search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசவம்"

    • அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 2-வது நடைமேடைக்கு ரெயில் வந்துகொண்டிருந்தபோது சாந்தினிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • அரக்கோணம் ரெயில்வே டாக்டரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சாந்தினி அழைத்து செல்லப்பட்டார்.

    சென்னை:

    மங்களூருவில் இருந்து சென்னை சென்டிரல் வரை செல்லும் ''வெஸ்ட் கோஸ்ட்'' விரைவு ரெயிலில் திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் ஸ்டேசன் மாஸ்டராக வேலை பார்க்கும் அஸ்வின் குமார் தனது மனைவி சாந்தினியுடன் பயணம் செய்தார். நிறைமாத கர்ப்பிணியான சாந்தினியை பெரம்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிப்பதற்காக திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து இருவரும் ஏறினர்.

    மதியம் 2.20 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 2-வது நடைமேடைக்கு ரெயில் வந்துகொண்டிருந்தபோது சாந்தினிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீஸ் பரமேஸ்வரி துரிதமாக செயல்பட்டு சாந்தினியை ரெயிலில் இருந்து இறக்கி அருகில் இருந்த பயணிகள் தங்கும் அறைக்கு அழைத்துச்சென்றார். சிறிது நேரத்தில் பயணிகள் தங்கும் அறையிலேயே அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    இதனிடையே அரக்கோணம் ரெயில்வே டாக்டரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சாந்தினி அழைத்து செல்லப்பட்டார். அங்கு தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    துரிதமாக செயல்பட்டு பிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை ரெயிலில் இருந்து இறக்கி பயணிகள் ஓய்வு அறைக்கு அழைத்துச்சென்று பிரசவத்துக்கு உதவியாக இருந்த பெண் போலீஸ் பரமேஸ்வரியை பயணிகளும், பொதுமக்களும் வெகுவாக பாரட்டினர்.

    • பிரசவம் நிகழ்ந்த பின், அடுத்த ஆறு வாரங்கள் அவர்களுக்கு பெரும் சவாலான காலம்.
    • பெண்கள் பிரசவத்திற்குப் பின் மிகக்கடினமான மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள்.

    பிரசவம் என்பது பெண்களின் மறுபிறப்பு. தாய்மை என்ற நிலையை அடைய பெண்கள் பிரசவ காலத்தில் படும்பாட்டினை வெறும் வார்த்தைகளால் கூறுவதால் அதன் வலியும்,வேதனையும் யாருக்கும் தெரிய வராது.

    அத்தகைய தாய்மையை அடைந்த பின், பிரசவத்திற்கு பிந்தைய நிலையில் பெண்கள் இன்னும் பல்வேறு உடலியல், மனவியல் சார்ந்த மாற்றங்களுக்கு ஆட்படுவது என்பது அவர்களுக்கு மீண்டும் ஒரு சவால். அத்தகைய மாற்றங்களோடு உடல் எதிர்கொள்ளும் வேதனைகளைத் தாங்கிக்கொண்டு மகவின் மீது பேரன்பும், அக்கறையும் காட்டி வளர்ப்பது என்பது அவர்களுக்கு மட்டுமே கைவந்த கலை. அத்தகைய தருணத்தில் பெண்களை அன்பும், அரவணைப்பும் கொடுத்து பேணிக்காக்க வேண்டியது குடும்பத்தாரின் கடமை.

    பிரசவம் நிகழ்ந்த பின், அடுத்த ஆறு வாரங்கள் அவர்களுக்கு பெரும் சவாலான காலம். தன் உடல் நலத்தோடு, மகவின் நலனையும் சேர்த்து காக்க வேண்டிய தருணம் அது. அந்த காலத்தில் அவர்களை அதிகம் பாதிப்பது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் 'பி.பி.டி.' எனப்படும் பிரசவத்திற்கு பிந்தைய மன அழுத்தம் தான். இதனைப் பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு தெரிவதே இல்லை.

    ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது மிகவும் கடினமான பணி. ஒரு தாயின் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் தேவையான ஆற்றலை பிரசவத்தின் போது எடுத்துக்கொள்ளும் என்கிறது நவீன அறிவியல். உலக அளவில் 10 சதவீதம் பெண்கள் பிரசவத்திற்குப் பின் மிகக்கடினமான மன சோர்வு அல்லது மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள். சிலருக்கு பிரசவத்திற்கு பிந்தைய ஒரு வருடம் கூட இந்த மன அழுத்தம் நிலைத்திருப்பதாக ஆய்வுகள் கூறுவது வருத்தம் தான்.

    இதனால் குழந்தைகளை, கவனித்துக்கொள்வதும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதும் கடினமாவதால், ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதும் கடினமாகிறது. பிரசவத்திற்கு பின் ஏற்படும் இத்தகைய மன அழுத்தத்தை போக்க எளிய மூலிகை மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது. இதனால் மன மகிழ்ச்சி ஏற்படுவதுடன் பால் சுரப்பினை அதிகரிக்கும். மணத்தக்காளி கீரை மனதிற்கு மகிழ்ச்சியை தரும் என்பது அதன் பெயரிலேயே விளங்கும். இந்த கீரை பிரசவத்திற்கு பின் அடிக்கடி செய்து கொடுக்க மனஅழுத்தம் குறையும்.

    அதே போல் வல்லாரை, பிரமி ஆகிய கீரை வகைகளையும் நெய்விட்டு வதக்கி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. பிரமி நெய் எனும் சித்த மருந்து அதற்கு நல்ல தீர்வினை தரும். மற்றொரு எளிய சித்த மருத்துவ மூலிகை அமுக்கரா கிழங்கு. நரம்புகளைப் பலப்படுத்தவும், மன அழுத்தத்தைப் போக்கி நிம்மதியான தூக்கம் உண்டாக்கவும் வல்லது. எல்லா வயதினரும், எல்லா பருவத்திலும் பயன்படுத்த ஏற்புடைய மூலிகை அமுக்கரா எனும் அஸ்வகந்தி. பிரசவத்திற்கு பின் பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்த உகந்தது.

    மேலும் அமுக்கரா கிழங்கு இயற்கை வலிநிவாரணியாக இருப்பதால் பிரசவத்திற்கு பின் ஏற்பட்ட உடல் வலியும் நீங்கும். இதனை ஒரு தேக்கரண்டி அளவு தினசரி பாலில் கலந்து எடுத்துக்கொள்ள பிரசவத்திற்கு பின் உண்டாகும் சிறுநீர் பிரச்சினைக்கும் பலன் தரும். தூக்கமின்மை இருப்பின் தகரை மற்றும் சடாமாஞ்சில் ஆகிய மூலிகைகள் சேர்ந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். பிரசவத்திற்கு பின் பெரும்பாலான வீடுகளில் இன்றும் பழக்கத்தில் உள்ள பாட்டி வைத்தியம் என்னவெனில் 'செலவு குழம்பு' எனப்படும் 'பத்திய மருந்து குழம்பு' தான்.

    பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு பத்தியக் குழம்பாக இந்த மருந்து குழம்பு கொடுக்கப்படுவது இன்றளவும் பல ஊர்களில் வழக்கத்தில் உள்ளது. கர்ப்ப காலத்திலும் சரி, கர்ப்பத்திற்கு பின்னரும் சரி சித்த மருத்துவம் பாட்டி வைத்தியமாக கையாளப்பட்டு வருவதற்கு இதுவும் உதாரணம். 'பிரசவத்திற்கு பின்னர் கருப்பை மற்றும் உடலில் சேரும் நச்சுத்தன்மையுள்ள கழிவுகளை அகற்றி உடலை சுறுசுறுப்பாக வைக்கக்கூடியது மருந்து குழம்பு. பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் உடலைச்சுத்தம் செய்வதற்காக மட்டுமின்றி அவர்களுக்கு ஊட்டம் தரும் உன்னதமான உணவுப்பொருள்.

