search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • அடையாளம் தெரியாத வாகனம் ஆதாமின் ஆனந்தாஸ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
    • கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகாபுரத்தை சேர்ந்தவர் ஆதாமின் ஆனந்தாஸ் (வயது 56). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் சரவணம்பட்டி- விநாயகாபுரம் ரோட்டில் நெல்லையப்பர் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஆதாமின் ஆனந்தாஸ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஆதாமின் ஆனந்தாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (54). சம்பவத்தன்று இவர் அதே பகுதியை சேர்ந்த சேகர்(47) என்பவரது மொபட்டில் பின்னால் அமர்ந்து சென்றார். மொபட் மருதம்பட்டி அம்மா நகர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இளங்கோ கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்த இளங்கோவின் உடலை போலீசார் மீட்டனர்.

    கோவை,

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 36). இவர் கோவை பீளமேடு நேரு நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இளங்கோ நேருநகர் ஐானகியம்மாள் நகரில் உள்ள ஒரு வீட்டை இடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி இளங்கோ பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்த இளங்கோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இளங்கோவை பணி செய்ய வைத்ததாக கட்டிட உரிமையாளர் வெங்கடேஷ், கட்டிட காண்டிராக்டர் மூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வருகிற 20, 21-ம் தேதிகளில் தேயிலை கண்காட்சி நடக்க உள்ளது.
    • சிறு-குறு தேயிலை விவசாயிகளின் சிறப்பு ரக தேயிலையும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

    கோவை,

    உலக தேயிலை தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் வருகிற 20, 21-ம் தேதிகளில் தேயிலை கண்காட்சி நடக்க உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம், தேயிலை வாரியம், சுற்றுலா மற்றும் தோட்டக்கலைத் துறை ஆகியவை இணைந்து நடத்துகிறது. தேயிலை கண்காட்சியை முன்னிட்டு வருகிற 20-ம்தேதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பங்ளுகேற்கும் மனித சங்கிலி நடத்தப்படுகிறது.

    குன்னூர் தேயிலை கண்காட்சியை தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார் தலைமையில், நீலகிரி எம்.பி ஆ. ராசா முன்னிலையில், தமிழக சுற்றுலா அமைச்சர் கா.ராமசந்திரன் வருகிற 20-ந் தேதி காலை 11 மணி அளவில் திறந்து வைத்து, கண்காட்சி அரங்குகளை பார்வையிடுகிறார்.

    குன்னூர் தேயிலை கண்காட்சியில் தேயிலை தூளின் பல்வேறு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதுதவிர சிறு-குறு தேயிலை விவசாயிகளின் சிறப்பு ரக தேயிலையும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.தேயிலை கண்காட்சியில் 25க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, அங்கு கலப்படம் இல்லாத தேயிலை தூள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

    அடுத்தபடியாக அகில உலக தேயிலை தினத்தை முன்னிட்டு வருகிற 21-ம் தேதி இண்ட்கோசர்வ் சார்பில் பள்ளி- கல்லூரி மாணவ மாணவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கட்டபெட்டு தேயிலை தொழிற்சாலையை நேரில் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    கண்காட்சி அரங்குகளில் தேயிலை தூள் தயாரிக்கும் எந்திரங்களை காட்சிப்படுத்தி, அதன்மூலம் தேயிலை தூள் தயாரிக்கும் முறை குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு, விளக்கம் தரபபட உள்ளது.

    எனவே நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்கள் நடக்கும் தேயிலை கண்காட்சியில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா ப்பயணிகள் கலந்து கொண்டு, கலப்படம் இல்லாத தேயிலை தூளை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

    • 1½ ஆண்டுகளாகியும் ஜல்ஜீவன் திட்ட பணிகள் முடிவடையவில்லை
    • தற்போது 3.50 லட்சம் தண்ணீர் மட்டுமே குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கிடைக்கிறது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே இரும்பறை ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இதில் 5-வது வார்டுக்குட்பட்ட அம்மன்பு தூரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு ஏராளமான பொது மக்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

    25 ஆண்டுகளுக்கு முன் இந்த கிராமத்தில் இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. பவானி ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு குழாய்கள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி அதன்பின் பொதுமக்களுக்கு முறை வைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஊராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கு இலவசமாக குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதில் சத்தி சாலையில் இருந்து அம்மன்புதூர் கிராமத்தில் குடிநீர்விஸ்தரிப்பு செய்யவும், மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கவும் ரூ.16.25 கோடி மதிப்பில் கடந்த 2020-21 ஆண்டு குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டது.

