search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க."

    • எனக்கு எந்த சம்மனும் வரவில்லை.
    • எனது வக்கீல்கள் கடந்த 9-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். நான் உண்மையை மட்டுமே பேசுவேன்.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று நெல்லை மாவட்டத்தில் பாளை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது.

    இதனை சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் எனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நான் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் அது தொடர்பாக எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. எனது தனி பாதுகாவலரிடம் சம்மன் சென்றதாகவும், அதை அவர் வாங்காமல் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அதில் உண்மை இல்லை. எனினும் எனது வக்கீல்கள் கடந்த 9-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். நான் உண்மையை மட்டுமே பேசுவேன்.

    அ.தி.மு.க. வக்கீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக வருகிற 13-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2-வது கட்ட கலந்துரையாடல் நடைபெறுகிறது.
    • திருப்பூர் தொகுதி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் தோல்வியை தழுவியதால் அதற்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்க முடிவு செய்தார்.

    அதன்படி கடந்த 10-ந் தேதியில் இருந்து பாராளு மன்ற தொகுதி வாரியாக சந்தித்து வருகிறார். மாவட்ட செயலாளர்கள் முக்கிய பொறுப்பாளர்களிடம் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து கேட்டறிந்தார்.

    ஒவ்வொரு நிர்வாகிகள் கூறும் கருத்தும் பதிவு செய்யப்படுகிறது. முதல் கட்டமாக தொகுதி நிர்வாகி களை சந்தித்து முடித்த பிறகு தற்போது 2-வது கட்டமாக 17 தொகுதிகளுக்கு கலந்துரையாடல் நடைபெறுகிறது.

    இன்று காலையில் திருப்பூர் தொகுதி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதற்காக அவர் காலை 10.30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.

    திருப்பூர் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவராக கருத்துக்களை கூறினர்.

    திருப்பூரில் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அங்கு அ.தி.மு.க.வின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். பகல் 2 மணி வரை ஆலோசனை நடைபெற்றது.

    மாலையில் கடலூர் தொகுதி நிர்வாகிகளை சந்திக்கிறார். நிர்வாகிகளுக்கு தன்னம்பிக்கையுடன் புத்துணர்வு அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சனி, ஞாயிறு இரு நாட்களும் ஆலோசனை கூட்டம் நடைபெறாது. மீண்டும் 29-ந் தேதி திங்கட்கிழமை முதல் கூட்டம் தொடங்கி ஆகஸ்ட் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகத்தை அடித்து உடைத்தனர்.
    • ஒரே சாதனை கடன் சுமையை தமிழக மக்கள் தலையில் சுமத்தியது.

    மதுரை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    3 வேளையும், குறைந்த விலையில் ஏழை, எளியவர்கள், உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்கள் அனைவரும் வயி ராற சாப்பிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், அம்மா 2013-ம் ஆண்டு அம்மா உணவங்களை தொடங்கி மலிவு விலையில் தரமான உணவு வழங்கினார்கள்.

    ஏழை, எளிய, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் ஏகோபித்த ஆதரவு காரணமாக தமிழகம் முழுவதும் அம்மா உணவுகள் தொடங்கப்பட்டன.

    ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடியார் ஆட்சியிலும், அம்மா உணவங்கள் தரமான, சுவையான உணவு மக்களுக்கு அளித்து வரப்பட்டன. குறிப்பாக கொரோனா பெரும் தொற்று காலகட்டத்தில் அனைத்து தொழில்களும் முடங்கிய போது, தமிழக முழுவதும் அம்மா உணவுகளுக்கு வருகை தரும் அனைவருக்கும் விலையில்லாமல் 3 வேளையும் உணவுகள் வழங்கப்பட்டது. இதை மக்கள் இன்னும் மறக்க வில்லை.

