search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டீ"

    டீ, இந்தியாவை எட்டிப்பார்ப்பதற்கு முன்னால் இங்கு சூடான கிராமிய காபி வகைகள் பருகப்பட்டு வந்தன. அவை கருப்பட்டி அல்லது வெல்லத்தில் தயார் செய்யப்பட்டது.
    காபி, தேநீர் இரண்டும் உலக அளவில் எல்லோரும் விரும்பும் பானங்கள். ஆனால் இவை இரண்டின் ருசியும் உலக நாடுகள் அனைத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ‘தினமும் நான் ஏழெட்டு டீ குடிப்பேன். டீ குடிக்கவில்லை என்றால் எனது தலையே வெடித்துப்போய்விடும்’ என்று சொல்கிற இந்திய டீ பிரியர்கள் கனடாவுக்கோ, ஆஸ்திரேலியாவுக்கோ போகும்போது அங்கு கிடைக்கும் டீயை ஆசையோடு ஒரு மிடறு குடித்துவிட்டு, ‘கலரைப் பார்த்து மயங்கிட்டேன். இப்படி ஒரு டீயை குடித்தால் என் நாக்கே செத்துப்போயிடும்’ என்று முகத்தை சுளித்தபடி சொல்லிவிட்டு, அந்த நாட்டு பயணம் முடியும்வரை ‘டீ’ என்று சொன்னாலே ‘ஆளை விட்டுருங்கப்பா..!’ என்று, இடத்தை காலிசெய்துவிடுவார்கள்.

    ஆக உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறவர்கள் எளிதாக இந்த உண்மையை புரிந்துகொள்வார்கள். எல்லா நாடுகளிலும் ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரி இருந்தாலும் அவர்களது மொழி, இயல்பு, கலாசாரங்களில் நாட்டுக்கு நாடு வேறுபாடு இருக்கத்தான் செய்யும். அதுபோல் உலகம் முழுக்க காபி, டீ என்ற பொதுப்பெயரில் சூடான பானங்கள் அழைக்கப்பட்டாலும், நாட்டுக்கு நாடு அதன் சுவைகளில் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும். எல்லா நாடுகளிலும் தயாரிக்கப்படும் டீ வகைகளும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று கூறுவதற்கில்லை.

    சுவையின் அடிப்படையில் டீயில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. டீ டேஸ்ட்டர்கள், அந்தந்த நாட்டு மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு டீ யில் சுவையூட்டி வழங்குகிறார்கள். ஊருக்கு தக்கபடி, ஆளுக்கு தக்கபடி, நிகழ்ச்சி களுக்கு தக்கபடி, இப்படி நிறைய மாற்றங்களை சந்தித்து வந்திருக்கும் பானம், டீ என்றால் அது மிகையில்லை. அதனால் சில ஊர்களில் தயாரிக்கப்படும் டீ, அந்த நாட்டு மக்களே விரும்பும் ருசியாக மாறி விடுவதுண்டு. அப்படிப்பட்ட ஒன்று, ‘சுலைமானி’. இது கேரளாவில் மலபார் பகுதி மக்கள் விரும்பி பருகும் பானம். தென்னிந்தியாவிலும் இது பிரபலமாகியுள்ளது.

    தனித் தேநீரான கட்டன் டீயில் எலுமிச்சை சாறு கலந்த சூடான பானத்திற்கு சுலைமானி என்று பெயர். தேவைப்படும்போது இதில் இஞ்சிச்சாறும் சேர்க்கப்படுகிறது. இதன் சரித்திரம் என்னவென்று தெள்ளத்தெளிவாக தெரியவில்லை. ஆனால் சாலமன் மன்னரின் சபையில் இது பரிமாறப்பட்டதால், சாலமானி என்று அழைக்கப்பட்டு, பின்பு சுலைமானி என்று மருவி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. முதலில் இந்த பானம் மத சம்பிரதாயங்களோடு தொடர்புடையதாக இருந்திருக்கிறது. பின்பு பொதுமக்களுக்கானதாக மாறி கல்யாணம், விருந்து, விழாக்களில் மக்கள் விரும்பி பருகும் பானமாக மவுசு பெற்றுள்ளது.

    தற்போது மக்கள் பல்வேறு விதவிதமாக டீயை பருகிவருகிறார்கள். ஆனால், டீ அறிமுகமாவதற்கு முன்பு மக்கள் இதமான ருசிக்காக வேறு எந்த பானத்தை பருகினார்கள்?

