search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106242"

    • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது.
    • இது அர்த்த மாலாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.

    வடமொழியில் 'உத்தித' என்றால் 'நீட்டுதல்', 'நமஸ்கார' என்றால் 'வணக்கம்' என்று பொருள். இந்த ஆசனத்தில் ஒரு கால் நன்றாக நீட்டப்பட்டு இரு கைகளால் வணக்கம் சொல்வதால் இந்தப் பெயர் பெற்றது. இது மாலாசனத்தின் ஒரு வகை எனவும் கூறலாம். இது அர்த்த மாலாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.

    உத்தித நமஸ்காராசனம் மூலாதார சக்கரத்தைத் தூண்டி அதன் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மூலாதார சக்கரத்தின் சீரான இயக்கத்தால் நிலையான தன்மையும் பாதுகாப்பு உணர்வும் வளருகிறது.

    பலன்கள்

    இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது; இடுப்பைப் பலப்படுத்துகிறது. கால்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு கால்களைப் பலப்படுத்தவும் செய்கிறது. அடி வயிற்றைப் பலப்படுத்துகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது. சீரணத்தை செம்மையாக்குகிறது.

    செய்முறை

    விரிப்பில் நிற்கவும். வலது காலை இடது காலிலிருந்து சுமார் 4 அடி இடைவெளி விட்டு தரையில் வைக்கவும். இடது காலில் உடலின் எடையை கூடுதலாகத் தாங்குமாறு நிற்கவும். மூச்சை வெளியேற்றியவாறே இடுப்பை கீழே இறக்கவும். இடது பாதம் தரையில் இருக்க வேண்டும்.

    வலது கால் நன்றாக நீட்டியிருக்க வேண்டும். வலது குதிகால் தரையில் இருக்க வேண்டும். இரண்டு கைகளையும் வணக்கம் சொல்லும் முறையில் இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக வைக்கவும். 10 முதல் 20 நொடிகள் இந்த நிலையில் இருந்தபின் நீட்டிய காலை மீண்டும் மாலாசன நிலைக்குக் கொண்டு வரவும். காலை மாற்றி இதைத் திரும்பச் செய்யவும்.

    தீவிர அடி முதுகு வலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும்.

    • முதுகுத்தண்டு, இடுப்பு, முட்டியில் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
    • மாதவிடாய் கோளாறுகளைச் சரி செய்ய உதவுகிறது.

    வடமொழியில் 'தண்ட' என்றால் 'கம்பு', 'யமன' என்ற சொல்லுக்குச் 'சமாளித்தல்', 'கட்டுப்படுத்துதல்', 'பத்த' என்றால் 'பிணைக்கப்பட்ட', 'கோனா' என்றால் 'கோணம்' என்றும் பொருள். இந்த ஆசனத்தில் கால்கள் கைகளால் பிணைக்கப்பட்டு உடல் சற்று சாய்ந்து இருக்க புட்டத்தால் உடலை சமநிலையில் வைக்க வேண்டும்.

    தண்டயமன பத்த கோணாசனத்தில் உடல் மட்டுமே சமநிலையில் வைக்கப்படுவதில்லை; மனதும் சமநிலைப்படுத்தப்படுகிறது. இந்த ஆசனத்தை பயில்வதால் சுவாதிட்டான சக்கரம் பலம் பெறுகிறது. இச்சக்கரமே உணர்வுகளோடு தொடர்புடையதாகவும் வளைந்து கொடுக்கும் பண்பையும் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் குணத்தையும் வளர்ப்பதாகும். சுவாதிட்டான சக்கரத்தின் சீரான இயக்கத்தால் மனதும் சமநிலைத்தன்மையோடு இருக்கிறது.

    பலன்கள்

    ஜீரண கோளாறுகளைச் சரி செய்கிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இடுப்பை வலுப்படுத்துகிறது. தொடைகளைப் பலப்படுத்துகிறது. மாதவிடாய் கோளாறுகளைச் சரி செய்ய உதவுகிறது.

    செய்முறை

    விரிப்பில் அமர்ந்து இரண்டு கால் பாதங்களையும் ஒன்றோடு ஒன்று சேர்த்துத் தரையில் வைக்கவும். கைவிரல்களால் கால் விரல்களை அல்லது பாதங்களைப் பிடித்துக் கொள்ளவும்.

    மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே உடலைச் சற்றுப் பின்னால் சாய்த்து கால்களை மார்பு உயரத்துக்கு மேலே உயர்த்தவும். இப்போது உங்கள் உடல் எடையை உங்கள் புட்டம் தாங்கியிருக்கும். நேராகப் பார்க்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்தப்பின் கால்களைத் தளர்த்தி முந்தைய நிலைக்கு வரவும்.

    முதுகுத்தண்டு, இடுப்பு, முட்டி ஆகியவற்றில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

    • தீவிர மூட்டுக் கோளாறுகள் உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
    • மூட்டுகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

    வடமொழியில் 'வீரிய' என்றால் 'பலம்' என்று பொருள்; 'ஸ்தம்பன்' என்பது முதுகுத்தண்டைக் குறிக்கும். ஆக இது முதுகுத்தண்டைப் பலப்படுத்தும் ஆசனமாகும். 'வீரிய' என்ற சொல்லுக்கு 'விந்தணு' என்ற பொருளும் உண்டு. வீரியஸ்தம்பன் ஆசனம் பயில்வதால் விந்தணு பெருகும்.

    வீரிய ஸ்தம்பன் ஆசனம் சுவாதிட்டான சக்கரத்தைத் தூண்டுகிறது. இச்சக்கரம் தூண்டப் பெறுவதால் படைப்புத் திறன் மேம்படும், மகிழ்ச்சி பெருகும், உடலுறவு சார்ந்த கோளாறுகள் நீங்கும். பிறருடனான உறவில் நேர்மையும் நம்பகத்தன்மையும் வளரும்.

    பலன்கள்

    நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது; நரம்புக் கோளாறுகளைப் போக்குகிறது. முதுகுத்தண்டை நீட்சியடைய வைக்கிறது; முதுகுத்தண்டைப் பலப்படுத்துகிறது. கால்களை நீட்சியடைய வைக்கிறது; கால்களைப் பலமாக்குகிறது.

    மூட்டுகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இடுப்புப் பகுதியைப் பலப்படுத்துகிறது; இடுப்பில் உள்ள அதிக சதையைக் குறைக்கிறது. தொடைப் பகுதியில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

    தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுக் கோளாறுகளைப் போக்குகிறது. இரத்த குறைப்பாட்டை சரி செய்கிறது. தொடர்ந்து பழகி வர இளமையான தோற்றத்தைத் தருகிறது. தூக்கமின்மையைப் போக்குகிறது

    செய்முறை

    தாடாசனத்தில் நிற்கவும். இரண்டு கால்களுக்கு இடையில் நான்கு முதல் அய்ந்து அடி இடைவெளி விட்டு நிற்கவும். வலது பாதத்தை 90 degree அளவில் வெளிப்புறமாகத் திருப்பவும். வலது காலை மடிக்கவும். வலது முட்டிக்கு நேர் கீழே வலது கணுக்கால் இருக்குமாறு காலை மடிக்கவும்.

    வலது புறமாகக் குனிந்து வலது கையை வலது காலின் உள்புறத்திலிருந்து வெளிப்புறம் கொண்டு வந்து வலது பாதத்தின் வெளிப்புறம் வலது உள்ளங்கையைத் தரையில் வைக்கவும். இடது உள்ளங்கையை வலது பாதத்தின் உட்புறமாகத் தரையில் வைக்கவும். மாறாக, இரண்டு கைகளையும் முதுகுக்குப் பின்னால் கொண்டு வந்து வலது மணிக்கட்டை இடது கையால் பற்றலாம்.

    நன்றாக வலதுபுறம் குனிந்து தலையை வலது பாதத்திற்கும் இடது உள்ளங்கைக்கும் இடையில் தரையில் வைக்கவும். இடது கால் நீட்டியபடி இருக்க வேண்டும். 30 நொடிகளுக்கு இந்த நிலையில் இருக்கவும். பின் காலை மாற்றி இதை மீண்டும் செய்யவும்.

