search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • அகில இந்திய அளவில் 20 ஆண்கள் அணியும், 10 பெண்கள் அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
    • கூடைப்பந்து போட்டியின் இறுதி போட்டிகள் இன்று மாலை நடக்கிறது.

    கோவை,

    கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவில் 56-வது ஆண்டுக்கான ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 20-ம் ஆண்டுக்கான பெண்கள் சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கோப்பை போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இதில் அகில இந்திய அளவில் 20 ஆண்கள் அணியும், 10 பெண்கள் அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவுக்கான முதல் அரையிறுதி போட்டி நேற்று மாலை நடந்தது. இதில் சென்னை வருமானவரித்துறை அணியை எதிர்த்து இந்தியன் ரெயில்வே அணி விளையாடியது. இதில் வருமானவரித்துறை அணி 67-58 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    அடுத்தபடியாக ஆண்கள் பிரிவுக்கான 2-வது போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியை எதிர்த்து, பெங்களூரு பாங்க் ஆப் பரோடா அணி விளையாடியது. இதில் இந்தியன் வங்கி அணி 86-77 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் வருமானவரித்துறை, இந்தியன் வங்கி அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன.

    இதேபோல சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் பெண்கள் பிரிவு அரையிறுதி போட்டியில் திருவனந்தபுரம் கேரள மின்சார வாரிய அணியை எதிர்த்து, ஹுப்ளி தென்மேற்கு ரெயில்வே அணி விணையாடியது. இதில் கேரள மின்சார வாரிய அணி 92-48 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. திருவனந்தபுரம் கேரளா போலீஸ் அணியை எதிர்த்து பூனே மேற்கு ரெயில்வே அணி விளையாடியது. இதில் கேரளா போலீஸ் அணி 64-61 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    பெண்கள் அணியில் கேரளா மின்சார வாரிய அணி, கேரளா போலீஸ் அணிகள் ஆகியவை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன. இறுதி போட்டிகள் இன்று மாலை நடக்க உள்ளது.

    • காயம் அடைந்த இளங்கோவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
    • இதுகுறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    கோவை,

    குனியமுத்தூர் அருகே குளத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 22). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.காம். படித்து வருகிறார். இந்தநிலையில் அதே பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருரை, இளங்கோவன் கடந்த சில நாட்களாக ஒருதலையாக காதலித்து வந்தார்.

    தினமும் இளம்பெண் செல்லும் இடங்களுக்கு சென்று அவரிடம் காதலிக்குமாறு கூறினார். இதில் கோபம் அடைந்த இளம்பெண் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் இளங்கோவனை கண்டித்தனர்.

    பின்னர் கடந்த சில நாட்களாக இளங்கோவன் இளம்பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். சம்பவத்தன்று இளம்பெண் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தார், இதனை பார்த்த இளங்கோவன் அவரிடம் மீண்டும் பேசுவதற்கு முயன்றார்.

    இதில் மேலும் கோபம் அடைந்த இளம்பெண் அவரது உறவினர்களான கோவையை சேர்ந்த விவேக் (27), பார்திபன் (28) ஆகியோரிடம், தன்னை வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து காதலிப்பதாக தொல்லை தருகிறார் என தெரிவித்தார். இதையடுத்து 2 பேரும் இளங்கோவனை தொடர்பு கொண்டு உன்னிடம் பேச வேண்டும் என கூறினர்.

    பின்னர் இளங்கோவன் அவர்கள் கூறிய இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த விவேக் மற்றும் பார்திபன், இளங்கோவனிடம் ஏன் எங்கள் வீட்டு பெண்ணிடம் பேசுகிறாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் அவர்களுக்கு இடை யே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த விவேக் மற்றும் பார்திபன் இளங்கோவனை தகாத வார்தைகளால் பேசி கீழே கிடந்த முள் கட்டையை எடுத்து அவரை சரமாரியாக தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அலறி துடித்தார்.

