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி கரூர் மாணிக்கம் இல்லத் திருமண விழா நடந்தது. இதில் கே.பி.முனுசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டி.டி.வி. தினகரனின் செயல்பாடுகள் சூதாட்டம் ஆடுவது போன்று உள்ளது. அப்பாவி தொண்டர்களை ஏதேனும் சொல்லி, ஏமாற்றும் நிலையில் உள்ளார். ஆனால் தொண்டர்களை ஏமாற்ற முடியாது.
நம் நாடு பல்வேறு மதங்கள் கலாச்சாரங்கள் சார்ந்தது. அந்த உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் நடத்தப்பட வேண்டும். சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு எந்த மாதிரி நடவடிக்கைகளை எடுக்கின்றது என பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒரு காலத்தில் பெண்களை இந்த சமூகம் பாரபட்சமாக நடத்தியதுண்டு. அப்போது பெண்கள் பாலியல் தொல்லை குறித்து வெளியே சொல்வதற்கு வாயப்பில்லாமல் இருந்தது. மேலும் வெளியில் சொன்னால் மானம் மரியாதை போய் விடும் என்ற பயமும் இருந்தது. ஆனால் இப்போது மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #kpmunusamy #dinakaran #metoo
பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீடூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்தும், இதனால் தாங்கள் அனுபவித்த மனவேதனை குறித்தும் பெண்கள் தைரியத்துடன் வெளிப்படுத்தி வருகின்றனர். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர்.
இதுதொடர்பான செய்திகளை பார்க்கும், கேட்கும் பொதுமக்களிடம் இருந்து பரவலாக வரும் கேள்வி என்னவென்றால், இத்தனை ஆண்டுகள் மவுனமாக இருந்துவிட்டு, இப்போது ஏன் புகார் கூற வேண்டும்? என்பதுதான். சுய விளம்பரத்திற்காகவோ அல்லது சமூகத்தில் அந்தஸ்துடன் உள்ள நபர்களை அவமானப்படுத்தும் நோக்கத்திற்காகவோ இதுபோன்ற ஆதாரமற்ற புகாரை கூறுவதாக பலர் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில், பாலியல் தொடர்பான புகார் கொடுப்பதற்கான காலவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் தற்போதும் புகார் அளிக்கலாம் என்றும், போக்சோ சட்டத்தில் புகார் அளிக்க எந்தவித காலவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. #MeToo #MeTooComplaint #POCSO #HarassmentComplaint
கரூரில் அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி இளைஞர் எழுச்சி நாள் விழா மற்றும் உடல்நல விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவரும், நடிகருமான சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என ஆகமவிதி இருக்கிற போது, பாலின சமத்துவத்தை சுட்டிக்காட்டி பெண்களை அங்கு அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது ஏற்புடையதல்ல.
சபரிமலைக்கு என புனிதம் இருக்கிறது. அதனை காத்திட வேண்டும். சில கோவில்களில் ஆண்கள் சட்டையை கழற்றி விட்டுத் தான் செல்ல வேண்டும் என கூறுவார்கள். அங்கு சட்டையுடன் தான் செல்வேன் என கூற முடியுமா? எனவே கோவில்களுக்கு என்று வகுக்கப்பட்ட நம்பிக்கையை நாம் கடைபிடித்து தான் ஆகவேண்டும். எனவே பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது.
ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தில் ஆட்சி நடக்கிற போது, அதில் குறைகள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அதனை மத்திய அரசுக்கு எடுத்து சொல்பவராக தான் கவர்னர் இருக்க வேண்டும். இதை விடுத்து கவர்னர் ஆய்வுக்கு செல்லக் கூடாது. அப்படியெனில் பிரதமர் மோடி செல்ல வேண்டிய இடத்திற்கு, ஜனாதிபதி ஆய்வுக்கு செல்ல முடியுமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
சிங்கப்பூரில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துகிறார்கள். எனவே வரும் காலத்தில் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தண்ணீரை பாதுகாப்பது, மரம் நடுதல் உள்ளிட்டவை குறித்து ஆஸ்க் சரத்குமார் என்கிற செயலி மூலம் நடவடிக்கை எடுப்பதில் தீவிரமாக இருக்கிறோம்.
மீண்டும் மோடி பிரதமர் ஆவாரா? இல்லையா? என ஜோசியம் சொல்ல முடியாது. ஆனால் ஆக மாட்டார் என்பது எனது ஆழமான கருத்து.