    அம்மா என்ற சொல்லை கேட்டாலே காதில் ஈயம் காய்ச்சி ஊற்றுவது போல் பதறும் இந்த விடியா தி.மு.க. அரசின் ஆட்சியாளர்கள், அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே தமிழக முழுவதும் அம்மா உணவகங்களை அடித்து நெருக்கியும், பணிபுரியும் பெண்கள் எண்ணிக்கையை 3-ல் ஒரு பங்காகக் குறைத்தும் படிப்படியாக அம்மா உணவகங்களுக்கு மூடு விழா நடத்தினர்.

    அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் 90 சதவீதம் குறைக்கப்பட்டது, பழுதடைந்த உபகரணங்கள் சீர் செய்யப்படவில்லை, சென்னையில் சுகாதாரத் துறை மற்றும் நகராட்சிக்கு இடம் தேவை என்று பல அம்மா உணவகங்கள் மூடப்பட்டன.

    உண்மை நிலை இவ்வாறு இருக்க, எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தலை கருத்திற்கொண்டு, நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. அரசின் முதலமைச்சர் கடந்த 19-ந்தேதி அன்று தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு, தனது எக்ஸ் வளைதளத்தில் அம்மா உணவகங்களை மூடி விடுவோம் என எதிர்க்கட்சிகள் புரளிகளைக் கிளப்பியதாக முதலை கண்ணீர் வடித்துள்ளார். அம்மா உணவகங்கள் மீது திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கறை காட்டுவது ஏன்?

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது என்று, கடந்த 3 ஆண்டுகளாக மாற்றி மாற்றி ஒரே குரலில் பேசிய பொய்யை நம்பி, பருவ மழையின் போது பெய்த சிறு மழைக்கே சென்னையில் பல இடங்களில் தேங்கிய தண்ணீராலும், ஐந்து நாட்கள் மின்சாரம் இல்லாமலும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    பருவமழை காலங்களில் இப்படி பொய் கூறி சென்னை மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியவர் தான் இந்த சேகர் பாபு.

    இந்த விடியா தி.மு.க. அரசு செய்த ஒரே சாதனை, ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், சுமார் 3.50 லட்சம் கோடி அளவில் கடன் சுமையை தமிழக மக்கள் தலையில் சுமத்தியது தான்.

    இந்த 3.50 லட்சம் கோடி கடனில் எவ்வளவு மூலதனச் செலவு செய்திருக்கிறார்கள் என்று நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரும், சேகர்பாபுவும் தமிழக மக்களிடம் விளக்கத் தயாரா? தற்போது அமைச்சர் சேகர்பாபு தவறான தகவல்களை கூறி சூழ்நிலையை மடைமாற்ற பார்க்கிறார். இது தமிழக மக்களிடம் எடுபடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 9 இடங்களில் தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் நடந்தது.

    சென்னை:

    மின்சார கட்டண உயர்வு மற்றும் ரேசன் கடைகளில் பருப்பு, பாமாயில் போன்றவற்றை நிறுத்த முயற்சிப்பதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

    அதன்படி கட்சி மாவட்டங்கள் அடிப்படையில் இன்று காலையில் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தில் 9 இடங்களில் தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் நடந்தது.

    வடக்கு மாவட்டம் வடசென்னை மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தலைமையில் பழைய வண்ணாரப்பேட்டை கிருஷ்ணா தியேட்டர் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தின் சார்பில் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளரு

    மான ந.பாலகங்கா தலைமையில் தங்க சாலை மணிக்கூண்டு அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகில் வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தலைமையில் அண்ணாசாலை தாராபூர் டவர் அருகில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தென்சென்னை (தெற்கு) மாவட்ட செயலாளர் எம்.கே.அசோக் தலைமையில் வேளச்சேரி காந்தி சிலை அருகில் மின் கட்டண உயர்வை குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் பள்ளிக்கரணை மாநகராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு தலைமையில் கொளத்தூரில் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் வி.என்.ரவி தலைமையில் எம்.ஜி.ஆர்.நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தென்சென்னை மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

    • நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
    • பொள்ளாச்சி, நீலகிரி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததையொட்டி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர் வாகிகளை சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறார். பாராளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 10-ந்தேதி தொடங்கிய கருத்து கேட்பு கூட்டம் நாளையுடன் முடிகிறது. இன்று 7-வது நாளாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தார்.

