என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தினகரன்"
கம்பைநல்லூர்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் அரசின் வளர்ச்சிப் பணிகள், மக்கள் நலத் திட்டங்களை புறக்கணித்து வரும் தமிழக அரசை கண்டித்து, பாப்பிரெட்டிப் பட்டியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
அ.தி.மு.க. தொண்டர்கள் 90 சதவீதம் பேர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ளனர். இதில் உள்ளவர்கள் அனைவரும் கட்சியின் விசுவாசிகள், உண்மையான தொண்டர்கள். அ.தி.மு.க.வில் அமைச்சர்களும், கட்சியின் தலைமை கழக கட்டிடம் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியால் அனைத்து தரப்பு மக்களும் கொதிப்படைந்து உள்ளனர்.
இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப் பேரவை உறுப்பினர்களின் தொகுதிகள் உள்பட 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால், அதில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் தான் வெற்றிப் பெறுவார்கள். இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு டெபாசீட் கூட கிடைக்காது. 18 சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சென்றால் நாங்கள் நிச்சயம் வெற்றிப் பெறுவோம். ஆனால், உச்ச நீதிமன்றம் சென்றால் தீர்ப்பு வருவதற்கு சுமார் 2 வருடங்கள் ஆகும். நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் அ.தி.மு.க. ஆட்சிக் காலம் முடிந்து விடும். எனவே, ஒருநாளும் தமிழகத்தில் இந்த மக்கள் விரோத ஆட்சி நீடிக்க கூடாது என்பதற்காகவே, 18 சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர்களும் மேல்முறையீடு செய்ய வில்லை.
அதேபோல், வரும் 2019-ல் தமிழகத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெற அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் உழைக்க வேண்டும். 40-க்கு 40 தொகுதிகளில் நாம் வெற்றிப் பெற வேண்டும் என்பது லட்சியம். அதில் 37 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிப் பெறுவது நிச்சயம். இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தி தமிழக மக்களிடம் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கு 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது. அதுவரையிலும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க முடியாது. எனவே 18 தொகுதிகளுக்கும் உடனே இடைத்தேர்தல் வராது.
அதேசமயம் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு உடனே இடைத்தேர்தல் வரலாம்.
பாரதீய ஜனதாவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு எந்தவிதமான தேர்தல் கூட்டணியும் இல்லை. பாரதீய ஜனதாவுடன் நாங்கள் கூட்டணி வைப்போம் என்று ஒரு சில ஊடகங்கள் தான் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றன.
மாநிலங்களின் நலன்களை பாதுகாக்க மத்திய ஆட்சியில் மாநில கட்சிகளுக்கு உரிய பிரதி நிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற மனப்போக்கு மக்களிடையே ஏற்பட்டு வருகிறது. இதன் ஒரு பிரதிபலிப்பாக தமிழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பொதுமக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும் பரிசீலிப்போம். கூட்டணி அமைத்தோ, தனித்து நின்றோ வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #byelection #admk
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் அதிகார சதுரங்கப் போட்டியில் தமிழ் இனப் படுகொலை நடத்திய மகிந்த ராஜபக்சேவின் தமிழர் ரத்தம் தோய்ந்த கரங்களில் இலங்கையின் முழு அதி காரத்தையும் மீண்டும் வழங்குவதற்கு இன்றைய அதிபர் மைத்திரிபால சிறிசேனா திட்டமிட்டு சதி நாடகத்தை நிறைவேற்றிவிட்டார்.
2019 ஜனவரி 5-ந் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று இலங்கை அதிபர் அறிவித்துள்ளார். சிங்களப் பேரினவாதத்தின் உச்சகட்ட அராஜகம் மீண்டும் அரங்கேறப்போகிறது. ஈழத் தமிழ் இனத்தையே கருவறுக்க வேண்டும் என்று படுகொலை நடத்திய ராஜ பக்சேவை சிங்கள இனவாத வெறியர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.
மகிந்த ராஜபக்சேயின் சகோதரன் கொத்தபய ராஜபக்சே அடுத்து நான் அதிபராவேன் என்றும் கூறியிருக்கிறான். ராஜபக்சே கூட்டத்துக்குப் பெரும்பான்மை கிடைத்தால் அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்து மகிந்தனே மீண்டும் அதிபராகவும் வாய்ப்பு ஏற்படலாம்.
இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு ஒருகாலும் நீதி கிடைக்காது. மகிந்த ராஜபக்சே கரங்களுக்கு மீண்டும் அதிகாரம் வருமானால், முதல் கட்ட மாக ஈழத்தமிழர்களின் பண் பாட்டுத் தனித்தன்மையை அழிக்க கட்டமைத்த கலாச்சாரப் படுகொலையை நடைபெறும். தற்போது தமிழர் பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் சிங்கள ராணுவத்தை மேலும் அதிக அளவில் நிலைப்படுத்துவார்கள். சிங்களக் குடியேற்றங்கள் தமிழர் தாயகத்தில் அதிகமாகும். வடக்கு கிழக்கு இணைப்புக்கு வழியில்லாமல் செய்ய ஏராளமான சிங்களக் குடியேற்றங்களை மேலும் அதிகப்படுத்தும் நிலை ஏற்படும்.
வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் மாகாணசபையில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, சிங்கள ராணுவத்தையும், சிங்களக் குடியேற்றங்களையும் வெளியேற்றவும், சிறையில் இருக்கும் தமிழர்களை விடுதலை செய்யவும், இனக்கொலைக் குற்றவாளிகளை அனைத்துலக நீதிமன்றத்தில் கூண்டியில் நிறுத்து வதற்கான நீதிப் பொறி முறை அமைக்கவும், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும் தாய்த் தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள மானத் தமிழர்கள் தமிழ் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். உலக நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா.மன்றத்திலும், மனித உரிமைக் கவுன்சிலிலும் குரல்கொடுக்க வேண்டும்.
சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றுதான் ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வாகும் என்பதனை மனதில் நிறுத்தி, தமிழ் ஈழ விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள், தங்கள் உயிர்களைக் கொடையாகத் தந்தவர்கள், படுகொலைக்கு ஆளான தமிழர்களையும் நெஞ்சில் நிறுத்தி சூளுரை மேற்கொள்வோம்.
அம்மா மக்கள் முன் னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்:-
தமிழர்களுக்கு தீங்கிழைக்கும் எந்த சூழலும் இலங்கையில் ஏற்படாதவண்ணம் ஐ.நா மன்றமும், இந்திய அரசும் கண்காணிக்க வேண்டும். இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட செய்தி, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பேரிடியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்ட கொடூர நாட்களின் சுவடுகள் மறைந்து அமைதியான வாழ்வை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது.
இலங்கையில் தமிழர் இன அழிப்பை முன்னெடுத்த ராஜபக்சேயை, அதிபர் சிறிசேனா பிரதமராக அறிவித்த கொடுமையை, அந்நாட்டு நாடாளுமன்றம் முறியடித்துவிடும் என்று உலகமே எதிர்நோக்கியிருந்த நேரத்தில், இந்த ஜனநாயக விரோத செயலை புரிந்த இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இனவெறி கொண்ட ராஜபக்சேவுக்கு அதிகாரத்தை கொடுக்க முயற்சிக்கும் இச்செயல், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இந்திய அரசு இந்த நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், நலனுக்கும் தீங்கு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐ.நா.மன்றம் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை அழிக்கும் இந்த அக்கிரமச் செயல் வீழ்த்தப்பட வேண்டும்.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்:-
இலங்கை நாடாளுமன்றத்தை நேற்று நள்ளிரவில் கலைத்த அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா, புதிய நாடாளுமன்றத்தை அமைக்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார். 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பதவிக்காலம் இருக்கும் நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் திடீரென கலைத்திருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையாகும்.
இலங்கை அதிபர் பதவியிலிருந்து எந்தக் காரணமும் இல்லாமல் தான் ரனில் விக்கிரமசிங்கே நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல், பிரதமர் பதவியை வகிப்பதற்கு தேவையான எந்த பெரும்பான்மையும் இல்லாத நிலையில் தான் ராஜபக்சே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக எந்தெந்த வகைகளில் எல்லாம் சட்டத்தை வளைக்க முடியுமோ? அந்தந்த வகைகளில் எல்லாம் சட்டங்கள் வளைக்கப்பட்டன. இலங்கை நாடாளுமன்றத்தையே முடக்கும் அளவுக்கு அதிபர் சிறிசேனா சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சர்வாதிகாரியாக செயல்பட்டார்.
