search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாம்பரம்"

    தாம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    மேற்கு தாம்பரத்தில் ஜெருசலேம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் சிவா என்கிற கருப்பசாமி (45). இவர் வட்டி தொழில் செய்து வருகிறார். உறவினர் திருமணத்துக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்றிருந்தார். இன்று காலை திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ மூலம் விசாரித்து வருகின்றனர்.

    கடற்கரை, தாம்பரம், திருவள்ளூர் ஆகிய 3 ரெயில் நிலையங்களில் ‘எஸ்கலேட்டர்’ என்ற நகரும் படிக்கட்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை ரெயில்வே கோட்டத்தில் உள்ள கடற்கரை, தாம்பரம், திருவள்ளூர் ஆகிய 3 ரெயில் நிலையங்களில் ‘எஸ்கலேட்டர்’ என்ற நகரும் படிக்கட்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மூன்று ரெயில் நிலையங்களில் ரூ.11 கோடி செலவில் 11 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளது.

    கடற்கரை ரெயில் நிலையத்தில் 5 நகரும் படிக்கட்டுகளும், தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 படிக்கட்டுகளும், திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் 2 படிக்கட்டுகளும் அமைக்கப்படுகின்றன. எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

    இதற்காக அடிக்கல் நாட்டுவிழா மூன்று ரெயில் நிலையங்களிலும் நடந்தது.

    சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் எம்.பி.க்கள் டி.கே.ரங்கராஜன், நவநீதகிருஷ்ணன், சென்னை கோட்ட ரெயில்வே கூடுதல் மேலாளர் சுனில் சார்டே கலந்து கொண்டனர்.

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் கே.என்.ராமச்சந்திரன் எம்.பி.யும், திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் வேணு கோபால் எம்.பி.யும் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். இப்பணிகள் 6 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தாம்பரம் அருகே ரெயிலில் அடிபட்டு ஆசிரியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தாம்பரம்:

    கிழக்கு தாம்பரம் கணபதி புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்..

    நேற்று மாலை பணி முடிந்ததும் மின்சார ரெயிலில் பெருங்களத்தூர் வந்தார். இங்கு ரெயிலில் இருந்து இறங்கிய அவர் வீட்டுக்கு புறப்பட்டார். அவர் செல்போனை பார்த்தபடியே நடந்து சென்றார்.

    அப்போது கால் தடுக்கி தண்டவாளத்தில் விழுந்ததால் அவர் மீது ரெயில் மோதியது. இதனால் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    தாம்பரம் அருகே காரில் குட்கா-புகையிலை கடத்திய வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் அருகே புற வட்டச் சாலையில் நேற்று இரவு பீர்க்கன்கரணை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னை நோக்கி வந்த காரில் சோதனை செய்தபோது அதில் 250 கிலோ குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    காரில் இருந்த அனகாபுத்தூரைச் சேர்ந்த வியாபாரி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். வேலூரில் இருந்து குட்கா, புகையிலை வாங்கி வந்ததாக அவர் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து குட்கா, புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலூரில் தொடர்புடைய குட்கா வியாபாரிகள் யார்-யார்? இங்கு எந்தெந்த பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    தாம்பரத்தில் பஸ்சில் வைத்து மூதாட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அப்போது படுகாயம் அடைந்த மகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். #TambaramMurder #MotherMurder
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி காயரம்பேடு கிராமம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 53). காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது தாயார் முத்தம்மாள். தேவராஜுக்கு 3 சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளனர். முத்தம்மாளுக்கு அதே பகுதியில் 2 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.

    முத்தம்மாளை சரியாக கவனிக்காததால் தேவராஜுக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தேவராஜ் வழக்கு தொடர்ந்தார்.



    இந்த வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராகிவிட்டு முத்தம்மாளும், அவரது மகள் விஜயலட்சுமியும் நேற்று இரவு 7 மணி அளவில் தாம்பரம் பஸ் நிலையம் வந்தனர்.

    பின்னர் குன்றத்தூர் அருகே உள்ள கோவூருக்கு செல்வதற்காக மாநகர பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தனர். அப்போது அந்த பஸ்சில் ஏறிய தேவராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்தம்மாளையும், விஜயலட்சுமியையும் சரமாரியாக வெட்டினார்.

    இதில் முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். படுகாயம் அடைந்த விஜயலட்சுமி சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலையத்தில் சொத்துக்காக தனது தாயை மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தீபாவளி பண்டிகையையொட்டி தாம்பரத்தில் இருந்து நெல்லை மற்றும் கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. கூட்டநெரிசல் இன்றி சென்றதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    தாம்பரம்:

    தீபாவளி பண்டிகையையொட்டி கூட்டநெரிசலை சமாளிக்க சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து நெல்லை மற்றும் கோவைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    அதன்படி தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில் நேற்று காலை 9.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து பயணிகளுடன் நெல்லைக்கு புறப்பட்டு சென்றது. இதேபோல 5-ந் தேதி(திங்கட்கிழமை)யும் இந்த சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில்கள், நெல்லையில் இருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 7-ந் தேதி காலை 7.10 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

    இதேபோல சென்னை -கோவை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் நேற்று காலை 7.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. 5-ந் தேதியும் இந்த சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 7-ந் தேதி ஆகிய இரு நாட்களும் காலை 10 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வந்துசேரும்.