    பொள்ளாச்சி, நீலகிரி தொகுதி நிர்வாகிகளை காலையில் அவர் சந்தித்து பேசினார். மாலையில் கோவை, பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கிறார்.

    தேர்தல் தோல்விக்கு நிர்வாகிகள் பல்வேறு காரணங்களை எடுத்து கூறி வருகிறார்கள். இதுவரையில் நடந்த தேர்தலில் தோல்வியை தழுவினாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுத்து செயல்பட வேண்டும் என அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினார்கள்.

    நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கட்சியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாதையில் தொண்டர்களை அரவணைத்து கட்சிக்குள் இருக்கும் ஒரு சில முரண்பாடுகளை களைந்து சீர்செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

    கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுத்து வருகின்ற தேர்தலில் வெற்றி வாகை சூட தேவையான அரசியல் வியூகங்கள் இப்போதே தொடங்கிவிட்டன என்று எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் உறுதிப்பட கூறியுள்ளார்.

    பாராளுமன்ற தொகுதி முதல் கட்ட கருத்து கேட்பு கூட்டம் நாளை முடிகிறது. விழுப்புரம், கன்னியாகுமரி, தர்மபுரி ஆகிய தொகுதி நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

    தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி அழைத்து பேசி வருவதால் அ.தி.மு.க.வில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது.

    • வேனில் இருந்தபடி சசிகலா தொண்டர்களிடையே உரையாற்றினார்.
    • சசிகலா வேனில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்தது.

    தென்காசி:

    தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக சசிகலா தெரிவித்திருந்தார்.

    அதன்படி நேற்று மாலை தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே காசிமேஜர்புரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இரவு வரையிலும் தென்காசி சுற்றுவட்டார கிராமங்களில் வேனில் இருந்தபடி சசிகலா தொண்டர்களிடையே உரையாற்றினார். தொடர்ந்து குற்றாலம் சென்று ஓய்வெடுத்தார்.

    இந்நிலையில் 2-வது நாளான இன்று மாலையில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிரானூர் பார்டரில் சசிகலா தனது பயணத்தை தொடங்க உள்ளார்.

    தொடர்ந்து செங்கோட்டை, விஸ்வநாதபுரம், தேன்பொத்தை, பண்பொழி, அச்சன்புதூர், இலத்தூர், குத்துக்கல்வலசை, கொடிக்குறிச்சி, நயினாகரம், இடைகால், கடையநல்லூர், திரிகூடபுரம் வழியாக சொக்கம்பட்டியில் இன்றைய சுற்றுப்பயணத்தை அவர் நிறைவு செய்கிறார். இன்று மொத்தம் 17 இடங்களில் சசிகலா தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.

    நேற்று தனது முதல் நாள் பயணத்தின்போது சசிகலா வேனில் அ.தி.மு.க. கொடியை கட்டிக்கொண்டு புறப்பட்டார். சசிகலா தனது சுற்றுப்பயணத்தில் அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    ஆனால் அந்த எதிர்ப்புகளை மீறி சசிகலா வேனில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்தது. மேலும் சசிகலாவின் பிரசார வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற வாகனங்களிலும் அ.தி.மு.க. கொடிகளே கட்டப்பட்டிருந்தது.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆலோசனைக் கூட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • மக்கள் மனதை வெல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று தொடங்கி உள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்பு தூர் பாராளுமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் சிவகங்கை, வேலூர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.

    மாலையில் திருவண்ணா மலை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். இந்த ஆலோசனையின் போது பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது ஏன்? என்பது பற்றி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டுள்ளார்.

    அப்போது பலர் காரசாரமாக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகள் சிறப்பாக செயல்படாவிட்டால் பதவியில் நீடிக்க முடியாது என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

    எப்போதுமே நடந்து முடிந்த ஒரு விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்காமல் அடுத்து நடக்கப்போவதை பற்றியே சிந்திக்க வேண்டும்.