    குறிப்பு

    தலையைத் தரையில் வைக்க முடியவில்லை என்றால் முடிந்த வரை குனிந்து பழகவும். அல்லது ஒரு yoga block-ஐ வைத்து அதில் தலையை வைக்கவும்.

    முதுகுத்தண்டு கோளாறுகள், தீவிர முதுகு வலி, இடுப்புப் பிரச்சினை, தீவிர மூட்டுக் கோளாறுகள் உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

    • நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது.
    • இடுப்புப் பகுதியை பலப்படுத்துகிறது.

    பாலாசனத்துக்கு மாற்று சலம்ப புஜங்காசனம் ஆகும். பாலாசனம் என்பது குழந்தை குப்புறப் படுத்த நிலை என்று பார்த்தோம். சலம்ப புஜங்காசனம் என்பது முழங்கைகளைத் தரையில் தாங்கி மேலுடலை உயர்த்துவது. புஜங்காசனத்தை பாதி நிலையில் செய்வது போல் இருக்கும். 'சலம்பம்' என்றால் 'ஆதரவு' (support). 'புஜங்க' என்றால் 'பாம்பு'. பாதி அளவு பாம்பு படம் எடுத்தது போலுள்ள நிலை என்பார்கள்.

    ஆனால், சரியாகச் சொன்னால், படுத்த நிலையிலுள்ள குழந்தை படுத்து தவழ்வது இந்த நிலையில்தான். முழங்கைகளை ஊன்றி, மார்பினால் உந்தித்தான் குழந்தைகள் ஆரம்பத்தில் தவழும். குழந்தைகளின் இந்த நிலைதான் அவற்றை முட்டி போட்டும், தவழவும், பின் நடக்கவும் வைக்கிறது.

    பலன்கள்

    முதுகெலும்பை உறுதியாக்குகிறது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது.தோள்களை உறுதியாக்குகிறது. நுரையீரலின் செயல்பாட்டைச் செம்மையாக்குகிறது. இடுப்புப் பகுதியை பலப்படுத்துகிறது. ஜீரண உறுப்புகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது.

    செய்முறை

    விரிப்பில் குப்புறப்படுத்துக் கொள்ளவும். கைகளை மடித்து கை முட்டி மார்புக்கு அருகில் இருக்குமாறு வைத்து முன்னங்கைகளைத் தரையில் வைக்கவும். இரண்டு முன்னங்கைகளும் நேராக இருக்க வேண்டும். தலையையும் மார்பையும் உயர்த்தவும். இப்போது உங்கள் கை முட்டி, உங்கள் தோள்களுக்கு நேர் கீழே இருக்கும். முகத்தை நேராக வைக்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், ஆரம்ப நிலைக்கு வரவும்.

    முதுகுத்தண்டில் தீவிர கோளாறு உள்ளவர்கள், தோள் மற்றும் கை முட்டிகளில் தீவிர வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். கழுத்து வலி உள்ளவர்கள், முகவாய் மார்புக்கு அருகே வருமாறு கீழ் நோக்கி தலையைக் குனியவும்.

    • மயூராசனம் நன்கு பழகிய பின் பத்ம மயூராசனம் செய்வது நல்லது.
    • கைகளையும் மணிக்கட்டுகளையும் பலப்படுத்துகிறது.

    பத்ம' என்றால் 'தாமரை' என்றும் 'மயூர' என்றால் 'மயில்' என்றும் பொருள் என்று நாம் அறிவோம். இதற்கு ஆங்கிலத்தில் Lotus Peacock Pose என்று பெயர்.

    பலன்கள்

    கைகளையும் மணிக்கட்டுகளையும் பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. அஜீரணத்தை சரி செய்கிறது. முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது.

    இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. வயிற்று உள் உறுப்புகளைப் பலப்படுத்துகிறது.

    உடலின் சமநிலையைப் பராமரிக்கிறது. கால் மூட்டுகளைப் பலப்படுத்துகிறது; கால்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. உடலின் நச்சுக்களை வெளியேற்றுகிறது.