    இதையடுத்து இருவரும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். காயம் அடைந்த இளங்கோவன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    இதுகுறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் குனியமுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், விவேக் மற்றும் பார்த்திபன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    • இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 29-ந் தேதி மங்கல இசையுடன் தொடங்கியது.
    • விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே பிரசித்தி பெற்ற குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 29-ந் தேதி மங்கல இசையுடன் தொடங்கியது. அன்றைய தினம் பக்தர்கள் தீர்த்தகுடம் மற்றும், முளைப்பாரியும் எடுத்து வந்தனர். கும்பாபிஷேக விழாவினையொட்டி கோபூஜை,தனபூஜை, அணுக்கை,மகா கணபதி ஹோமம், தீர்த்த சங்கர கணம்,அக்னி சங்கர கணம் பூரணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடந்து வந்தது.

    சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. இதனை யொட்டி 6-வது கால யாக சாலை பூஜை நடைபெற்றது.

    யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கோவில் ராஜகோபுரம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவில் காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ராஜகோ புரத்திற்கு புனித நீர் ஊற்றிய போது, பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என விண்ணதிர கோஷம் எழுப்பினர்.

    தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜையும் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இன்று மாலை திருக் கல்யாண உற்சவமும், சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது. கும்பாபிேஷக விழாவில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை கோவை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கவிதா கல்யாணசுந்தரம், கராமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முக சுந்தரம்,செயல் அலுவலர் லோகநாதன்,காரமடை இன்ஸ்பெக்டர் செந்தில்கு மார், முன்னாள் எம்.எல்.ஏ. ஒ.கே.சின்னராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பணிகள் முடிந்து கடந்த 30-ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது.
    • ரேஸ்கோர்ஸ் செல்வ விநாயகர் மற்றும் 108 விநாயகர் கோவில் அறங்காவலராக எம்.மகேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கோவை,

    கோவை ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் அருகே செல்வவிநாயகர் மற்றும் 108 விநாயகர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டது.

    திருப்பணிகள் முடிந்து கடந்த 30-ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்று காலை முதலாம் கால பூஜையும், மாலையில் இரண்டாம் கால பூஜையும் நடந்தது. நேற்று நவக்கிரக ஹோமம், 4-ம் கால ஹோமங்கள், அஷ்டபந்தனம் நிகழ்ச்சிகள் நடந்தன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. காலை 3.35 மணிக்கு 5-ம் கால ஹோமங்கள், 7 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை, 7.30 மணிக்கு கலச புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து 7.45 மணிக்கு செல்வ விநாயகர், பாலமுருகர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 8.30 மணிக்கு செல்வ விநாயகருக்கு கலசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கிடையே ரேஸ்கோர்ஸ் செல்வ விநாயகர் மற்றும் 108 விநாயகர் கோவில் அறங்காவலராக எம்.மகேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதையொட்டி மகேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் என்னை 108 விநாயகர் கோவில் அறங்காவலராக நியமனம் செய்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர் கார்த்திக், கோவை மாவட்ட அறங்காவலர் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.

    • மாணவி தன்னை யாரும் தேட வேண்டாம் கடிதம் எழுதி விட்டு மாயமானார்.
    • பெற்றோர் சம்பவம் குறித்து நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    நெகமம்,

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி.

    இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தார்.

    நேற்று காலை வழக்கம் போல மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்ததாக தெரிகிறது. மாலையில் பெற்றோர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் மாணவி இல்லை.இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனே உறவினர்கள் வீடு மற்றும் அக்கம்பக்கத்தினர் வீடுகளில் மாணவியை தேடினர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் கடிதம் ஒன்று இருந்தது. அதில், மாணவி தன்னை யாரும் தேட வேண்டாம். நான் நன்றாக படிப்பேன். நன்றாகவே இருப்பேன்.

    என்னை காணவில்லை என கூறி போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுக்க வேண்டாம் என எழுதி இருந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவர் போனை எடுக்கவில்லை. திரும்ப, திரும்ப அழைத்தும் எடுக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் சம்பவம் குறித்து நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் உசிலம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் தந்தை அவரை கண்டித்ததாகவும், இதனால் மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவி உசிலம்பட்டி தான் சென்றிருக்கிறாரா? அல்லது வேறு எங்காவது சென்றிருக்கிறாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி மாணவியை தேடி வருகின்றனர்.

    • குடிபோதையில் இருந்த முருகேசன், எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
    • ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள காளியாபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து.

