search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட்டு"

    புதுச்சேரி கவர்னருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை என சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துள்ளது. #KiranBedi
    புதுடெல்லி:

    புதுச்சேரியில், மாநில அரசின் அதிகாரங்களை துணைநிலை கவர்னர் கிரண்பெடி கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதாகவும், அவரது ஒட்டுமொத்த செயல்பாடும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக இருப்பதாகவும் ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், ‘புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவதற்கும், அரசு ஆவணங்களை கேட்பதற்கும் துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் உள்ளது’ என்று மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு சிறப்பு அதிகாரம் இல்லை எனவும், அவர் மந்திரிசபை முடிவு அடிப்படையில்தான் செயல்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.

    மேலும் முதல்-அமைச்சரின் அதிகாரத்தில் துணைநிலை கவர்னர் தலையிட முடியாது என உத்தரவிட்ட ஐகோர்ட்டு, இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுகளை ரத்துசெய்வதாகவும் கடந்த மாதம் 30-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

    சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று ஆஜரானார்.

    அப்போது அவர், துணைநிலை கவர்னரின் சிறப்பு அதிகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பினால் புதுச்சேரி அரசின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து விடும் நிலை ஏற்படும் என்றும் அதனால் இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் முறையீடு செய்தார்.

    ஆனால் இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். பின்னர் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரை அணுகுமாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலை நீதிபதிகள் அறிவுறுத்தினர்.  #KiranBedi

    ஐகோர்ட்டு விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    புதுடெல்லி:

    ஆதார் அடையாள அட்டைக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது. அதில், வருமான வரி கணக்கு தாக்கல், ‘பான்’ என்னும் வருமான வரி கணக்கு நிரந்தர எண் பெறுதல் ஆகியவற்றில் ஆதார் அடையாள அட்டை கட்டாயம்; வங்கிக்கணக்கு மற்றும் செல்போன் சேவை இணைப்பு ஆகியவற்றில் ஆதார் கட்டாயம் இல்லை என்று கூறியது.

    ஆனால் வங்கிக்கணக்கு தொடங்கவும், செல்போன் சேவை இணைப்பு பெறவும் ஆதார் அடையாள அட்டையை தாமாக முன்வந்து காட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இது அரசியல் சாசனத்தின்படி செல்லத்தக்கது அல்ல என அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ வழக்குகள் தாக்கலாயின. அந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எஸ்.ஏ. நசீர் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தன.

    அப்போது வழக்குதாரர்கள், இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டை நாட விரும்புவதால் வழக்குகளை திரும்பப்பெற அனுமதிக்குமாறு கோரினர். அதை ஏற்று ‘ரிட்’ வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிபதிகள், வழக்குதாரர்கள் ஐகோர்ட்டை நாடுமாறு உத்தரவிட்டனர். #Aadhaar #SupremeCourt

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை தொடரலாம் என ஐகோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #HighCourt #ApolloHospital
    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்துவருகிறது. ஆணையத்தில் ஆஜராகுமாறு பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
     
    இதில் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா, சசிகலா உறவினர்கள், அரசு அதிகாரிகள், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உதவியாளர், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி தகவல்களை பதிவு செய்தார். 



    இதற்கிடையே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் அப்பலோ மருத்துவமனை மனு தாக்கல் செய்தது.

    இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை தொடரலாம் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. #JayaDeathProbe #ArumugasamyCommission #HighCourt #ApolloHospital
    சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து விரிவான அறிக்கையை வனத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ChinnathambiElephant #HC
    சென்னை:

    சென்னை ஐகோர்டில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

    அதில், ‘கோவை மாவட்டத்தில் அண்மை காலமாக ஏராளமான காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவது அதிகரித்துள்ளன. கோவை மாவட்டம், தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள செங்கல் சூளைகளில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை தான் இதற்கு காரணம். தற்போது, சின்னதம்பி என்ற யானை ஊருக்குள் புகுந்து, காட்டுக்குள் செல்லாமல் ஊரை சுற்றி வருகிறது.

    எனவே இந்த செங்கல் சூளைகளை இழுத்து மூட வேண்டும். சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.



    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர், சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து விரிவான அறிக்கையை வனத்துறை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என்று உத்தரவிட்டனர். #ChinnathambiElephant #HC
    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொருத்தப்படும் என்று ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. #ElectionCommission #HighCourt
    சென்னை:

    சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் வக்கீல் பாக்யராஜ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்ற குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரவலாக எழுந்துள்ளது. அதனால், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய, வாக்கு சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு எந்திரம் பொருத்த வேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இந்த வசதிகளை வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்படவில்லை.

    தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில், ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் வாக்கு சரிபார்க்கும் எந்திரம் நிறுவப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்க முடியாது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த எந்திரத்தை பொருத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை சரியான பதில் அளிக்கவில்லை.

    கோவா சட்டமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த எந்திரத்தை பயன்படுத்திய நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த எந்திரத்தை பொருத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஒப்புகை சீட்டு எந்திரத்தை பொருத்தும் நடைமுறையை படிப்படியாக மேற்கொள்ளவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த 2017-ம் ஆண்டு அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. அதில், விரைவில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நூறு சதவீதம் இந்த எந்திரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
    எச்.ஐ.வி. பாதிப்பால் வி‌ஷம் குடித்து இறந்த வாலிபரின் உடல் ஐகோர்ட்டு உத்தரவுப்படி நாளை பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. #HIVBlood #PregnantWoman
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவி கர்ப்பிணியாக உள்ளார். ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    விசாரணையில் கர்ப்பிணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் தானமாக வழங்கிய ரத்தம் செலுத்தப்பட்டது தெரிய வந்தது.

    இந்த நிலையில் அந்த வாலிபர் மன உளைச்சல் காரணமாக எலி மருந்தை சாப்பிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.



    உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வாலிபரின் சாவில் மர்மம் உள்ளது. எனவே பிற மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வாலிபரின் தாயார் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். பின்னர் அவர் எய்ட்ஸ் பாதிப்பில் இறந்த வாலிபரின் உடலை நெல்லை, தேனி, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரியின் 2 தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் ஜனவரி 2-ந்தேதி (நாளை) மதுரை அரசு மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.

    அதுவரை எச்.ஐ.வி. கிருமிகள் பரவாமல் தடுக்க உடலை பாலித்தீன் கவரால் மூடி பாதுகாக்க வேண்டும். பிரேத பரிசோதனையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்படி நாளை எச்.ஐ.வி. பாதிப்பில் இறந்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. #HIVBlood #PregnantWoman
    2019-ம் ஆண்டுக்கான சென்னை ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ளார். #HighCourt #Holidays
    சென்னை:

    2019-ம் ஆண்டுக்கான சென்னை ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டுக்கு 2019-ம் ஆண்டு மே 1-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது. அக்டோபர் 5-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தசரா விடுமுறையும், டிசம்பர் 25-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறையும் விடப்படுகிறது. ஏப்ரல் 27-ந்தேதி, சனிக்கிழமையை தவிர மற்ற அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை ஆகும்.

    ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு விடுமுறை ஆகும். பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையிலும், மகாவீர் ஜெயந்திக்காக ஏப்ரல் 17-ந்தேதியும், புனித வெள்ளிக்காக ஏப்ரல் 19 மற்றும் 18-ந்தேதிகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1-ந்தேதியும், ரம்ஜான் பண்டிகைக்காக ஜூன் 5-ந்தேதியும், பக்ரீத் பண்டிகைக்காக ஆகஸ்டு 12-ந்தேதியும், சுதந்திர தினத்துக்காக ஆகஸ்டு 15-ந் தேதியும், கிருஷ்ண ஜெயந்திக்காக ஆகஸ்டு 23-ந் தேதியும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்திக்காக செப்டம்பர் 2-ந் தேதியும், மொஹரத்துக்காக செப்டம்பர் 10-ந்தேதியும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.2-ந்தேதி யும் விடுமுறை விடப்படுகிறது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, விடுமுறை நாளான (அக்டோபர் 27-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால், ஐகோர்ட்டுக்கு அக்டோபர் 28 மற்றும் 29-ந்தேதிகளில் விடுமுறை விடப்படுகிறது. அதேபோல, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 23 மற்றும் 24-ந்தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இதுதவிர, குடியரசு தினம், தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு, மிலாது நபி ஆகியவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.

    இவ்வாறு அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. #HighCourt #Holidays 
    1330 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்த மாணவிக்கு ஆயுர்வேத கல்லூரியில் இடம் ஒதுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.#highcourt

    சென்னை:

    சென்னையை சேர்ந்த 16 வயது மாணவி யஸ் ஹேஷ்யதா. இவர் எல்.கே.ஜி.யில் படித்தபோது 1330 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பிவித்து சாதனை படைத்தவர்.

    அதற்காக அவருக்கு தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 8-ம் வகுப்பு படித்தபோது உலக தமிழ் ஆராய்ச்சி மையம் சார்பில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றார்.