    நெல்லை மற்றும் கோவைக்கு தாம்பரத்தில் இருந்து தீபாவளி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டதால் 2 ரெயில்களிலும் கூட்ட நெரிசல் இன்றி பயணிகள் குடும்பத்தினரோடு சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர்.

    இதேபோல தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. அதிக பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாட கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்தனர். 
    தாம்பரம் அருகே பேராசிரியை வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் சுவாமி விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் பொன்னையா. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காளிஸ்வரி. தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று வீட்டை பூட்டிவிட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர். மாலை திரும்பி வந்து பார்த்த போது வீடு திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து பீர்க்கன்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. #SpecialTrain
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * தாம்பரம்-நெல்லை சுவிதா சிறப்பு ரெயில்(வண்டி எண்:82627), நாளை(புதன்கிழமை) இரவு 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    * நெல்லை-தாம்பரம் சுவிதா சிறப்பு ரெயில்(82628), வரும் 20-ந்தேதி(சனிக்கிழமை) மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று(செவ்வாய்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    தாமிரபரணி புஷ்கரம் திருவிழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    சென்னை:

    தாமிரபரணி புஷ்கரம் திருவிழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    * நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06040) வருகிற அக்டோபர் 12 மற்றும் 14-ந்தேதி மதியம் 2 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    * நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06044), வருகிற 16-ந்தேதி மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    *நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06042), வருகிற 14-ந்தேதி மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    * நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06046), வருகிற 17-ந்தேதி மதியம் 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    * தாம்பரம்-நெல்லை சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06039), வருகிற 11-ந்தேதி மற்றும் நவம்பர் 13-ந்தேதி மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    * தாம்பரம்-நெல்லை சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06043), வருகிற 15-ந்தேதி இரவு 7.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    *தாம்பரம்-நெல்லை சுவிதா சிறப்பு ரெயில் (82625), வருகிற 16-ந்தேதி மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது. 
    திருவள்ளூரில் இருந்து தாம்பரத்துக்கு இடையே மீண்டும் மாநகர பஸ் இயக்கப்படுமா? என்பது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார். #Minister #MRVijayabaskar
    சென்னை:

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது தி.மு.க. உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர் தொகுதி) துணை கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேசும்போது, ‘ திருவள்ளூரில் இருந்து தாம்பரம் வரை 566 ஏ என்ற எண் கொண்ட 5 நகர பஸ்கள் நாள்தோறும் 10 நடைகள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த 6 மாதகாலமாக அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டு, திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி வரை 597 ஏ என்ற எண் கொண்ட பஸ்கள் தான் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூரில் இருந்து தாம்பரத்துக்கு வேலைநிமித்தமாக ஏழை-எளிய மக்களுக்கும், படிப்புநிமித்தமாக மாணவர்களும் சென்று கொண்டிருக்கக் கூடிய இந்த வேளையில் 6 மாதகாலமாக நிறுத்தப்பட்டதை மாற்றி திருவள்ளூரில் இருந்து தாம்பரம் வரை மீண்டும் பஸ்கள் இயக்கப்படுமா?’ என்று கேட்டார்.

    அதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில் அளித்து பேசும்போது ‘அந்த வழித்தடத்தில் பயணிகளின் அடர்வினை ஆய்வு செய்து, தேவை இருந்தால் பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு அரசு ஆவன செய்யும்’ என்று தெரிவித்தார். #Minister #MRVijayabaskar
    தாம்பரத்தில் ரூ.2 லட்சம் கேட்டு கார் டிரைவர் கடத்திய 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் சேலையூரை சேர்ந்தவர் முகமதுசபீர் (வயது 32). கார் டிரைவர்.

    இவர் திருமுல்லைவாயிலை சேர்ந்த சாமுவேல் எபினேசர் என்பவரின் காரை லீசுக்கு எடுத்து ஓட்டி வருகிறார்.

    லீசுக்கான பணத்தை அவர் கொடுக்கவில்லை. மேலும் மாத தவணையும் செலுத்தாமல் ஏமாற்றி வந்தார். சாமுவெல் எபினேசர் பலமுறை கேட்டும் முகமதுசபீர் பணம் கொடுக்கவில்லை.