    மேலும் இதன் மூலம் தாய்ப்பால் அருந்தும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் காக்க முடியும். மிளகு, சீரகம், சுக்கு, திப்பிலி, கருவேப்பிலை, ஓமம், பெருங்காயம், தனியா போன்ற கடைசரக்குகளின் கலவையாக உள்ளது இந்த பத்திய குழம்பு. இது சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் தொற்றுக்கள் வராமல் காக்கக் கூடியது. பிரசவமான 15 நாட்கள் கழித்து இதனை பயன்படுத்துவது நல்லது. 'பிரசவ லேகியம்' என்ற சித்த மருந்து பலராலும் அறியப்பட்ட பெண்களுக்கான மருந்து. இது பிரசவம் ஆன பிறகு கருப்பையில் உள்ள அழுக்கினை நீக்கி கருப்பையை தெளிவாக்கும்.

    சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரசவம் இவை இரண்டிலும் இதனை பயன்படுத்தலாம். சுகப்பிரசவம் எனில் உடனே இதனை எடுக்கத் துவங்கலாம். சிசேரியன் பிரசவம் எனில் இரண்டு மூன்று வாரங்கள் கழித்து இதனை எடுக்கத் துவங்கலாம். இதனால் கருப்பையில் உள்ள ரத்தகட்டிகள் விரைவில் நீங்கி பாலூட்டும் தாய்க்கு சுகம் தரும். 'சவுபாக்கிய சுண்டி லேகியம்' எனும் சித்த மருந்து பாட்டிகாலம் முதல் மிகப்பிரபலமான ஒன்று. சுக்கினை முதன்மையாக கொண்ட இந்த லேகியம் கருப்பையில் உள்ள அழுக்கினை நீக்கி கருப்பையை பலப்படுத்தும். மேலும் கருப்பை இயல்பு நிலைக்கு திரும்பவும் பேருதவி புரியும்.

    இது மட்டுமின்றி மார்பில் பால் சுரப்பை அதிகரிக்கும். மேலும் சுக்கினால் உடல் வலியும், அசீரணம், செரியாமை, வாய்க்குமட்டல் ஆகிய குறிகுணங்கள் நீங்கி பெண்களுக்கு நலம் பயக்கும். பிரசவத்திற்கு பின்னர் உடல் வலி, இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களுக்கு சுடுநீரில் நொச்சி இலையை போட்டு காய்ச்சி குளிப்பதற்கு பயன்படுத்த நல்ல பலன் தரும். இது உடல் வலியை குறைக்கும் எளிய மருத்துவ வழிமுறை. நொச்சி இலை வீக்கத்தை குறைக்கும் தன்மையும், வலியை நீக்கும் தன்மையும் உடையது. சித்த மருத்துவத்தில் வெளி மருத்துவம் சிறப்பு மிக்கது. அந்த வகையில் பிரசவத்திற்கு பின்னரும், இடுப்பு பகுதியை வலிமையாக்க உளுந்து தைலத்தை பயன்படுத்தலாம்.

    உடல் வலி, கை கால் வலி, தசை வலி இவற்றிக்கு 'பிண்ட தைலம்' எனும் சித்த மருந்தை வெளியே தடவி லேசான சுடுநீரில் ஒற்றடமிட வலி குறையும். தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கவும், பிரசவத்தில் இழந்த குருதியையும், உடல் வன்மையையும் மீண்டும் பெறுவதற்கும் அதிகப்படியான கலோரி அளவுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இரும்பு சத்துள்ள உணவுகளையும், அன்னபேதி செந்தூரம் போன்ற மாத்திரைகளையும் மற்றும் கால்சியம் சத்துள்ள உணவுகளையும், சங்கு பற்பம் போன்ற மருந்துகளையும் எடுக்க வேண்டியது அவசியம். முருங்கைக்கீரை சூப், கறி வேப்பிலை சூப், காய்கறிகள் சூப், சத்துமாவு கஞ்சி, கருப்பு உளுந்து கஞ்சி, பிரண்டை துவையல், முளை கட்டிய தானியங்கள், மாமிச சூப் வகைகள் இவற்றை எடுத்துக்கொள்வது மிக அவசியம்.