    டீ, இந்தியாவை எட்டிப்பார்ப்பதற்கு முன்னால் இங்கு சூடான கிராமிய காபி வகைகள் பருகப்பட்டு வந்தன. அவை கருப்பட்டி அல்லது வெல்லத்தில் தயார் செய்யப்பட்டது. அவைகளில் சுக்கு, மல்லி, மிளகு போன்றவைகளை கலந்து, ‘சுக்கு காபி’, ‘மல்லி காபி’ என்ற பெயர்களில் அழைத்தார்கள். அவைகள் உடலுக்கு உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுத்தன.

    இந்திய கிராம மக்கள் இந்த வகை காபிகளுக்கு அடிமையாகிப்போயிருந்த காலகட்டத்தில்தான், இந்தியாவை அடிமைப்படுத்த ஆங்கிலேயர்கள் இங்கே வந்தார்கள். 19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இருந்து வருகை தந்த டாக்டர் கிறிஸ்டி, நீலகிரியின் குளிருக்கு தனது மனதை பறிகொடுத்தார். அந்த இதமான குளிருக்கு சூடாக ஒரு கப் டீ பருகினால் நன்றாக இருக்குமே என்று, அவர் மூளையில் மின்னலாக எழுந்த ஆசைதான் நீலகிரியில் தேயிலை செடியின் அறிமுகத்திற்கு வித்திட்டது. அவர் 1832-ல் நீலகிரியில் தேயிலை செடியை நட்டார். பின்னர் அது மூணாறு மலை உச்சிகளில் எல்லாம் கிளைபரப்பி பரந்து விரியத் தொடங்கியது.

    தேயிலை பயிர் வெற்றிகரமாக வளர்ந்தது. பறிக்கப்பட்ட தேயிலை எல்லாம் பதப்படுத்தப்பட்டது. ஆனால் அதை ஆங்கிலேயர்கள் மட்டும் பயன்படுத்தினால் போதாதே. விளைந்த தேயிலையை எல்லாம் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து அவர்களை பயன்படுத்த வைக்கவேண்டும் அல்லவா!

    ஆனால் தொடக்கத்தில் மக்கள் தேயிலையை திரும்பிகூட பார்க்கவில்லை. அவர்கள் மல்லி காபியிலும், சுக்கு காபியிலுமே மதிமயங்கி நின்றார்கள். அத்தகைய காபி விரும்பிகளை, தேயிலை விரும்பிகளாக எப்படி மாற்றினார்கள் தெரியுமா?

    இன்று புதிதாக அறிமுகமாகிற பொருட்களை, அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் முதலில் ‘சாம்பிள் பாக்கெட்’களாக இலவசமாக கொடுத்து மக்களை பயன்படுத்தச்செய்து தன்வசப்படுத்தும். பின்பு தொடர்ந்து அந்த பொருளை மக்கள் வாங்கும்படி தூண்டும். இது மார்க்கெட்டை பிடிக்க பலரும் செய்யும் வியாபார தந்திரம்.

    இந்த வியாபார தந்திரத்திற்கு முன்னோடியே ஆங்கிலேயர்கள்தான். அவர்கள் தேயிலை மூலம்தான் இந்த இலவச அறிமுக திட்டத்தை அமல் படுத்தினார்கள். அவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து, பொதுமக்கள் கூடும் இடங்களில் அவர்களை சந்தித்து, டீயை தொடக்ககாலத்தில் இலவசமாக வழங்கினார்கள். தேனீராக அவர்கள் தயார் செய்து மக்களுக்கு வழங்கி, அதை மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டினார்கள். ஆனாலும் இந்த திட்டம் எளிதாக வெற்றியடையவில்லை.

    இலவசமாக கிடைத்தபோது ஆர்வமாக பருகிய மக்கள் பின்பு தாமதமாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் காசு கொடுத்து வாங்கி அதனை பயன்படுத்த முன்வந்தார்கள். அதுவரை இந்திய சமையல் அறை அடுப்புகளில் நீங்காத இடம் பிடித்திருந்த சுக்கு காபி தயாரிக்கும் பாத்திரங்கள் கீழ் இறக்கப்பட்டன. தேயிலை தயார் செய்யும் கைப்பிடி கொண்ட பாத்திரங்கள் அடுப்புகளில் அழகாக அமரத் தொடங்கின.