    இதன்படி 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் நமக்கெல்லாம் மிகவும் முக்கியமான தேர்தலாகும். அதில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் இப்போதே சிறப்பாக செயல்படத் தொடங்குங்கள்.

    கூட்டணி சரியாக அமையாத காரணத்தாலேயே தோற்றுப்போய் விட்டோம் என்று இங்கு பலரும் கூறியுள்ளீர்கள். வரும் காலங்களில் நீங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத வகையில் கட்சி உரிய முயற்சிகளை மேற்கொள்ளும்.

    நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நிச்சயமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    கீழ்மட்ட நிர்வாகிகளை மேல் மட்டத்தில் இருப்பவர்கள் அரவணைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் கீழ்மட்ட நிர்வாகிகள் சுறுசுறுப்போடு பணியாற்றுவார்கள். மக்கள் மனதை வெல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

    • ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கட்சியில் இணைய முயற்சித்து வருகிறார்.
    • அ.தி.மு.க.வை அழிப்பது என்பது எந்த சக்தியாலும் முடியாது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அக்கட்சியில் இணைய முயற்சித்து வருகிறார். ஆனால் அவரை ஒரு போதும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

    இந்த நிலையில் சிவகங்கையில் கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், "அ.தி.மு.க.வை அழிப்பது என்பது எந்த சக்தியாலும் முடியாது. தற்போது அ.தி.மு.க.வில் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைவரும் அ.தி.மு.க.வில் இணைவோம்" என்று கூறினார்.

    இதற்கு மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி விரிவாக பதில் அளித்தார். ஓ.பன்னீர் செல்வம் குறித்து அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் சேர்வதற்கு ஓ.பி.எஸ். நினைக்கலாம். ஆனால் எங்கள் தலைமை அதற்கு உடன்படாது. ஏற்கனவே பொதுக்குழு உறுப்பினர்களால் ஏக மனதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு அதி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் உள்பட 3 பேர் நீக்கப்பட்டுவிட்டார்கள்.

    ஓ.பி.எஸ். எப்போதுமே இயக்கத்திற்கு விசுவாசமாக இருந்த வரலாறு கிடையாது. புரட் சித் தலைவி அம்மா முதன் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் போது போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    அம்மாவை எதிர்த்து திரையுலகத்தை சேர்ந்த வெண்ணிற ஆடை நிர்மலா போட்டியிடுகிறார். அவருக்கு தலைமை ஏஜெண்டாக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அப்போதே அம்மாவுக்கு அவர் விசுவாசமாக இல்லை. சிலருடைய சிபாரிசால் கட்சிக்குள் நுழைந்தார். மீண்டும் அந்த துரோகத்தை செய்ய ஆரம்பித்து விட்டார். அதற்கு பிறகு அம்மா அவரை முதல்-அமைச்சராக்கி னார்.

    அம்மா இறந்த பிறகு உடனடியாக அவர் தர்ம யுத்தத்தை மேற்கொண்டார். மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என்று தலைமை நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள் சொன்னார்கள். அதன்படி நாங்கள் ஒன்றாக இணைகின்ற போது பல கோரிக்கைகளை அவர் வைத்தார்.

    அதில் ஒன்று அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றார். அதையும் நாங்கள் ஏற்றுக்கொண்டு அதற்கு ஆணையத்தை நியமித்தோம். யாரை சுட்டிக்காட்டி அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும்.

    ஒருவர் மீது குற்றம் சுமத்தி அதை விசாரித்தே ஆக வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தினார். அந்த கட்டாயத்தின் பேரில் ஆணையத்தை அமைத்தோம். ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு அந்த ஆணையம் பல முறை நோட்டீஸ் கொடுத்தும் அவர் ஆஜராகவில்லை.

    அதற்கு பிறகு 2019-ல் பாராளுமன்ற தேர்தல் வந்தது. அப்போது தனக்கு முக்கிய பொறுப்பு வேண்டும் என்று கேட்டார். ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வேண்டும் என்று கேட்டார். அவருக்கு வெறும் 3 சதவீதம் பேர் தான் ஆதரவு இருந்தது.