    பிரசவத்திற்கு பின்னர் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து ஹார்மோன் மாற்றங்களை சீராக்கும் மற்றொரு சித்த மருந்து சதாவேரி லேகியம். தண்ணீர்விட்டான்கிழங்கு மூலிகையை முதன்மையாகக் கொண்டு உருவாகும் இந்த லேகியம் பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இது கருப்பைக்கு வலுவை தரும். மேலும் கருப்பை ரணங்களை ஆற்றவும், அதனால் ஏற்படும் வெள்ளைப்போக்கினை குறைக்கவும் கூடியது. பிரசவத்திற்கு பின்னர் பெரும்பாலான பெண்களுக்கு சிறுநீர்ப்பை பலவீனம் அடைவதால் அடிக்கடி சிறுநீர் கழிதல், சிறுநீரை அடக்கமுடியாத நிலை ஏற்படுகிறது.

    இது பெண்களுக்கு சிறுநீர் பாதை சார்ந்த தொற்றினையும், ஒரு வித மன உளைச்சலையும் ஏற்படுத்தும். அவர்களுக்கு சித்த மருத்துவம் பாதுகாப்பானதாக இருக்கும். நரம்புகளை வன்மைப்படுத்தும் உள் மருந்துகளை எடுத்துக்கொள்வதோடு, வெளி மருத்துவம் செய்தலும் நல்லது. உளுந்து தைலம் என்ற சித்த மருந்தினை அடிவயிற்றில் தடவி வர நல்ல பலன் தரும். அத்துடன் கருப்பு உளுந்தினை பாலுடன் சேர்த்து கஞ்சியாக்கி எடுத்துக்கொள்ள தசைகளுக்கும், நரம்புகளுக்கும் வன்மை தரும். இது பெண்களுக்கென்றே உருவாக்கப்பட்ட சிறப்பு பாரம்பரிய உணவு.

    மன அழுத்தத்தை போக்கவும், உடல் சோர்வை களையவும் நேரம் கிடைக்கும் போது தியானப் பயிற்சி செய்வது நல்லது. மேலும் பிரசவத்திற்கு பின் பழகக்கூடிய யோகாசன பயிற்சி முறைகளான சவாசனம், பத்த கோணாசனம், புஜங்காசனம், காலை உயர்த்தி பிடித்த நிலை போன்ற எளிய பயிற்சி முறைகளை செய்து வருவது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும். பிரசவத்திற்கு பின் வயிறு பெரிதாவதை தடுக்கும். பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் உடல் எடை பொதுவாகவே கூடும்.

    அதற்காக உணவு வகைகளை குறைத்தால் சேய்க்கு பால் சுரப்பு குறையும். ஆதலால், எளிய யோகாசனப் பயிற்சிகளை செய்து உடல் எடையை நிர்வகிக்க வேண்டும். தடாசனம், திரிகோணாசனம், கோமுகாசனம், மர்ஜரியாசனம், பத்மாசனம் ஆகிய எளிய பயிற்சிகளை செய்வது இதற்கு நற்பலன் தரும். கணவன்மார்கள் மனைவியின் மன அழுத்தத்தையும், உடல் பலவீனத்தையும் புரிந்து கொண்டு குழந்தையின் பராமரிப்பில் சரிபங்கு தருவதுடன், மனைவிக்கு பக்க பலமாக நின்று ஆதரவு தந்து தாய்மைக்கு ஒத்துழைப்பு நல்குவது அத்தகைய சூழலில் அவசியமான ஒன்று.

