search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்மன்"

    சென்னையில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் தேர்தல் பறக்கும் படை நேற்று சோதனை நடத்தியது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. #RPUdayakumar #IT
    சென்னை:

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள்  தங்கும்  விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு சோதனை நடத்தினர். சி.பிளாக் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் சோதனை செய்தனர். 

    பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து போலீசாரும் சோதனை நடத்தினர்.  

    இந்நிலையில், எம்.எல்.ஏ விடுதியில் தேர்தல் பறக்கும் படை நேற்று சோதனை நடத்தியது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.  #RPUdayakumar #IT 
    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். #PollachiAbuseCase #NakkheeranGopal
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

    அதனடிப்படையில் பொள்ளாச்சியை சேர்ந்த பார் உரிமையாளர் நாகராஜ்(28), கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் மகனும், நகர மாணவரணி அமைப்பாளருமான தென்றல் மணிமாறன் (27) ஆகியோருக்கு சம்மன் அனுப்பினார்கள்.



    இதைத்தொடர்ந்து பார் நாகராஜ் நேற்று மாலை கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானார். கைதான திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேருக்கும், பார் நாகராஜூக்கும் உள்ள தொடர்புகள் குறித்து கேட்கப்பட்டது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 4 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் வெளியே வந்த பார் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாகவும், புகார் கொடுத்திருந்த கல்லூரி மாணவியின் அண்ணனை தாக்கியது தொடர்பாகவும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் என்னிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு நான் முழு பதிலையும் அளித்துள்ளேன்.

    என்னென்ன கேள்விகள் கேட்டார்கள் என்பதை சொல்ல முடியாது. திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் விசாரணை செய்தார்கள். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் முழுக்க முழுக்க அரசியல் ஆக்கிவிட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சம்மன் அனுப்பப்பட்டவர்களில் மற்றொருவரான தென்றல் மணிமாறன் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக தி.மு.க சட்டத்துறை இணை செயலாளர் தண்டபாணி தலைமையில் தி.மு.க. வக்கீல்கள் ஆஜராகி, உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதங்களை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் வழங்கினர். பின்னர் வக்கீல் தண்டபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகுமாறு, அதிகாலை 3 மணிக்கு மணிமாறன் வீட்டுக்குச் சென்று சம்மன் கொடுத்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு கொடுப்பதன் மூலம் மன உளைச்சலை ஏற்படுத்த நினைக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டுள்ளது என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. மணிமாறனுக்கு வழங்கிய சம்மனில் எந்த தகவல்களும் குறிப்பிடப்படவில்லை

    இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளதால் அதுகுறித்த முடிவு தெளிவான பின்பே, மணிமாறன் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராக முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த வழக்கு தொடர்பாக நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர். அதில் வருகிற 25-ந் தேதிக்குள் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு கூறி இருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

    இதையடுத்து வருகிற 30-ந் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். #PollachiAbuseCase #NakkheeranGopal

    பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். #PollachiCase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

    வழக்கில் முக்கிய குற்றவாளியான பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசை கடந்த வாரம் 4 நாள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம பெற்றனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் கடந்த மாதம் 12-ந் தேதி திருநாவுக்கரசு உள்பட 4 பேர் காரில் வைத்து தன்னிடம் அத்து மீறியதாகவும், தன்னை மிரட்டி நகையை பறித்ததாகவும் கூறி இருந்தார்.

    ஆனால் திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தில், கடந்த மாதம் 12-ந் தேதி நான் பொள்ளாச்சியில் இல்லை. அன்றைய தினம் நான் எனது தந்தை கனகராஜூடன் கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்று மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு அளிக்கப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்டேன் என கூறி இருந்தார்.

    இதையடுத்து காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்பேரில் மயூராஜெயக்குமார் நேற்று கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபனிடம் எழுத்துப் பூர்வமாக பதிலளித்தார்.

    அதில், கடந்த மாதம் 12-ந் தேதி பொள்ளாச்சியை பகுதியை சேர்ந்த முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜசேகருடன் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஏராளமானோர் மாவட்ட அலுவலகத்துக்கு வந்தனர். திருநாவுக்கரசு யார் என்றே எனக்கு தெரியாது. அவர் கட்சியில் உறுப்பினராக இல்லை. அவரது தந்தை காங்கிரஸ் அனுதாபி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரை திருநாவுக்கரசு காரில் அழைத்து வந்ததாக கட்சியினர் கூறினர் என கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக மயூரா ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிப்ரவரி 12-ந் தேதி திருநாவுக்கரசு காங்கிரஸ் அலுவ லகத்துக்கு வந்தாரா? என்று உறுதி செய்வதற்காக எனக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். மற்றபடி இந்த வழக்குக்கும், திருநாவுக்கரசுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