    ‘கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு’ என்று கருப்பட்டி காபியின் புகழ் பாடிக்கொண்டிருந்தவர்களும், கண்ணைக்கவரும் விதத்திலான டீயை விரும்பத் தொடங்கினார்கள். குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் தினமும் டீ பருகுகிறவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கொண்டவர்கள் என்ற எண்ணமும் உருவாக்கப்பட்டது. ‘அதனால் நாங்களும் மாறிட்டோம்ல..’ என்று போட்டிபோட்டுக்கொண்டு பலர் டீயின் பக்கம் சாய்ந்தார்கள். தங்களுக்கு பிடித்தமானவர்களை அழைத்து டீ பார்ட்டி நடத்தி, தங்கள் சமூக அந்தஸ்தையும் உயர்த்தினார்கள். இப்படித்தான் டீ குடிக்கும் பழக்கம் இந்தியாவில் வளர்ந்தது.

    இப்படி மக்கள் டீயை அதிகமாக பயன்படுத்த தொடங்கிய பின்பு அதில் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை சேர்த்து ருசி மாற்றங்களை உருவாக்கினார்கள். அதில் சிறந்ததாகி, கிட்டதட்ட இருநூற்றாண்டுகள் பழமைவாய்ந்ததாக இருப்பதுதான் சுலைமானி. இதனை பெரும்பாலும் பிரியாணி சாப்பிட்ட பின்பு மக்கள் பருகும் வழக்கம் உள்ளது.

    இதில் கட்டன் டீ, எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு போன்றவை சேர்க்கப்படுவதால் ஜீரணத்திற்கு துணைபுரிகிறது. உடல் சீராக இயங்கவும், வயிற்றுப்புண்கள் குணமாகவும் உதவுகிறது. தேனீரிலும், எலுமிச்சை சாறிலும் உடல் எடையை குறைக்கும் சக்தி இருக்கிறது. நோய் எதிர்ப்புசக்தியும் இதில் உள்ளது. அதனாலும் மக்கள் சுலைமானியை விரும்பி பருகுகிறார்கள். சாதாரண டீயை அதிகம் பருகுவது நல்லதல்ல. ஆனால் இதனை அடிக்கடி பருகலாம். இதில் சிறிதளவே சர்க்கரை சேர்க்கவேண்டும்.

    இந்த சுலைமானிபோல் வட இந்தியாவிலும் வித்தியாசமான ருசிகளில் டீயை தயார்செய்து ருசிக்கிறார்கள். அதுபோல் உலகில் பல இடங்களிலும் டீயை வித்தியாசமான சுவைகளில் தயாரிக் கிறார்கள். அதற்கு வித்தியாசமான பெயர்களும் சூட்டியிருக்கிறார்கள். நீங்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கு, அந்த நாட்டு பாரம்பரியப்படி தயார் செய்யப்படும் டீயை பருக மறந்துவிடாதீர்கள். ஏன்என்றால் அது உங்களுக்கு மறக்க முடியாத சுவையை தந்து, அந்த நாடு எப்போதும் உங்கள் நினைவில் நிற்க துணைபுரியும்.

    வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்கே உள்ள விசேஷமான உணவுகளை பற்றி முதலிலே இன்டர்நெட் மூலம் தெரிந்து கொண்டு, அவைகளில் பிடித்தமானவற்றை சாப்பிட முயற்சி செய்யுங்கள். ஏன்என்றால் வெளிநாட்டு பயண அனுபவம் என்பது அந்தநாட்டு உணவுகளை ருசிப்பதையும் உள்ளடக்கியதுதான்! அதனால் எல்லாநாட்டு ருசி அனுபவங்களையும் பெறுங்கள்.

    - முனைவர் ஜெ.தேவதாஸ்,

    (உணவியல் எழுத்தாளர்) சென்னை.
    தேநீரில் “கிரீன் டீ, பிளாக் டீ” போன்ற பல வகைகள் இருக்கின்றன. அதில் “பிளாக் டீ” அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    உலகம் முழுவதும் இருக்கிற மக்களால் மிகவும் விரும்பி அருந்தும் பானமாக டீ அல்லது தேநீர் இருக்கிறது. இந்த தேநீரில் “கிரீன் டீ, பிளாக் டீ” போன்ற பல வகைகள் இருக்கின்றன. அதில் “பிளாக் டீ” அருந்துவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். பிளாக் டீ என்பது கருப்பு தேயிலையை இரசாயன கலவையில் ஆக்சிஜனுடன இணைக்கப்படும்போது தயாரிக்கப்படுவது. பிளாக் டீயில் 10% பாலிபீனால்கள் உள்ளது.

