search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106670"

    • உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது குடலின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும்.
    • வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டும்போது வயிறு தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும்.

    கோடை காலத்தில் வயிறு தொடர்பான பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது குடலின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், குடல் எரிச்சல், சிரோசிஸ் போன்ற இரைப்பை குடல் நோய்களுக்கு வழிவகுக்கும். "வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டும்போது வயிறு தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நோயாளிகளின் எண்ணிக்கை உயரத்தொடங்கும்.

    அப்படி வெப்பநிலை உயர்வது நோய் எதிர்ப்பு அமைப்பையும் பலவீனப் படுத்திவிடும். உடலில் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கும். சமைத்த உணவு 4-5 மணி நேரத்திற்கு பிறகு கெட்டுப்போய்விடும். அதனால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்று பிரச்சினை தவிர்க்கமுடியாததாகிவிடும்" என்கிறார், மருத்துவ நிபுணர் ராம் ஆஷிஷ் யாதவ்.

    வெப்பநிலை உயர்வு குடல் நோய்களுக்கு வழி வகுக்கும் என்பதால் இரைப்பையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

    சமைத்த உணவுகளை 4 மணி நேரத்திற்குள் உட்கொண்டுவிட வேண்டும். குறிப்பாக மதியம் சமைத்த உணவை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    சமைத்த உணவு மற்றும் தண்ணீர் நிரப்பி இருக்கும் பாத்திரங்களை எப்போதும் மூடி வைக்க வேண்டும்.

    நறுக்கிய காய்கறிகள், பழங்களை இரவில் குளிர்சாதன பெட்டியில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    அதிக உடல் உழைப்பு கொண்ட வேலைகளில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது சூரிய ஒளி உடலில் படும்படியான வேலைகளை மேற்கொண்டிருந்தாலோ குறைந்தது 5 லிட்டர் தண்ணீராவது பருகவேண்டும். மற்றவர்கள் 4 லிட்டர் வரை தண்ணீர் பருகுவது அவசியமானது.

    வீட்டை விட்டு வெளியே செல்லும்போது சூரிய ஒளி தலையில் விழாமல் இருப்பதற்கு குடையையோ, தொப்பியையோ பயன்படுத்துவது நல்லது.

    தண்ணீரை தவிர கரும்பு சாறு, பதநீர், மோர், பழச்சாறுகள் போன்ற பானங்களை பருகுவது உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும். உணவில் தயிரை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    மசாலா மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளையும் தவிர்த்துவிடலாம்.

    கோடைகாலத்தில் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க மற்றொரு சிறந்த வழி பருவ காலத்தில் கிடைக்கும் பழங்களை உட்கொள்வதுதான். அவற்றில் உள்ளடங்கி இருக்கும் நீர்ச்சத்து உடலுக்கு குளிர்ச்சி தரும். தர்ப்பூசணி, முலாம் பழம், ஸ்டாபெர்ரி, பிளம்ஸ், பப்பாளி, அன்னாசி, கொய்யா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம். ஜூஸாக தயாரித்தும் பருகலாம். சாலட்டுகளாகவும் சாப்பிடலாம்.

    இரைப்பை குடல் நோய் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும். அது நிலைமையை மோசமாக்கும். இரண்டு நாட்களுக்கு மேல் வயிறு தொடர்பான அசவுகரியங்களை எதிர்கொண்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

    கோடை காலத்தில் குழந்தைகள் உடல் நலனில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அவர்களை அடிக்கடி வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள். அவர்கள் உட்கொள்ளும் உணவை கண்காணிப்பதும் அவசியம்.

    • செம்பு பாத்திரத்தில் தண்ணீர் பருகும் வழக்கமும் அதிகரித்து இருக்கிறது.
    • செம்பு தண்ணீரை எவ்வளவு பருக வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

    கொரோனா ஏற்படுத்தி சென்ற படிப்பினை காரணமாக முன்னோர்கள் பின்பற்றி வந்த வாழ்வியல் பழக்கங்களை பலரும் பின்பற்ற தொடங்கிவிட்டார்கள். பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் ஏற்படுத்தும் கேடுகளை உணர்ந்து அலுமினியம், களிமண், மூங்கில், செம்பு போன்றவற்றில் தயாராகும் பாட்டில்களை பயன்படுத்துவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

    செம்பு பாத்திரத்தில் தண்ணீர் பருகும் வழக்கமும் அதிகரித்து இருக்கிறது. வெளி இடங்களுக்கு செல்லும்போது செம்பு பாட்டிலில் தண்ணீரை நிரப்பி பருகுகிறார்கள். ஆனால் செம்பு பாத்திரத்தில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை அடிக்கடி பருகுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    செம்பு பொருட்களை உபயோகப்படுத்துவது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குவதிலும் செம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செல்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். கொலாஜன் உற்பத்தி, எலும்புகள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவும். மேலும் செம்பு சிறந்த ஆன்டி ஆக்சிடெண்டாக செயலாற்றக்கூடியது.

    டி.என்.ஏ மற்றும் செல்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிரீ ரேடிக்கல்களின் வீரியத்தை கட்டுப்படுத்தக்கூடியது. உடல் போதுமான அளவுக்கு இரும்பு சத்தை உறிஞ்சுவதற்கும் செம்பு உதவுகிறது. இத்தகைய காரணத்திற்காக செம்பு பாட்டிலில் தண்ணீர் பருகுவது நல்லது என்று மருத்துவ நிபுணர்களும் பரிந்துரைக்கிறார்கள்.

    ஆனால் செம்பு பாட்டில் தண்ணீரை அதிகம் பருகுவது ஆபத்தானது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் ஆப் டயட்டரி சப்ளிமெண்ட்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவின்படி, செம்பு பாட்டில் தண்ணீரை பருகுவது உடலுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் எப்போதாவது பருகினால் மட்டுமே அதன் நன்மைகளை அனுபவிக்க முடியும். அடிக்கடி செம்பு பாட்டிலில் தண்ணீரை நிரப்புவது நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும். சரியாக பராமரிக்காவிட்டால் துருப்பிடிக்க வழிவகுக்கும். இது சிக்கலை அதிகப்படுத்திவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

    செம்பு இயற்கையாகவே ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. தினமுமோ, அடிக்கடியோ செம்பு பாட்டில் தண்ணீரை பருகும்போது ரத்தத்தை சுத்திகரிக்கும் செயல்முறை இயல்பை விட அதிகமாக நடைபெறும். அதன் காரணமாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்படையக்கூடும். செம்பு துகள்கள், படிகங்களை சுவாசிக்கும்போது தொண்டை, மூக்கு பகுதிகளில் எரிச்சல் உணர்வு ஏற்படலாம். தலைவலி, தலைச்சுற்றல் போன்ற பாதிப்புக்கு ஆளாக நேரிடலாம்.