    2011-ம் ஆண்டு தலைநகர் தமிழ்ச்சங்கம் சார்பில் ‘திருக்குறள் மாமணி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் 12-ம் வகுப்பை முடித்த யஸ் ஹேஷ்யதா 2018-19ம் கல்வியாண்டுக்கான ஆயுர்வேத படிப்புக்கு விண்ணப்பித்தார். அவர் 157.25 கட்- ஆப் மதிப்பெண் பெற்று இருந்தார்.

    ரேங்க் பட்டியலில் 1648 முதல் 1666 வரைக்குள் இருந்தார். ஆனால் 2018-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி கணக்குப்படி மாணவிக்கு 17 வயது முடிவடையாததால் அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

    இதையடுத்து மாணவி தனக்கு கல்லூரியில் இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறும்போது, “மாணவி பல்வேறு விருதுகள் வாங்கிய திறமை வாய்ந்தவராக உள்ளார். சிறு வயதிலேயே மேதையாக திருக்குறளை ஒப்புவித்து சாதனை படைத்து இருக்கிறார்.

    ஆனால் ஆயுர்வேத கல்லூரி படிப்பு கலந்தாய்வில் 17 வயது பூர்த்தியாகாததை காரணம் காட்டி அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர் 157.25 கட்-ஆப் மார்க் பெற்று இருக்கிறார்.

    2016-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி திருத்தப்பட்ட அறிவிப்பு அடிப்படையில் விண்ணப்பித்து உள்ளார். இதில் மாணவி கலந்தாய்வில் பங்கேற்க தடை இருப்பதாக இந்த ஐகோர்ட்டுக்கு தெரிய வில்லை.

    கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஏ.குமார் அளித்த அறிக்கையில், மாணவி எடுத்த கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு சித்தா அரசு கல்லூரியில் இடம் கிடைக்காமல் போகலாம். ஆனால் தனியார் கல்லூரியில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.

    கன்னியாகுமரியில் உள்ள மரியா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இடம் காலியாக உள்ளது. அந்த கல்லூரியை பரிசீலனை செய்யலாம். அவரை கலந்தாய்வில் அனுமதித்து படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்று இருந்தால் கலந்தாய்வில் இடம் ஒதுக்க வேண்டும்” என்றார். #highcourt

    தீ விபத்து நடந்த கட்டிடத்தை இடிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் தூங்கிக் கொண்டு இருக்கிறார்களா என ஆணையரிடம், ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. #ChennaiHighCourt
    சென்னை:

    வடபழனி சிவன் கோயில் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவு காரணமாக 2017-ம் ஆண்டு மே மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி பலியாகினர்.

    இந்த கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும், இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் சென்னை மாநகராட்சி ஆணையரை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, ஆணையர் ஆஜராகவில்லை. அவர் சார்பில் துணை ஆணையர் ஆஜரானார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

    அதன்படி, ஆணையர் கார்த்திகேயன் இன்று காலையில் நீதிபதிகள் முன்பு ஆஜராகி, ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதை படித்து பார்த்த நீதிபதிகள், மாநகராட்சி அதிகாரிகளின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். சரமாரியாக கேள்விகளையும் எழுப்பினர். நீதிபதிகள் கூறியதாவது:-

    வடபழனி கட்டிடத்தில் கடந்த 2017ம் ஆண்டு மே தீ விபத்து நடந்துள்ளது. அன்று முதல் (2018ம்ஆண்டு) செப்டம்பர் மாதம் வரை என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்? இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகுதான், இந்த அறிக்கையை தயாரித்து காலதாமதமாக தாக்கல் செய்துள்ளீர்கள். இது மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கை காட்டுகிறது

    தீ விபத்து குறித்து கடந்த ஓர் ஆண்டில் அதிகாரிகள் என்ன நடவடிக்கையை எடுத்துள்ளனர்? நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தை இடிக்க இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதை கவனிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் என்ன தூங்கிக் கொண்டிருக்கின்றனரா?

    மெரினாவில் சென்று பார்த்தால் எவ்வளவு அசுத்தமாக, அருவருப்பாக உள்ளது என தெரியும், அது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் தானே வருகிறது.

    மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எவ்வளவு விதிமுறை மீறிய கட்டிடங்கள் உள்ளன? என்பதற்கான தகவல்கள் மாநகராட்சியிடம் இல்லை. தமிழக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகப்பணியை ஐகோர்ட்டு மேற்கொள்ள முடியாது.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராஜகோபால் ஆஜராகி, ‘விபத்து குறித்து முதல் கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை வந்தவுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு இழப்பீடு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்பட்டு விட்டது என்று கூறினார்.

