search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவகாசி"

    சிவகாசியில் வி‌ஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    சிவகாசி தெற்கு குப்பன்னாபுரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மகன் பொன் அஜீஸ் (வயது 22). ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்வில் பொன் அஜீஸ் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளார். இதனால் அவர் மனவேதனை அடைந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பொன் அஜீஸ் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் எம்.புதுப்பட்டி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பொன் அஜீஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட் டது.

    பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி சிவகாசி பகுதியில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் இன்று கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டன.

    சிவகாசி:

    பட்டாசு தொழிலுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக அந்த தொழில் பாதிப்பை சந்தித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி பட்டாசு ஆலை அதிபர்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்ட 1070 பட்டாசு ஆலைகளும், மூடப்பட்டதால், சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சமூக நல அமைப்புகள் வலியுறுத்தின.

    பட்டாசு ஆலை தொழிலாளர்கள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. கலெக்டர் ஆபீஸ் முற்றுகை போராட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    இருப்பினும் இதுவரை பட்டாசு ஆலைகள் திறக்கப்படவில்லை. அரசு சார்பில் நடந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் மூடப்பட்ட ஆலைகளை திறக்க வலியுறுத்தியும் தொழிலாளர்கள் நலனுக்காகவும், 2 நாட்கள் கஞ்சி தொட்டியை திறக்க சி.ஐ.டி.யூ. பட்டாசு தொழிலாளர்கள் சங்கம் முடிவு செய்தது.

    அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இன்று கஞ்சி தொட்டி திறக்கப்பட்டது. என்.துரைச்சாமிபுரம், துலுக்கன்குறிச்சி, வெம்பக்கோட்டை, சல்வார்பட்டி, மீனாட்சிபுரம், வெற்றிலையூரணி, விஜயகரி கல்குளம், ராமலிங்காபுரம் உள்பட 20 இடங்களில் கஞ்சித்தொட்டி திறந்தனர்.

    இதேபோல் நாளை (20-ந் தேதி) செங்கிமலைப்பட்டி, ஆலாவூரணி உள்பட 40 இடங்களில் கஞ்சித்தொட்டி திறக்கப்படுகிறது.

    குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்:

    தமிழகம் முழுவதும் புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்தபோதிலும் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் மெத்தனத்தால் சர்வ சாதாரணமாக கடைகளில் விற்கப்பட்டு வருகிறது.

    இதை தடுக்க போலீசாரும் அவ்வப்போது அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

    சிவகாசி போலீசார் நேற்று சாத்தூர்-சிவகாசி ரோட்டில் உள்ள பாரப்பட்டி விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை மறித்து சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வேனில் இருந்த சாத்தூர் நெல்மேனியை சேர்ந்த சரவணமணிகண்டன் (வயது30), ராமகுருநாதன் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது புகையிலை பொருட்களை சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்ல இருந்ததாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த குடோனுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய சிவகாசியை சேர்ந்த சரவணக்குமாரை என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    சிவகாசி பகுதியில் 6 போலீஸ் நிலையங்களில் கடந்த ஆண்டு மொத்தம் 3653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    சிவகாசி:

    சிவகாசி உட்கோட்டத்தில் சிவகாசி டவுன், சிவகாசி கிழக்கு, திருத்தங்கல், மாரனேரி, எம்.புதுப்பட்டி. அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் என 6 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் 920 வழக்குகளும், சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் 1318 வழக்குகளும், திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் 914 வழக்குகளும், மாரனேரியில் 240 வழக்குகளும், எம்.புதுப்பட்டியில் 249 வழக்குகளும், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகள் என மொத்தம் 3653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சிவகாசி உட்கோட்டத்தில் கடந்த ஆண்டு 11 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். அதே போல் 11 கொலை முயற்சி சம்பவங்களும் நடைபெற்றது. இதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 7 வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 16 இடங்களில் வீடு புகுந்து திருட்டு சம்பவம் நடைபெற்றது. மேலும் 22 திருட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 கற்பழிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிவகாசி உட்கோட்டத்தில் கடந்த ஆண்டு 51 பேர் காணாமல் போனார்கள். அவர்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் 40 பேர் திரும்பி வந்தனர். இதுவரை திரும்பி வராமல் உள்ள 11 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். வாகனங்கள் அதிகம் கொண்ட சிவகாசி உட்கோட்டத்தில் கடந்த ஆண்டு 108 சாலை விபத்துகள் நடைபெற்றது. இதில் 27 பேர் பரிதாபமாக இறந்தனர். 108 பேர் படுகாயம் அடைந்தனர். போக்குவரத்து விதிகள் மீறியதாக 67,007 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    சிவகாசியில் நிலம் விற்பதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்:

    சிவகாசி விஜயகருக்கல் குளத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54). இவர் தன்னிடம் 5 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், ஏக்கர் ரூ.3 லட்சம் என்றும் கூறியுள்ளார்.