கூட்டணி குறித்து பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருகிற போது எனது நிலைபாட்டை அறிவிப்பேன். ஸ்டெர்லைட் விவகாரத்தில் சிக்கிய வேதாந்தா நிறுவனத்திற்கு மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
பெண்களை மதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும். எந்த விதத்திலும் துன்பப்படுத்தக்கூடாது. அது நமது கடமை. பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களில் பாடகி சின்மயி பிரச்சனையால் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எந்த தவறு நடந்தாலும் தைரியமாக சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் பெண்கள் காலதாமதம் செய்யக்கூடாது. எப்போதோ செய்த தவறை பல ஆண்டுகள் கழித்து சொல்லும் போது அந்த மனிதன் மட்டுமல்ல அவனை சார்ந்த குடும்பமும் அசிங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #SamathuvaMakkalKatchi #Sarathkumar #MeToo
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் பெண்கள் பாதுகாப்புக்காக ரவுத்திரம் என்ற மொபைல் செயலி தொடக்க விழா தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் நடந்தது.
செயலியை தொடங்கி வைத்து கமல்ஹாசன் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.
‘மாணவர்களின் கைகளில் தான் எதிர்காலம் இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்காக எழுந்தது போல் மாணவர்கள் மீண்டும் புரட்சி செய்ய வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களின் பாதுகாப்புக்காகவே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது’.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விகளும் கமல் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தோல்விகளை வெற்றியாக மாற்றுவது எப்படி?
பதில்:- தோல்விகள் தான் நம்மை வெற்றியை நோக்கி கூட்டிசெல்லும். தோல்வியை பார்த்து யாரும் தயங்கவேண்டாம். எல்லா தோல்விகளிலும் உங்களுக்கு சில படிப்பினைகள் கிடைக்கும். தோல்விப்படிகளை தொடும் போது வெற்றிப்படி கண்ணில் பட்டுவிடும். எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்துகொண்டால் எதை செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்ய முடியும்.
கேள்வி :- குற்றசாட்டுகள் கூறும்போது ஆதாரம் கேட்டால் என்ன செய்வது?
பதில்:- ஆதாரம் இல்லாத சமயங்களில் குரல் எழுப்பலாம். யாராவது பார்த்திருப்பார்களா? அவர்களுக்கு சாட்சி சொல்வார்களா? என்று பார்க்கலாம். ஆதாரம் இல்லாமல் பொய் குற்றசாட்டு சொல்பவர்களும் இருக்கிறார்கள். கண்ணகி, நீலி இருவருமே இருந்த ஊர் தான் இது. இந்த சிக்கல் இருக்கத்தான் செய்யும்.
கேள்வி:- பெண்களுக்கு பாலியல் குற்றங்களை தெரிவிப்பதில் தயக்கம் இருக்கிறதா? புகார் சொன்னால் எதிராகவே திரும்புகிறதே?
பதில்:- தாழ்ந்தவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். உயர்ந்தவர்கள் அப்படி பேசமாட்டார்கள். இந்த சோகம் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் பொருந்தும். இந்த அவமானங்களை தாண்டி வந்துதான் நாம் நமது தரப்பு நியாயங்களை முன் வைக்கவேண்டும்.
கே :- நீங்கள் சந்தித்த தைரியமான பெண்மணி யார்?
ப:- என் அம்மா. அவருக்கு இணையான துணிச்சலான பெண்ணை சந்திக்க காத்திருக்கிறேன். என் அக்கா ஓரளவுக்கு தைரியமானவர்.
ப:- நிறைவேற்றப்படாத பல விஷயங்களில் இதுவும் ஒன்று. உங்கள் பங்களிப்பு அதிகமானால் இது சரியாகும். எத்தனை சதவீதம் என்று இல்லை. எத்தனை சதவிதமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எங்கள் கட்சிக்கு உண்டு.
கே:- பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் பெண் முன்னேற்றம் நடக்கும் என்பது சாத்தியமா?
ப :- இந்திரா காந்தி உள்பட பலர் அதிகாரத்துக்கு வந்து இருக்கிறார்கள். பெண்கள் அதிகாரத்திற்கு வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. நாம் தான் மாற வேண்டும்.
கே:- பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்க காரணம்?
ப :- ஆண்கள் என்று ஒரே வார்த்தையில் சொல்லலாம். ஆனால் வீட்டில் இருக்கும் பெரியவர்களும் காரணம். அவர்கள் வளர்க்கும் முறையில் தான் இருக்கிறது.
கே :- இந்திய அரசியலில் பெண்களின் முக்கியத்துவம் அதிகரித்து இருக்கிறதா?