    செய்முறை

    விரிப்பில் பத்மாசனத்தில் அமரவும். மூச்சை வெளியேற்றியவாறு முன்னால் குனிந்து உள்ளங்கைகளைத் தரையில் வைக்கவும். விரல்கள் கால்களை நோக்கியவாறு இருக்க வேண்டும். கை முட்டிகளை மடக்கி இரண்டு முட்டிகளையும் சற்று அருகே கொண்டு வரவும்.

    முன்னால் சாய்ந்து இரண்டு கை முட்டிகளுக்கு மேல் வயிற்றை வைக்கவும். கைகளால் பெரும்பாலான உடல் எடையைத் தாங்குமாறு மேலும் முன்னால் சாயவும்.

    கால்களைத் தரையிலிருந்து பத்மாசன நிலையிலேயே உயர்த்தவும். இப்பொழுது உங்கள் கைகளால் உடலைத் தாங்கியிருப்பீர்கள்.

    30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இந்நிலையில் இருக்கவும். ஆசனத்திலிருந்து வெளிவர, கால்களைத் தரையில் வைத்து, உடலைத் தளர்த்தி தரையில் பத்மாசனத்தில் அமரவும்.

    தோள், கை மற்றும் மணிக்கட்டில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்கவும். மயூராசனம் நன்கு பழகிய பின் பத்ம மயூராசனம் செய்வது நல்லது.

    • அதிக இரத்த அழுத்தம், தீவிரக் கண் கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
    • தோள்களையும் முதுகுத்தண்டையும் நீட்சியடையச் செய்கிறது.

    அதோ முக ஸ்வானாசனத்தின் ஒரு வகையாக அர்த்த பிண்ச மயூராசனத்தைக் கூறலாம். வடமொழியில் 'அர்த்த' என்றால் 'பாதி', 'பிண்ச' என்றால் 'இறகு', 'மயூர' என்றால் 'மயில்'. இதை மொழிபெயர்க்கும் போது பாதி இறகு மயிலாசனம் என்பதாக இருக்கும். இது ஆங்கிலத்தில் Dolphin Pose என்று அழைக்கப்படுகிறது.

    அதோ முக ஸ்வானாசனத்தின் பெரும்பாலான பலன்கள் அர்த்த பிண்ச மயூராசனத்துக்கும் பொருந்தும்.

    பலன்கள்

    நுரையீரலைப் பலப்படுத்துகிறது. கால்களை நீட்சியடையவும் பலப்படுத்தவும் செய்கிறது. தோள்களையும் முதுகுத்தண்டையும் நீட்சியடையச் செய்கிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. கைகளைப் பலப்படுத்துகிறது. தலைவலியைப் போக்க உதவுகிறது.

    முதுகு வலியைப் போக்குகிறது. சையாடிக் பிரச்சினையை சரி செய்கிறது. மூட்டுப் பிரச்சினைகளைப் போக்குகிறது. சிறு வயது முதலே பயின்று வந்தால் தட்டைப் பாதம் சரியாக உதவுகிறது. மாதவிடாய் நிற்கும் காலக்கட்டத்தில் (menopause) ஏற்படும் அசவுகரியங்களைப் போக்குகிறது.

    செய்முறை

    விரிப்பில் தவழும் நிலைக்கு வரவும். அதாவது, உங்கள் மணிக்கட்டுகள் தோள்களுக்கு நேர் கீழாகவும், உங்கள் கால் முட்டி இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்கும் வகையில் உங்கள் உள்ளங்கைகளையும் கால்களையும் தரையில் வைக்கவும். முன்கைகளை மடக்கித் தரையில் வைக்கவும்.

    மூச்சை வெளியேற்றியவாறு பாதங்களைத் தரையில் வைத்து இடுப்பை நன்றாக மேலே உயர்த்தவும். உங்கள் கால் முட்டி மடங்காமல் நன்றாக நீட்டப்பட்டு இருக்க வேண்டும்.

    தலை உங்கள் மேற்கைகளுக்கு இடையில் இருக்க வேண்டும். 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். இடுப்பை இறக்கி முட்டியைத் தரையில் வைத்து முன்கைகளை நேராக்கவும்.

    கால்களை முழுதுமாக நீட்ட முடியவில்லை என்றால் முட்டியை மடக்கி ஆசனத்தைப் பயிலவும். பழகப் பழக, ஆசனத்தை முழுமையான வடிவில் பயில முடியும்.