இலங்கை அதிபர் சிறிசேனா அவரது சொந்த செல்வாக்கில் வெற்றி பெறவில்லை. 2015-ஆம் ஆண்டு தேர்தலில் ராஜ பக்சேவுக்கு எதிரான தமிழர்களின் வாக்குகளால் தான் அதிபர் தேர்தலில் அவரால் வெற்றி பெற முடிந்தது. தமிழர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற சிறிசேனா தமது பழைய இனப்படுகொலை கூட்டாளியுடன் அணி சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது நியாயமல்ல.
இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து விக்கிரம சிங்கே நீக்கப்பட்டு ராஜபக்சே நியமிக்கப்பட்ட போதே இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட்டிருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்திருக்காது. இந்த விஷயத்தில் இந்தியா இனியும் அலட்சியம் காட்டாமல், இலங்கை சிக்கலில் உடனடியாகத் தலையிட்டு ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #srilankaparliament #dissolves #sirisena
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட 20 தொகுதி இடைத்தேர்தல்கள் விரைவில் வர இருக்கிறது. இதையொட்டி அ.தி.மு.க. சார்பாக 20 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை தொடங்கி பணியாற்றி கொண்டிருக்கிறார்கள் உறுதியாக 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்பதை தெரிவிக்கிறேன்.
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் பேசியதாக பத்திரிகையில் வந்த செய்தி தவறு.
எந்த சூழ்நிலையிலும் 4 தொகுதி, 6 தொகுதி, 8 தொகுதி என அவர் பேசவில்லை. முழுமையாக அ.தி.மு.க. 20 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் பேசினார். வெற்றிக்காக பூர்வாங்க பணிகளை கழகத்தின் பொறுப்பாளர்கள் முன்னின்று நடத்திட வேண்டும். உறுதியாக அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் பேசினார்.
கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வருமாறு அழைப்பு விடுத்தது எங்களது பெருந்தன்மை. அதை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் மனநிலையாகும்.
அம்மா வகுத்து தந்த கொள்கைபடி எந்த சூழ்நிலையில் எந்த தேர்தலாக இருந்தாலும் தனித்து நின்றுதான் வெற்றி பெறும் என்ற முடிவை ஏற்கனவே எடுத்துள்ளார்.
எங்களுடன் ஒத்த கருத்தோடு, கொள்கைகளோடு இணைந்து வருகிற கட்சிகள் வந்தால் நாங்கள் அதை இணைத்து தேர்தலில் போட்டியிடுவோம் என்றார்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில், மு.க.ஸ்டாலினும்- தினகரனும் பல முறை ரகசியமாக சந்தித்து பேசுவதாக எங்களுக்கு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். #MKStalin #DMK #TTVDhinakaran #OPanneerselvam
மதுரை:
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை சேதத்தை தடுக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின்-தினகரன் சந்திப்பு குறித்து கருத்து கூற விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உடன் இருந்தார். #opanneerselvam #mkstalin #dinakaran #admk
ஸ்ரீவில்லிப்புத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அ.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்:-
இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறும் என தங்கதமிழ்செல்வன் தெரிவித்து வருகிறார். அவரவர் கட்சிகள் வெற்றி பெறும் என்று எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் 20 தொகுதிகளில் அ.தி.மு.க.வே வெற்றி பெறும். இரட்டை இலை ஜெயிக்கும்.
8 தொகுதி வெற்றி பெற்றால் போதும் என பத்திரிக்கையில் வெளியானது. எங்கள் இலக்கு 20 தொகுதி என முதல்வர், துணை முதல்வர் கூறியுள்ளனர். இடைத் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.
தினகரன்-மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்து எனக்கு தெரியாது. நான் பார்க்க வில்லை. தினகரன் வந்தால் இணைத்து கொள்வீர்களா? என்று கேட்கிறீர்கள். நாங்கள் அ.தி.மு.க. வில் உள்ளவர்களை அழைத்துள்ளோம் என்பதை தெளிவாக சொல்லி விட்டோம்.
பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. துணை போகிறதா? என்று பலரும் கேட்கின்றனர். நாட்டை ஆளுவது பா.ஜனதா தான். பிரதமர் நரேந்திர மோடி தான்.நிதி வேண்டும் என்றால் அமெரிக்க அதிபரையா பார்க்க முடியும்? மாநிலத்துக்கு எது தேவை என்றாலும் மோடியிடம் தான் கேட்க வேண்டும். எத்தனை கட்சிகள் வந்தாலும் களத்தில் இருப்பது. அ.தி.மு.க- தி.மு.க. தான். மற்ற கட்சிகள் காணாமல் போய்விடும். மற்றவைலெல்லாம் கட்சியாக இருக்கும் களத்தில் இருக்காது.
கமல்ஹாசன் 20 தொகுதிகளிலும் களம் இறங்குவாரா? என்பது தெரியாது. அவர் பாவம் அவரை விட்டுவிடுங்கள். ரஜினி ஆடியோ வெளியீட்டு விழாவில் லேட்டா வந்தாலும் கரெக்டா அடிச்சுருவோம் என தெரிவித்துள்ளார். நாங்களும் அதையே சொல்கிறோம். கரெக்டா அடிச்சுருவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #ministerrajendrabalaji #admk
சென்னை:
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கோட்டூர்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- மு.க.ஸ்டாலினும்-டி.டி.வி. தினகரனும் ஒரே ஓட்டலில் தங்கி இருந்த போது அரசியல் சம்பந்தமாக முக்கிய ஆலோசனை மேற் கொண்டதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதே?
பதில்:- தமிழ்நாட்டு அரசியல் இப்படி போய்விட்டதே என்று ரொம்ப வருத்தப்படுகிறேன். ஒரு எதிர்க்கட்சி தலைவரோ அல்லது வேறு கட்சி தலைவரோ ஒரே விமானத்தில் போகக்கூடாதா? ஓட்டலில் கூட தங்கக்கூடாதா? உடனே சதியா?
கே:- ஜெயலலிதா- கருணாநிதி காலத்தில் கூட இருவரும் ஒரே ஓட்டலில் தங்கியது கிடையாது. தொண்டர்களிடையே மோதல் ஏற்படக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு கருதி வெவ்வேறு இடங்களில் தான் தங்கி இருப்பார்களே தவிர ஒரே ஓட்டலில் தங்குவதற்கான சூழ்நிலை ஏற்பட்டதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?
ப:- எங்கும் மோதல் ஏற்படாது. அடிதடியும் ஏற்படாது. அவர் ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக கற்பனைக்காக சொல்லி இருப்பார்.
கே:- 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 18 தொகுதியில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகளுக்கு இப்போது மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படுமா? ம.தி.மு.க. புதிதாக உங்களிடம் வந்துள்ளதே அந்த கட்சிக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா?
ப:- முதலில் தேர்தல் வருகிறதா? என்று பாருங்கள். தேர்தல் வந்ததற்கு பிறகு உட்கார்ந்து பேசுவோம். அதன்பிறகு என்ன முடிவு எடுப்பது என்பதை எங்களுடன் கூடி பேசி தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவை அறிவிப்பார்.
கே:- இப்போது இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இல்லையா?
ப:- மழை கொட்டோ கொட்டும் என்று சொன்னார்கள். மழையே வரவில்லை. நான் எப்படி தேர்தல் வரும், வராது என சொல்லமுடியும். வானிலை அறிக்கையே பொய்த்து போகிறது. அரசியல் நிலை என்னவாகும்.
கே:- டெங்கு, சிக்குன் குனியா 100 சதவீதம் தி.மு.க. ஆட்சிகாலத்தில் இருந்தது. இப்போது 25 சதவீதம் தான் வந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?
ப:- எங்கள் ஆட்சியில் டெங்கும் தெரியாது. பங்கும் தெரியாது. வருடத்துக்கு ஒரு முறை வரும் டெங்கு இப்போது விதவிதமாக வருகிறது. எலி காய்ச்சல் முதல் எல்லா காய்ச்சலும் இவர்கள் ஆட்சி காலத்தில் தான் வருகிறது. அரசியல் காய்ச்சல் இவர்களுக்கு வந்ததால் இந்த காய்ச்சல் எல்லாம் வருகிறது.
