search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீர்காழி"

    ஆர்.கே. நகர் 20 ரூபாய் டோக்கன் போல் சீர்காழியில் அ.தி.மு.க.வினர் வினியோகித்த பெட்ரோல் டோக்கன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். #LSPolls #ADMK

    சீர்காழி:

    தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி பாரா ளுமன்ற தேர்தலும், 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

    இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு 24 மணி நேர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் எடுத்து செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். மேலும் கட்சி தொண்டர்களுக்கு மது வாங்கி கொடுக்கிறார்களா? எனவும் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை ஆர்.கே. நகரில் நடந்த இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் கட்சி தொண்டர்களுக்கு பெட்ரோல் போட டோக்கன் கொடுத்ததை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வினர் சீர்காழியில் முதல்நாள் பிரச்சாரத்தை தொடங்கினர்.

    பிரச்சாரத்தை முன்னிட்டு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளான பா.ம.க, தே.மு.தி.க, த.ம.கா, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தங்களது இருசக்கர வாகனத்துடன் திரண்டிருந்தனர்.

    இதனிடையே சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கட்சி கொடியுடன் இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் பலர் பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த தேர்தல் பறக்கும் படை மண்டல துணை தாசில்தார் சுவாமி நாதன் தலைமையில் போலீசார் பெட்ரோல் பங்கில் திடீர் ஆய்வு நடத்தினர்.

    பறக்கும் படையினரை கண்ட கட்சியினர் பலர் அங்கிருந்து விரைந்து சென்றனர். தொடர்ந்து நடந்த ஆய்வின்போது கட்சி தொண்டர்கள் பலர் அ.தி.மு.க. பொறுப்பாளர் ஒருவரின் பெயருடன் கூடிய ரப்பர் ஸ்டாம்பு அச்சிட்ட டோக்கன் கொடுத்து ரூ.100 பெட்ரோல் நிரப்பியது தெரிய வந்தது.

    இதனை கண்ட தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சி அடைந்து அடுத்த நிமிடம் பெட்ரோல் போட்ட பங்க் ஊழியர் கையில் வைத்திருந்த 100 டோக்கன்களையும், ரூ. 10 ஆயிரத்து 870 ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.

    இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் கணக்கரிடம் விசாரணை செய்து அறிக்கை பெற்றனர். அறிக்கை பெற்ற பின்பு இந்த பெட்ரோல் செலவு வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க.வினர் மூலம் வழங்கப்பட்ட பெட்ரோல் டோக்கன் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #LSPolls #ADMK

    சீர்காழியில் தொழிலதிபர்களை பிரபல ரவுடிகள் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ரமேஷ்பாபு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிடாரி வடக்கு வீதியில் தனியார் பஸ் அதிபரை பார்ப்பதற்காக அவரது வீட்டுவாசலில் காரில் காத்துக்கொண்டிருந்த போது கூலிப்படையினர் நாட்டுவெடிகுண்டை வீசி அரிவாளால் வெட்டி அவரை கொலை செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய சீர்காழியை அடுத்த புதுத்துறை ராமகிருஷ்ணன் மகன் பார்த்தீபன் (வயது 29). திருவாரூர் ஆதனூர் மண்டபம் பகுதியை சேர்ந்த கட்டபிரபு என்கிற அருண்பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்த்தீபன், அருண்பிரபு ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் சீர்காழி பகுதியில் உள்ள முக்கிய தொழில் அதிபர்களை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

    இதுகுறித்து சீர்காழி போலீசில் தொழிலதிபர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் தொழிலதிபர்களுக்கு பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது அ.தி.மு.க பிரமுகர் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பார்த்தீபன் என தெரியவந்தது.

    அதனை தொடர்ந்து போலீசார் பார்த்தீபனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று இரவு தென்பாதி உப்பனார் பாலம் அருகே சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் வாகனதணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை கைகாட்டி தடுத்தனர்.

    அப்போது கார் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை விரட்டி சென்று மடக்கினர். அப்போது காரில் பயங்கர ஆயுதங்களுடன் பிரபல ரவுடிகளான பார்த்தீபன் மற்றும் அருண்பிரபு ஆகியோர் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து கார் மற்றும் அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சீர்காழியில் பிரியாணி கடையில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியை சேர்ந்தவர் குமார். இவர் சீர்காழியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மேல்பாதி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த கலியபெருமாள் (30) என்பவர் நேற்று இரவு சென்று பிரியாணி சாப்பிட்டு விட்டு பாதி தொகையை மட்டும் கொடுத்து விட்டு மீதி தொகையை பின்னர் தருவதாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக குமாருக்கும், கலிய பெருமாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து செத்த கோழியை வாங்கி குமார் பிரியாணி செய்வதாக வாடிக்கையாளர்களிடம் கலியபெருமாள் கூறியுள்ளார். இதுபற்றி குமார் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் வழக்குப்பதிவு செய்து கலியபெருமாளை கைது செய்தார்.