    செம்பு தண்ணீரை எவ்வளவு பருக வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதனை முழுமையாக பின்பற்றுவதன் மூலமே பக்கவிளைவுகள் இல்லாமல் செம்புவின் நன்மைகளை பெற முடியும். இரவில் 6 முதல் 8 மணி நேரம் தண்ணீரை செம்பு பாத்திரத்தில் சேமித்து வைத்து மறுநாள் பருகுவதுதான் சரியான வழிமுறை. இந்த தண்ணீரையும் ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் மட்டுமே பருக வேண்டும். நாள் முழுவதும் பருகக்கூடாது.

    காலையில் வெறும் வயிற்றில் பருகுவது சிறந்த பலனை கொடுக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துபடி, ஒரு கப் தண்ணீரில் 0.47 மில்லி கிராம் மட்டுமே செம்பு கலந்திருக்க வேண்டும். அதாவது ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி கிராம் செம்பு மட்டுமே இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 10 மில்லி கிராமுக்கு மேல் செம்பு உடலில் சேர்ந்தால் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். அதனால் செம்பு பாத்திரத்தில் சேமிக்கப்படும் தண்ணீரை அளவோடு பருகுவதுதான் நல்லது.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • உணவு சாப்பிட்டு முடித்ததும் செய்யும் குறிப்பிட்ட பழக்கங்கள் பலருக்கு இருக்கிறது.
    • சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய சில பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

    உணவு சாப்பிட்டு முடித்ததும் குட்டித்தூக்கம் போடும் வழக்கம் பலருக்கு இருக்கிறது. அதனை தொடர்ந்து பின்பற்றுவது நெஞ்செரிச்சல், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுதல் மற்றும் குறட்டை பிரச்சினைக்கு வழிவகுக்கும். சிலர் டீ, காபி பருகுவார்கள். அப்படி பருகினால் உடல், இரும்புச்சத்தை உறிஞ்சுவது கடினமாகிவிடும். செரிமானத்திற்கும் இடையூறு ஏற்பட்டுவிடும். சாப்பிட்டு முடித்ததும் ஒரு மணி நேரத்திற்கு பிறகு டீ, காபி பருகலாம். சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய மேலும் சில பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

    தண்ணீர் பருகுதல்

    சாப்பிடும்போதோ, சாப்பிட்டு முடித்த உடனேயோ தண்ணீர் பருகும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. அப்படி தண்ணீர் பருகுவது செரிமானத்தை மெதுவாக்கும், அசிடிட்டி, வீக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் அதனை தவிர்க்க வேண்டும். உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் பருகலாம். அல்லது சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து உட்கொள்ளலாம்.

    உடற்பயிற்சி செய்தல்

    சாப்பிட்ட உடனேயே உடற்பயிற்சி செய்வது சரியானது அல்ல. இதுவும் செரிமான செயல்முறைக்கு இடையூறு விளைவிக்கும். செரிமானம் நடைபெறுவதற்கு உடலுக்கு போதுமான ஆற்றல் தேவைப்படும். உடற்பயிற்சி செய்யும்போது அந்த ஆற்றல் செலவிடப்படுவதால் செரிமானம் தடைபடும். வயிற்று பிடிப்பு, வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    குளித்தல்

    சாப்பிட்ட பிறகு செரிமானத்திற்கு உதவுவதற்காக ரத்தம் வயிற்றை சூழ்ந்திருக்கும். அந்த சமயத்தில் குளிக்கும்போது உடலின் வெப்பநிலை மாறத் தொடங்கும். உடலை அதன் அசல் வெப்பநிலைக்கு திருப்புவதற்காக வயிற்றில் இருந்து ரத்தத்தை திசை திருப்பும். இதனால் ரத்தத்தின் பங்களிப்பு குறைந்து செரிமானம் பாதிப்புக்குள்ளாகும். வழக்கத்தை விட மெதுவாக செரிமானம் நடக்கும். அது தேவையற்ற அசவுகரியங்களை ஏற்படுத்தும்.

    பெல்ட்டை தளர்த்துதல்

    உணவு உட்கொண்ட பிறகு பெல்ட்டை தளர்த்தும் வழக்கம் பலருக்கு இருக்கிறது. அதனை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது இரைப்பையின் செயல்பாடுகளை தடுக்கும். பிற உடல்நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

    புகை, மது பழக்கம்

    சாப்பிட்ட பிறகு புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் 10 மடங்கு கூடுதலாக தீங்கு விளைவிக்கும். சிகரெட்டில் உள்ள நிகோடின் ஆக்சிஜன் மற்றும் ஹீமோகுளோபினுடன் கலந்து உடலின் பிற பகுதிகளுக்கு செல்லும் ரத்த வினியோகத்தை தடுத்துவிடும். குடலில் எரிச்சலை உண்டாக்கும். புண்களையும் ஏற்படுத்தும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நெல்லிக்காய்னு சொன்னதுமே பெரிய நெல்லிக்காயா? சின்ன நெல்லிக்காயான்னுதான் நிறையபேர் கேள்வி கேப்பாங்க.
    • நெல்லிக்காய் இதயத்தை பாதுகாக்குறதோட கொழுப்பை கரைக்கும். அதோட ரத்தக்குழாய்ல கொழுப்பு படியாம தடுக்கக்கூடியது.

    இந்தியாவை பொறுத்தவரைக்கும் இன்றைக்கு பெரும்பாலானவர்கள் இதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ரொம்பவே அவதிப்பட்டு வர்றாங்க. அப்படிப்பட்டவங்க தினமும் காலையில வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே போதும், நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.

    அதுசரி, நெல்லிக்காய்னு சொன்னதுமே பெரிய நெல்லிக்காயா? சின்ன நெல்லிக்காயான்னுதான் நிறையபேர் கேள்வி கேப்பாங்க. பொதுவா அரிநெல்லின்னு சொல்லக்கூடிய சின்ன நெல்லிக்காயை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துறது இல்லை. ஆனாலும் ஒரு கேள்வி கேட்டு வைப்பாங்க... நம்ம மக்கள். நெல்லிக்காய்... நாட்டு நெல்லிக்காய், எலுமிச்சம்பழம் அளவு பெரிதாக இருக்குமே அந்த நெல்லிக்காய்தான் நான் சொல்லக்கூடியது.