    இவ்வாறாக, பெண்கள் பிரசவத்திற்கு பின் சித்த மருத்துவம் கூறும் பாரம்பரிய உணவு முறைகளையும், எளிய மருந்துகளையும் கையாள்வது அவர்களுக்கு பின்னாளில் பல்வேறு உடல் நலக்கேடுகள் வரவிடாமல் தடுக்கும். அவர்களின் ஆரோக்கியத்தையும், அழகையும் கூட்டும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • புஷ்பாவின் ஸ்கேன் அறிக்கையில் பிரசவத்தில் பிரச்சினை ஏற்படலாம் என்று குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது.
    • எந்த டாக்டரிடம் வீடியோ காலில் பேசினர் என்பது குறித்து அவர்களது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு ஆண்டார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் முரளி. எலக்ட்ரீசியன். இவரது மனைவி புஷ்பா (வயது 33). இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் புஷ்பா 2-வதாக கர்ப்பம் அடைந்தார்.

    இவர் சூனாம்பேடு ஊராட்சி, இல்லீடு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு புஷ்பா பரிசோதனைக்கு சென்றபோது நேற்று (19-ந்தேதி) அவருக்கு பிரசவ தேதி என்று டாக்டர்கள் கூறி இருந்தனர். இதையடுத்து நேற்று காலை புஷ்பா பிரசவத்துக்காக இல்லீடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அவருக்கு பிரசவ வலி வராததால் அங்கிருந்த டாக்டர்கள் வலி எடுத்தால் ஆஸ்பத்திரிக்கு வருமாறு கூறி திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து புஷ்பாவும் அவருடன் வந்த உறவினர்களும் வீட்டுக்கு திரும்பி சென்றுவிட்டனர். மதியம் 2.30 மணி அளவில் புஷ்பாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    உடனடியாக அவரை இல்லீடு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் மீண்டும் அழைத்து சென்றனர். அப்போது ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் யாரும் பணியில் இல்லை என்று தெரிகிறது.

    இதையடுத்து அங்கிருந்த நர்சுகள் 3 பேர் புஷ்பாவுக்கு பிரசவம் பார்க்க முயன்றனர். ஆனால் பிரசவத்தில் சிக்கல் இருந்ததால் அவர்களால் பிரசவம் பார்க்க முடியவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நர்சுகள் இதுகுறித்து டாக்டர் ஒருவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரவித்தனர். ஆனால் அந்த டாக்டர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. அவர் நர்சுகளிடம், தான் செல்போனில் வீடியோ காலில் தொடர்ந்து பேசுவதாகவும், கூறும்படி செய்தால் சுகப்பிரசவம் பார்த்து விடலாம் எனவும் தெரிவித்து உள்ளார்.

    இதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் புஷ்பாவுக்கு நர்சுகள் 3 பேரும் டாக்டர் வீடியோ காலில் கூறியபடி பிரசவம் பார்க்க தொடங்கினர். சிறிது நேரத்தில் குழந்தை தலைகீழாக மாறி முதலில் கால்கள் மட்டும் வெளியே வந்தது. ஆனால் உடனடியாக குழந்தையை வெளியே எடுக்க முடியாமல் நர்சுகள் திணறினர்.

    இதற்கிடையே புஷ்பாவின் உடல் நிலை தொடர்ந்து மோசம் அடைய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த நர்சுகள் இதுபற்றி வீடியோ காலில் இருந்த டாக்டரிடம் தெரிவித்தனர். உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி டாக்டர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து பிரசவ வலியுடன் துடித்த புஷ்பாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவருக்கு பெண் குழந்தை இறந்து பிறந்தது.

    இதனால் பதட்டம் அடைந்த நர்சுகள், பிரசவத்தில் புஷ்பாவுக்கு குழந்தை இறந்து பிறந்து விட்டது என்று உறவினர்களிடம் கூறினர். மேலும் புஷ்பாவை மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு சென்றுவிட்டனர்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த புஷ்பாவின் உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டனர். டாக்டர்கள் இல்லாமல் நர்சுகள் வீடியோ காலில் பேசி பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக குற்றம்சாட்டினர்.

    மேலும் குழந்தையின் உடலை வாங்க மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து குழந்தையின் உடலை உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.