    10 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் ஆதரவாக இருந்தார்கள். 97 சதவீதம் பேர் எங்கள் பக்கம் இருந்தாலும் கூட எங்களுடைய மூத்த நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்காக ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தோம். துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்தோம். நல்ல இலாகா கொடுத்தோம். அப்போதும் அவருக்கு மன திருப்தியில்லை.

    2019 பாராளுமன்ற தேர்லில் அவரது மகனை தேனி தொகுதி வேட்பாளராக அறிவித்தார்கள். அதை மட்டும் தான் அவர் கவனித்தார். இடைத்தேர்தலில் அவர் அக்கறையே செலுத்தவில்லை. அதோடு ஆண்டிப்பட்டி, பெரிய குளம் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி தொகுதியில் அவரது மகன் அதிக ஓட்டுகள் பெறுகிறார்.

    அ.தி.முக. வேட்பாளர் குறைவான ஓட்டுகளை பெறுகிறார். அப்படி என்றால் அவர் இந்த இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கிறாரா? ஏன் என்றால் அதில் வெற்றி பெற்று வந்தால் கூட ஆட்சியை காப்பாற்ற முடியும்.

    ஆனால் ஆட்சியை பற்றி அவருக்கு கவலையில்லை. எங்களுடைய தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று வருகின்ற போது சில பிரச்சினைகள் வந்தது. வாக்குவாதம் வந்தது.

    அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் அவரை வீடு தேடி சென்று ஒற்றுமையாக இருப்போம் என்று பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர் ஒத்துக்கொள்ள வில்லை.

    அதன் பிறகுதான் அவர் நீதிமன்றம் சென்றார். பின்னர் பொதுக்குழு கூடியது. ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்த போது ரடிவுகளை அழைத்து சென்று கல்லால் கட்சிக்காரர்களின் கார் களை நொறுக்கி, தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து கதவை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை சூறையாடி பொருட்களை திருடி சென்று விட்டார்.

    இவரை ஒருங்கிணைப் பாளராக ஆக்கிய கொடு மைக்காக தொண்டர்கள் பல பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள். அவரை அடித்து விட்டார்கள் என்று புகார் கொடுத்து பல பேர் 15 நாட்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வந்தார்கள்.

    ஆக இப்படிப்பட்டவர், சுயநலவாதி. அதற்கு பிறகு வழக்கு போட்டார். இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கிறார். எந்தவிதத்தில் நியாயம். அப்புறம் நீதிமன்றம், அதற்கு பிறகு தேர்தல் ஆணையம் எங்கள் தரப்பில் தான் நியாபம் இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அதன்பிறகு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போதாவது இந்த கட்சிக்கு விசுவாசமாக இருப்பார் என்று பார்த்தால் எங்களுடைய வேட்பாளரை எதிர்த்து இரட்டைஇலையை எதிர்த்து ராமநாதபுரத்தில் நிற்கிறார். இவர் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பார்.

    கட்சிக்காரர்களை எப்படி அரவணைப்பார். இவர் எப்போதுமே அ.தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருந்ததே கிடையாது. அவர் சுயநலம் படைத்தவர். அ.தி.மு.கவில் அவர்களை இணைக்கின்ற பேச்சுக்கு ஒரு சதவீதம் கூட இடம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறை தண்டனையால் பாலகிருஷ்ண ரெட்டி பதவியை இழந்தார்.
    • பலவீனமான ஆதாரங்களே உள்ளது.

    சென்னை:

    1998-ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, அ.தி.மு.க. ஆட்சியில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இவ்வழக்கில், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு 2019-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தீர்ப்பளித்தது. மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால், பாலகிருஷ்ண ரெட்டி பதவியை இழந்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், போலீஸ் விசாரணையில் குறைபாடுகள் உள்ளது. உண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அரசுத்தரப்பு கண்டறியவில்லை. பலவீனமான ஆதாரங்களே உள்ளது. அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை. எனவே, சிறப்பு கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்கிறேன் என்று தீர்ப்பளித்தார்.