    நமது தலைமுடி ஆரோக்கியமானதாகவும், வலுவானதாகவும் இருப்பதற்கு நமது உடலில் இருக்கும் ரத்தத்தில் ஆன்டிஆக்சிடண்டுகள் அதிகம் இருப்பது அவசியமாகும். பிளாக் டீ அருந்துபவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் இந்த் ஆன்டிஆக்சிடண்டுகளின் உற்பத்தி அதிகரித்து அவர்களின் தலைமுடி உதிர்வை தடுக்கிறது. மேலும் தலைமுடிகள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

    சில வகை நோய்களாலும், சாப்பிட்ட உணவு நஞ்சாகிப்போனதாலும் சிலர் கடுமையான வயிற்று போக்கு ஏற்பட்டு அவதியுறுகின்றனர். இச்சமயங்களில் இளம் சூடான பதத்தில் பிளாக் டீ அருந்தி வந்தால் கடுமையான வயிற்று போக்கு ஏற்படுவது நிற்கும். வயிற்று போக்கு ஏற்பட்ட சமயத்தில் உடல் இழந்த சக்திகளை மீண்டும் பெற உதவும். செரிமான உறுப்புகளின் செயல்பாட்டை பழைய நிலைக்கு கொண்டுவரும்.

    உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சிறந்த ஒரு பானமாக பிளாக் டீ இருக்கிறது. இதிலிருக்கும் வேதி பொருட்கள் உடலில் எடையை கூட்ட உதவும் ட்ரைகிளிஸெரைட் கொழுப்பின் அளவை மிகவும் குறைகிறது. இதனால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து எடை அதிகரிக்காமல் பாதுகாப்பதில் பிளாக் டீ முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடுமையான மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வந்தால் தினமும் மலம்கழிக்கும் நிலை உண்டாகி மலச்சிக்கல் தீரும்.

    நன்மைகள்:

     
    * நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் ஆகியவை பிளாக் டீ அருந்துவதால் தடுக்கப்படுகிறது.
     
    * வாய் வழி புற்று நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
     
    * பிளாக் டீயில் காஃபின் குறைந்த அளவு இருப்பதால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
     
    * மேலும், சுவாச அமைப்பு, சிறுநீரகம் மற்றும் இதய இயக்கத்தை சீராக்குகிறது.
     
    * பிளாக் டீயில் உள்ள ஒரு குறிப்பிட்ட பொருள் நோய்யெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.


     
    * பிளாக் டீயில் உள்ள அமினோ ஆசிட் மன அழுத்தத்தை குறைத்து மனதை ரிலாக்ஸ் செய்கிறது.

    * பிளாக் டீயில் ஃப்ளூரைடு இருப்பதால் பல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

    * பிளாக் டீயில், ஆப்பிள்களில் இருக்கும் சத்துக்கள் இருக்கிறது.

    * பிளாக் டீ பாக்டீரியாவிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பையும் பலப்படுத்துகிறது.

    * ஒரு கப் பிளாக் டீயில் உடலை ஹைட்ரேட் செய்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

    * பிளாக் டீ மன அழுத்தத்தை தடுக்கிறது. இது ஹார்மோன் அளவுகளையும் சமப்படுத்துகிறது.

    * இது கொழுப்பு அளவை சமப்படுத்துவதால் பக்கவாதம் அபாயங்களை குறைக்க உதவுகிறது.
     
    தீமைகள்:

     
    * ஒரு நாளைக்கு 4 கப்புகளுக்கு அதிகமாக பிளாக் டீ அருந்த கூடாது.
     
    * அதிகமான பிளாக் டீ பருகினால் உறக்கம் பாதிப்படைய கூடும். 
     
    * வெறும் வயிற்றில் பிளாக் டீ வயிறு எரிச்சலை உண்டாக்கும்.
    கொய்யா இலை டீ உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இந்த டீயை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா இலை டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து, நல்ல கொழுப்புக்களின் அளவு  பராமரிக்கப்படும்.

    தேவையான பொருட்கள் :

    கொய்யா இலை - 5
    டீத்தூள் - அரை டீஸ்பூன்
    தண்ணீர் - 2 கப்
    ஏலக்காய் - 2
    நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - தேவையான அளவு



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் டீத்தூள், கொய்யா இலை, ஏலக்காய் போட்டு மிதமான தீயில் நன்றாக கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்து சாறு இறங்கியதும் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து நன்றாக கலந்து இறக்கி வடிகட்டி பருகவும்.