    நர்சுகள் பிரசவம் பார்த்ததில் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் புஷ்பாவின் உடல்நிலை மோசம் அடைந்து உள்ளது. அவருக்கு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புஷ்பாவின் ஸ்கேன் அறிக்கையில் பிரசவத்தில் பிரச்சினை ஏற்படலாம் என்று குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் இதனை நர்சுகள் கவனிக்காமல் டாக்டர்கள் இல்லாததால் விபரீதமாக அவர்கள் சினிமா பாணியில் வீடியோ காலில் பேசி பிரசவம் பார்த்து உள்ளனர். இதனால் பச்சிளம் குழந்தையின் உயிர் பறிபோய் உள்ளது. இதுகுறித்து புஷ்பாவின் உறவினர்கள் சூனாம்பேடு போலீஸ நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பாவுக்கு பிரசவம் பார்த்த நர்சுகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவர்கள் எந்த டாக்டரிடம் வீடியோ காலில் பேசினர் என்பது குறித்து அவர்களது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    அலட்சியமாக பிரசவம் பார்த்த நர்சுகள் மற்றும் வீடியோ காலில் பேசி பிரசவம் பார்க்க கூறிய டாக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புஷ்பாவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பிரசவத்திற்காக மாதம்மாள் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
    • நேற்று மாலை பிரசவ வலி ஏற்படவே உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஷ்குமார் (வயது 28). இவருக்கும் சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள தெப்பக்காடு அடுத்த காசிகல் பகுதியைச் சேர்ந்த மாதம்மாள் ( 22) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் பிரசவத்திற்காக மாதம்மாள் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.நேற்று மாலை பிரசவ வலி ஏற்படவே உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர் சிலம்பரசன் மற்றும் ஓட்டுநர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மாதம்மாளை அழைத்துக்கொண்டு வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து சுதாரித்துக்கொண்டு, தாயையும், குழந்தையும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர். இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரிதாவை மீட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    • அப்போது சரிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா, கடம்பூர் மலை கிராமம், குன்றி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன். தொழிலாளி. இவரது மனைவி சரிதா (31). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சரிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இது குறித்து அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சை அழைத்தனர். 108 ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரிதாவை மீட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    108 ஆம்புலன்ஸ் குன்றி கடம்பூர் பாதையில் அஞ்சனை பிரிவு அருகே வந்தபோது சரிதாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சரிதாவுக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது சரிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    பின்னர், தாயும்-சேயும் கடம்பூர் அரசு ஆரம்ப நிலைய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் குமரேசன் மற்றும் வாகன ஓட்டுனர் ராஜ்குமார் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினார்.

    • பிரசவத்துக்குப் பிறகு எப்போது தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்.
    • சிலருக்கு பிரசவமான அடுத்த மாதமே பீரியட்ஸ் வரலாம்.

    பிரசவத்துக்குப் பிறகு செக்ஸ் ஆர்வம் குறைவது சகஜமானதுதான். குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக பெண் உடலின் ஹார்மோன்கள் எல்லாம் மாறத் தொடங்கும். இதனால், சில பெண்களுக்கு பிரசவமான சில நாள்களில் தொடங்கி, சில மாதங்கள் வரைகூட தாம்பத்திய உறவு கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.

    பிரசவத்துக்குப் பிறகு இத்தனை நாள்கள் கழித்துதான் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும் என குறிப்பிட்ட கால இடைவெளி எதுவும் வலியுறுத்தப்படுவதில்லை. ஆனால் பிரசவமான அடுத்த ஆறு வாரங்களுக்கு உறவு கொள்ள வேண்டாம் என பொதுவாக அறிவுறுத்தப்படும்.

    கர்ப்பத்தின் போது விரிந்திருந்த கர்ப்பப்பை சுருங்கி, சிறியதாக ஆறு வாரங்கள் ஆகும். நார்மல் டெலிவரி என்றால் வெஜைனா பகுதியில் போடப்பட்ட தையல் ஆறுவதற்கும் அந்த அவகாசம் அவசியம் என்பதால் ஆறு முதல் 8 வாரங்களுக்கு உறவைத் தவிர்க்கும்படி அறிவுறுத்துவோம்.

    தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். பீரியட்ஸும் வராமலிருக்க வேண்டும்.

    எனவே தாய்ப்பால் மட்டுமே கொடுத்துக் கொண்டும், பிரசவமான ஆறு மாதங்கள் வரை பீரியட்ஸ் வராமலும் இருப்பவர்கள், கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

    சிலருக்கு பிரசவமான அடுத்த மாதமே பீரியட்ஸ் வரலாம். அது அவர்கள் மீண்டும் கருத்தரிக்கத் தயாராகிவிட்டதையே குறிக்கும். அவர்களுக்கு கருத்தடை அவசியம். ஆணுறை உபயோகிக்கலாம் அல்லது பிரசவமானபோதே காப்பர் டி பொருத்திக்கொள்ளலாம்.

    பிரசவத்துக்குப் பிறகு செக்ஸ் ஆர்வம் குறைவது சகஜமானதுதான். குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக பெண் உடலின் ஹார்மோன்கள் எல்லாம் மாறத் தொடங்கும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவு குறையத் தொடங்கும். இதன் காரணமாக சில பெண்களுக்கு பிரசவமான சில நாள்களில் தொடங்கி, சில மாதங்கள் வரைகூட தாம்பத்திய உறவு கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.

    ஆனால் அது குறித்துக் கவலைப்படத் தேவையே இல்லை. நாள்கள் போகப் போக, உங்களால் இயல்புநிலைக்குத் திரும்ப முடியும். இழந்த ஆர்வம் மீண்டும் திரும்பும்.

    • சில பெண்கள், பிரசவ வலிக்கு பயந்து அவர்களே ஆபரேஷனை விரும்புகிறார்கள்.
    • இளம் தாய்மார்களிடையே ‘சிசேரியன்’ வழக்கமானதாகி விட்டது.

    கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரை தேசிய குடும்ப சுகாதார ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், சிசேரியன் அல்லது சி-செக்ஷன் ஆபரேஷன் மூலம் குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில், ஆபரேஷன் மூலம் குழந்தைகள் பிறக்கும் விகிதம் 17.2 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    குறிப்பாக, 2015-2016 நிதிஆண்டில் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆபரேஷன் மூலம் குழந்தைகள் பிறப்பது 40.9 சதவீதத்தில் இருந்து 47.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இளம் தாய்மார்களிடையே 'சிசேரியன்' வழக்கமானதாகி விட்டது.

    இதுகுறித்து ஐதராபாத்தில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியின் மகப்பேறு மருத்துவர் அர்ச்சனா ரெட்டி கூறியதாவது:-

    பிரசவ அறையில் தொடர் கண்காணிப்பு, சிசேரியனுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. வலி நிவாரணம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அது பாதுகாப்பான வழிமுறைதான்.

    பெண்கள், தாமதமாக திருமணம் செய்கிறார்கள் அல்லது 35 வயதில் தாமதமாக கர்ப்பம் தரிக்கிறார்கள். அவர்களுக்கு சிசேரியனை தவிர்க்க முடியவில்லை. சில பெண்கள், பிரசவ வலிக்கு பயந்து அவர்களே ஆபரேஷனை விரும்புகிறார்கள்.

    இயற்கை பிரசவம், தாய், குழந்தை இரண்டு பேருக்குமே ஆபத்தும், சிக்கலும் நிறைந்தது. இயற்கை பிரசவத்துக்கான வாய்ப்பை அதிகரிக்க நாள்தோறும் 30 நிமிட நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சைக்கிளிங் அல்லது நடைபயிற்சி மூலம் இதய துடிப்பை அதிகரிக்க வேண்டும். வாரத்துக்கு ஒன்று அல்லது 2 தடவை யோகா வகுப்புகளுக்கு செல்லலாம். சில பெண்களுக்கு மருத்துவ மற்றும் கர்ப்பகால கோளாறுகள் இருக்கலாம். அவர்கள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    கர்ப்பிணிகள், போதிய புரதம் மற்றும் ஆற்றலை அளிக்கும் உணவை சாப்பிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தை பிறந்த ஒரு வாரத்தில், ரத்தப் போக்கு குறைந்துவிடும்.
    • வயிற்றில் உள்ள புண்கள் குணமான பின்பு உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

    அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்கள் எளிதில் உடல் நலம் தேறுவதற்கான வழிமுறைகளை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி, மகப்பேறு மருத்துவத்துறை தலைவர் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் நம்முடன் பகிர்ந்து கொண்டார். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களுக்கு வலி இருக்கும்.