    சீர்காழி அருகே பாக்கெட் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை எஸ்.பி. விஜயக்குமார் உத்தரவின் பேரில் திருவெண்காடு இன்ஸ்பெக்டர் வேலுதேவி, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சீர்காழி அருகே ஆலங்காடு பகுதியில் வாகனசோதனை மேற்கொண்டனர். அப்போது காரைக்கால் பகுதியிலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 200 லிட்டர் சாராயம் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு கடத்தி வருவது தெரிந்தது. இதையடுத்து சாராயத்தோடு காரையும் பறிமுதல் செய்து காரைக்கால் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 26) என்பவரை கைது செய்தனர்.

    இதேபோல் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் பெரம்பூர் அருகே வாகனதணிக்கை செய்தபோது மோட்டார் சைக்கிளில் 120லிட்டர் சாராயம் கடத்திவந்த மாங்கா.சண்முகம்(48) என்பவரை கைது செய்தனர்.

    சீர்காழி அருகே விபத்தில் வங்கி ஊழியர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே கீழதென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.மயிலாடுதுறை அடுத்த மூங்கில் தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயபாலன் (24).

    இந்த நிலையில் நேற்று மாலை கார்த்திகேயன் , மோட்டார் சைக்கிளில் சட்ட நாதபுரம் ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே விஜயபாலன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அப்போது திடீரென 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காயம் அடைந்த விஜயபாலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயபாலன் இறந்தார்.

    இந்த விபத்து பற்றி சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் பலியான கார்த்திகேயனுக்கு திருமணமாகி மனைவியும் 8 வயதில் மகனும் உள்ளனர்.

    சீர்காழியில் கொல்லப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக சேலம் கோர்ட்டில் சரணடைந்த 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த எடமணல்கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 47). இவர் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவர் அணி துணை செயலாளராக இருந்து வந்தார். மேலும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளராகவும் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ரமேஷ் பாபுவை கடந்த 23-ந் தேதி பிடாரி வடக்கு வீதியில் 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.

    அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளராகவும், நாகை மாவட்ட அ.தி.மு.க.வில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய வந்த ரமேஷ் பாபு, கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த கொலை பற்றி விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கொலையாளிகள் பயன்படுத்திய கார், திருக்கடையூர் பகுதியில் அனாதையாக நின்றது. இதை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வந்தனர்.

    அ.தி.மு.க. பிரமுகர் ரமேஷ்பாபு குறுகிய காலத்திலேயே பல்வேறு காண்டிராக்ட் பணிகளை எடுத்தார். இதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தார். அமைச்சரின் ஆதரவாளராகவும், செல்வாக்குமிக்கவராகவும் கட்சியில் விளங்கினார். இதனால் அவருக்கு தொழில் போட்டி, அரசியல் போட்டிகள் அதிகமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதை உணர்ந்த அவர் எப்போதும் தனது பாதுகாப்புக்கு துப்பாக்கியை வைத்திருந்தார். ஆனால் அவர் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று தெரிவிக்கவில்லை. இதுவே கூலிப்படைக்கு அவரை கொலை செய்ய வசதியாக போய்விட்டது.

    ரமேஷ்பாபுவை கொலை செய்ய திட்டம் தீட்டிய கொலை கும்பல், கடந்த 20-ந் தேதியே நாகை மாவட்டத்தில் திருக்கடையூர், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் கார்களில் சுற்றி வந்துள்ளனர். ரமேஷ் பாபுவை தீவிரமாக நோட்டமிட்டே இந்த கொலை அரங்கேற்றியுள்ளனர்.

    இதன் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சை, பகுதியை சேர்ந்த 3 ரவுடிகளிடம் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் ரமேஷ்பாபு கொலை தொடர்பாக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எண்.2-ல் நீதிபதி முன்னிலையில் சீர்காழி மதுத்துறை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் பார்த்திபன் (வயது 28), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த பாலு மகன் அருண்பிரபு(34) மற்றும் புதுச்சேரி, மேல்காத்த மங்கலம் தேனீநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரேம்குமார் (22) ஆகிய 3 பேர் சரண் அடைந்தனர். சரண் அடைந்த அவர்கள் 3 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே கோர்ட்டில் சரண் அடைந்த பார்த்திபன் உள்பட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் அவர்கள் நேற்று இரவே சேலத்தில் புறப்பட்டு சென்றனர்.