    சத்தான கொய்யா இலை டீ ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    காபி அல்லது டீ குடித்ததுமே நாம் உற்சாகமாக உணர்கிறோம். காபியில் உள்ள காபீன் என்கிற வேதிப்பொருள் ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
    சோர்வாக உணரும் போது காபி அல்லது டீ குடிக்க நினைக்கிறோம். காரணம் அவற்றில் மனிதனின் நரம்பு மண்டலத்தை தூண்டி உற்சாகப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதன் காரணமாக காபி அல்லது டீ குடித்ததுமே நாம் உற்சாகமாக உணர்கிறோம். தவிர, காபியில் காபீன் என்கிற வேதிப்பொருள் இருக்கிறது. இது ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    ஒரு நாளுக்கு இரண்டு முறை டீயோ, காபியோ குடிப்பது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்காது. அப்படி குடிப்பதால் சில நன்மைகளும் ஏற்படலாம். காபி குடிப்பதால் அல்சைமர், பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்கு கட்டுக்குள் வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் கூறுகின்றனர். மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தை காபீன் குறைப்பதால் மனஅழுத்தம் குறையும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். காபியில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ, அந்த அளவுக்கு டீ குடிப்பதிலும் நன்மைகள் இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன. டீ குடிப்பதால் பார்கின்சன்ஸ், ருமட்டாய்டு ஆர்த்ரட்டிஸ் போன்றவை ஏற்படும் ஆபத்து ஓரளவுக்கு குறைகிறதாம்.

    ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு சரியான அளவில் டீ குடித்து வந்தால், அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என்கிறார்கள். இவ்வளவு நன்மைகள் இருக்கும் பானங்களை குடிப்பதில் என்ன தவறு என்று யோசிக்கலாம். அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும்.

    காபியும், டீயும் மட்டும்தான் நலம் தருமா என்ன? அளவுக்கு அதிகமான பயன்பாடு பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். காபியில் இருக்கும் காபீன் குறிப்பிட்ட எல்லையை தாண்டும் போது, அதுவே உடல்நல பாதிப்புக்கு காரணமாக அமைந்துவிடும்.

    அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதால் ரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படலாம். காபியில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் இதயத்துக்கு எதிரானவை. அவை இதய வால்வுகளை விரைப்படையச் செய்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். தலைவலிக்காக குடிக்கப்படும் காபியின் அளவு, அதிகமானால் மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி ஏற்படலாம். சிலருக்கு தூக்கத்தில் சிக்கல்கள் உண்டாகலாம்.

    இன்னும் சிலருக்கு சரியான நேரத்தில் காபி குடிக்கவில்லை என்றால் பதற்றம் உண்டாகும். இதுவும் ஒரு வகை நோய்தான். எலும்பின் உறுதிக்கு துணைபுரிகிற அதே டீதான், எல்லை மீறும் போது எலும்பின் உறுதியை பாதிக்கிறது. பற்சிதைவுக்கும் அளவுக்கு அதிகமான டீ காரணமாக இருக்கலாம் என்றும் டாக்டர்களால் நம்பப்படுகிறது.
    திருவள்ளுவர் தினத்தில் 20 ஆண்டுகளாக முதியவர் ஒருவர் தனது கடையில் ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறார்.
    தஞ்சை :

    தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் தங்கவேலனார்(வயது 70). இவர் பேராவூரணி பஸ் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார். திருக்குறள் மீது ஆர்வம் கொண்ட இவர், ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினத்தில் தனது கடையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறார்.

    நாள்தோறும் இவருடைய கடையின் முன்பு உள்ள கரும்பலகையில் ஒரு திருக்குறளும், அதன் பொருளும் எழுதப்பட்டிருக்கும். இதை படிப்பதற்காகவே பலர் இவருடைய கடைக்கு ஆர்வத்துடன் வருகிறார்கள்.

    நேற்று திருவள்ளுவர் தினம் என்பதால் தங்கவேலனாரின் கடையில் ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை நடந்தது. உலக பொது மறையாக திகழும் திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தன்று ஒரு ரூபாய் விலையில் டீ வழங்கி வருகிறேன். இன்று (நேற்று) மட்டும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு டீ விற்பனை செய்தேன். தமிழக அரசு இந்த ஆண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து இருப்பதால், சில்வர் குவளையில் டீ வழங்கினேன். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    தினமும் வெந்தய டீ குடித்தால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும். இன்று வெந்தய டீ போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெந்தயம் - 2 டீஸ்பூன்
    தண்ணீர் - 3 கப்
    நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - 2 டீஸ்பூன்



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வெந்தயத்தை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

    வெந்தயத்தின் சாறு தண்ணீரில் இறங்கியவுடன் அதில் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    நாட்டு சர்க்கரை நன்றாக கரைந்ததும் இறக்கி வடிகட்டி பருகவும்.