    இதில் அம்மன்புதூர் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் பணிகளும், மேல்நிலை தொட்டியும் அமைக்கப்பட்டது. இந்த திட்டபணி தொடங்கி 1½ ஆண்டுகள் ஆகியும் இதுவரை குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் பழைய திட்டத்தின் படி வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே குடிநீர் வருகிறது.

    இதிலும் தலா ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒரு குடம் முதல் 2 குடம் மட்டுமே தண்ணீர் வருவதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி பல முறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் பயனில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    அம்மன்புதூர் கிராமத்திற்கு அருகாமையில் தான் பவானி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் பல்வேறு குடிநீர் திட்ட பணிகளின் படி பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படுகிறது. ஆற்றின் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் உள்ளோம். ஜல்ஜீவன் திட்டத்தின் படி அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும் என ஊராட்சி நிர்வாகத்தின் படி எடுக்கப்பட்ட திட்டமும் பயனில்லாமல் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ கூறியதாவது:-

    ஏற்கனவே கொடுக்கப்பட்டு வரும் குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் தண்ணீரை அதிகரிக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பேசி வருகிறோம். மேலும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு 3ஆம் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதிலிருந்து வழியோர கிராம மக்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் மற்றும் திருப்பூர் மேயரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் பயன்பாடு இல்லாமல் உள்ள இந்த ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் தண்ணீர் தொட்டிக்கு வர ஏற்பாடு செய்வதாக கூறியதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி கூறுகையில், ஊராட்சிக்கு தினசரி 7 லட்சம் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 3.50 லட்சம் தண்ணீர் மட்டுமே குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கிடைக்கிறது. இதனால் ஊராட்சி மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது என்றார்.

    • மீதமுள்ள குவாரிகளில் விதிமீறல் கண்டறிய சர்வே எடுத்து அபராதம் விதிக்கப்படும்.
    • இதுவரை 66 குவாரி குத்தகைதாரர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

    கோவை,

    கோவையில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும், விவசாய சங்கத்தினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 8 குவாரிகளில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் 12 குவாரிகளில் நில அளவீடு செய்ததில் 8 குவாரிகளில் விதிமீறல் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

    மீதமுள்ள குவாரிகளில் விதிமீறல் கண்டறிய சர்வே எடுத்து அபராதம் விதிக்கப்படும். குவாரி குத்தகைதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் நில அளவீடு செய்து எல்லை தூண்கள் நட அறிவுறுத்தப்பட்டது. இதுவரை 66 குவாரி குத்தகைதாரர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

    மேலும், கடந்த 2 மாதங்களில் உரிய அனுமதியின்றி கனிமங்கள் கொண்டுசென்றதற்காக சிறப்பு பறக்கும் படையின் மூலம் 15 வாகனங்கள் மற்றும் கனிம வளத்துறையினர் மூலம் 3 வாகனங்கள் கைப்பற்றப்பட்டும், அதிக பாரம் ஏற்றி சென்றதற்காக வட்டார போக்குவரத்து அலுவலர்களால் 21 வாகனங்கள் கைப்பற்றப்பட்டும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • ஒவ்வொரு வீடாக சென்று விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை இடிகரை பேரூராட்சி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

    வரும் கல்வி ஆண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களை சேர்க்க இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள் இடிகரை, மணியகாரன்பாளையம், செங்காளிபாளையம், வட்டமலைபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், அத்திப்பாளையம், கீரணத்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஒவ்வொரு வீடாக அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார். 