    முதுகுத்தண்டு, முதுகு, தோள், கைகள் ஆகியவற்றில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். அதிக இரத்த அழுத்தம் மற்றும் தீவிரக் கண் கோளாறு உள்ளவர்களும் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தொப்பையைக் கரைக்கிறது.
    • மூட்டுப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

    பலன்கள்

    முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது; முதுகுத்தண்டை நீட்சியடைய வைக்கிறது. முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. தொப்பையைக் கரைக்கிறது.

    இடுப்பு மற்றும் தொடையிலுள்ள அதிக சதையைக் கரைக்கிறது. வயிற்று உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. குழந்தையின்மை பிரச்சினையைப் போக்க உதவுகிறது. கால் தசைகளைப் பலப்படுத்துகிறது.

    மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு பலப்படுத்தவும் செய்கிறது. கழிவுகளை வெளியேற்றுகிறது. அசதியைப் போக்குகிறது.

    செய்முறை

    விரிப்பில் கால்களை நீட்டிப் படுக்கவும். கைகளை உடலின் பக்கவாட்டில் வைக்கவும். சர்வாங்காசன நிலைக்கு வரவும். அதாவது, மூச்சை வெளியேற்றியவாறு கால்களை மேல் நோக்கி உயர்த்தவும். புட்டத்தை உள்ளங்கைகளால் தாங்கியவாறு கழுத்திலிருந்து கால்வரை ஒரே நேர்க்கோட்டில் இடுப்புக்கு நேராக நிறுத்தவும். இது சர்வாங்காசன நிலை. மூச்சை உள்ளிழுக்கவும்.

    கால்களை ஒன்றன் பின் ஒன்றாக பத்மாசன நிலையில் இருப்பது போல் மடக்கவும். மூச்சை வெளியேற்றியவாறு கால்களை முகத்தை நோக்கிக் கொண்டு வரவும். கால் முட்டிகளை முகத்தில் வைக்கவும். 30 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும். பின் கால்களை நிமிர்த்தி, பத்மாசன நிலையிலிருந்து வெளி வந்து தரையில் ஆரம்ப நிலையில் இருந்தது போல் படுக்கவும்.

    குறிப்பு

    கழுத்து, முதுகுத்தண்டு மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும். தீவிர மூட்டுப் பிரச்சினை உள்ளவர்களும் பத்ம ஹலாசனத்தைத் தவிர்க்கவும்.

    • வயிற்று உள்ளுறுப்புகளைப் பலப்படுத்துகிறது
    • வயிற்றுத் தசைகளைப் பலப்படுத்துகிறது.

    இவ்வாசனத்தை ஹலாசனம் செய்த பின் பழகலாம். இது ஆங்கிலத்தில் Reclining Angle Pose என்று அழைக்கப்படுகிறது.

    பலன்கள்

    முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்வதுடன் பலப்படுத்தவும் செய்கிறது. முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது. உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது.

    இளமையான தோற்றத்தைத் தருகிறது. உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. வயிற்று உள்ளுறுப்புகளைப் பலப்படுத்துகிறது. சீரண மண்டல செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. வயிற்றுத் தசைகளைப் பலப்படுத்துகிறது. தொப்பையைக் கரைக்கிறது. இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இடுப்பு மற்றும் தொடையில் உள்ள அதிக சதையைக் கரைக்கிறது. குழந்தையின்மை குறைப்பாட்டை நீக்குகிறது.

    கால்களை பலப்படுத்துகிறது. மாதவிடாய் காலத்து வலிகளைப் போக்க உதவுகிறது.

    செய்முறை

    விரிப்பில் கால்களை நீட்டிப் படுக்கவும். கைகள் உடலின் பக்கவாட்டில் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு ஹலாசன நிலைக்கு வரவும்.

    தலைக்குப் பின்னால் கைகளைக் கொண்டு சென்று பாதங்களைப் பிடிக்கவும். மாறாக, கால் பெருவிரலையும் பிடிக்கலாம்.