கே:- எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தூய்மைப்பணி, ஆய்வு போன்றவற்றை நடத்துவதாக அமைச்சர்கள் குறைகூறுகிறார்களே?
ப:- நிலவேம்பு கசாயம் கொடுப்பது நல்லது தான். அதை வரவேற்க வேண்டியது தான். அரசாங்கம் செய்ய முடியாததை தானே நாங்கள் செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #DMK #TTVDhinakaran
சேலம்:
அ.தி.மு.க. 47-ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் சேலம், அஸ்தம்பட்டி மணக்காட்டில் நடந்தது.
இந்த பொதுகூட்டத்தில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகை செல்வன் பேசும்போது, தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் கடன் தாரர்கள் கட்சி தொடங்கியிருக்கிறார்கள். இவர்களால் கட்சியை நடத்த முடியுமா? அதே போல் தினகரனும் ஓட்டு போட்டவர்களுக்கு கடன் வைத்துள்ளார். ரூ.20 ரூபாய் கொடுத்து ரூ.10 ஆயிரம் தருவதாக உறுதி கூறி ஓட்டையும் பெற்று கொண்டு ஏமாற்றி வருகிறார். இவர்களா தமிழகத்தை ஆள போகிறார்கள்?
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்.கள் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள். பதவி தருவதாக கூறி தினகரன் அவர்களை ஏமாற்றிவிட்டார்.
தினகரன் அணி ஒரு பிராய்லர் கோழி. முட்டை போடாது, குஞ்சு பொறிக்காது, கறிக்கு மட்டும் தான் உதவும். தினகரனுக்கு அரசியல் தெரியவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சிக்காக முள்கிரீடத்தை சுமக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினர். #Vaigaichelvan #ADMK #TTVDhinakaran
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியால் திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. உறுப்பினர் போஸ் மறைவால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக இருந்து வருகின்றன.
இந்த நிலையில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்த வழக்கை விசாரித்து வந்த 3-வது நீதிபதி சத்திய நாராயணன் நேற்று அதை உறுதி செய்து தீர்ப்பு வழங்கினார்.
இதனால், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்தில், நாடு முழுவதும் காலியாக இருந்த சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை. வடகிழக்கு பருவமழையை காரணம் காட்டி தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதால் இந்த முடிவை எடுத்ததாக அதற்கு காரணம் தெரிவித்தது.
தற்போது, மேலும் 18 தொகுதிகள் காலியாகியுள்ளதால், மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல் மாதம் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுடன் தான் இடைத்தேர்தல் நடத்தப்பட அதிகம் வாய்ப்பு உள்ளது.
ஏனென்றால், தற்போதைய நிலையில் தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் பலம் 214 ஆக உள்ளது. இதை வைத்து மெஜாரிட்டியை கணக்கிடும்போது அ.தி.மு.க. அரசுக்கு 108 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக உள்ளது. தற்போது, அ.தி.மு.க.வுக்கு (சபாநாயகரையும் சேர்த்து) 116, தி.மு.க.வுக்கு 88, காங்கிரஸ் கட்சிக்கு 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என்ற வகையில் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சுயேச்சை எம்.எல்.ஏ.வாக டி.டி.வி.தினகரன் உள்ளார்.
ஆனால், அ.தி.மு.க.வில் உள்ள ரத்தினசபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 3 பேரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேபோல், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ் (திருவாடானை), உ.தனியரசு (காங்கேயம்), தமிமுன் அன்சாரி (நாகப்பட்டினம்) ஆகிய 3 பேரும் தி.மு.க. மற்றும் டி.டி.வி.தினகரனுடன் நெருக்கம் காட்டி வருகின்றனர்.
இதை வைத்து பார்க்கும்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உண்மையான பலம் 110 என்ற நிலையிலேயே இருக்கிறது. மெஜாரிட்டியுடன் இதை கணக்கிடும்போது, கூடுதலாக 2 மட்டுமே உள்ளது. எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் அ.தி.மு.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அ.தி.மு.க.வில் உள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் மாற்றி வாக்களித்தாலே ஆட்சி கலைந்து விடும் அபாயம் உள்ளது.