    சேலம் சிறையில் உள்ள 3 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தால் தான் ரமேஷ்பாபுவின் கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் பின்னணியில் யார் இருந்தனர் என்றும் தெரிய வரும் என தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.
    சீர்காழி அருகே மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இறால் குட்டைகளை அப்புறப்படுத்தக்கோரி நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
    சீர்காழி:

    சீர்காழியை அடுத்த கீராநல்லூர் கிராமத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இறால் குட்டைகளை அப்புறப்படுத்தக்கோரி நாளை (7-ந்தேதி)முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் மா.ஈழவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சீர்காழி வட்டம் திருக்கருக்காவூர் ஊராட்சி கீராநல்லூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அரசு அனுமதியின்றி தனியார் ஒருவர் இறால் குட்டை அமைத்து வருகிறார். ஏற்கனவே நிலத்தடிநீர் மட்டம் குறைந்து குடிதண்ணீர் உப்புநீராக மாறியுள்ளதால் பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு சுமார் 2 கி.மீ. தூரம் சென்று குடிநீர் குடங்களில் பிடித்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். 

    இந்த சூழ்நிலையில் இறால் குட்டைகள் அமைப்பதினால் சுமார் 2கி.மீ தூரத்தில் கிடைக்க கூடிய தண்ணீரும் உப்பு நீராக மாறி பொதுமக்களின் வாழ்வாதாரமே கேள்விகுறியாகி விடும். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிப்பதற்கும்,மற்ற தேவைகளுக்கும் குடிநீர் வழங்கவேண்டும் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் மயிலாடுதுறை சப்-கலெக்டரிடம் மனு அளித்து தீர்விற்காக காத்திருக்கின்றனர்.

    இந்த நிலையில் அனுமதியின்றி இறால் குட்டைகள் அமைக்கப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் நாளை கிராமத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சீர்காழி நகரில் சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்கவும் குற்றங்களை தடுக்கவும் 38 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க உள்ளதாக எஸ்.பி. கூறியுள்ளார்.
    சீர்காழி:

    சீர்காழி காவல் நிலையத்தில் நாகப்பட்டிணம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சஞ்சய்சேகர் அலுவல் ஆய்வு பணி மேற்கொண்டார்.அப்போது காவல்நிலையத்தில் உள்ள பதிவேடுகள், குற்றபதிவேடுகள், ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வுசெய்தார். வழக்கு விவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது நிருபர்களிடம் எஸ்.பி. தேஷ்முக்சஞ்சய் கூறுகையில், சீர்காழியில் போக்குவரத்தை சீரமைக்கும் வகையிலும், குற்ற நடவடிக்கைகளை தடுத்திடும் வகையிலும், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்கவும் 38 இடங்களில் உயர் அதி நவீன கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படவுள்ளது. அதன் கன்ட்ரோல்யூனிட் மற்றும் கண்காணிப்பு மானிட்டர்கள் என அனைத்து கணினி சேவைகளும் மகளிர் காவல்நிலையத்தில் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளது.

    தேர்வு பெற்ற காவலர்களுக்கு பயிற்சி காலம் முடிந்தவுடன் உயர் காவல் அதிகாரிகளின் உத்தரவின்படி போதிய காவலர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். போக்குவரத்து நெருக்கடியை சீரமைக்கும் வகையில் சைரன் வைத்த இருசக்கரவாகனத்தில் ரோந்து போலீசார் நகர் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுகின்றனர் என்றார். ஆய்வின்போது டி.எஸ்.பி சேகர், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு ஆகியோர் உடனிருந்தனர்.#tamilnews
    சீர்காழி அருகே விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பம் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடி கம்பங்களை மர்ம கும்பல் உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் மருவத்தூர் கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி அப்பகுதியில் டியூப் லைட்டுகளை கட்டி வைத்திருந்தனர். இதை நேற்று இரவு ஒரு மர்ம கும்பல் அடித்து உடைத்துள்ளனர். இந்த சம்பவம் கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் மருவத்தூர் கிராமம் காந்தி நகரில் அமைக்கப்பட்டிருந்த வி.சிறுத்தை கட்சிகளின் கொடிகம்பம் உடைக்கப்பட்டு சேதப்படுத்த பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு பார்வையிட்டனர்.