    திருநாவுக்கரசு கூறியது உண்மை தானா? என்று உறுதிபடுத்துவதற்காக என்னை சாட்சிக்காக அழைத்துள்ளனர். திருநாவுக்கரசை காப்பாற்ற வேண்டிய அவசியம் எனக்கில்லை. சி.பி.சி.ஐ.டி. போலீசார் எந்த நேரத்தில் விசாரணைக்கு அழைத்தாலும் வந்து சாட்சி சொல்வேன். இதுதொடர்பாக கட்சி தலைமைக்கும் விளக்கம் அளித்து விட்டேன் என்றார்.

    மயூரா ஜெயக்குமார் பேட்டியின் போது அவருடன் இருந்த பொள்ளாச்சி ராஜசேகர் கூறியதாவது:-

    பிப்ரவரி 12-ந் தேதி மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்க என்னுடன் 30 பேர் வந்தனர். அப்படி வந்தவர்களில் சின்னப்பாளையம் கனகராஜூம் ஒருவர். அவருக்கு கார் ஓட்ட முடியாது என்பதால் மகன் திருநாவுக்கரசு கார் ஓட்டி வந்துள்ளார். இவர்கள் கட்சியில் உறுப்பினர்களாக இல்லை. இவர்கள் யாரையும் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு தெரியாது என்றார்.

    சம்பவம் நடந்த 12-ந் தேதி அன்று திருநாவுக்கரசு மதியம் 2 மணி வரை கோவையில் இருந்து விட்டு அதன் பிறகு வீட்டுக்கு திரும்பி உள்ளார். இதுதொடர்பாக திருநாவுக்கரசின் தந்தை உள்பட மேலும் சிலரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    மேலும், வழக்குபதிவு செய்யப்பட்ட பின்னர் போலீசார் தேடுவதை அறிந்து திருநாவுக்கரசு ஆந்திரா தப்பிச் சென்று தலைமறைவானார். இதற்கு அவரது தோழி ஒருவரும், அரசியல் பிரமுகர்கள் சிலரும் உதவியது தெரிய வந்துள்ளது. அதன்பேரில் மேலும் சிலரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்ப உள்ளனர்.

    இதற்கிடையே, சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தொலைபேசியில் ஏராளமான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவற்றை தீவிரமாக விசாரணை நடத்தி வரும் போலீசார் குறிப்பிட்ட சிலரின் புகார்களை ஆதாரமாக பெற்று வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதுதொடர்பாகவும், இவ்வழக்கில் கைதான சபரி ராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாகவும் சட்ட நிபுணர்களுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #PollachiCase #CBCID
    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். #PollachiAbuseCase #CBCID #NakkheeranGopal
    சென்னை:

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.



    அதில் பாலியல் சம்பவத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பெயரை தொடர்புபடுத்தி பேசி இருந்தார். இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பினர்.

    எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதனை ஏற்று கடந்த 2 நாட்களுக்கு முன்னர் போலீஸ் விசாரணைக்கு அவர் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அன்று நக்கீரன் கோபாலின் வக்கீல் ஆஜராகி விளக்கம் அளித்தார். நக்கீரன் கோபால் வெளியூரில் இருப்பதால் அவரால் ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் வருகிற 21-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    அன்று நக்கீரன் கோபால் விசாரணைக்காக ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

    அதில் வருகிற 25-ந்தேதி கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நக்கீரன் பத்திரிகையில் வெளியான தகவல்களை மையமாக வைத்தே அவருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #PollachiAbuseCase #CBCID #NakkheeranGopal

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், வரும் 23ம் தேதி ஆஜராக வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #OPanneerselvam
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுந்ததால், இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
     
    இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.



    இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், வரும் 23ம் தேதி ஆஜராக வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர் ஜனவரி 21ஆம் தேதியும், தம்பிதுரை எம்.பி. ஜனவரி 22ஆம் தேதியும் ஆஜராக வேண்டும் எனவும் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #OPanneerselvam
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் 10-ந்தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #MinisterVijayabaskar
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

    இதுவரையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உறவினர்கள், பணியாளர்கள் என பலரிடம் விசாரணை நடந்துள்ளது.

    விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராக வேண்டும் என ஏற்கனவே ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது.