    இதையடுத்து அவரை கடத்திச் சென்று பணம் பறிக்க முடிவு செய்தார். நேற்று இரவு சாமுவேல் எபினேசர், அவரது நண்பர்கள் வண்ணாரப்பேட்டை கணேசமூர்த்தி, திருமுல்லைவாயல் சரவணன், வேங்கைவாசல் அப்துல், சந்தோ‌ஷபுரம் முகமதுஅலி, ஜெயபிரகாஷ், கிழக்கு தாம்பரம் முகமது சகால் ஆகியோர் காரில் முகமதுசபீர் வீட்டுக்கு சென்றனர்.

    வீட்டில் இருந்த அவரை 7 பேரும் காரில் கடத்திச் சென்றனர். அத்துடன் லீசுக்கு விட்ட காரையும் எடுத்துச் சென்றனர்.

    பின்னர் கடத்தல் கும்பல் முகமது சபீரின் தாயாருக்கு போன் செய்து ரூ.2 லட்சம் கொடுத்தால்தான் உங்கள் மகனை விடுவோம் என்று மிரட்டினார்கள். இதுகுறித்து அவர் சேலையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக புறநகர் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் காரையும், 7 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். முகமது சபீரை மீட்டனர். 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முன்பதிவு இல்லாத 16 பெட்டிகளுடன் தாம்பரம்-நெல்லை இடையே புதிய ரெயில் சேவை நேற்று தொடங்கியது. கோவில்பட்டி, சாத்தூர், வாஞ்சிமணியாச்சியில் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு முன்பதிவு இல்லாத ‘அந்த்யோதயா’ எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று கடந்த 2016-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி முன்னோட்டமாக கடந்த 2017-ம் ஆண்டு புத்தாண்டு அன்று தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயிலாக ‘அந்த்யோதயா’ ரெயில் இயக்கப்பட்டது. பயணிகள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்ததால், தினசரி ரெயிலாக இயக்கப்படும் என்று தேதி குறிப்பிட்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென்று அந்த அறிவிப்பு ரத்தானது.

    இந்தநிலையில் தாம்பரம் ரெயில் நிலையம் ரூ.40.4 கோடி செலவில் 3-வது முனையமாக உருவாக்கப்பட்டது. இதையொட்டி தாம்பரம்- நெல்லை இடையே முன்பதிவு இல்லாத ‘அந்த்யோதயா’ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை 8-ந்தேதி தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்தது.

    அதன்படி தாம்பரம் ரெயில் முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ‘அந்த்யோதயா’ ரெயில் சேவை தொடக்க விழா சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தின் 8-வது நடைமேடையில் நேற்று மாலை நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன், நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குலசேத்திரா வரவேற்று பேசினார். சென்னை கோட்ட மேலாளர் நவீன் குலாட்டி நன்றி கூறினார்.

    மத்திய இணை மந்திரிகள் ராஜென் கோஹெய்ன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து வைத்து ‘அந்த்யோதயா’ ரெயில் சேவையை தொடங்கி வைத்தனர். இதையடுத்து அந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து நெல்லையை நோக்கி புறப்பட்டு சென்றது.

    ரெயில் 4.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விழா தாமதாக தொடங்கியதாலும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் பேசியதாலும் ரெயில் தாமதமாக 5.05 மணிக்கு புறப்பட்டது.

    தொடக்க விழா என்பதால் ‘அந்த்யோதயா’ ரெயில் வண்ண மலர்கள், மா இலை, பலூன்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    ‘பயோ’ கழிப்பறை, எல்.இ.டி. விளக்கு, புதிய வர்ணம், சோலார் மேற்கூரை, மெத்தை இருக்கை என ரெயிலின் உள்புற பகுதி அமைந்திருக்கிறது. எனவே பயணிகள் புதுவித அனுபவத்துடன் மகிழ்ச்சியாக பயணம் மேற்கொண்டனர்.

    முன்பதிவு இல்லாத 16 பெட்டிகளில் 10 பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மற்ற பெட்டிகளில் சில பயணிகள் மட்டும் இருந்தனர். லக்கேஜ் பெட்டி உள்பட 2 பெட்டிகள் தனியாக உள்ளன.

    சென்னையில் பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக தென்மாவட்ட மக்கள் தங்கி உள்ளனர். குறிப்பாக தாம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். எனவே தாம்பரம்- நெல்லை புதிய ரெயில் சேவைக்கு தென்மாவட்ட மக்கள் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக சிலர் கூறும்போது, ‘தாம்பரம் ரெயில் நிலையம் 3-வது முனையமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது நெல்லைக்கு ரெயில் இயக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ரெயிலை விருத்தாசலம், அரியலூர் வழியாக இயக்கினால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

    கோவில்பட்டி, சாத்தூர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லாது என்ற அறிவிப்பு ஏமாற்றத்தை தருகிறது. நெல்லை, முத்துநகர் போன்ற அதிவிரைவு ரெயில்களே அந்த ரெயில் நிலையங்களில் நின்று செல்கின்றன. எனவே விரைவு ரெயிலான அந்த்யோதயாவும் அந்த ரெயில் நிலையங்களில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    ×