    வெறுமனே நெல்லிக்காய் சாப்பிட முடியலைனா நெல்லிக்காயோட இஞ்சி சேர்த்து அரைச்சி அதோட எலுமிச்சை சாறு சேர்த்து சர்க்கரை, தேவைப்பட்டா உப்பும் சேர்த்து தண்ணி கலந்து சாப்பிடலாம். காலையில் டீக்கு பதிலாக இந்த ஜூஸை குடிக்கலாம்.

    நெல்லிக்காய் இதயத்தை பாதுகாக்குறதோட கொழுப்பை கரைக்கும். அதோட ரத்தக்குழாய்ல கொழுப்பு படியாம தடுக்கக்கூடியது. கல்லீரல், கணையத்தை பாதுகாக்கும். அந்த வகையில கல்லீரல், கணையத்தில் வரக்கூடிய புற்றுநோய்களையும் சரி செய்யும் நெல்லிக்காய். ஏன்... ரகசியமா வரக்கூடிய எய்ட்ஸ் நோயைக்கூட நெல்லிக்காய் குணப்படுத்தும்னு ஆராய்ச்சியில கண்டுபிடிச்சிருக்காங்க. ஆனா நாம சாப்பிடுற முறையிலதான் நோய் குணமாகும்.

    -மரியா பெல்சின்

    • இறைச்சி வகைகளுடன் சேர்த்து பழங்களை உட்கொள்ளக்கூடாது.
    • பழங்களை தனியாகத்தான் சாப்பிட வேண்டும்.

    அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்ற உணர்வு, சளி, இருமல், ஒவ்வாமை, ஆஸ்துமா, காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு, மூச்சுக்குழாய் அழற்சி, நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள், அறிகுறிகள் கொண்டவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    யார் பழங்களை சாப்பிடலாம்?

    மலச்சிக்கல், சரும வறட்சி, வறண்ட கூந்தல், செரிமான கோளாறு, வளர்சிதை மாற்ற குறைபாடு போன்ற அறிகுறிகளை கொண்டவர்கள் பழங்களை சாப்பிடலாம். ஏனெனில் பழங்கள் குடலில் உள்ள பாக்டீரியாக்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும். செரிமான செயல்பாடுகளை தூண்டும்.

    எப்படி சாப்பிட வேண்டும்?

    பழங்களை தனியாகத்தான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் பழங்களை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பால் பொருட்கள், தானியங்கள், இறைச்சி வகைகளுடன் சேர்த்து பழங்களை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் அவை நச்சுத்தன்மையுடையதாக மாறிவிடும்.

    காலையில் பழங்கள் சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற விவாதம் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது. வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட்டால் செரி மானம், சருமம், கூந்தல், வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை மேம்படும் என்ற கருத்து நிலவுகிறது. இருப்பினும் ஒவ்வொரு நபரின் உடல் வகையும், வளர்சிதை மாற்றமும் மாறுபடக்கூடும். அதற்கேற்பவே உணவு பழக்கங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு பழத்திலும் பல்வேறு வகையான நொதிகள் மற்றும் அமிலங்கள் உள்ளன. அவை குடலில் உள்ள பாக்டீரியாவுடன் வினை புரிவதை பொறுத்தே சம்பந்தப்பட்ட நபருக்கு நன்மை செய்யுமா? தீங்கு விளைவிக்குமா என்பது தெரியவரும்.

    ''பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், ஆக்ஸாலிக் அமிலம், மாலிக் அமிலம் போன்றவை பால் பொருட்களில் உள்ள லாக்டிக் அமிலத்துடன் விரைவாக வினைபுரிந்துவிடும். ஆனால் காய்கறிகள், தானியங்கள், இறைச்சி வகைகள் போன்றவற்றுடன் நன்றாக கலக்காமல் செரிக்கப்படாத வளர்சிதை மாற்ற கழிவுகளை உருவாக்கிவிடும். அதனால் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளிலும், திசுக்களை உருவாக்கும் செயல்முறைகளிலும் பாதிப்பு ஏற்படலாம்'' என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

    காலையில் பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

    * உடல் நல பிரச்சினைகள் எதுவும் இல்லாதவர்கள் காலையில் பழங்கள் சாப்பிடலாம். நமது உடல் காலை 7 மணி முதல் 11 மணிக்குள் நச்சுக்களை நீக்கும் செயல்முறையை மேற்கொள்ளும். அந்த சமயத்தில் நிறைய கொழுப்பு சத்து அல்லாத உணவுகளை சாப்பிடுவது நல்லது. குறிப்பாக பழங்களை சாப்பிடுவது நச்சுக்களை நீக்கும் செயல்முறையை துரிதப்படுத்துவதற்கு தேவையான ஆற்றலை கொடுக்கும்.

    * மற்ற உணவுகளை விட பழங்கள் எளிதில் ஜீரணமாகக்கூடியவை. காலை வேளையில் பழங்களை சாப்பிடும்போது அதில் இருக்கும் இயற்கையான சர்க்கரையானது வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை அதிகரிக்கச்செய்யும்.

    * காலையில் எழுந்த உடனேயே உடலுக்கு இயற்கையான சர்க்கரை தேவைப்படும். அதனை உட்கொள்வது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க தூண்டும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கோடை காலத்தில் உணவுக்கட்டுப்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம்.
    • பல உணவுகள் நீரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

    கோடை காலத்தில் நிலவும் வெப்பநிலையை உடல் சமாளிப்பதற்கு உணவுக்கட்டுப்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம். ஏனெனில் பல உணவுகள் நீரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கின்றன. அவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உடல் உபாதைகளுக்கு ஆளாக்கிவிடும். வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது தவிர்க்க வேண்டிய 10 உணவுகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு...

    1. காபி

    நீரிழப்புக்கு வழிவகுப்பதுடன் உடலின் வெப்பநிலையை கூட அதிகரிக்க செய்துவிடும். வெயில் சுட்டெரிக்கும் கோடை காலங்களில் காபியை தவிர்ப்பது நல்லது. முழுவதுமாக கைவிட முடியாவிட்டாலும், காபி பருகும் அளவை குறையுங்கள்.

