search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடங்குளம்"

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராதாபுரம்:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4-வது அணு உலை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ராமச்சந்திரன் என்பவர் சப்-காண்டிராக்ட் எடுத்து நடத்தி வருகிறார். இவரிடம் புளியம்பட்டியை சேர்ந்த இன்பராஜ் (வயது36). என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று அதிகாலை 3 மணி அளவில் இவர் அங்குள்ள எந்திரத்தில் வால்வுகளை சரி பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் எந்திரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இன்பராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    வழியிலேயே இன்பராஜ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கூடங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று இன்பராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

     


    இதுதொடர்பாக கூடங்குளம் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த இன்பராஜுக்கு ஜெபா அன்ன பூர்ணம் என்ற மனைவியும், ஜெபிஷா, ஏஞ்சல் என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே இன்பராஜின் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு இன்று காலை திரண்டு வந்தனர்.

    அணுமின் நிலைய நுழைவு வாயிலில் அமர்ந்து அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பலியான இன்பராஜ் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்திற்கு ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அணுமின் நிலைய நுழைவு வாயிலில் போராட்டம் நடந்ததால் அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள் பாதுகாப்பாக செல்ல அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது. #KudankulamPlant #SupremeCourt
    புதுடெல்லி:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையம் செயல்படுவதற்கு கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அணுமின் நிலையம் பாதுகாப்பாக இயங்குவது தொடர்பாக, 17 விதிமுறைகள் அடங்கிய பரிந்துரையை வழங்கியது. அதில் முக்கிய நிபந்தனை, அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் கொண்ட கட்டமைப்பை அணுமின் நிலையம் 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பதாகும்.



    இந்த 5 ஆண்டு கால அவகாசம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், மேலும் 5 ஆண்டு கால அவகாச நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கோரி இந்திய அணுமின்சக்தி கழகம் கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வசதியை கட்டமைப்பதற்கான தொழில் நுட்பம் முழுவதும் கைவராத நிலையில் அதனை அமைப்பதில் சிக்கல்களை சந்தித்து வருவதாகவும் அதனால் மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் தேவை என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதற்கிடையே, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் அணுக்கழிவுகளை உலைக்கு உள்ளேயே சேகரித்து வைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் போதிய வசதிகளை கட்டி முடிக்கும் வரை கூடங்குளத்தில் உள்ள 2 உலைகளில் இருந்து மேலும் கழிவுகள் உண்டாகாமல் இருக்கும் வகையில், இந்திய அணுமின்சக்தி கழகத்தின் கோரிக்கையை நிராகரித்து பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தி முடிக்கும் வரை இரு அணுஉலைகளிலும் மின் உற்பத்தியை நிறுத்தி வைத்து அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அணுமின் நிலையத்தை மூட உத்தரவிடவேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

    இந்த வழக்கில், கூடங்குளம் அணு உலையில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாளும் வகையில் என்னென்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறித்த நிலைத்தகவல் அறிக்கையை ஏற்கனவே இந்திய அணுமின்சக்தி கழகம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்தது. அந்த நிலைத்தகவலை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த நீதிபதிகள், அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அரசுக்கு வருகிற 2022-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

    மேலும் அதுவரை கூடங்குளம் அணு உலை இயங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், அணு உலையின் பாதுகாப்பு குறித்தும் விளக்கி தனியாக ஒரு மனுவை மனுதாரர் விரும்பினால் தாக்கல் செய்யலாம் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷணிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.  #KudankulamPlant #SupremeCourt #Tamilnews

    கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #SupremeCourt #Koodankulam
    சென்னை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுந்தரராஜன் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    அதில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் பின்பற்றப்படவில்லை. அணு கழிவுகளை சேகரிக்க போதிய வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் வரை கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


    இன்று இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் கூடங்குளத்தில் அணு கழிவுகளை சேமிப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முடிக்க மேலும் அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

    இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்தது. அணு கழிவுகளை சேமிப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள 2022 ஆண்டு வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டது. #SupremeCourt #Koodankulam
    கூடங்குளம் அணு உலையில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இரண்டாம் அணு உலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நீராவி வெளியேற்றும் சோதனை நடத்தப்பட உள்ளது. #Kudankulam #nuclearpowerplant #Steamevacuationtest

    கூடங்குளம்:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முதல் அணு உலை கட்டுமானப்பணி முடிவடைந்து கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கியது.

    தொடர்ந்து 2-வது அணு உலையில் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    இந்த இரு அணு உலைகளில் இருந்தும் உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிசேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி 2-வது அணு உலையில் நீராவி செல்லும் குழாயில் வால்வு பழுதானது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து பழுதினை சரிசெய்யும் பணியில் இந்திய, ரஷ்ய விஞானிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பராமரிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்ததையடுத்து, இரண்டாம் அணு உலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நீராவி வெளியேற்றும் சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த தகவலை கூடங்குளம் அணு உலை வளாக இயக்குநர் சவுத்ரி தெரிவித்தார். #Kudankulam #nuclearpowerplant #Steamevacuationtest
    தொழில் நுட்ப வல்லுனர்கள் இல்லாததால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ரூ.947 கோடியே 99 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
    சென்னை:

    திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் உதவியுடன் இந்திய அணு மின்கழகத்தின் நிர்வாகத்தில் அணுமின்நிலையம் செயல்பட்டு வருகிறது.

    முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்காக 2015-ம் ஆண்டு மே-ஜூன் மாதங்களில் 60 நாட்கள் கூடங்குளம் அணு மின்நிலையம் மூடப்பட்டது.

    ஆனால் எரிபொருள் நிரப்புவதில் தன் சொந்த தொழில்நுட்ப வல்லுனர்களின் தகுதித்திறன், குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதுதான்; அதாவது அணு உலையில் எரிபொருள் நிரப்ப தேவையான தகுதி வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் தன்னிடம் இல்லை என்பதை இந்திய அணு மின் கழகம் தாமதமாக உணர்ந்தது.

    அதன்பின்னர் இந்திய அணுமின் கழகம், ரஷியாவில் இருந்து தொழில் நுட்ப வல்லுனர்களை அனுப்பி வைப்பதற்கு மாஸ்கோவில் உள்ள ஏ.எஸ்.இ. நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது.

    ஆனால் இதற்கான செலவு 76 சதவீதம் அதிகமாக இருந்தது. கூடங்குளம் அணுமின்நிலையம் மூடப்பட்ட நிலையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாலும், நேரம் இல்லாமல் போனதாலும் பேச்சு வார்த்தை நடத்த முடியாமல் போனதால் அதிக செலவினத்தை இந்திய அணுமின் கழகம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

    மேலும் குறிப்பிட்ட 60 நாட்களுக்கு பதிலாக கூடங்குளம் அணு மின்நிலையத்தை 222 நாட்கள் மூட வேண்டியதாகி விட்டது.

    இதில் இந்திய அணு மின்கழகம் கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூட எடுத்த முடிவையும், தனது தொழில் நுட்ப வல்லுனர்களைக் கொண்டே எரிபொருள் நிரப்ப மேற்கொண்ட முடிவையும் விவேகம் இல்லாமல் மதிப்பீடு செய்யவில்லை. தொழில் நுட்ப தகுதியை உறுதிப்படுத்தவும் இல்லை. இதன் காரணமாக அணு மின்நிலையத்தை மீண்டும் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. மின் உற்பத்தியும் நீண்ட காலம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு ரூ.947 கோடியே 99 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த தகவல்கள், தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கையில் இடம் பெற்று உள்ளது. 
    கூடங்குளத்தில் தற்போது உள்ள இரண்டு அணு உலைகளை இயக்கக் கூடாது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.#Vaiko #NuclearWaste
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவை மட்டுமல்ல, அமெரிக்காவை, ஏன் உலகத்தையே அச்சுறுத்தும் மிக முக்கியமான விஷயம், அணுக்கழிவுகளை எப்படி கையாளுவது என்பதுதான். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை என்ன செய்யப்போகிறீர்கள்? என்கிற கேள்வி உச்ச நீதிமன்றத்தில் முக்கியமாக பூவுலக நண்பர்கள் கொடுத்த வழக்கில் வைக்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த மத்திய அரசு, கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கோலார் தங்கவயலில் வைக்கப் போவதாக தெரிவித்தது. தமிழகத்தில் எந்த எந்த கட்சிகள் எல்லாம் அன்றைக்குக் கூடங்குளம் அணு உலைகளை ஆதரித்தனவோ அவை எல்லாம் கர்நாடகாவில் ஒன்றிணைந்து கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளைக் கோலாரில் மட்டுமல்ல கர்நாடகாவின் எந்த பகுதியிலும் வைக்க அனுமதிக்கமாட்டோம் என்று போராட்டம் நடத்தின. கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான கட்டமைப்புகளை 5 வருட காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று 2013-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது.

    உச்ச நீதிமன்றம் விதித்த 5 வருட காலம் இந்த மே மாதத்துடன் முடிவுற்றது. உச்ச நீதிமன்றத்தை நாடிய தேசிய அணு மின்கழகம், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளைத் தாங்கள் கூடங்குளம் அணு உலை வளாகத்திலேயே வைக்கப் போவதாகவும், அதற்குரிய தொழில்நுட்பம் தங்களிடம் இல்லையெனவும் தெரிவித்து மேலும் கால அவகாசத்தை 5 ஆண்டுகள் நீட்டித்துத் தரக் கோரியுள்ளது.



    கூடங்குளம் அணு உலைகளில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை அந்த வளாகத்தினுள் வைக்கக்கூடாது என்றும், பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து அதற்கு உரிய தொழில்நுட்பத்தை முடிவு செய்து கட்டமைக்கும் வரை கூடங்குளத்தில் தற்போது உள்ள இரண்டு அணு உலைகளையும் இயக்கக் கூடாது என்றும், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது என்று விரியும் கூடங்குளம் விரிவாக்கத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #Vaiko #NuclearWaste
    ×