    இதேபோல் விடுதலை சிறுத்தை கட்சி கொடிகம்பம் சேதப்படுத்த பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடிகம்பம் உள்ளது. இதையும் மர்ம கும்பல் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த கம்யூனிஸ்டு கட்சியினரும் பார்வையிட்டனர்.

    இந்த சம்பவங்கள் குறித்து தனித்தனியாக வைத்தீஸ்வரன் கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிங்கார வேலு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கொடி கம்பங்களை சேதப்படுத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சீர்காழி அருகே நேற்று நள்ளிரவில் விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பத்தை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே சட்ட நாதபுரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் உள்ளது. இந்த கொடி கம்பத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திருமாவளவன் கொடியேற்றி வைத்தார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை வெட்டி சாய்த்து சேதப்படுத்தினர்.

    கொடி கம்பம் சேதப்படுத்திய தகவல் கிடைத்ததும் கட்சி நிர்வாகிகள் திரண்டனர். தொகுதி பொறுப்பாளர் தாமு இனியவன், செய்தி தொடர்பாளர் தேவா, மாவட்ட துணை செயலாளர் காமராஜ் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்து பார்வையிட்டனர்.

    பின்னர் இந்த சம்பவம் பற்றி சீர்காழி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை சேதப்படுத்திய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நாங்கூர் வடக்கு அக்ரஹார தெருவை சேர்ந்தவர் அண்ணா சீனிவாசன் (வயது 45). இவர் சீர்காழியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அண்ணா சீனிவாசன், தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.

    இன்று காலை அண்ணா சீனிவாசன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சென்னையில் இருந்த ஆசிரியர் அண்ணா சீனிவாசனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் இதுபற்றி திருவெண்காடு போலீசுக்கு தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அண்ணா சீனிவாசன் வீட்டில் பீரோவில் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது.

    நள்ளிரவில் மர்ம கும்பல் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    மேலும் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போய் உள்ளதா? என தெரியவில்லை. சென்னையில் இருந்து அண்ணா சீனிவாசன் வந்த பிறகு கொள்ளை போன நகை- பணம் குறித்த விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    ஆசிரியர் வீட்டில் கொள்ளை நடந்ச சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    சீர்காழி அருகே மீனவர்கள் வலையில் கஞ்சா மூட்டைகள் சிக்கிய சம்பவம் திருவெண்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #fishermen

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு அடுத்த கீழமூவர்கரை என்ற மீனவ கிராமம் உள்ளது. இதே பகுதி சுனாமி தெருவை சேர்ந்த சரவணன் (வயது 32) என்ற மீனவர் நேற்று அதிகாலை பைபர் படகில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றார்.

    அவருடன் அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், பெருமாள், செல்லப்பன், தங்கத்துரை ஆகியோரும் படகில் சென்றனர்.

    நேற்று மாலை அவர்கள் படகில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் கடலில் வீசிய வலையை வெளியே இழுத்து கொண்டிருந்தனர். ஆனால் வலையை இழுக்க முடியவில்லை. இதனால் ஏதோ பெரிய மீன் சிக்கியிருக்கலாம் என்று நினைத்து அவர்கள் சேர்ந்து போராடி வலையை இழுத்து வெளியே கொண்டு வந்தனர்.

    அந்த வலையில் 10 மூட்டைகள் இருந்தன. இதனால் அதில் என்ன இருக்கிறது? என பிரித்து பார்த்த போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த மூட்டையில் கஞ்சா இருந்தது. அவைகள் அனைத்தும் பாக்கெட் செய்யப்பட்டு இருந்தது.

    பின்னர் கஞ்சா மூட்டைகளை பத்திரமாக கரைக்கு நேற்று இரவு மீனவர்கள் கொண்டு வந்தனர். வலையில் கஞ்சா மூட்டைகள் சிக்கியது குறித்து திருவெண்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்து கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டனர். 10 மூட்டைகளிலும் மொத்தம் 42 கிலோ கஞ்சா இருந்தது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இலங்கைக்கு கஞ்சா மூட்டைகள் கடத்தி செல்லும் போது கடலோர போலீசாருக்கு பயந்து கடலில் வீசப்பட்டதா? கஞ்சாவை கடலில் வீசிய கும்பல் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    மீனவர்கள் வலையில் கஞ்சா மூட்டைகள் சிக்கிய சம்பவம் திருவெண்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #fishermen

    ×