    கால்களைப் பக்கவாட்டில் கொண்டு செல்லவும். 20 முதல் 30 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும். ஆசன நிலையிலிருந்து வெளியில் வர, கால்களை விடுவித்து, ஹலாசன நிலைக்கு வரவும். பின் கால்களை உயர்த்தி முன்னால் கொண்டு வந்து தரையில் நீட்டி ஆரம்ப நிலைக்கு வரவும்.

    கழுத்து, முதுகுத்தண்டு மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் சுப்த கோணாசனம் செய்வதைத் தவிர்க்கவும்.

    • உடல், மன சோர்வைப் போக்குகிறது.
    • முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

    வடமொழியில் 'பார்சுவ' என்றால் 'பக்கம்', 'பால' என்றால் 'குழந்தை' என்று பொருள். இவ்வாசனத்தில் பாலாசன நிலை அல்லது பாலாசன நிலையிலிருந்து சற்றே மாறுபட்ட நிலையில் மேலுடலைப் பக்கவாட்டில் திருப்பி செய்வதால் இந்த ஆசனம் பார்சுவ பாலாசனம் என்று அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் Thread the Needle Pose என்று அழைக்கப்படுகிறது.

    பலன்கள்

    முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. மேல் முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது. இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு இடுப்புத் தசைகளைப் பலப்படுத்துகிறது. மேற்புற மார்புத் தசைகளை உறுதியாக்குகிறது. தோள்களை விரிக்கிறது. ஜுரணத்தை மேம்படுத்துகிறது. உடல், மன சோர்வைப் போக்குகிறது.

    செய்முறை

    விரிப்பில் தவழும் நிலைக்கு வரவும். மூச்சை வெளியேற்றியவாறு வலது கையை இடது கையின் அடி வழியாக இடதுபுறத்துக்கு வெளியில் நீட்டவும். உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும்.

    வலது தோளை விரிப்பில் வைத்து வலது கையை மேலும் நன்றாக இடதுபுறம் நீட்டவும். உங்கள் வலது பக்க முகத்தைத் தரையில் வைத்து நேராகப் பார்க்கவும். மாறாக, தலையைத் திருப்பி மேல் நோக்கவும் செய்யலாம்.

    இடது கையை தலைக்கு மேல் நீட்டவும். 30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இவ்வாசனத்தில் இருக்கவும். மெதுவாக ஆரம்ப நிலைக்கு வந்து மறுபுறம் திரும்பச் செய்யவும்.

    முதுகுத்தண்டு கோளாறுகள், சீரற்ற இரத்த அழுத்தம், கழுத்து மற்றும் தோள்களில் தீவிர வலி உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் உள்ளவர்களுக்கும் இது சிறந்த ஆசனம்.
    • இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.

    தொடர் பணி, நீண்ட தூர பயணம், அலைச்சல் போன்ற காரணங்களால் உடம்பு ரொம்ப களைப்பாக இருக்கிறதா? மகராசனத்தில் கால் மணி நேரம் இருந்தால் போதும், அத்தனை களைப்பும் பறந்துபோய், உடல் மீண்டும் சுறுசுறுப்பாகிவிடும். 'மகர' என்றால் முதலையை குறிக்கும் சொல். நம் உடல் இந்த ஆசனத்தின் இறுதி நிலையில், முதலையின் உருவம்போல இருப்பதால் இப்பெயர்.

    உடல் சோர்வைப் போக்கும் மகராசனத்தை எப்படி செய்வது என தெரிந்துகொள்வோம்.

    செய்முறை

    விரிப்பில் குப்புற படுத்துக் கொள்ளவும். கைகளை ஒன்றன் மீது ஒன்றாக மடித்து வைத்துக் கொள்ளவும். கைகள் மீது தாடை பதிந்திருக்கட்டும். தாடைக்கு பதிலாக, கன்னத்தை கைகள் மீது பதிவதுபோல வைத்துக் கொண்டால், இன்னும் ரிலாக்ஸாக இருக்கும்.

    கால்களை அகலமாக வைத்துக் கொள்ளுங்கள். குதிகால்கள் உள்பக்கமாகவும், கால் விரல்கள் வெளிப்பக்கம் நோக்கியும் இருக்கட்டும். முழு உடம்பும் நன்கு ரிலாக்ஸாக இருக்கட்டும்.