    இதனை கேள்விப்பட்ட திருத்தங்கல் ராமராஜ் (42) நிலத்தை வாங்க ஆசைப்பட்டு ரூ.15 லட்சம் கொடுத்தாராம். பணத்தை பெற்றுக் கொண்ட ரவிச்சந் திரன், நிலத்தை பதிவு செய்து கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.

    4 ஆண்டுகளாக அவர் தன்னை மோசடி செய்து விட்டதாக கூறி திருத்தங்கல் போலீசில் ராமராஜ் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பணம் மோசடி செய்ததாக ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

    சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளை திறக்க கோரி கிராம மக்கள் நடைபயணம் மேற்கொண்டு அதிகாரியிடம் மனு அளித்தனர். #FireCrackers

    சிவகாசி:

    பட்டாசு உற்பத்தியின் மையமாக விளங்கும் சிவகாசியில் பட்டாசு தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    இதனை தளர்த்தக் கோரி பட்டாசு உரிமையாளர்கள் கடந்த ஒருமாத காலமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

    பட்டாசு ஆலைகளை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசி அருகே உள்ள ஆனையூர், அய்யம்பட்டி, லட்சுமியாபுரம், ரிசர்வ்லைன், பாரைப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் இன்று நடைபயணம் மேற்கொண்டனர்.

    இவர்கள் ஆனையூரில் இருந்து சிவகாசிக்கு சென்றனர். அங்கு தாசில்தார், வருவாய் அதிகாரியை சந்தித்து பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு கொடுத்தனர்.

    சிவகாசி அருகே பயிர்கள் கருகியதால் வேதனை அடைந்த விவசாயி மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது70), விவசாயி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலரிடம் கடன் வாங்கி தனது நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார்.

    பயிர் செழித்து வளர்ந்து அறுவடை செய்ய இன்னும் சில வாரங்கள் இருந்த நிலையில் திடீரென்று “அமெரிக்கன் புழு நோய்” தாக்கியது. இதில் பயிர்கள் சேதமடைந்தது.

    பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தும் பலனில்லை. இதனால் வேதனையில் இருந்த சுப்புராஜ் கடந்த சில நாட்களாக வீட்டுக்கு செல்லாமல் தோட்டத்திலேயே தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் சேதம் அடைந்த பயிர்களை பார்த்து வருந்திய சுப்புராஜூக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் தனது நிலத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிவகாசியில் நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சிவகாசி:

    சிவகாசி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி, அதே பகுதியில் பட்டாசு கடை வைத்துள்ளார்.

    இவரது மகன் சுரேஷ் (வயது18). இவர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இன்று காலை சுரேஷ் தனது நண்பர்களுடன் வேலாயுதபுரம் ரஸ்தா ரோட்டில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.

    அவருக்கு நீச்சல் தெரியாததால் படியில் நின்றபடி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் சுரேஷ் தவறி விழுந்தார். இதை நண்பர்களும் கவனிக்கவில்லை.

    கிணற்றில் மூழ்கிய அவர் சிறிது நேரத்தில் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாகஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுரேசின் உடலை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

    சுப்ரீம்கோர்ட்டு விதித்த கடும் நிபந்தனைகளால் சிவகாசி பகுதியில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் நேற்று முதல் மூடப்பட்டன. இதனால் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். #SC #SivakasiFireworks
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க (டான்பாமா) பொதுச்செயலாளர் மாரியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளும் இந்தியாவில் மற்ற பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஆலைகளும் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டு விதித்த கடும் நிபந்தனைகள் எதிரொலியாக தற்போது எந்த பட்டாசு ஆலையும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீர்ப்பில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை இல்லை என்று கூறிவிட்டு, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதவை.

    பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளை பட்டாசு உற்பத்தியில் பயன்படுத்தக்கூடாது என்று கூறி உள்ளது. ஆனால் அது இல்லாமல் பட்டாசு தயாரிக்க முடியாது. அப்படி தயாரித்தால் அது வெளிச்சம் கொடுக்காத பட்டாசாக இருக்கும்.

    ஒலி அளவு வரையறைக்கு உட்பட்டுதான் சரவெடிகளை தயாரித்து வந்தோம். ஆனால் தற்போது சுப்ரீம் கோர்ட்டு சரவெடிக்கு தடை விதித்துள்ளது.

    பசுமை பட்டாசு என்ன? என்பது குறித்து எங்களுக்கு தெரியாது. பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் புகையை குறைக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். அதற்கான ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தான் எங்களுக்கு கிடைக்கும்.

    அதன்பின்னர் தான் பசுமை பட்டாசு குறித்து முடிவு செய்யப்படும். 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தீர்ப்பு உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லை.



    சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஆலைகளை நாங்களே முன்வந்து மூட முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து அரசுக்கும், தொழிலாளர் நலத்துறைக்கும் கடிதம் மூலம் தெரிவிக்க உள்ளோம்.

    சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்த தொழில் காப்பாற்றப்படும். எங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துக்கூற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த தீபாவளி தினத்தன்று நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 2,000-க்கும் அதிகமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும். நேரக்கட்டுப்பாடு காரணமாக இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு விற்பனை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் வங்கிகளில் கடன் வாங்கி தொழில் செய்த நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த 3 வருடங்களில் பட்டாசு தொடர்பான வழக்குக்கு மட்டும் பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம்.

    மத்திய அரசு இந்த தொழிலுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. அதனால் மத்திய அரசு மூலம் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இதுதொடர்பான வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 11-ந்தேதி நடக்க இருக்கிறது. இதில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த முடிவை தொடர்ந்து பட்டாசு ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த முடிவால் சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் இருக்கும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர். #SC #SivakasiFireworks
    சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 5 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி மனு கொடுத்துள்ளதாக தாசில்தார் பரமானந்தராஜா தெரிவித்துள்ளார்.
    சிவகாசி:

    கடந்த 1.9.2018 அன்று துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 1,16,756 ஆண் வாக்காளர்களும், 1,21,686 பெண் வாக்காளர்களும், 22 திருநங்கைகளும் இருந்தனர். இந்த நிலையில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதை தொடர்ந்து சிவகாசியில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் ஆர்வமுடன் கலந்து கொண்ட 18 வயது நிரம்பிய இளைஞர்கள் 4,743 பேர் நேரடியாகவும், 332 பேர் ஆன்-லைன் மூலமாகவும் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி மனு செய்து இருந்தனர். இந்த மனுக்களை தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தகுதியானவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அடுத்த ஆண்டு வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். இதனை சிவகாசி தாசில்தார் பரமானந்தராஜா தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வாக்காளர் சரி பார்க்கும் பணி வாக்குச்சாவடி நிலையஅலுவலர் மூலம் நடத்தப்பட்டது. இதில் 3,260 பேர் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது. இவர்கள் குறித்த தகவல் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையிலும், ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இறந்தவர்கள் என்று கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்ட தகவலில் யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் அவர்கள் தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் வருகிற 29-ந்தேதிக்குள் தெரிவிக்கலாம்.

    அதே போல் 18 வயது நிரம்பியவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் வாக்காளர் பட்டியலில் தங்களதுபெயர்களை சேர்க்க கோரி மனு கொடுக்கலாம். இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.
    சிவகாசியில் குப்பைகளை தொட்டியில் கொட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் நூதன ஏற்பாடு செய்து உள்ளது.
    சிவகாசி:

    சிவகாசி நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து மட்டும் தினமும் 44 டன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சிவகாசி நகராட்சிக்கு என 195 துப்புரவு பணியாளர்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 140-க்கும் குறைவான தொழிலாளர்கள் தான் இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் சிவகாசியில் உள்ள முக்கிய சந்திப்புகளில் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளில் அப்பகுதியினர் குப்பைகளை கொட்டாமல் குப்பைத் தொட்டிகளின் வெளியே கொட்டும் நிலை தொடர்ந்து வந்தது. இதனால் அந்த குப்பைத் தொட்டியின் வெளியே ஆடு, மாடு, நாய், பன்றிகள் கூட்டமாக வந்து கழிவுப் பொருட்களை சாப்பிட்டு குப்பைகளை சாலையின் எல்லா பக்கங்களுக்கும் சிதறி விட்டுச் சென்று விடுகினற்ன. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியது. மேலும் நோய் பரவ வாய்ப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் குப்பைகளை பொதுமக்கள் தொட்டியின் உள்ளே கொட்டாமல் வெளியே கொட்டி வருவதை தடுக்க நகராட்சி அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் தற்போது ஒவ்வொரு குப்பை தொட்டியின் அருகிலும் பெரிய அளவில் கோலம் வரையப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் குப்பைகளை அந்த கோலத்தின் மீது கொட்டாமல் குப்பை தொட்டிகளில் கொட்டி வருகிறார்கள்.

    கமிஷனர் அசோக் குமாரின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தொடக்கத்தில் இதை பின் பற்ற பொதுமக்கள் தயங்கினாலும் காலப்போக்கில் இதை பொதுமக்கள் பின்பற்றி குப்பைகளை தொட்டியில் போட முன் வருவார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 
    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.#SivakasiFireworks #FireworksExplosion
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் செயல்படும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. சக்திவாய்ந்த பட்டாசுகள் வெடித்து நாலாபுறமும் சிதறியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. விபத்து ஏற்பட்டதும் தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர். சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

    தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை அணைக்க போராடினர். தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், படுகாயம் அடைந்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த பொன்னுசாமி என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விபத்து தொடர்பாக, பட்டாசு ஆலை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #SivakasiFireworks #FireworksExplosion
    ×