    சத்தான வெந்தய டீ ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய 3 பொருட்களும் சித்தர் இலக்கியத்துள் திரிகடுகம் எனப்படுகிறது. உடலில் அதிக கபம் உள்ளவர்கள் திப்பிலி அடங்கிய திரிகடுகம் பால் தயாரித்து குடித்தால் கபம் நீங்கும்.
    தேவையான பொருட்கள் :

    பால் - ½ லிட்டர்
    தண்ணீர் - ½ லிட்டர்
    முந்திரி பருப்பு - 20 கிராம்
    பாதாம் பருப்பு - 20 கிராம்
    சுக்குப்பொடி - ½ தேக்கரண்டி
    மிளகுப்பொடி - ½ தேக்கரண்டி
    திப்பிலிபொடி - சிறிதளவு (ஒரு சிட்டிகை)
    மஞ்சள் பொடி - ¼ தேக்கரண்டி
    ஜாதிக்காய்த்தூள் - 1 சிட்டிகை
    ஏலக்காய்த்தூள் - ½ தேக்கரண்டி
    பனங்கல்கண்டு - தேவையானது அல்லது காய்ச்சி வடித்த வெல்லப்பாகு.



    செய்முறை :

    முந்திரிப் பருப்பு, பாதாம்பருப்பை ஊறவைத்து(ஒரு மணி நேரம்) அம்மியில் அல்லது மிக்சியில் மை போல் அரைத்துக் கொள்ளவும்.

    பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர், அரை லிட்டர் பால் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சவும்.

    பொங்கி வரும்போது தீயைக் குறைத்துக் கொண்டு அரைத்து வைத்த விழுதுகளை சேர்த்து நன்கு கலக்கவும்.

    அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள எல்லா பொடிகளையும் ஒவ்வொன்றாக சேர்த்து கரண்டியில் கலக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

    கமகமவென்று வாசம் வரும்போது இறக்கி விடவும். சற்று ஆறவிடவும்.

    குடிக்கிற பக்குவத்தில் சூடாக இருக்கும்போது இனிப்பு கலந்து குடிக்கவும். இது சளி, இருமலுக்கு சாப்பிட நல்லது. கபத்தை கரைத்து, சுறுசுறுப்பு அளிக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொழுப்பு, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் இந்த ஆயுர்வேத டீயை பருகலாம். இன்று இந்த டீயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சீரகம் - 1 டீஸ்பூன்
    மல்லி - 1 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    கிராம்பு - 7
    இஞ்சி - 2 துண்டு
    பட்டை - 2 இன்ச்
    தண்ணீர் - 1 லிட்டர்
    கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு



    செய்முறை  :

    ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, சோம்பு, கிராம்பு, இஞ்சி, பட்டை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, பின் 10 நிமிடம் கழித்து, வடிகட்ட வேண்டும்.

    வடிகட்டிய டீயுடன் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பருகவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தெற்கு ரெயில்வேயில் இன்று (வெள்ளிக் கிழமை) முதல், ரெயில் களில் டீ மற்றும் காபி விலை ரூ.10 ஆக உயர் கிறது. #SouthernRailway #TeaCoffee
    சென்னை:

    நாடு முழுவதும் ரெயில்களில் டீ, காபி விலையை அதிகரித்துக்கொள்ள ஐ.ஆர்.சி.டி.சி-க்கு ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து இருக்கிறது. இதற்கான சுற்றறிக்கையை ரெயில்வே நிர்வாகம், அந்தந்த மண்டலங்களுக்கு அனுப்பியது.

    இதைத்தொடர்ந்து தெற்கு ரெயில்வேயில் உள்ள சென்னை சென்டிரல், சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்கள் வழியாக செல்லும் ரெயில்களில் டீ, காபி விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

    இதுவரை, 150 மி.லி. அளவுகொண்ட டீ மற்றும் காபி ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த விலையில் இருந்து தற்போது ரூ.3 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, 170 மி.லி. அளவுகொண்ட பேப்பர் குவளைகளில் 150 மி.லி. அளவு கொண்ட டீ, காபி இனிமேல் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும்.

    அதேநேரம் ரெயில் நிலையங்களில் ஏற்கனவே தயார் செய்துகொண்டு வந்து விற்கப்படும் டீ ரூ.5 என்ற விலையிலே தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை சென்டிரல், சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் கூறினார்கள்.

