search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டாளி"

    அரியாங்குப்பம் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பாகூர்:

    புதுவை அரியாங்குப்பம் சண்முகா நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 36). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 24-ந்தேதி நாகராஜன் நோனாங்குப்பத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டு பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு கும்பல் நாகராஜை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.

    இந்த கொலை தொடர்பாக அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் நாகராஜிக்கும், அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த லோகு என்ற லோகநாதனும் (30) முன்விரோதம் இருந்து வந்ததும் இதனால் நாகராஜை கூட்டாளிகளுடன் சேர்ந்து லோகநாதன் கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து லோகநாதன் மற்றும் அவரது கூட்டாளிகளான உதயகுமார் (28), முத்து (38) மணி (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    இதற்கிடையே நாகராஜ் கொலைக்கு உடந்தையாகவும் நாகராஜ் செல்லும் இடங்களை லோகநாதன் தரப்பினருக்கு தகவல் தெரிவித்த அரியாங்குப்பத்தை சேர்ந்த ஷிலா என்ற சத்தியசீலன் (22) என்பரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் நாகராஜ் கொலை தொடர்புடைய லோகநாதனின் தம்பி யுவராஜ் (27), மற்றும் கல்லூரி மாணவரான நவீன் என்ற நவீன்குமார் (20) ஆகிய 2 பேரையும் போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

    மரப்பாலம் சந்திப்பில் பதுங்கி இருந்த அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் குற்றப்பிரிவு போலீஸ்காரர்கள் வசந்தராஜா, மாஸ்ஆண்டனி ஆகியோர் கைது செய்தனர்.

    திருச்சி அருகே அக்காவை காதலித்த ஆத்திரத்தில் கூட்டாளிகளுடன் சேர்ந்து வாலிபரை குத்திக்கொன்ற பிளஸ்-1 மாணவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் அருகே உள்ள கணவனூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் விஜய் (வயது 23). பாலிடெக்னிக் படித்து விட்டு திருச்சியில் ரெயில் சிக்னல் பழுது பார்க்கும் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை ஜீயபுரம் அருகே பழூர் செல்லும் சாலையில் நரசிம்மன் கோவில் அருகில் உள்ள தோப்பில் விஜய் மார்பு, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் அதிக அளவில் ரத்தம் வெளியேறிய நிலையில் வழியிலேயே விஜய் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசுப்பிரமணியம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமரா ஜன், போலீசார் விசாரணை நடத்தினர். விஜயை கத்தியால் குத்தி கொலை செய்த நபர்கள் யார்? இதற்கு காரணம் என்ன? என விசாரணை நடத்தினர்.

    அப்போது காதல் பிரச்சனையில் விஜய் காதலித்த பிளஸ்-2 மாணவியின் தம்பியே கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. விஜய் திருச்சிக்கு வேலைக்கு வரும் போது பஸ்சில் தன்னுடன் வந்த பழூரைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார்.

    திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் அந்த மாணவியை தினமும் விஜய் அழைத்து செல்வது என இருந்துள்ளார். இது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இரு குடும்பத்துக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது விஜய் காதலித்த மாணவியின் தம்பி விஷ்வாவுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. திருச்சியில் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவன் விஷ்வா விஜய் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று விஜய்யின் நண்பர் பிறந்த நாள் விழா பழூரில் நடந்துள்ளது. இதில் கலந்துகொண்டு விட்டு, காதலியையும் பார்த்து வரலாம் என விஜய் புறப்பட்டு சென்றுள்ளார்.

    அதன்பிறகு மாலையில் பழூர் சாலை வழியாக மீண்டும் தனது ஊரான கணவனூருக்கு திரும்பியுள்ளார். அப்போது பழூர் நரசிம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு தோப்பில் விஜய் காதலிக்கும் மாணவியின் தம்பி விஷ்வா நண்பர்களுடன் இருந்துள்ளார்.

    விஜய்யை பார்த்த விஷ்வாவிற்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இருந்த அவர்கள் தோட்டத்திற்குள் அழைத்து விஜயுடன் தகராறு செய்துள்ளனர். திடீரென விஜய்யை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விஷ்வா உள்ளிட்ட அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மும்பையில் ஓட்டல் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான ராம்தாஸ் ரகானே காவல்துறையால் கைது செய்யப்பட்டார். #DawoodIbrahim
    மும்பை:

    மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட தாவூத் இப்ராகிம் சகல வசதிகளுடன் துபாய் நகரில் வாழ்ந்து வருகிறார். தாவூத் இப்ராகிமின் அடியாட்கள் இந்தியாவில் பிரபல சினிமா நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் ஆகியோரை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.

    இதுமட்டுமின்றி, சர்வதேச அளவில் கிரிக்கெட் சூதாட்ட வளையத்தையும் நிர்வகித்து வரும் தாவூத் இப்ராகிமுக்கு இந்தியாவில் உள்ள அவரது அடியாட்கள், வசூலித்து வரும் மாமூலில் இருந்து பெரும்தொகை தாவூத் இப்ராகிமின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில், மும்பையில் உள்ள பிரபல ஓட்டல் அதிபரிடம் தாவூத் இப்ராகிமின் அடியாட்கள் தொலைப்பேசி மூலமாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தனர். தங்களது குழுவைச் சேர்ந்த ராம்தாஸ் ரகானே என்பவனிடம் 50 லட்சம் ரூபாய் மாமூலாக தர வேண்டும் இல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவோம் என்று எதிர்முனையில் பேசியவர்கள் மிரட்டியுள்ளனர்.
     