    நன்கு நிதானமாக மூச்சை இழுத்து, மெதுவாக வெளியே விடுங்கள். 2-5 நிமிடங்கள் வரை இதே நிலையில் இருக்கவும். தேவைப்பட்டால், கூடுதல் நேரமும் இருக்கலாம்.

    கர்ப்பிணிப் பெண்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும். குப்புறப் படுக்க இயலாதவர்கள், நிமிர்ந்து படுத்து கால்களை சுமார் 90 degree அளவு உயர்த்தி சுவற்றின் மீது வைத்து, கைகளை வணக்கம் சொல்லும் முறையில் மார்பின் மீது வைத்துப் பழகவும்.

    மகராசனத்தின்போது இடும்பு, முதுகு, தோள் பகுதிக்கு முழு ஓய்வு கிடைப்பதால், அப்பகுதிகள் ரிலாக்ஸ் ஆகின்றன. ஆஸ்துமா உட்பட நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் உள்ளவர்களுக்கும் இது சிறந்த ஆசனம் ஆகும். நுரையீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

    முதுகு வலியைப் போக்குகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கீழ் முதுகை பலப்படுத்துகிறது.
    • இனப்பெருக்க அமைப்பைத் தூண்டுகிறது.

    வடமொழியில் 'பார்சுவ' என்றால் 'பக்கம்', 'உபவிஸ்த' என்றால் 'அமர்ந்த' மற்றும் 'கோணா' என்றால் 'கோணம்' என்று பொருள். பக்கவாட்டில் கால்களை நீட்டி அமர்ந்திருக்கும் கோணத்தால் இந்த ஆசனம் இப்பெயரைப் பெற்றது.

    பார்சுவ உபவிஸ்த கோணாசனம் வயிற்று தசைகளை வலுபடுத்துவதோடு வயிற்று உள் உறுப்புகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது. தொடர்ந்து இந்த ஆசனத்தை பயின்று வந்தால் உடலின் நெகிழ்வுத்தன்மை கூடும்.

    பலன்கள்

    இடுப்புப் பகுதியை நீட்சியடைய வைக்கிறது. முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது. கால்களை நீட்சியடைய வைக்கிறது. கழுத்து தசைகளை உறுதியாக்குகிறது.

    இந்த ஆசனம் இடுப்புகளைத் திறந்து, கால்களின் பின்புறத்தை ஆழமாக நீட்டுகிறது. முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையை ஊக்குவிக்கிறது.

    கீழ் முதுகை பலப்படுத்துகிறது.தொடை மற்றும் கீழ் முதுகு தசைகளை நீட்டுகிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. இனப்பெருக்க அமைப்பைத் தூண்டுகிறது. மனச்சோர்வை நீக்குகிறது

    செய்முறை

    விரிப்பில் தண்டாசனத்தில் அமரவும். கால்களை முடிந்த வரையில் பக்கவாட்டில் விரிக்கவும். குதிகால்கள் தரையில் இருக்க வேண்டும். கால் விரல்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

    மூச்சை வெளியேற்றிக் கொண்டே வலது காலை நோக்கிக் குனியவும். கைகளை நீட்டி வலது கால் விரல்களை அல்லது வலது பாதத்தைப் பற்றவும்.

    20 வினாடிகள் இந்த நிலையில் இருந்தபின், நிமிர்ந்து, இடது காலை நோக்கிக் குனிந்து பயிலவும். கைகள், கால்களை ஒன்றாக அழுத்தவும்.

    வயிற்றை வலது பக்கம் திருப்பவும். வலது காலை உள்ளே அல்லது வெளியே சாய்க்க விடாதீர்கள்.

    முதுகு, இடுப்பு மற்றும் காலில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். கழுத்து வலி உள்ளவர்கள் முடிந்த அளவு குனிந்தாலே போதுமானது. குனிந்து செய்வதில் சிரமம் இருந்தால் காலுக்கடியில் விரிப்பு அல்லது yoga block போட்டு பயிலவும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தட்டைப் பாதம் இருப்பவர்களுக்கு இந்த ஆசனம் மிகவும் நல்லது.
    • இடுப்பு வலி, மூட்டு வலி குறையும்.