    2. ஊறுகாய்

    சோடியம் அதிகம் கலந்திருக்கும் ஊறுகாய் நீரிழிவை ஏற்படுத்தும். மேலும் கோடையில் ஊறுகாயை அதிகமாக சாப்பிடுவதும் அஜீரணத்தை உண்டாக்கும்.

    3. உலர் பழங்கள்

    உலர்பழங்கள் ஊட்டச்சத்து மிகுந்தவைதான் என்றாலும் கோடையில் அவற்றின் பயன்பாட்டை குறைத்துவிடுங்கள். ஏனெனில் அவை உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்துவிடும். தேவையற்ற அசவுகரியங்களுக்கு ஆளாக்கிவிடும்.

    4. பானங்கள்

    கார்பனேற்றப்பட்ட பானங்களை கோடையில் அதிகமாக பருகுவதற்கு பலரும் விரும்புவார்கள். அவற்றுள் அதிக சர்க்கரை கலந்திருக்கும். சட்டென்று நீரிழப்புக்கு வித்திடும்.

    5. மில்க் ஷேக்குகள்

    மில்க் ஷேக்குகளும் கோடை காலத்தில் விரும்பி உட்கொள்ளப்படும் பானங்களாக இருக்கின்றன. அதிக பால் சேர்க்கப்பட்ட மில்க் ஷேக்குகள் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி அவை கலோரிகளால் நிரம்பி இருக்கும். அவை உடலுக்கு ஆரோக்கியமற்றவை. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் உள்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

    6. காரமான உணவுகள்

    வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் சமயங்களில் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். அவற்றுள் கலந்திருக்கும் கேப்சைசின் என்னும் சேர்மம் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. நீரிழப்பு, உடல் சூடு, அஜீரணம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

    7. பொரித்த உணவுகள்

    பஜ்ஜி, வடை, சமோசா மற்றும் பிரெஞ்ச் பிரை போன்ற எண்ணெய்யில் பொரித்தெடுக்கப்படும் அனைத்து வகையான உணவுகளும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். எளிதில் செரிமானம் ஆகாது. எனவே கோடையில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    8. பழச்சாறு

    பழச்சாறு பருகுவதில் தவறில்லை. ஆனால் பழங்களை சாப்பிடாமல் வெறுமனே பழச்சாறு உட்கொள்வது நல்லதல்ல. உடலுக்கு தேவையான நார்ச்சத்து பழங்களில் இருந்துதான் கிடைக்கும். பழச்சாறுகளில் அதன் வீரியம் குறைந்திருக்கும். அதனால் பழச்சாறுகளை விட பழங்கள் மற்றும் காய்கறிகள் சிறந்த தேர்வாக அமையும்.

    9. மது

    மது உட்கொள்வது நீரிழப்புக்கு வழிவகுக்கும். தொண்டை வறட்சி, தலைவலி போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். கோடையில் மது அருந்துவது அதிக வியர்வையை வெளிப்படுத்தும். அதனால் உடலில் அதிக நீரிழப்பு ஏற்படும்.

    10. உப்பு உணவுகள்

    உணவில் உப்பை அதிகம் சேர்த்துக்கொண்டால் உடல் நீரிழப்புக்கு ஆளாகும். உணவு மற்றும் உடலில் இருக்கும் தண்ணீரை உப்பு உறிஞ்சிவிடும். அதிகப்படியான உப்பு சேர்ப்பது சோம்பல், மயக்கம் போன்ற பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஆரோக்கியமான வாழ்க்கைக்கு போதுமான அளவு தூக்கம் மிக அவசியம்
    • தினமும் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.

    குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகள், அதனால் ஏற்படும் கவலை, பணி நெருக்கடி, நெருக்கமான நபர்களை விட்டுப் பிரிதல் உள்ளிட்ட பல காரணங்கள் தூக்கமின்மைக்கு வழிவகுக்கின்றன. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு போதுமான அளவு தூக்கம் மிக அவசியம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

    தினமும் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். அது பலருடைய வாழ்க்கையில் சாத்தியமில்லாததாக இருக்கிறது. குறுகிய நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துஎழுபவர்கள் உடல் சோர்வு இல்லாமல் ஓரளவுக்கு சமாளித்துவிடுகிறார்கள். அதே நிலை நீடித்தாலும் ஆபத்தானதுதான். ஒரு சில நாட்கள் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவது இயல்பானது. தொடர்ந்து தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொண்டால் தூங்குவதற்கு முன்பு ஒருசில பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது அவசியமானது.

    பால் பருகுங்கள்:

    இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் பால் பருக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் பாலில் உள்ளது. இது அன்றைய நாளின் சோர்வை நீக்கி நன்றாகத் தூங்குவதற்கு உதவும்.

    குளியுங்கள்:

    இரவில் படுக்கும் முன்பு வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். இதுவும் தூக்கத்தை வரவழைக்கும். அன்றைய நாளின் களைப்பு நீங்கி உடல் மட்டுமின்றி, மனமும் புத்துணர்ச்சி பெறும். இரவில் குளித்துவிட்டு உறங்கும்போது உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுக்கும் பழக்கமும் கட்டுப்படுத்தப்படும்.

    மசாஜ் செய்யுங்கள்:

    இரவில் தூங்கும் முன்பு 2 முதல் 5 நிமிடங்கள் உள்ளங்காலில் மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக உள்ளங்காலில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகளில் லேசாக எண்ணெய் தடவி மசாஜ் செய்வது சிறப்பானது. அது உடலையும், உள்ளத்தையும் தளர்வடைய வைக்கும். ஆழ்ந்த தூக்கத்தையும் தரும்.

    விலகி இருங்கள்:

    இரவில் படுக்கை அறைக்குள் நுழைந்த பிறகு படுத்தவாறே, செல்போன், லேப்டாப், டி.வி. பார்க்கும் பழக்கத்தை கைவிடுங்கள். மனதை அமைதிப்படுத்துவதற்கு வாய்ப்பு கொடுங்கள். அப்படி அமைதியான சூழலை உணர்ந்தால் மூளை செல்கள் தளர்வடைந்து, நல்ல தூக்கம் கிடைக்கும். அடுத்த நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்குவீர்கள்.