    இவரது மகன் முருகேசன்(வயது26). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி காளிஸ்வரி என்ற மனைவி உள்ளார்.

    இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 வருடங்களுக்கு முன்பு முருகேசனை அவரது மனைவி காளீஸ்வரி பிரிந்து சென்றார். இதனால் முருகேசன் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

    மனைவி பிரிந்து சென்ற பிறகு முருகேசன் ராசு கவுண்டன் தோட்டத்தில் தனது உறவினரான சிவராசு என்பவருடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    மனைவி பிரிந்ததால் மது பழக்கத்திற்கு அடிமையான அவர் குடித்து கொண்டு தோட்டத்திற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று முருகேசன் மது குடித்து விட்டு, தோட்டத்திற்கு வந்தார். பின்னர் அங்குள்ள கிணற்று மேட்டில் அமர்ந்து இருந்தார். அப்போது குடிபோதையில் இருந்த முருகேசன், எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.

    இதில் தண்ணீரில் மூழ்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமியிடம், விளையாடலாம் என கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
    • இதுகுறித்து சிறுமியின் தந்தை சிறுமுகை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை சிறுமுகை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரது தாய், தந்தையினர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    சிறுமி தனது தந்தையுடன் வசித்து வருகிறார். தந்தை கூலி வேலைக்கு சென்று விடுவதால் சிறுமி மட்டுமே வீட்டில் தனியாக இருப்பார்.

    இவரது பக்கத்து வீட்டில் மணிகண்டன் (28) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மாணவியிடம் சென்று அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்ட மிட்ட வாலிபர், சிறுமியின் வீட்டிற்கு சென்று,விளையாடலாம் என கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியில் கூறினால் கொன்றுவிடுவதாக மிரட்டலும் விடுத்தார். இதனால் மனம் நொந்துபோன சிறுமி நேற்று தனக்கு நடந்த சம்பவங்களை தந்தையிடம் கூறினார்.

    இதைகேட்டு அதிர்ச்சியான அவர் உடனடியாக இதுகுறித்து சிறுமுகை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • நகராட்சி நிர்வாகம் எங்களிடம் ஒரு பத்திரதாளில் கையெழுத்து கேட்டு வருகிறது.
    • அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது.

    குனியமுத்தூர்,

    மதுக்கரை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக தொடருகிறது.

    இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், நகராட்சி சார்பில் வேலை பார்த்து வந்த எங்களை திருப்பூர் தனியார் நிறுவனத்தின்கீழ் ஒப்படைத்து விட்டனர்.

    இந்த நிலையில் மதுக்கரை நகராட்சி நிர்வாகம் எங்களிடம் ஒரு பத்திரதாளில் கையெழுத்து கேட்டு வற்புறுத்தி வருகிறது.

    அந்தப் பத்திரத்தில் பணியாளர்கள் ஒன்றுசேர்ந்து சங்கம் அமைக்க கூடாது. முன்னறிவிப்பு இன்றி விடுமுறை எடுக்கக் கூடாது. இ. எஸ்.ஐ, பி.எப் காப்பீடு வழங்கப்படாது, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது. வேலை பார்க்கும்போது கையாளும் உபகரணங்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அதற்கு நாங்களே பொறுப்பு. பணியின் போதுவாடிக்கை யாளர்கள் புகார் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்பவை உள்பட 22 நிபந்தனைகள் இடம்பெற்று உள்ளன. எனவே நாங்கள் அந்த பத்திரத்தில் கையெழுத்து போட மறுத்து வருகிறோம். இதுகுறித்து மதுக்கரை நகராட்சி நிர்வாகம், மற்றும் தலைவர் ஆகியோர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பேரூர் அருகே மாசாணியம்மன் கோவில் உள்ளது.
    • 2 பேர் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயற்சித்து கொண்டிருந்தனர்.

    வடவள்ளி,

    கோவை பேரூர் அருகே மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பேரூர் பட்டீஸ்வரர் கோவி லின் இணைக் கோவிலாக உள்ளது.

    பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வரு வார்கள். இதனால் எப்போதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவி லில் உண்டியலும் உள்ளது. நேற்று இரவு கோவிலை அர்ச்சகர்கள் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றனர்.