    செய்முறை :

    விரிப்பில் நேராக நிமிர்ந்து நிற்கவும். குதிகால்களை ஒன்றாகச் சேர்த்தும், விரல் பகுதிகளை லேசாக அகட்டியம் 'V' வடிவத்தில் வைக்கவும். கழுத்து நேராக இருக்கவேண்டும். கைகள் உடலை ஒட்டியும் - கை விரல்கள் தொடையைத் தொட்டபடியம் இருக்கட்டும். மெதுவாக வலக் காலை அகட்டி வைக்கவும். கால் பாதங்கள் இரண்டும் நேராக இருக்கட்டும்.

    வலக்கால் பாதத்தை இடக்காலுக்குச் செங்குத்தாக இருக்குமாறு வலப் பக்கம் திரும்பிக் கொள்ளவும். மெதுவாக வலக்கால் மூட்டுப் பகுதியை மடக்கி, வலப்பக்கம் சரிந்துகொள்ளவும். இடுப்பை வளைத்து பக்கவாட்டில் குனியவேண்டும். ஆனால் தரையை நோக்கி முகத்தைத் திருப்பாமல் நேராகவே பார்க்கவேண்டும். வலக்கையை, வலக் கால் பாதத்துக்குப் பக்கத்திலேயே தரையில் வைக்கவும். (உடல் எடையைக் கைகளுக்குக் கொண்டு வராமல், லேசாகத்தான் தரையில் ஊன்ற வேண்டும்.)

    குனிந்திருக்கும் கோணத்திலேயே, இடக்கையைத் தலைக்கு மேல் உயர்த்தவும். இடக்கையின் புஜங்கள் காதைத் தொட்டபடி இருக்கட்டும். இடக் கைவிரல் நுனியைப் பார்த்தபடி தலையைத் திருப்பிக்கொள்ள வேண்டும். நடுக்கம் இல்லாமல் நிற்க முடிந்தால், வலக் கையைத் தரையிலிருந்து எடுத்து, உங்கள் இடுப்புப் பகுதியின் பின்புறம் வைத்துக்கொள்ளலாம். இடக் கையை மெதுவாக இறக்கி, உடலை ஒட்டி இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். வலக்கை இடுப்பில் வைக்கப்பட்டிருந்தால், எடுத்துத் தரையில் வைத்துக்கொள்ளவும். வளைந்த நிலையில் இருக்கும் உடலை நேராக்கி நிமிரவும்.

    வலக் கால் பாதத்தை திருப்பி நேராக்கவும். பாதங்கள் இரண்டையும் "V' வடிவத்தில் சேர்த்துவைத்து, துவக்க நிலைக்கு வரவும். இதே முறையில் இடப்புறமும் 'காம்ப்ளிமென்ட்டு' ஆசனம் செய்யவும்.

    முதுகுத்தண்டு, கால் மூட்டியில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.

    பலன்கள் :

    இந்த ஆசனத்தின் மூலம் கால்கள் நன்கு பலப்படுத்தப்படுகிறது. முக்கியமாக தட்டைப் பாதம் இருப்பவர்களுக்கு இந்த ஆசனம் மிகவும் நல்லது. இந்தப் பயிற்சியின் மூலம் கண்பார்வை அதிகரிக்கும். இடுப்பு வலி, மூட்டு வலி போன்றவை குறையும். மூன்றாவது நிலைக்கு, மூச்சை வெளியே விட்டபடி செல்லவும், நான்காவது நிலைக்கு மூச்சை உள்ளிழுத்தபடி செல்லவும். ஐந்தாவது, ஆறாவது நிலைகளில் மூச்சை உள்ளிழுத்தபடி மேலே வரவும்.

    மலச்சிக்கலைக் குணப்படுத்துகிறது மற்றும் சாதாரண குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்வது எடையைக் குறைக்க உதவுகிறது, குறிப்பாக இடுப்பு மற்றும் இடுப்புப் பகுதியைச் சுற்றியுள்ள அதிகப்படியான சதையை குறைக்க உதவுகிறது.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×