    • சாந்தினிக்கு வருகிற 24-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்ன நெகமம் வன்னி மரத்தோட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகள் சாந்தினி (வயது 27). டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    சாந்தினிக்கும், ஆர்.வி.புதூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் வருகிற 24-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் மேற்கொண்டு வந்தனர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சாந்தினி தனது வருங்கால கணவரை பார்க்க செல்வதாக பெற்றோரிடம் கூறினார். அப்போது அவரது தந்தை நானே கொண்டு சென்று விடுகிறேன் என்றார். ஆனால் அவர் வேண்டாம் நான் தனியாகவே செல்கிறேன் என்று கூறினார். பின்னர் சாந்தினி தனது தம்பியுடன் பொள்ளாச்சிக்கு சென்றார். பின்னர் அவரை அவரது வருங்கால கணவர் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார்.

    பின்னர் பொள்ளாச்சிக்கு திரும்பிய சாந்தினி திடீரென மாயமாகி விட்டார். அவரை அவரது தம்பி பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து சாந்தினியின் தந்தை வடக்கிப்பாளையம் போலீசில் மாயமான தனது மகளை கண்டு பிடித்து தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் நடக்க இருந்த நிலையில் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • கடந்த மாதம் 21-ந் தேதி சுரேஷ்குமார் ஜாமீனில் வெளியே வந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் வருவதற்கு சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.

    கோவை,

    கேரள மாநிலம் மூணாறை சேர்ந்தவர் வீரசிங். இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 39). இவரது கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து அவர் தனது மகளுடன் வசித்து வந்தார்.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியம்மாளுக்கு ஏற்கனவே திருமணமான உறவினரான சுரேஷ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும்அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட் டது. இதனையடுத்து பாண்டியம்மாள் கேரளாவில் இருந்து புறப்பட்டு தனது மகளுடன் திருப்பூரில் வசித்து வந்தார்.

    இதனை தெரிந்து கொண்ட சுரேஷ்குமார் பாண்டியம்மாளை தேடி திருப்பூருக்கு சென்றார். பின்னர் கடந்த மாதம் 4-ந் தேதி பாண்டியம்மாளின் வீட்டிற்கு தகராறு செய்தார். இது குறித்து அவர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    அதன் பின்னர் பாண்டியம்மாள் திருப்பூரில் இருந்த கருமத்தம்பட்டியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். கடந்த மாதம் 21-ந் தேதி சுரேஷ்குமார் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் பாண்டியம்மாளை தேடி அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு இருந்த பாண்டியம்மாளை தன்னை ஏன் போலீசில் சிக்க வைத்து ஜெயிலுக்கு அனுப்பினாய் என கூறி தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து தலை , கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் வெட்டினார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்கு சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பாண்டியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன.
    • தரம் மிகுந்த இயற்கை சார்ந்த விளை பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்து வருகிறது.

    வடவள்ளி,

    கோவை மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கி விட்டது. இதனால் மாநகரம் மட்டுமின்றி புறநகரங்களிலும் அனல் வெயில் கொளுத்தி வருகிறது.

    எனவே பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியில் வரவே அச்சப்பட வேண்டி உள்ளது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டது. இதனால் அனல் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.கோவையை சுட்டெரித்து வரும் கோடை வெப்பத்தின் தாக்கம் இரவு நேரம் வரையிலும் நீடிக்கிறது. எனவே வீட்டுக்குள் அனல் வெப்பம் காரணமாக புழுக்கம் ஏற்படுகிறது.

    இதனால் பொதுமக்கள் பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் வெயில் தாக்கம் காரணமாக பொதுமக்கள் குளிர்ச்சி மிகுந்த தர்பூசணி, கிர்ணிப்பழம், வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சைப்பழம் ஆகியவை செறிந்த நீராகாரங்களை அதிகம் விரும்பி உட்கொண்டு வருகின்றனர்.

    எனவே கோவை காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.நுங்கு, பதநீர், இளநீர், ஆகிய நீர் ஆகாரங்களுக்கு உடல் வெப்பத்தை பெரும் அளவில் குறைக்கும் தன்மை உண்டு. எனவே பொதுமக்களின் பார்வை இப்போது இயற்கை சார்ந்த நுங்கு உள்ளிட்ட குளிர் ஆகாரங்களின் பக்கம் திரும்பி உள்ளது. கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. அவைகளில் இருந்து பதநீர், நுங்கு ஆகியவை தாராளமாக விளைந்து வருகிறது. தரம் மிகுந்த இயற்கை சார்ந்த விளை பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்து வருகிறது.