    உணவைத் தவிருங்கள்:

    இரவு உறங்குவதற்கு முன்பு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளடங்கிய உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்கவும். ரொட்டிகள், நூடுல்ஸ், பாஸ்தா, அரிசி உணவுகள், ஆப்பிள், வாழைப்பழம், பெர்ரி, மாம்பழம், முலாம்பழம், ஆரஞ்சு போன்ற பழங்கள், ஐஸ்கிரீம், மில்க் ஷேக்குகள், கேக், சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்கள், இனிப்பு பொருட்கள், சிப்ஸ் வகைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

    அவை இரவில் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் செரிமான மண்டலத்தின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். நல்ல செரிமானத்திற்கு, இரவில் ஜீரணமாவதற்குக் கடினமாக இருக்கும் உணவைத் தவிர்க்க வேண்டும்.

    • தினமும் இருமுறை குளிப்பது நல்லது.
    • கேழ்வரகை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    கொஞ்சம் உஷாராக இருந்தால் கத்திரி வெயிலை சமாளித்து விடலாம்.

    இதோ சில யோசனைகள்...

    • வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக இருக்கும் என்பதால், உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். மோர், கரும்புச்சாறு, இளநீர் போன்றவற்றை அருந்துங்கள்.

    • ஆரஞ்சு, தர்ப்பூசணி, திராட்சை, எலுமிச்சை, சாத்துக்குடி பழச்சாறு உடலுக்கு தேவையான தாதுப்பொருட்களை, வைட்டமின்களையும் அளிப்பதால், அதை அடிக்கடி அருந்தலாம்.

    • கூடுமானவரை காபி, டீயை தவிர்ப்பது நல்லது.

    • காரமான உணவு வகைகளை தவிர்த்து வெள்ளரிக்காய், கேரட், புடலங்காய், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    • கேழ்வரகை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது மட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சியையும் தரும்.

    • மாமிச உணவு வகைகள் உஷ்ணத்தை அதிகரித்து, வயிற்றுக் கோளாறை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றை தவிர்ப்பது நல்லது.

    • சுட்டெரிக்கும் வெயிலில் வெளியே செல்வதை கூடுமானவரை தவிர்த்து விடுங்கள். கடை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருவதாக இருந்தால் காலை 10 மணிக்குள் போய்விட்டு திரும்பிவிடுவது நல்லது.

    • வெளியே செல்லும் போது மறக்காமல் குடையை எடுத்துச் செல்லுங்கள். (அதை திருப்பி கொண்டு வர மறந்துவிடாதீர்கள். ஏனெனில் குடையும் மறதியும் இரட்டைப் பிறவிகள்). குடை இல்லாத பட்சத்தில் தொப்பிஅணிந்து செல்லுங்கள். கிராமப்புறங்களில் வெளியே செல்லும் பெரியவர்களும், வயல்களில் வேலை செய்பவர்களும் தலைப்பாகை அணிவது வழக்கம். இது வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும்.

    • மென்மையான, தளர்வான பருத்தி ஆடைகளையே அணியுங்கள்.

    • தினமும் இருமுறை குளிப்பது நல்லது.

    • படுக்கை அறை நன்கு காற்றோட்டமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதற்காக ஜன்னலை திறந்து வைத்து அதன் அருகில் தலைவைத்து படுக்காதீர்கள். திருடர்கள் கைவரிசையை காட்டிவிடக்கூடும்.

    • வாரத்திற்கு 2 முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் சூடு தணியும்.
    • ஜீன்ஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

    அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் தினமும் வெயில் சதமடித்துக் கொண்டிருக்கிறது. அனல் காற்று வீசுகிறது.

    கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக சிலர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களை தேடி செல்கின்றனர். பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கோடை வெப்பத்தில் இருந்து பிள்ளைகளை காத்து கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

    வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளை ஈடு செய்வதற்காக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர், தர்பூசணி, எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாற்றை அருந்தும்படி ஆலோசனை வழங்கப்படுகிறது.

    கோடைக்கால நோய்களை தவிர்க்கவும், வெப்பத்தாக்கத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மத்திய, மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள் விடுத்து வருகின்றன. அந்த வகையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய எளிய சில வழிமுறைகளை அறிவித்து உள்ளன.

    குறிப்பாக நடப்பு ஆண்டு சுட்டெரிக்கும் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்றும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமானது. வெயிலில் அதிக நேரம் செல்ல வேண்டிய நிலைமை இருந்தால் வெப்பத்தை தடுக்கும் ஆடைகளை அணியுங்கள்.

    குறிப்பாக பருத்தி ஆடைகளே சிறந்தது. அடர் நிறம் மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிருங்கள். சன்ஸ்கிரீன் பூசுவதற்கு மறக்காதீர்கள். மதுபானம் அருந்துவதை முற்றிலும் தவிருங்கள். மது அதிகம் அருந்தினால் நீரிழப்பை ஏற்படுத்தும். இதனால் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும்.

    மருத்துவ உதவியை நாடுங்கள்

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் மிக கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடாதீர்கள். மின்சார உபகரணங்களை அதிகமாக பயன்படுத்தாதீர்கள். அவையும் வெப்பத்தை உருவாக்கி வீட்டின் வெப்பநிலையை அதிகரித்துவிடும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். அவை வெப்ப பக்கவாதத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்.

    போதுமான அளவு தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். மொட்டை மாடி போன்ற கான்கிரீட் தளம் கொண்ட மேற்பரப்புகளில் அதிக நேரத்தை செலவிடாதீர்கள். அவை சூரியனின் கதிர்களை அதிகம் பிரதிபலிக்கும். உங்கள் உடலை சட்டென்று வெப்பமாக்கிவிடும். பகல் வேளையில் வீட்டின் ஜன்னல்களை மூடிய நிலையில் வைக்காதீர்கள். ஏனெனில் இது வெப்பத்தை அதிகப்படுத்தி அறையை இன்னும் சூடாக மாற்றும்.

    அதிக நேரம் சூரிய ஒளி

    வெயில் காலத்தில் நீர் நிலைகளில் நீந்துவது உடலை இதமாக்கும். எனினும் பாதுகாப்பான சூழல் கொண்ட நீர்நிலைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். வெயில்படும்படியான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் உலோகப் பொருட்களைத் தொடாதீர்கள். அவை அதிக வெப்பமடைந்து தீக்காயங்களை ஏற்படுத்தும். முகம் மற்றும் கண்களை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தொப்பி, கண்ணாடி அணிய மறக்காதீர்கள். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், செரிமானம் ஆவதற்கு கடினமான உணவுகளை உண்ணாதீர்கள்.