எனவே, அதுபோன்ற சூழ்நிலை வரும்போது, அ.தி.மு.க. அரசு சற்று ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டியுள்ளது. என்றாலும், அ.தி.மு.க.வுக்கு ஒருசில சாதகமான அம்சங்களும் இருக்கின்றன. அதாவது, தற்போது அதிருப்தியில் இருந்துவரும் 6 எம்.எல்.ஏ.க்களும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள்.
இதில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, இதைக் காரணம் காட்டியே அவர்கள் 3 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய 3 பேர் அ.தி.மு.க. அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால், அவர்கள் மீதும் இதே நடவடிக்கையை எடுக்க அ.தி.மு.க. தலைமை தயங்காது.
இதுபோன்ற சாதகமான சூழ்நிலையால், மெஜாரிட்டியை தற்சமயம் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று அ.தி.மு.க. கருதினாலும், அடுத்த 5 மாதத்தில் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை எப்படியும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அந்தத் தேர்தலில் 20 இடங்களில் கட்டாயம் 2 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியும் அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது.
அதே நேரத்தில், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. கூட்டணிக்கு தற்போது எம்.எல்.ஏ.க்களின் பலம் 97 ஆக உள்ளது. இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுடன், சுயேச்சை எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரனின் ஆதரவையும் பெற்றால், மெஜாரிட்டி எண்ணிக்கையான 118-ஐ தி.மு.க.வால் எட்ட முடியும். ஆட்சி அரியணையிலும் தி.மு.க.வால் அமர முடியும்.
அதே நேரத்தில், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கத்தை எதிர்த்து, டி.டி.வி.தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய முடிவெடுத்தால், இடைத்தேர்தல் மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது. அது அ.தி.மு.க. அரசுக்கு சாதகமாகவே அமைந்து விடும். #TTVDhinakaran #MLAsdisqualification #ADMK
சிவகாசி:
அ.தி.மு.க. 47-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசியில் பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார்.
கொட்டும் மழையில் நடந்த இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் எத்தனையோ சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி அ.தி.மு.க.வை வளர்த்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். இருந்தபோது அ.தி.மு.க.வில் 16 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். அதை 1 1/2 கோடி உறுப்பினர்களாக உயர்த்தியவர் ஜெயலலிதா.
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்று இருவரும் ஆட்சி நடத்தினர். அவர்களது வழியில் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார். மக்கள் நலத்திட்டங்கள் தொலை நோக்குடன் தொடங்கி தற்போது சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது.
2016 சட்டசபை தேர்தலில் எப்படியாவது அ.தி.மு.க.வை தோற்கடித்து விட வேண்டும் என்று மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைத்தார். அவரது எண்ணம் நிறைவேறவில்லை. மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்த பலர் தோற்றுப்போனார்கள்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் தற்போது கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தினகரன் முயற்சி செய்து தோல்வியடைந்து வருகிறார். அவரது சதி வேலைகள், மக்களிடம் அவர் எப்படிப்பட்டவர் என்று வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க திட்டம் போட்டதில் தற்போது 18 எம்.எல்.ஏ.க் களின் கதி, அதோகதியாகப் போகிறது. தொண்டர்கள் அ.தி.மு.க.வின் பக்கம் இருக்கும்போது யாரும் எதுவும் செய்ய முடியாது.
தினகரன் கட்சியில் அனைவருக்கும் பதவி என்று வாரி வழங்கி வருகிறார். அவர் ஜாதகத்தை வைத்துக் கொண்டு ஜோதிடர்களிடம் வெற்றி பெற இயலுமா? என்று கேட்டுக் கொண்டு வருகிறார்.
குழப்பத்தை உருவாக்கி சித்து வேலை செய்து ஆட்சியை கலைத்து விட வேண்டும் என்று தினகரன் நினைக்கிறார். அது பலிக்காது.
அ.தி.மு.க. ஒரு எக்கு கோட்டை. ஸ்டாலினை தி.மு.க.வினர் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. தினகரனும், ஸ்டாலினும் சேர்ந்து உள் நோக்கத்தோடு செயல்படுகிறார்களோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஸ்டாலின் என்ன செய்தாலும் அது மக்களிடம் எடுபடாது.
இவ்வாறு அவர் பேசினார். #OPanneerselvam #MKStalin #TTVDhinakaran
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்