    எனவே கோவையில் பதநீர், நுங்கு சீசன் களை கட்ட தொடங்கி விட்டது. இயற்கையில் விளைந்த குளிர்ச்சி மிகுந்த பொருட்கள் என்பதால், மாநகரின் பெரும்பாலான இடங்களில் நுங்கு, பதநீர் விற்பனை சூடுபிடித்து வருகிறது. சாலையோரங்களிலும் நுங்கு வியாபாரம் களை கட்டி வருகிறது.

    ஆண்-பெண் உள்ளிட்ட இருபாலர்களும் ரோட்டோர வியாபாரிகளிடம் நுங்கு, பதநீர் வாங்கி உற்சாகத்துடன் அருந்தி வருகின்றனர். 

    • பொன்முருகன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • மீதமுள்ள தங்க நகைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் சர்ச் ரோடு பகுதியை சேர்ந்தவர் பொன்முருகன் (வயது46). தொழில் அதிபர். இவரது வீட்டில் கோவை ஒண்டிபுதூரை சேர்ந்த ஜோதி (46) என்ற பெண் வீட்டு வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பொன்முருகன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது இவரது வீட்டில் பீரோவில் இருந்த 150 கிராம் தங்க கட்டி திருட்டு போய் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்முருகன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் அவரது வீட்டில் தங்க கட்டியை கொள்ளையடித்து சென்றது, அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த ஜோதி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜோதியை கைது செய்து அவரிடம் இருந்து 93 கிராம் எடையுள்ள தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். மீதமுள்ள தங்க நகைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணத்தை திருடியுள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை வெள்ளைகிணறு பிரிவு பகுதியை சேர்ந்தவர் அருணகிரி (60). இவர் நடத்தும் கடையின் வாடகையை கொடுப்பதற்காக கோவையில் இருந்து திருப்பூர் செல்வதற்காக மாநகர பஸ்சில் ஏறி காந்திபுரம் பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலில் இருந்து கீழே இறங்கிய அருணகிரி பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் பணத்தை பறித்து சென்றதை அறிந்த அவர் உடனடியாக இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஆண்டு முதல் காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
    • பருப்பு கொப்பரை தேங்காய் ரூ.108.60 - க்கும், பந்து கொப்பரை தேங்காய் ரூ.118 - க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டுமென மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு காரமடை,மேட்டுப்பாளையம்,சிறுமுகை மட்டுமல்லாது பொள்ளாச்சி,நெகமம் உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொப்பரை தேங்காய் கொண்டு வரப்படுகிறது.

    இங்கு பருப்பு கொப்பரை தேங்காய் ரூ.108.60 - க்கும், பந்து கொப்பரை தேங்காய் ரூ.118 - க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஈரப்பதமானி கொண்டு கொப்பரை ஈரப்பதத்தின் அளவு ஆறுக்கும் கீழ் இருந்தால் மட்டுமே கொப்பரை கொள்முதல் நடைபெறுகிறது. இப்பணிகளில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை தர ஆய்வுப்பணியில் ராமகிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார்.

    இதுகுறித்து ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ் கூறுகையில் விவசாயிகள் தங்களது பட்டா,சிட்டா அடங்கல் உள்ளிட்டவற்றை கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார். தற்போது கொப்பரை தேங்காய் ரூ.108.60 பைசாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும், ஏப்ரல் 1-ந் தேதி முதல் இதுவரை 149 விவசாயிகளிடமிருந்து 250 டன் கொப்பரை தேங்காய் ரூ.2.71 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தங்களுடைய இலக்கான 1000 டன் கொப்பரை தேங்காயினை விரைவில் கொள்முதல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும்,சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மெகா மார்க்கெட் வளாகத்தில் அரசுக்கு சொந்தமான 500 மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள குளிர்பதன கிடங்கு உள்ளதாகவும், இந்த கிடங்கில் மஞ்சள், மிளகாய், காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை இருப்பு வைத்துக் கொள்ளலாம் எனவும், ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளுக்கு இந்த மையம் பேருதவியாக இருக்கும். எனவே இந்த மையத்தினை வியாபாரிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். 

    ×