    ஏனென்றால் இந்த உணவுகள் மந்தமாக உணர வைக்கும். மேலும் உடலின் வெப்பநிலையை அதிகரிக்க செய்துவிடும். அதிக நேரம் சூரிய ஒளி சருமத்தில் படும்படி வைத்துக்கொள்ளாதீர்கள். அது தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று அறிவுறுத்தி உள்ளது.

    கொளுத்திவரும் கோடை வெயிலை பொதுமக்கள் எவ்வாறு சமாளித்து வருகிறார்கள் என்பது பற்றி சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் விவரம் வருமாறு:-

    வீட்டில் இருந்தபடி வேலை

    கொசப்பேட்டையை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் நிர்மல் - பிரியா தம்பதி கூறும் போது, 'கோடையில் உணவு பழக்கத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் திட உணவுகளை குறைத்துவிட்டு திரவ உணவுகளை அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். அதேபோல் சாலையின் ஓரத்தில் விற்பனை செய்யப்படும் பதநீரை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதுதவிர குழந்தைகளுக்கும் தேவையில்லாதவற்றை வாங்கி தருவதைவிட கோடைக்கு ஏற்ற தர்பூசணி பழம், கிர்ணி பழங்கள் வாங்கி தருகிறோம். அதேபோல் நிறுவனத்திலும் வீட்டில் இருந்து பணி செய்ய கூறியிருப்பதால் வெளியே செல்வது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா காலத்தில் வழங்கியபடி வாய்ப்புள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணி செய்ய உத்தரவிடலாம். இதன் மூலம் ஓரளவு கோடையின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்க முடியும்' என்றார்.

    சிக்கனுக்கு டாடா

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் பணியாற்றும் தனலட்சுமி, பிரித்தி ஆகியோர் கூறும் போது, 'கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக தினசரி பதநீர், நுங்கு வாங்கி சாப்பிடுகிறோம். இதுதவிர வீட்டில் எலுமிச்சை பழ ஜூஸ் அடிக்கடி குடித்து வருகிறோம். அத்துடன் வீட்டில் சிக்கன் சூடு என்பதால் கோடையில் சிக்கனுக்கு டாடா சொல்லப்பட்டு உள்ளது. அதேபோல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள குடிநீரை சுத்தமாக பயன்படுத்துவதில்லை. வெதுவெதுப்பான குடிநீரை தான் பயன்படுத்துகிறோம். குடிநீரும் வெளியே எங்கும் சாப்பிடாமல் தேவையான குடிநீரை வீட்டில் இருந்தே கொண்டு வந்து பருகுவதால் கோடையின் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்பித்து வருகிறோம். வீட்டை விட்டு வெளியே போய்விட்டு மீண்டும் வீடு திரும்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. மதிய வேளைகளில் வெளியில் சென்றால் வியர்வையிலேயே குளிக்கும் அளவுக்கு வெப்பம் தகிக்கிறது' என்றனர்.

    பழங்கள், காய்கறிகள்

    அமைந்தகரை அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை (இந்திய மருத்துவம்) சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் வெண்தாமரை செல்வி கூறும் போது, 'கோடை வெயிலின் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கணினியில் வேலை பார்ப்பவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டால் பொன்னாங்கண்ணி தைலம் தேய்த்து குளித்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். அதேபோல் வாரத்திற்கு 2 முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் சூடு தணியும். உணவு முறையை பொறுத்தவரையில் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து மிக்சியில் அரைத்து அதனை பாலில் கலந்து காய்ச்சி அருந்துவதன் மூலம் உடல் சூடு குறையும்.

    திராட்சை, கிர்ணிப்பழம், தர்பூசணி பழங்கள் மற்றும் கீரைகள், புடலங்காய், பீர்க்கன்காய், வெண் பூசணி, மஞ்சள் பூசணியை அதிகம் பயன்படுத்த வேண்டும். அத்துடன் சின்ன வெங்காயத்தை (சாம்பார் வெங்காயம்) நல்எண்ணெய், கடுகு, உளுந்து போட்டு வதக்கி சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். கண் எரிச்சல் அதிகம் இருப்பதாக உணருபவர்கள் இரவில் உள்ளங்காலில் வெண்ணெய் தடவி கொண்டு படுத்தால் கண் எரிச்சல் குறையும். ஆடைகளை பொறுத்தவரையில் காட்டன் ஆடைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    ஜீன்ஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வெயிலில் செல்பவர்களுக்கு ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் என்பதால் நீர்மோர், தண்ணீர் அதிகம் குடித்துவிட்டு, குடைகள் மற்றும் தலையில் வைப்பதற்கான தொப்பிகளை எடுத்து செல்ல வேண்டும். வியர்வை துர்நாற்றத்தை போக்குவதற்கு குளிக்கும் தண்ணீரில் நலுங்கு மாவை கலந்து குளிக்க வேண்டும். சிறுநீர் கடுப்பு ஏற்பட்டால் வெட்டிவேரை இரவில் குடிநீரில் கலந்து காலையில் குடிக்கலாம். அதேபோல், எலுமிச்சம்பழம் பிழிந்து நன்னாரி சர்பத் அடிக்கடி குடிக்கலாம். காபியை தவிர்த்துவிட்டு டீயில் ஏலக்காய் போட்டு குடிப்பதால் சூட்டை தணித்து கோடையில் எந்தவித ஆரோக்கிய குறைபாடும் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது' என்றார்.

    சூடுபிடித்த நுங்கு- பதநீர் வியாபாரம்

    எழும்பூரில் நுங்கு- பதநீர் வியாபாரம் செய்யும் தென்காசி செல்வா கூறும் போது, 'கோடை வெயில் வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே இருப்பதால் நுங்கு, பதநீர் வியாபாரம் நன்றாக இருக்கிறது. தேவைப்படும் நுங்கு தென்காசியில் இருந்தும், பதநீர் மேல்மருவத்தூரில் இருந்தும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வியாபாரம் வருகிற ஜூலை மாதம் வரை இருக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக நுங்கு, பதநீர் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர்' என்றார்.