    இந்தநிலையில் இரவு 11.30 மணியளவில் கோவிலுக்குள் இருந்து சத்தம் வந்தது. இதனை அந்த வழியாக சென்ற வர்கள் கேட்டு, கோவிலின் அருகே சென்ற போது, உள்ளே 2 பேர் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயற்சித்து கொண்டி ருந்தனர்.

    இதையடுத்து திருடன். திருடன்.. திருடன்.. என சத்தம் போட்டனர். பொது மக்கள் வந்ததை அறிந்ததும், கோவிலுக்குள் நின்றிருந்த 2 பேரும் தப்பியோடினர்.

    இதுகுறித்து மக்கள் பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோவிலில் பார்வையிட்டனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பேரூர் கோவில் சூப்பிரண்டு அமுதா கொடுத்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தொண்டா முத்தூர் வஞ்சிமா நகரில் வசித்து வரும் 15 வயது சிறுவன் மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    • மல்லப்பனும், அவரது மனைவியும் மகளுன் தங்கி இருந்தனர்.
    • மல்லப்பனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோட்டையன் தோப்பு.

    கோவை,

    கோவை சரவணம்பட்டி, கிருஷ்ணாபுரம், அப்பர் தெருவை சேர்ந்தவர் மல்லப்பன் (வயது 70). இவர் கடந்த 23-ந் தேதி வீட்டில் இருந்தார். திடீரென அவர் மாயமானார். அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என்று தெரியவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மல்லப்பன் மனைவி ராமலட்சுமி, சரவணம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மல்லப்பனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோட்டையன் தோப்பு ஆகும். அவரது மகள் கோவையில் உள்ள வங்கியில் பணியாற்றுகிறார். இதனால் மல்லப்பனும் மகளுடனே தங்கியிருந்தார். இந்தநிலையில் தான் அவர் திடீரென மாயமாகி விட்டார். இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் சரவணம்பட்டி போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • கைதானவர்களிடம் 3 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • கைதானவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கோவை,

    ஆனைமலை பழைய ஆத்துப்பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆனைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து ஆனைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அங்கே கஞ்சா விற்ற சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த ஹக்கீம் (39) என்பவரை ஆனைமலை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கொண்டு வந்து ஆனைமலை பகுதிகளில் கஞ்சா விற்றது தெரிய வந்தது. அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ. 1900 பணம், 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனை போல கருமத்தம்பட்டி தனியார் பெட்ரோல் பங்க் அருகே கஞ்சா விற்ற பீகாரை சேர்ந்த கோண்டுகேவத் (28) என்பவரை பெரியநாயக்கன் பாளையம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மூடப்பட வேண்டிய பள்ளிகளின் பெயர்கள் அடுத்த வாரம் வெளியாகும்.
    • அங்கீகாரம் பெறாத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் மூடப்படும்.

    கோவை,

    கோவை மாவட்ட கல்வி அதிகாரி கீதா கூறி இருப்பதாவது:-

    கோவை மாவட்ட கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் தனியார் நர்சரி பள்ளிகளில் அங்கீகாரம் பெறாதவை, ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியவை, கூரைகள் உடன் செயல்படுபவை, அடுக்குமாடி குடியிருப்புகளில் செயல்படுபவை ஆகியவற்றை தமிழக அரசின் புதிய உத்தரவின்படி மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    இருந்தபோதிலும் ஒருசில கோப்புகள் பரிசீலனையில் இருப்பதால், அந்த பள்ளிகளின் பெயர் வெளியிடப்படவில்லை. அரசு அனுமதி பெற்ற தனியார் பள்ளிகளின் பெயர்கள் விடுபட்டு இருப்பின், அடுத்த பெயர் பட்டியலில் அறிவிக்கப்படும். எனவே தமிழக அரசின் அங்கீகாரம் பெறாத எந்த பள்ளிகளிலும், பெற்றோர்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம். நீண்ட காலமாக அங்கீகாரம் புதுப்பிக்காத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் பெயர் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும். அப்போது மூடப்பட வேண்டிய பள்ளிகளின் பெயர்களும் வெளியாகும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    ×