    இதைப்போல, ரெயில்களில் விற்பனை செய்யப்படும் பிற உணவு பண்டங்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், விரைவில் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
    புதினா டீ செரிமானத்திற்கு உதவும். நரம்பு மண்டலத்திற்கு சிறந்த பானம். ஆன்டி கொலஸ்ட்ரால் தன்மை கொண்டது. இன்று இந்த டீயை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புதினா இலை - 7,
    தேயிலை - ஒரு டீஸ்பூன்,
    தேன் அல்லது பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன்,
    பால் - கால் டம்ளர்.
     


    செய்முறை :

    ஒரு டம்ளர் நீரில் புதினா இலை, தேயிலைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

    பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.

    விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம்.

    பால் சேர்க்காமல் குடிப்பது தான் நல்லது. தேன் அல்லது பனங்கற்கண்டுக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்தும் பருகலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காபி குடித்துத்தான் வாழ வேண்டும் என்ற அவசியம் மனிதனுக்குக் கிடையாது. அப்படி குடிக்கும் பழக்கம் இருந்தால் தரமான பொடியினை பயன்படுத்துங்கள்.
    பலருக்கு ஒரு குறை இருக்கின்றது. அது என்னவெனில் அவர்களுக்கு காபி குடிக்காமல் இருக்க முடிவதில்லை என்ற குறைதான். காபி குடிக்கவில்லை என்றால் தலைவலி மண்டையை உடைத்து விடுகின்றது என்பார்கள். காபியை அடிக்கடி அன்றாடம் குடிப்பவர்களுக்கு இருதய படபடப்பு, தூக்கமின்மை இவையெல்லாம் ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் முடிந்தால் காபியினை தவிர்த்து விடுங்கள் என்றே அறிவுறுத்தப்படுகின்றது.

    காபி, டீ, கோகோ இவைகளில் காபின் என்ற பொருள் உள்ளது. இது சக்தியினை தூண்டி விடும் பொருள். காபியினை நிதான அளவில் குடிப்பவர்களுக்கு நடுக்குவாதம் எனப்படும் parkinsons நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவு என்றே ஆய்வுகள் கூறுகின்றன.

    அதே போல் அளவான காபி அருந்துபவர்களுக்கு மறதி நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. சில ஆய்வுகள் காபின் மூளை வீக்கத்தினைக் கூட தவிர்க்கின்றது என்று கூறியுள்ளன. வீக்கமே பல நோய்களுக்கு காரணம் எனப்படும் நிலையில் காபீனில் உள்ள அமினோ அமிலங்கள் வீக்கங்களை குறைக்க உதவுவதாகவே சமீபத்திய ஆய்வு கூட கூறுகின்றது.

    நிதான அளவில் காபி குடிப்பவர்களுக்கு மனஉளைச்சல் குறைகின்றது. சர்க்கரை நோய் பாதிப்பு அபாயம் காபி எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு குறைகின்றது. ஆனால் சர்க்கரை நோய் பாதிப்பு அபாயம் காபி எடுத்துக் கொள்ளும் பெண்களுக்குக் கூடுகின்றது.

    நிதான அளவு காபி இருதய பாதிப்பினால் ஏற்படும் இருதய அபாயத்தினைக் குறைக்கின்றது. சில குறிப்பிட்ட வகை புற்று நோய்களையும் 27 சதவீதம் வரை குறைக்கின்றது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

    அப்படியென்றால் காபி நல்லதா? என்றால் நல்லது என்பதற்கு ஒரு அளவு கோல் இருக்கின்றது. இந்த, ஆய்வுகள் வெளி நாடுகளில் நடப்பவை. ‘சிக்கரி’ கலப்பு இல்லாதவை. காபி டிகாஷனும் அடர்த்தியாக இராது மெல்லியதாக இருக்கும். அவர்கள் குடிக்கும் காபியில் பால் கூட இராது. நம்ம ஊர் பழக்கம் அப்படி அல்ல.
    அடர்த்தியான டிகாஷன், தண்ணி கலக்காத அடர்த்தியான பால். காபி பொடி சிக்கரி கலந்தது. பல இடங்களில் காபி பொடியில் கலப்படங்கள் வேறு உள்ளன.

    டிகிரி காபி என்ற பெயரில் காபியினை கூழ் போல் ஒரு பெரிய டம்ளரில் குடிக்கின்றோம். அதுவும் ஒருமுறை அல்ல. அடிக்கடி குடிக்கின்றோம். இரவில் கூட காபி அருந்துபவர்கள் அநேகர் உண்டு. காலையிலும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக திராவகம் போல் இதனை ஊற்றுகின்றோம். அன்றாடம் சில முறை அல்லது பலமுறை ஊற்றுகின்றோம். அன்றாடம் சில முறை அல்லது பலமுறை இவ்வாறு செய்வதால் பின்பு தீமைகள் விளைகின்றன.