    கூடுதல் குடிநீர்

    மந்தைவெளியைச் சேர்ந்த வணிகர் பாலகிருஷ்ணன்-லதா தம்பதிகள் கூறும் போது, 'கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் தேவையில்லாமல் பகல் பொழுதில் வெளியே செல்ல வேண்டாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் வணிகராக இருக்கும் நான் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க முடியாது. ஆனால் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தரவேண்டி இருக்கிறது. எனவே தினசரி கூடுதல் தண்ணீர் குடிக்கிறேன். இதுதவிர வெளியே வந்தால் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்யும் நுங்கு, பதநீர், பழ ஜூஸ், நீர்மோர் போன்றவற்றை வாங்கி குடித்து ஓரளவு கோடை வெப்பத்தில் இருந்து தங்களை காத்து கொள்கிறோம். இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் தினசரி காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளும் குளிக்கிறோம். கோடை வெப்பம் தணியும் நாளை எதிர்நோக்கி காத்து கொண்டு இருக்கிறோம்' என்றனர்.

    வெளியில் தலைகாட்டவில்லை

    விருகம்பாக்கம் சொர்ண லட்சுமி கூறும் போது, 'கோடை என்றாலே விடுமுறை கொண்டாட்டம் ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் கோடை வெப்பத்தின் தாக்கம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அதுவும் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உணவு பழக்கத்தையும் சற்று மாற்றி வருகிறோம். தண்ணீர் ஆகாரத்தை தான் அதிகம் சாப்பிட்டு வருகிறோம். டாக்டர்கள் கூறியபடி தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்வதில்லை. பழங்கள் மற்றும் கீரைகளையும் அதிகம் பயன்படுத்துவதால் பெரிய அளவில் கோடை வெப்பத்தால் பாதிக்கப்படவில்லை. இன்றும் ஓரிரு மாதங்களில் இதே உணவு பழக்கத்தை தான் கடைப்பிடிப்போம். வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக வீட்டிலே இருக்கிறோம். இதனால் வெளியில் தலை காட்ட முடியவில்லை' என்றார்.

    • வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்.
    • குடல்புண் உள்ளவர்கள் மிளகை அதிகம் சேர்த்து கொள்ளக்கூடாது.

    நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து, சில நோய்களுக்கு மருந்துகளை எளிய முறையில் தயாரிக்கலாம் என சித்த மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    * கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் இவற்றை தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறவைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி குடித்தால் அஜீரணத்திலிருந்து நிவாரணம் கிட்டும்.

    * அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றை குறைக்க மிளகு அருமருந்து. உணவில் மிளகை சேர்த்துக்கொள்வதால் இவை ஏற்படாமல் தவிர்க்கலாம்.

    * மிளகு சாப்பிடுவதால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. அது வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சரிசெய்கிறது. ஆனால் குடல்புண் உள்ளவர்கள் மிளகை அதிகம் சேர்த்து கொள்ளக்கூடாது.

    * வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சிறிதளவு வெந்தயத்தை வறுத்து, சோம்பும், உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். மேலும் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து முகத்தில் பூசி வர பருக்கள் குறையும்.

    * கசகசாவை நன்கு ஊறவைத்து அரைத்து மோருடன் கலந்து குடித்துவந்தால் சீதபேதி கட்டுப்படும்.

    * சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காய், அவரைப்பிஞ்சு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான காலணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

    * நாவல்பழம் அடிக்கடி சாப்பிட, சர்க்கரை நோய் கட்டுப்படும். தினமும் கையளவு நாவல்பழங்களை சாப்பிட்டால், சிறுநீர்க்குழாயில் ஏற்படும் தொற்று குணமாகும். சிறுநீர்க்குழாயில் காணப்படும் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ரசாயனங்கள் நாவல்பழத்தில் உள்ளன.

    * பாதாம்பருப்பில் வைட்டமின் 'ஈ' சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் சிறிதளவு பாதாம் பருப்புகள் சாப்பிடுவதன் மூலம் சருமம், தலைமுடி, நகங்கள் ஆகியவை பளபளப்பாகும்.

    • குறிப்பிட்ட பானங்களை பருகினால், உடல் எடை குறைவதோடு கோடை உஷ்ணத்தில் இருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
    • கோடை காலத்தில் பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

    உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் தற்போது குறிப்பிட்ட பானங்களை பருகினால், உடல் எடை குறைவதோடு மட்டுமின்றி- கோடை உஷ்ணத்தில் இருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். அத்தகைய பானங்கள் பற்றி பார்ப்போம்!

    எலுமிச்சை-வெள்ளரி பானம்: சிறிய வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை பழம் இரண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதனை அகன்ற ஜாரில் போட்டு இரண்டு டம்ளர் நீர் நிரப்பிக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு புதினா இலைகளையும் சேர்த்து அரைக்கவேண்டும். இந்த சாறினை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பருகி வரலாம். இது குறைந்த கலோரிகளை கொண்டது. அதனால் உடலில் சேரும் கலோரிகளை கட்டுப்படுத்துவதோடு, நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும். இதனை பருகினால் நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்படலாம்.

    லவங்கப்பட்டை, ஸ்ட்ராபெர்ரி பானம்: 4-5 ஸ்ட்ராபெர்ரி பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். சிறிதளவு லவங்கப்பட்டை, புதினா சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும். அதனை வடிகட்டி, ஒரு மணி நேரம் கழித்து பருகலாம். இரவில் பிரிட்ஜில் வைத்துவிட்டு காலையிலும் பருகலாம். கோடை காலத்தில் உடல் வெப்பத்தை குறைப்பதோடு, எடை குறையவும் உதவும்.

    மோர்: பசியின்மை, செரிமான கோளாறு கொண்டவர்களுக்கும், அதிக உடல் எடை கொண்டவர்களுக்கும் மோர் சிறந்த நிவாரணம் தரும். வயிறு சார்ந்த பிரச்சினைகளை கொண்டவர்கள் தினமும் மோர் அருந்துவது நல்லது. மிக்சியில் ஒரு டம்ளர் மோர் ஊற்றி அதனுடன் சிறிதளவு புதினா, கொத்தமல்லி இலைகள், சிறிதளவு கேரட் சேர்த்து விழுதாக அரைத்து, பருகலாம்.

    எலுமிச்சை சாறு கலந்த கிரீன் டீ: கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி மற்றும் பாலிபினால்கள் இருக்கின்றன. இவை உடல் எடையை குறைக்க உதவும். சூடான நீரில் கிரீன் டீ பேக் ஒன்றை போடவும். அதனுடன் அரை எலுமிச்சை பழ சாறு கலந்து பருகலாம். வெறுமனே கிரீன் டீ பருகுவதற்கு பதிலாக எலுமிச்சை பழ சாறு சேர்ப்பது சிறந்த பலனை கொடுக்கும்.