ப:- ஆமாம். அதை இன்னும் அதிகரிக்க தான் உங்களைதேடி வந்துள்ளேன். மாணவர்களை தேடி நான் செல்வதை சிலர் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் மாணவர்கள் தான் அரசியலின் அடித்தளம். அரசியல் தான் உங்கள் வாழ்க்கையை மாற்றும்.
கே:- விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?
ப :- என் மீதான விமர்சனம் தான் என்னை மக்களிடம் கொண்டு செல்கிறது. நல்ல விமர்சனங்கள் தான் என் வளர்ச்சிக்கான அங்கீகாரம்.
கே:- படித்த பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. கிராமங்களில் வசிக்கும் படிக்காத பெண்களின் நிலை?
ப:- பாலியல் புகார்கள் அதிக அளவில் நகர்ப்புறங்களில் இருந்துதான் வருகிறது. ஆனால் கிராமங்களில் பெண்கள் இன்னும் தைரியமானவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் இப்படி தவறாக நடந்து கொள்ள முடியாது. உடனே தண்டனை தான்.
கே:- குடும்பங்களில் ஆண்கள், பெண்கள் எப்படி வளர்க்கப்பட வேண்டும்?
ப:- முதலில் சமமான பாசத்துடன் வளர்க்க வேண்டும். சமமான உரிமைகள் தரவேண்டும். இரண்டுமே குழந்தைகள் தான். பண்புகளை சிறுவயதில் இருந்தே சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.
கே:- நடுத்தர வர்க்கத்தில் இருந்து ஒரு பெண் திரைத்துறைக்கு வந்து சாதிக்க முடியுமா?
ப:- நடுத்தர வர்க்கம் என்ன ஏழ்மை நிலையிலிருந்து கூட வரலாம். வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படும் என்பதால் பெயர்களை குறிப்பிட முடியவில்லை. இந்த தொழிலை நான் மதிக்கிறேன். இந்த தொழிலை தவறாக பயன்படுத்தியவர்கள் தான் தங்கள் பிள்ளைகளை கொண்டு வர தயங்குவார்கள். ஆனால் நான் அப்படி இல்லை. என் மகள்களையும் சினிமாவுக்குள் கொண்டு வந்து இருக்கிறேன்.
கே:- பெண்களின் சமுதாய பங்களிப்பு எப்படி இருக்கிறது?
ப:- ஜான்சி ராணி முதல் மம்தா பானர்ஜி வரை சொல்லலாம். சங்க காலம் முதலே பெண்களுக்கு சமமான முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.
கே :- பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் தண்டனை கடுமையாக்கப்படவேண்டும் என்பதில் உங்கள் கருத்து என்ன?
ப:- வந்து கொண்டே இருக்கிறது. அந்த வேகம் போதவில்லை என்பது உண்மை. நம் காலத்திலேயே அதை பார்த்துவிடுவோம்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
இதைத் தொடர்ந்து ‘ எந்த அரசு உத்தரவு வந்தாலும் இந்த சந்திப்புகள் தொடர்ந்து நடக்கும். நாம் சந்திப்பதை யாராவது தடுத்தால் கல்லூரிக்கு வெளியில் உங்களை சந்திப்பேன்.
தமிழகத்தை மாற்றும் பொறுப்பு மாணவர்களிடம் இருக்கிறது. இந்த கல்லூரியில் தான் முதன்முதலில் அரசியல்வாதி என்று கையெழுத்து இட்டேன். நான் உங்களிடம் ஓட்டு கேட்டு வரவில்லை. மாற்றத்தை முன்னெடுக்க உங்களையும் என்னுடன் அழைக்கிறேன்’
இவ்வாறு கமல் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத் தில் கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார்.
முன்னதாக சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அரசியலில் யார் வேண்டு மானாலும் வரலாம். கட்சி ஆரம்பிக்கலாம். மேலும் இளைஞர்களும் மாணவர்களும் அரசியலுக்கு வர வேண்டும். அதற்காக விழிப்புணர்வு வர வேண்டும். மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் நாட்டின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
பெண்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. பெண்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தமிழகத்தில் இருக்கும்போது கவர்னர் அவரது வேலையை மட்டும் பார்க்க வேண்டும். ஆய்வு செய்வது அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வது தேவையற்றது.
மத்திய ஆட்சியில் ஜனாதிபதி ஆய்வு செய்தால் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா? பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த மாநில மத்தி அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். ஜனவரி மாதம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளோம். கூட்டணி பற்றி பிறகுதான் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு சரத்குமார் கூறினார். #sarathkumar #metoo
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்