    காபி குடித்துத்தான் வாழ வேண்டும் என்ற அவசியம் மனிதனுக்குக் கிடையாது. அப்படி குடிக்கும் பழக்கம் இருந்தால் தரமான பொடியினை பயன்படுத்துங்கள். பகல் 12 மணிக்கு மேல் குடிக்க வேண்டும். காலை உணவுக்குப் பிறகோ அல்லது 11 மணி அளவில் 2 மாரி பிஸ்கட்டுடனோ அருந்துங்கள். டிகிரி காபி உங்கள் வயிற்றை புண்ணாக்கி விடும் என்பதனை உணருங்கள். 
    அளவுக்கு அதிகமானால் அமிர்தமே நஞ்சாகும் போது காபியும், டீயும் மட்டும் நலம் தருமா என்ன? அளவுக்கதிகமான பயன்பாடு பல உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
    டீ குடிப்பதால் பார்கின்சன்ஸ், ருமாட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் போன்றவை ஏற்படும் ஆபத்து ஓரளவுக்குக் குறைகிறதாம். ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குச் சரியான அளவில் டீ குடித்து வந்தால், எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். புற்று நோய் ஏற்படுவதற்கான காரணம், டீ குடிப்பதால் குறையலாம் என்கிறார்கள்.

    இவ்வளவு நன்மைகள் இருக்கும் பானங்களைக் குடிப்பதில் என்ன தவறு என்று யோசிக்கலாம். அளவுக்கு அதிகமானால் அமிர்தமே நஞ்சாகும் போது காபியும், டீயும் மட்டும் நலம் தருமா என்ன? அளவுக்கதிகமான பயன்பாடு பல உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். காபியில் இருக்கும் காபீன் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும் போது, அதுவே உடல்நல பாதிப்புக்கு காரணமாக அமைந்துவிடும்.

    அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதால் ரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ரத்தச் சோகை ஏற்படலாம். காபியில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் இதயத்துக்கு எதிரானவை. அவை இதய வால்வுகளை விரிவடையச் செய்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். தலைவலிக்காகக் குடிக்கப்படும் காபியின் அளவு அதிகமானால் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். சிலருக்கு தூக்கத்தில் சிக்கல்கள் உண்டாகலாம். இன்னும் சிலருக்கு சரியான நேரத்தில் காபி குடிக்கவில்லை என்றாலே பதற்றம் உண்டாகும். இதுவும் ஒரு வகை நோய்தான்.



    எலும்பின் உறுதிக்குத் துணைபுரிகிற அதே டீதான், எல்லை மீறும் போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது. பற்களின் சிதைவுக்கும் அதிக அளவு டீகுடிப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது. புராஸ்டேட் புற்று நோய், உணவுக் குழாய் புற்று நோய் போன்றவை ஏற்படுவதற்கு டீயும் ஒரு காரணமாகவும் அமைந்துவிடலாம் என்று சில மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன.

    காபியோ, டீயோ ஒரு நாளுக்கு இரண்டு முறை குடிப்பது நல்லது. அளவுக்கு அதிகமாகக் குடிப்பதை கூடிய வரை தவிர்க்க வேண்டும். காபி, டீ இரண்டையும் நாம் அப்படியே குடிப்பதில்லை. அவற்றுடன் பால், சர்க்கரை இரண்டையும் கலந்து தான் குடிக்கிறோம். தினமும் நாம் சாப்பிடுகிற உணவிலேயே போதுமான அளவு சர்க்கரை, நமக்குக் கிடைத்துவிடும். அப்படி இருக்கும்போது நாம் தனியாகச் சேர்த்துக் கொள்கிற, ஒவ்வொரு டீஸ்பூன் சர்க்கரையும் வரப்போகிற நோய்க்கான அழைப்புதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    பாலும் அப்படித்தான். வயதுக்கும், உடல்நிலைக்கும் ஏற்ற அளவில் தான் பாலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான கால்சியச் சத்தும் உடலுக்கு நல்லதல்ல. இந்த இரண்டு பானங்களுமே உற்சாகத்தைத் தருவதால், நம்மை அடிமைப்படுத்திவிடும். அதனால் தான் பலர் காபி குடிக்கவில்லை என்றால் வேலையே ஓடாது என்று சொல்கிறார்கள். இந்தநிலை உகந்தது அல்ல. 
    ×