    எலுமிச்சை, இஞ்சி, தேன் பானம்: அகன்ற பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதனுடன் ஒரு துண்டு இஞ்சியை நறுக்கி சேர்க்கவும். நன்கு கொதித்ததும் இறக்கிவிட்டு தலா ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேன் கலந்து இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்பு அந்த நீரை வடிகட்டி பருகவும். உடல் எடை குறைப்புக்கு இது சிறந்த பானமாக கருதப்படுகிறது.

    கேரட் - ஆரஞ்சு ஜூஸ்: கேரட்டில் நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் போன்றவை இருப்பதால் பசியை கட்டுப்படுத்தும். குறைவாக சாப்பிடுவதற்கும் வழிவகுக்கும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி எடையை குறைப்பதோடு, நீர்ச்சத்தையும் தக்கவைக்கும். கேரட், ஆரஞ்சு பழம் இரண்டையும் தோல் நீக்கி மிக்சியில் போட்டு அரைத்து ஜூஸாக்கிக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு மிளகு தூள், உப்பு சேர்த்து பருகவேண்டும்.

    காய்கறி-பழ ஜூஸ்: கோடை காலத்தில் பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். அவைகளில் இருக்கும் நார்ச்சத்துக்கள் பசியை கட்டுப்படுத்தி, அதிகமாக உணவு சாப்பிடுவதை தடுக்கும். கேரட், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, கீரை, பீட்ரூட் போன்றவற்றை ஜூஸாக்கி பருகலாம். அவற்றுடன் சிறிதளவு கல் உப்பு, மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றில் பெரும்பாலானவை கிளைசெமிக் குறியீட்டு எண்களை குறைவாக கொண்டிருப்பதால் சர்க்கரை அளவையும் கட்டுக்குள்வைக்கும்.

    அன்னாசி லெமனேட் பானம்: அன்னாசி பழத்தில் எடையை குறைக்க உதவும் கொழுப்பு அமில ஆக்சிடென்டுகள் இருக்கின்றன. ஒரு அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து ஜூஸாக்கி கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை பழசாறு, சிறிதளவு மிளகு தூள் கலந்து பருகலாம். காலை வேளையில் இந்த பானத்தை பருகுவது எடையை குறைப்பதோடு, புத்துணர்ச்சியையும் தரும்.

    பீட்ரூட்-புதினா ஜூஸ்: இரண்டு பீட்ரூட்களை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் லேசாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு கைப்பிடி புதினா இலை, இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஜூஸாக்கி தேவைக்கு நீர் கலந்து பருகலாம். பீட்ரூட் இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. அதில் நார்ச்சத்தும் அதிகம். வயிற்று ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியது. குடலை சுத்தம் செய்வதுடன் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவும்.

    • பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றன.
    • மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களை தடுக்கும் 5 உணவு வகைகளை பார்ப்போம்.

    இதய நோய்கள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடாமல் புறக்கணிப்பதால் மாரடைப்பு அபாயம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களை தடுக்கும் 5 உணவு வகைகளின் பட்டியலை பார்ப்போம்.

    1. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்: இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களுக்கு முக்கிய பங்குண்டு. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட சால்மன், டுனா போன்ற மீன்களை உண்பது, டிரைகிளிசரைடுகளை குறைத்து, உடலில் ஏற்படும் வீக்கத்தை போக்கும். அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் மற்றும் ராஜ்மா போன்ற ஒமேகா-3 நிறைந்த உணவுகள் ரத்த அழுத்தத்தை இயல்பான அளவில் வைத்திருக்கவும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவும்.

    2. முழுதானியங்கள்:

    பதப்படுத்தப்பட்ட தானியங்கள் பல்வேறு செயல் முறைகளின் மூலம் வடிகட்டப்படுகின்றன. அப்போது அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் வீரியம் குறைந்து போய்விடக்கூடும். ஆனால் முழு தானியங்களை கழுவி சுத்தம் செய்யும்போது இத்தகைய பாதிப்பு கள் நேராது. மேலும் முழு தானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளடங்கி இருக்கும். அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக தக்க வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டவை. நீரிழிவு மற்றும் இதய நோய் ஆபத்துக்களை குறைக்கவும் செய்யும். ''முழு தானியங்களை பதப்படுத்தும்போது, அவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் நீக்கப்படக்கூடும். அவற்றை அதிகம் உட்கொள்வது உடல் பருமனையும், ஊட்டச்சத்து குறைபாட்டையும் ஏற்படுத்தும். வெள்ளை அரிசிக்கு பதிலாக பழுப்பு அரிசியையும், வழக்கமான பாஸ்தாவை விட முழு கோதுமை நீக்கப்படாத பாஸ்தாவையும், கார்ன் பிளேக்குகளுக்கு பதில் ஓட்ஸையும் தேர்வு செய்யலாம்'' என்கிறார் மும்பையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் பாட்டீல்.

    3. பழங்கள்- காய்கறிகள்: வளமான வாழ்க்கைக்கு பழங்கள், காய்கறிகளை உண்ணுங்கள் என்கிறார்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ, பொட்டாசியம், போலிக் அமிலம் ஆகியவை நிரம்பியுள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்க உதவுவதோடு உடலில் ஏற்படும் தேய்மானத்தை சரி செய்வதற்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.

    4. நிறைவுற்ற கொழுப்பு: இறைச்சி வகைகள் மற்றும் பால் பொருட்களில் நிறைவுற்ற கொழுப்பு காணப்படுகிறது. இவை எல்.டி.எல் கொழுப்பின் அளவை உயர்த்தலாம். தமனிகளின் செயல்பாடுகளை முடக்கி விடலாம். எனவே நிறைவுற்ற கொழுப்புகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான இறைச்சி வகைகளை தேர்வு செய்ய வேண்டும். வெண்ணெய்க்கு பதில் நெய், கடுகு எண்ணெய் போன்ற நல்ல கொழுப்பு கொண்ட உணவு பொருட்களை சமையலுக்கு தேர்ந்தெடுக்கலாம்.

    5. பால் பொருட்கள்: பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றன. ஆனால் அவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது அவற்றில் உள்ள கொழுப்பு உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்துவிடும். பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம் போன்ற பால் பொருட்களில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருக்கும். இருப்பினும் அவற்றில் குறைந்த கொழுப்பு வகை கொண்டவற்றை உட்கொள்வது இதய நோய் அபாயத்தை குறைக்கும்.

    ×