    சசிகலா தரப்பில் ஆஜரான வக்கீல் ராஜா செந்தூர் பாண்டி ஆணையத்தில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். குட்கா வழக்கில் ஆஜராக வேண்டியிருப்பதால் 7, 8-ந் தேதிகளில் ஆஜராக வேண்டும் என்பதை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    அதன் அடிப்படையில் விசாரணையின் தேதியினை தள்ளி வைத்து சம்மன் அனுப்பியது. அமைச்சர் விஜயபாஸ்கர் 10-ந்தேதி காலை 9.30 மணிக்கும், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை 11-ந் தேதி ஆஜராக வேண்டும் எனவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #MinisterVijayabaskar


    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் 20-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. #ArumugasamyCommission #OPS
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    இதில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள், பாதுகாவலர்கள், டிரைவர்கள், அப்பல்லோ டாக்டர்கள், அரசு டாக்டர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இதில் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார்.

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.



    அதை ஏற்று டிசம்பர் 20-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

    இதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், அமைப்பு செயலாளருமான சி.பொன்னையன் ஆகியோர் 18-ந்தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. #ArumugasamyCommission #OPS

    நிலமுறைகேட்டில் சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை 2-வது முறையாக சம்மன் அனுப்பியது. #RobertVadra
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு தொடர்புள்ள நிறுவனம் ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் 2015-ம் ஆண்டு முறைகேடாக நிலம் வாங்கியது. இதுதொடர்பாக ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். 374.44 ஹெக்டேர் நிலம் தொடர்பான பரிவர்த்தனைகள் அனைத்தையும் அரசு ரத்து செய்தது.

    பின்னர் அமலாக்கத்துறை இந்த நில முறைகேட்டில் பெரிய அளவில் சட்டவிரோத பணபரிவர்த்தனை நடைபெற்றதாக வழக்கு பதிவு செய்தது. வதேராவுக்கு தொடர்புள்ள மகேஷ் நாகர் போன்ற சிலரது இடங்களில் சோதனை நடத்தியது. கடந்த வருடம் நாகரின் நெருங்கிய கூட்டாளி அசோக்குமார், ஜெய்பிரகாஷ் பாகார்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநில அரசு அதிகாரிகள் உள்பட சிலரது ரூ.1.18 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் அமலாக்கத்துறை இந்த வழக்கில் இணைத்தது. அமலாக்கத்துறை இந்த வழக்கில் வதேரா பெயரை சேர்க்கவில்லை. அரசு அதிகாரிகள் மற்றும் சில நில மோசடிதாரர்கள் பெயர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது.

    நவம்பர் மாத தொடக்கத்தில் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை முதல்முறையாக சம்மன் அனுப்பியது. அதில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி கூறப்பட்டு இருந்தது. ஆனால் ராபர்ட் வதேரா ஆஜராகவில்லை.



    எனவே நேற்று மீண்டும் அமலாக்கத்துறை ராபர்ட் வதேராவுக்கு 2-வது முறையாக சம்மன் அனுப்பியது. அதில், சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் உங்களிடம் வாக்குமூலம் வாங்க வேண்டும். அதற்காக அடுத்த வாரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜெவாலா கூறும்போது, “பா.ஜனதா அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றை அழுக்கு தந்திர துறைகளாக பயன்படுத்தி வருகிறது. பா.ஜனதா 5 வருடங்களாக இதுபோன்ற பொய்யான, போலியான தகவல்களை விசாரணை அலுவலகங்களை பயன்படுத்தி வெளியிட்டு வருகிறது. தேர்தலுக்காக இப்போது மக்களை திசைதிருப்ப நினைக்கிறது. இதில் பா.ஜனதா வெற்றி பெற முடியாது” என்றார். #RobertVadra
    ரெயில்வே ஓட்டல் ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி மற்றும் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பி உள்ளது. #LaluPrasadYadav #IRCTCcase
    டெல்லி:

    பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை ரெயில்வே துறை மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ராஞ்சி மற்றும் பூரி நகரில் உள்ள ரெயில்வேக்கு சொந்தமான 2 ஓட்டல்களின் நிர்வாகத்தையும் விஜய் கோச்சார், வினய் கோச்சார் குழுமத்துக்கு சொந்தமான சுஜாதா ஓட்டல் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தற்கு கைமாறாக பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பினாமி நிறுவனத்துக்கு 3 ஏக்கர் வீட்டுமனை லஞ்சமாக பெறப்பட்டதாக புகார் எழுந்தது.

    இந்த விவகாரம் முடிந்த பின்னர் வேறொருவருக்கு சொந்தமாக இருந்த அந்த பினாமி நிறுவனம் லாலுவின் மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் பெயரில் மாற்றப்பட்டது. 2010 முதல் 2014-ம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த பரிமாற்றங்கள் முடிவடைதற்குள் ரெயில்வே மந்திரி பதவியை லாலு ராஜினாமா செய்தார்.



    இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான ராப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் வரும் அக்டோபர் மாதம் 6-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

    ஏற்கனவே கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #LaluPrasadYadav #IRCTCcase
    நெல்லை பழவூர் நாறும்பூநாதர் கோவில் சிலை கடத்தப்பட்ட வழக்கில் ஆஜராக மாதாவரம் இன்ஸ்பென்க்டர் ஜீவானந்தம், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி காசிப், சஸ்பெண்ட் ஆன டி.எஸ்.பி காதர் பாட்ஷா 19-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #IdolSmuggling #IGPonmanikavel
    சென்னை:

    நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாதர் கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த சிலைகளின் மதிப்பு ரூ.30 கோடியாகும்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை வழக்கு குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவல்களின் பேரில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளில் ஆடல் நடராஜன், சிவகாமி அம்மாள், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், அஸ்திரதேவர், வெயில் காத்த அம்மன், கோமதி அம்மன், சுப்பிரமணியர் என 9 சிலைகள் மீட்கப்பட்டன.

    மற்ற சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டதாக தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சிலர் தப்ப விடப்பட்டு இருப்பதாகவும், வெளிநாடுகளைச் சேர்ந்த சிலர் வழக்கில் சேர்க்கப்படாமல் இருப்பதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மனு செய்தார். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட கோர்ட்டு மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிட்டது.

    அதோடு இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். அவர் விசாரணையை தொடங்கியதும் 13 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

    சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் பழவூர் கோவிலுக்கு வந்து பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சாமி சிலைகளை போட்டோ எடுத்தது தெரிய வந்தது. அவர் அவ்வாறு போட்டோ எடுத்து சென்றபிறகுதான் 13 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்பதை பொன்.மாணிக்கவேல் கண்டுபிடித்தார்.

    மேலும் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள் சென்னை, டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிறகு மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளன என்பதும் தெரிய வந்தது. அதோடு 4 சிலைகளில் இருந்த தங்கத்தை பிரித்தெடுக்க அந்த சிலைகளை கடத்தல்காரர்கள் அமிலம் ஊற்றி அழித்து விட்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து மேலும் 8 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே சுபாஷ்கபூர் போலீசாரிடம் சிக்கினார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வல்லப்பிரகாஷ், ஆதித்திய பிரகாஷ், தீனதயாளன் உள்பட 10 பேர் ஏற்கனவே ஜெயிலில் உள்ளனர்.

    சிலை கடத்தலில் தொடர்புடைய மேலும் 6 பேர் வெளிநாடுகளில் உள்ளனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதற்கிடையே பழவூர் சாமி சிலைகள் கடத்தப்பட்டது பற்றி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களை சம்மன் அனுப்பி வரவழைத்து அவர் விசாரித்து வருகிறார்.

    அந்த வகையில் இந்த வழக்கில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. காசிப் மற்றொரு டி.எஸ்.பி. காதர்பாட்சா, மாதவரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் மூவரையும் விசாரணைக்கு வருமாறு தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இந்த 3 போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற உள்ளது. ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேரிடையாக இவர்களிடம் விசாரணை நடத்த உள்ளார்.

    சிலைகள் கடத்தப்பட்ட போது போலீஸ் அதிகாரிகள் வெளிநாட்டுக்கு சிலைகள் கொண்டு செல்லப்பட்டது பற்றிய தகவல்களை உரிய முறையில் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதுபற்றி விசாரணை நடைபெற உள்ளது.

    இதுமட்டுமின்றி பழவூர் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளுக்கு பதிலாக போலி சிலைகளை செய்து வைத்து பிரச்சனையை தீர்த்து விடலாம் என்று போலீஸ் அதிகாரிகள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றியும் 2 டி.எஸ்.பி.க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜீவானந்த்திடம் அதிரடி விசாரணை நடத்த பொன்.மாணிக்கவேல் முடிவு செய்துள்ளார்.

    இந்த விசாரணைக்கு பிறகு பழவூர் கோவில் சாமி சிலைகள் கடத்தல் வழக்கில் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்று தெரிகிறது. அதன் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IdolSmuggling #IGPonmanikavel
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி கமி‌ஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்ப ஏற்பாடு நடந்து வருகிறது. #JayaDeathProbe #OPanneerSelvam
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியானது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவர் சிகிச்சை தொடர்பாக முடிவு செய்தவர்கள் பற்றியும் மர்மங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    இந்த மர்மங்களுக்கு விடை காண்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த விசாரணை கமி‌ஷன் விசாரணையை நடத்தி வருகிறது.