    இதையடுத்து இந்த வழக்கை டிசம்பர் 5-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், சென்னையில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர். #ChennaiHighCourt
    தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சொந்தமான நிலங்களில் இருந்து வர வேண்டிய வாடகை பாக்கி விவரங்களை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்யும்படி அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #HRandCE #HighCourt
    சென்னை:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை முறையாக நடத்த இந்து சமய அறநிலையத்துறை தவறி விட்டதால், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் குழுவை நியமித்து கோவிலை நிர்வகிக்க உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதி கேசவலு அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கோவில் சொத்துக்கள் மூலம் அற நிலையத்துறைக்கு ரூ.24 கோடி வாடகை பாக்கி வர வேண்டுயுள்ளதாகவும், இவற்றை வசூலிப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இது தவிர பல்வேறு முறைகேடுகள் கோவில் நிர்வாகத்தில் நடைபெறுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    இதையடுத்து, இந்த மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வக்கீல் மகாராஜா கோரிக்கை விடுத்தார்.

    இதை ஏற்றக்கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு பதில் அளிப்பதுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சொந்தமான நிலங்களில் இருந்து வர வேண்டிய வாடகை பாக்கி விவரங்களை விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

    அறநிலையத்துறை இந்த நிலையில் இருந்து இருந்தால் கோவில்களை யார் பாதுகாப்பார்கள் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #HRandCE #HighCourt

    முறையான உரிமம் மற்றும் அனுமதியை பெற்ற நிறுவனங்கள் ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய தடை இல்லை என ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். #ChennaiHighCourt #OnlineDrugs
    சென்னை:

    ஆன்-லைன் மூலம் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மருந்தாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய நேற்று முன்தினம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், நீதிபதி ஆர்.மகாதேவன் நேற்று வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். அப்போது வக்கீல் எஸ்.வர்ஷா ஆஜராகி, ‘ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய என் கட்சிக்காரர் நிறுவனம் முறையான உரிமம் மற்றும் அனுமதியை பெற்றுள்ளது. இந்த ஐகோர்ட்டு ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய தடை விதித்துள்ளதால், நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார்.

    அதற்கு பதில் அளித்த நீதிபதி, ‘முறையான உரிமம் மற்றும் அனுமதியை பெற்ற நிறுவனங்கள் ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய தடை இல்லை. சட்டவிரோதமாக, உரிமம் எதுவும் பெறாத நிறுவனங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

    அதேபோல, ஐகோர்ட்டு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் சில மனு தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் அனைத்தையும் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
    நாடு முழுவதும் ‘ஆன்-லைன்’ மூலம் மருந்துகளை விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ChennaiHighCourt #OnlineDrugs
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு மருந்தாளர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் சங்கத்தில் மருந்து வினியோகஸ்தர்கள், மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது நாட்டில் ‘ஆன்-லைன்’ மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

    இதுவரை, வீட்டு உபயோகப் பொருட்களை தான் ‘ஆன்-லைனில்’ பல நிறுவனங்கள் விற்பனை செய்து வந்தன. இப்போது, சில தனியார் நிறுவனங்கள், மருந்து மாத்திரைகளையும் விற்பனை செய்ய தொடங்கிவிட்டன. இதை அனுமதித்தால், பொதுமக்களுக்கு மிகப்பெரிய தீங்கு ஏற்படும்.



    ஏனென்றால், போலியான, காலாவதியான, கெட்டுப்போன மற்றும் தரம் குறைந்த மருந்துகளை அந்த நிறுவனம், பொதுமக்களுக்கு விற்பனை செய்யலாம். மேலும், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், விதிகள் மற்றும் மருந்துக்கடைச் சட்டப்படி இதுபோல மருந்துகளை ‘ஆன்-லைன்’ மூலம் விற்பனை செய்ய முடியாது.

    இந்த விற்பனை முறையினால், லட்சக்கணக்கான மருந்துக்கடை உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இப்போது இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் அலுவலகங்கள் எல்லாம் வெளிநாடுகளில் உள்ளன.

    அந்த நிறுவனங்கள், இந்திய சட்டவிதிகளை பின்பற்றுவது இல்லை. மருந்துகளை விற்பனை செய்ய சட்டப்படியாக உரிமமும் பெறவில்லை. எனவே, ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு கடந்த ஜூன் மாதம் இரு மனுக்களையும் அனுப்பினோம். எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். மருந்துகளை விற்பனை செய்யும் இணையதளத்தை முடக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். பின்னர், நாடு முழுவதும் ‘ஆன்-லைன்’ மூலம் மருந்துகளை விற்பனை செய்ய வருகிற 9-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். 
    ×