    • திருமங்கலம், ஈரோடு, இடைதேர்தல் பார்முலா போல நடக்கின்றது.
    • பிரச்சாரத்துக்கு செல்லும் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திக்க முடியாத நிலை.

    விழுப்புரம்:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜூனன் ஆகியோர் விழுப்புரத்திற்கு இன்று வந்தனர். அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திருமங்கலம், ஈரோடு, இடைதேர்தல் பார்முலா போல நடக்கின்றது. இதற்கு உதாரணம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டும் தமிழக அமைச்சர்கள் 33 பேர் ஒவ்வொரு தெருவிலும் சூழ்ந்து கொண்டு மக்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து அவர்களை மாலையில் விடுவிக்கின்றனர்.

    இதனால் பிரச்சாரத்துக்கு செல்லும் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திக்க முடியாத நிலை உள்ளது. இதுதான் தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் அவலமாகும். இப்படிப்பட்டவர்களுக்கு காவல்துறை முழு ஆதரவு அளிக்கின்றது. இதையெல்லாம் முன்பே உணர்ந்துதான் அ.தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு கவர்னரை சந்திக்கும்.
    • பா.ஜனதாவும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தது.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயத்துக்கு 60 பேர் வரை பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு தொடர்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை அ.தி.மு.க. குழு நாளை சந்திக்கிறது.

    எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு கவர்னரை சந்திக்கும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி விஷ சாராயம் தொடர்பாக பா.ஜனதா குழுவினர் இன்று கவர்னரை சந்தித்து இருந்தனர். மேலும் பா.ஜனதாவும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தது.

    • கல்வராயன்மலையில் தொடர்ந்து சாராயம் காய்ச்சப்படுவதாக புகார்கள் வந்தது.
    • சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

    திண்டுக்கல்:

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 61 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல்லில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சீனிவாசன், கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

    கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை செல்லவில்லை.

    அந்த மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலையில் தொடர்ந்து சாராயம் காய்ச்சப்படுவதாக புகார்கள் வந்தது. இதில் தி.மு.க.வினரின் தலையீடு இருப்பதால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    நான் வனத்துறை அமைச்சராக இருந்தபோது சம்பவ இடத்திற்கு அதிகாரிகளுடன் சென்று சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுத்து நிறுத்தினேன். ஆனால் தி.மு.க. அரசில் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளது. அதனால்தான் இப்பிரச்சினையில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

    மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் உயிர்காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளது. இதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பிய போது சுகாதாரத்துறை அமைச்சர் அதனை திசைதிருப்ப முயற்சிக்கிறார். சட்ட பேரவையில் இதுகுறித்து பேச அ.தி.மு.க.விற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். தி.மு.க. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அரசை கண்டிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

    மக்களுக்கு பயன்தராத கொடுமையான ஆட்சி நடந்து வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து மக்களை அடைத்து வைத்துள்ளனர். இதுபோல் நடக்கும் என்பதால்தான் நாங்கள் தேர்தலில் போட்டியிட வில்லை. பாராளுமன்ற தேர்தலில் பணம் கொடுத்து 40 எம்.பி.களை விலைகொடுத்து வாங்கியதுபோல சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று விடலாம் என மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அது நடக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேசுகையில், `இது திராவிட மாடல் ஆட்சி அல்ல. சாராய மாடல் ஆட்சி. தகுதியில்லாதவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. ஆட்சி, நிர்வாகத்தில் தி.மு.க.வினரின் குடும்ப தலையீடு அதிக அளவில் உள்ளது. விலைமதிப்பற்ற 60 உயிர்கள் பலியான போதும் தி.மு.க. அரசு அதுபற்றி கவலைப்படாமல் அலட்சியமாக உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் வருகிற சட்டமன்ற தேர்தலில் இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×