    அடுத்த மாதம் (அக்டோபர்) 24-ந்தேதியுடன் இந்த விசாரணை கமி‌ஷனின் பதவி காலம் நிறைவு பெற உள்ளது. ஆனால் இன்னமும் விசாரணை முடியவில்லை. எனவே விசாரணை கமி‌ஷனின் பதவி காலத்தை நீட்டிக்க செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த விசாரணை ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதா மரணம் தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளனர். அவை அனைத்தும் வாக்குமூலங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

    ஜெயலலிதா உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், அவர்களது உதவியாளர்கள், ஜெயலலிதாவுக்கு அரசு பணிகளில் உதவியாக இருந்த அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், சிகிச்சை அளித்த டாக்டர்கள், அரசு டாக்டர்கள் என பல்வேறு தரப்பினர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    அந்த வாக்குமூலங்களில் மிகுந்த முரண்பாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக சசிகலா உறவினர்களும், டாக்டர்களும் சொல்லும் தகவல்களுக்கு நிறைய வித்தியாசம் உள்ளது. எனவே ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கலாமோ என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.


    இந்த விவகாரத்தில் முக்கியமாக கருதப்படுபவர் சசிகலாதான். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான இவர் தான் சிகிச்சை தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுத்தார். ஜெயலலிதாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தது முதல் அடக்கம் செய்தது வரை அருகில் இருந்தது சசிகலா மட்டுமே.

    எனவே சசிகலா சொல்லும் தகவல்கள் இந்த விவகாரத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி கமி‌ஷன் முடிவு செய்துள்ளது.

    தற்போது சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சென்னைக்கு வரவழைத்து விசாரிப்பது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    எனவே பெங்களூர் சிறைக்கே சென்று விசாரணை நடத்தலாமா? என்று ஆறுமுகசாமி கமி‌ஷன் ஆய்வு செய்து வருகிறது. சசிகலாவிடம் நேரில் விசாரிக்க அனுமதி கிடைக்காத பட்சத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதுபோல ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சிங்கப்பூர் டாக்டர்களிடமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    சசிகலாவிடம் விசாரணை நடத்திய பிறகு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடமும் விசாரணை நடத்த ஆறுமுகசாமி கமி‌ஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்ப ஏற்பாடு நடந்து வருகிறது.

    இவர்கள் தவிர அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரிடமும் விசாரிக்க விசாரணை கமி‌ஷன் திட்டமிட்டுள்ளது. தேவைப்பட் டால் அப்பல்லோ டாக்டர்களை மீண்டும் அழைத்து விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்த விசாரணைகள் அனைத்தும் முடிந்த பிறகே ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறதா? என்பது தெரிய வரும். #JayaDeathProbe #OPanneerSelvam #Vijayabaskar #Arumugasamycommission
    உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்ட கோமதி நீர்ப்பாசன திட்ட முறைகேடு வழக்கு தொடர்பாக 6 போலி நிறுவனங்களுக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. #AkhileshYadav
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் அகிலேஷ் யாதவ் முதல்- மந்திரியாக இருந்தபோது கோமதி ஆற்றில் நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

    இதில் ஊழல் நடந்து இருப்பதாக கடந்த 2017 சட்டசபை தேர்தலின் போது பா.ஜனதா குற்றம் சாட்டியது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்த ஊழல் பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் பிரசாரம் செய்தது.

    அதன்படி பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத், கோமதி ஆற்று நீர்ப்பாசன திட்ட ஊழல் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டார். மாநில போலீசார் நடத்திய விசாரணையில் நீர்ப்பாசன திட்ட ஊழலில் அகிலேஷ் யாதவுக்கும் 6 போலி நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.


    இதையடுத்து 6 மாதங்களுக்கு முன்பு சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டார். இதில் அனுபவம் இல்லாத நிறுவனங்களும் டெண்டர் எடுத்து திட்டங்களை செயல்படுத்தியதும் இதில் முறைகேடு நடந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. டெண்டர் எடுத்த தொகைக்கும், மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதும் தெரியவந்தது.

    போலி கம்பெனிகள் மூலம் ஊழல் நடந்து இருப்பதாகவும் இதில் சட்டவிரோத பணிபரிமாற்றம் நடந்து இருப்பதாகவும் சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் இதில் நடந்த சட்ட விரோத பணபரிமாற்றம் குறித்து அமலாக்கப்பிரிவும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் அடுத்தகட்ட நடவடிகையாக தகுதியற்ற 6 நிறுவனங்களுக்கும் அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் நீர்ப்பாசன திட்ட ஊழல் சமாஜ்வாடி கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.  #AkhileshYadav #Gomtiproject
    ×