    மேலும், உடனடியாக ராம்தாஸ் ரகானேவிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்தனுப்புமாறும் வற்புறுத்தினர். இந்த மிரட்டல் தொடர்பாக அந்த ஓட்டல் அதிபர் மும்பை நகர போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கண்காணித்து வந்த மும்பை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் திலீப் சாவந்த், ராம்தாஸ் ரகானேவை இன்று கைது செய்தார்.

    பாகிஸ்தானில் இருக்கும் தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகள் அறுவுறுத்தியபடி இந்த மிரட்டலை இங்குள்ள தாதாக்கள் அந்த ஓட்டல் அதிபருக்கு அனுப்பி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பணம் கொடுக்காத ஓட்டல் முதலாளி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட போது ராம்தாஸ் ரகானேவை கைது செய்த போலீசார் அகமதுநகர் மாவட்டம், சங்கம்நெர் பகுதியில் உள்ள அவனது வீட்டில் நடத்திய சோதனையில் கைத்துப்பாக்கியும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் குறிப்பிட்டனர்.

    கைதான ரகானே மீது மும்பை குஜராத் பகுதியில் ஏரளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், கடந்த 2011-ம் ஆண்டு மும்பை பகுதியில் பிரபல கட்டுமான நிறுவன அதிபர் மனிஷ் தோலாக்கியா மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்திலும் இவன் தொடர்புடையவன் என்பதும் தெரியவந்துள்ளது.

    இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ரகானேவை வரும் 30-ம் தேதி வரை போலீசார் காவலில் எடுத்துவிசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #DawoodIbrahim
    திண்டிவனத்தில் கைத் துப்பாக்கி, பயங்கர ஆயுதங்களுடன் 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
    திண்டிவனத்தில் கைத் துப்பாக்கி, பயங்கர ஆயுதங்களுடன் 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னையைச்சேர்ந்த ரவுடியை கொலை செய்யும் திட்டத்துடன் அவர்கள் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

    2 ரவுடிகள் கைது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    சென்னை புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த சின்னசேகர் என்பவரது மகன் பாம்பு என்ற நாகராஜ்(30). பிரபல ரவுடியான இவர் பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி ஆவார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அமைந்தகரையைச்சேர்ந்த பிரபல ரவுடி பல்லி என்ற ரோகனின் கூட்டாளியான சூளைமேட்டை சேர்ந்த குமரேசனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இந்த வழக்கில் அவர் தலைமறைவாக இருந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி ரோகன் தனது எதிரியான நாகராஜை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இது பற்றி அறிந்த நாகராஜூம், ரோகனை கொல்ல சமயம் பார்த்துக் கொண்டு இருந்தார். அதனால் அவரது நடவடிக்கையை கண்காணித்து வந்தார்.

    இதற்கிடையே ரோகனுக்கும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா மூடூர் கிராமத்தை சேர்ந்த காசி மகன் பொன்ராஜின்(32) மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது நாகராஜூக்கு தெரியவந்தது.

    கடந்த சில மாதங்களாக பொன்ராஜ் தனது மனைவியுடன் திண்டிவனத்தில் வசித்து வந்தார். இதனால் ரவுடி ரோகன் தனது கள்ளக்காதலியை பார்ப்பதற்காக திண்டிவனத்துக்கு அடிக்கடி வந்து சென்றார்.

    இந்த விஷயத்தை நாகராஜூக்கு பொன்ராஜ் தெரிவித்தார். இதனால் ரோகனை கொலை செய்யும் சதிதிட்டத்துடன் நாகராஜ் ஸ்ரீபெரும்புதூரில் கைத்துப்பாக்கி மற்றும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கி பையில் மறைத்து வைத்துக் கொண்டு, நேற்று முன்தினம் இரவில் திண்டிவனத்திற்கு வந்தார்.

    அங்கு தனது கூட்டாளி பொன்ராஜ் உதவியுடன் ரோகனை கொலை செய்யும் திட்டத்துடன் திண்டிவனம் வ.ஊ.சி. திடல் அருகில் பதுங்கி நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக ரோந்து வந்த திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முதுகில் மாட்டியிருந்த பையை(பேக்) சோதனையிட்ட போது, அந்த பையினுள் அரிவாள், கத்தி, மிளகாய்பொடி பாக்கெட் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது தெரியவந்தது.

    அந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கு 2 ரவுடிகளையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து கைத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் இதுபற்றி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திண்டிவனத்துக்கு விரைந்து வந்து கைது செய்யப்பட்ட இரு ரவுடிகளிடமும் விசாரணை நடத்தினார்.

    ரவுடிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களையும் பார்வையிட்டார். முன்கூட்டியே ரவுடிகள் கைது செய்யப்பட்டதால் அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×