search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதுமலை"

    முதுமலையில் யானை சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    மசினகுடி:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றி பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் வாகன சவாரி மற்றும் யானை சவாரி செய்து, இயற்கை எழில் காட்சிகள் மற்றும் வனவிலங்குகளை கண்டு ரசிக்கின்றனர்.

    முதுமலையில் கும்கி யானைகள் மூலம் காலை மற்றும் மாலை நேரங்களில் சவாரி நடத்தப்படுகிறது. தற்போது யானை சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். முதுமலையில் ஆரம்பத்தில் 2 கும்கி யானைகள் மூலம் யானை சவாரி நடத்தப்பட்டு வந்தது. இதனால் யானை சவாரி செய்ய வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கால தாமதத்தால் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளுக்காக முதல் முறையாக 6 கும்கி யானைகள் மூலம் சவாரி நடத்த புலிகள் காப்பக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக சங்கர், உதயன், விஜய், இந்தர், சுமங்கலா, பொம்மன் ஆகிய யானைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கபட்டது.

    பயிற்சி முடிந்ததை அடுத்து கடந்த ஒரு வார காலமாக யானை சவாரி தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 24 முறை யானை சவாரி நடத்தப்படுகிறது. கூடுதல் யானைகளை கொண்டு சவாரி நடத்தப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து தெப்பக்காடு முன்பதிவு மைய வனச்சரகர் விஜய் கூறும்போது, முதுமலையில் இதுவரை 2 யானைகள் மூலம் காலை 2 முறை மாலை 2 முறை என 4 முறை சவாரி நடத்தப்பட்டு வந்தது. இதனால் யானை சவாரி செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் கால தாமதம் காரணமாக ஏமாற்றம் அடையும் நிலை இருந்தது.

    ஆனால் தற்போது 6 யானைகள் மூலம் சவாரி அனுப்புகிறோம். இதற்கு சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதற்காக ரூ.1,120 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்றார்.
    முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை பகுதியில் அடர்ந்த வனம் உள்ளது. இங்கு காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள், சிறுத்தை புலிகள், செந்நாய்கள் என வனவிலங்குகள் அதிகளவு வசித்து வருகின்றன. இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கடும் வறட்சி காணப் பட்டது.

    இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பசுந்தீவனங்கள் மற்றும் தண்ணீரை தேடி பல்வேறு இடங்களுக்கு சென்றன. இந்த நேரத்தில் கோடை சீசனை அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகள் முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இல்லாததால் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகினர்.

    இதனால் சுற்றுலா தலங்களை கண்டு களித்து விட்டு சென்றனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி மீண்டும் பசுமைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், காட்டு பன்றிகள், மலை அணில்கள் உள்ளிட்ட வன விலங்குகள் முதுமலை பகுதிக்கு திரும்பியது.

    தற்போது முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மைசூரூ- கூடலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தெப்பக்காடு- மசினகுடி சாலையோரம் வனவிலங்குகள் அதிகமாக தென்படு கிறது. இதனால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வனத்துக்குள் சுற்றுலா பயணிகள் அத்துமீறாமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    வாகனங்களில் செல்லும் போது வனவிலங்குகளை கண்டு களிப்பதற்கு எந்தவித தடையும் கிடையாது. ஆனால் வாகனங்களை நிறுத்தி கூச்சலிட்டு வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது.

    அவ்வாறு தொந்தரவு செய்யும் போது காட்டு யானைகள் திடீரென தாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும். இதனால் சுற்றுலா பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வனத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
    ×