    அதிகமான ரத்தப்போக்கு, ரத்த உறைவு, வீக்கம் ஆகியவற்றால் திசுக்கள் மற்றும் தசைகள் பாதிக்கப்பட்டிருக்கும். இவை அனைத்துமே முழுமையாக குணமாகுவதற்கு குறைந்தபட்சம் 12 வாரங்களாவது ஆகும். அதாவது, அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றெடுத்த பெண்ணின் உடல், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு குறைந்த பட்சம் 4 முதல் 5 மாதங்கள் ஆகும்.

    நன்றாக ஓய்வு எடுக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக ரத்தப் போக்கு குறைந்து நின்று விடும். பொதுவாகவே குழந்தை பிறந்த ஒரு வாரத்தில், ரத்தப் போக்கு குறைந்துவிடும். ஒரு சிலருக்கு ஒரு மாத காலம் கூட சிறிது சிறிதாக வெளியேறலாம். அளவுக்கு அதிகமாக ரத்தப் போக்கு இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

    சிசேரியன் முறையால் கர்ப்பப்பையில் இருக்கும் 'யூட்ரின் தசை' நிறைய மாற்றங்களை எதிர்கொள்கிறது. எனவே அது மீண்டும் பழைய நிலையை அடைவதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படும். ஆகையால் முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இடைவெளி இருப்பது சிறந்தது. சிசேரியனுக்குப் பிறகு இரண்டாவது குழந்தை பெற விரும்பும் பெண்கள், மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்து தங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை உறுதி செய்த பிறகு குழந்தைக்குத் திட்டமிட வேண்டும்.

    அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களில் 70 சதவிகிதம் பெண்களுக்கு அடுத்து சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பிருக்கிறது. குழந்தை பிறந்த 6 மணி நேரத்தில் பால், பழச்சாறு போன்ற திரவ உணவுகளை சாப்பிட வேண்டும். அதையடுத்து திட உணவுகள் உட்கொள்ள வேண்டும். பல பெண்கள் இடியாப்பம், சர்க்கரை உள்ளிட்ட நார்ச்சத்து இல்லாத உணவுகள் சாப்பிடுகிறார்கள். அதைத் தவிர்த்து நார்ச்சத்து அதிகம் உள்ள காராமணி, கேரட், பீன்ஸ், கீரை உள்ளிட்ட உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

    கொண்டைக்கடலை, பச்சைப்பட்டாணி, முட்டை போன்ற புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் சாப்பிடுவது சிறந்தது. எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து, அசைவ உணவுகளை சாப்பிடலாம். தையல் போட்ட இடங்களில் தண்ணீர் பட்டால் ஏதாவது ஆகி விடுமோ? என பல பெண்கள் அச்சப்படுகின்றனர். அது தவறான கருத்து. தையல் போட்ட இடங்களில் அழுக்கு சேராதவாறு சுத்தமாக குளிக்க வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். வயிற்றில் உள்ள புண்கள் குணமான பின்பு உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத் கூறினார்.

    • உணவில் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
    • பிரசவம் ஆனதும் முதல் சில நாட்களுக்கு சிறுநீர் கழித்தல் மிகவும் சிரமமாக இருக்கும்.

    பிரசவத்திற்கு பின் காலத்திய கவனிப்பு கீழ்க்கண்டவற்றை கொண்டுள்ளது.

    * தாயின் உடல் நலத்தைப் பேணுதல் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு போதுமான அளவு தண்ணீர் சுத்தம் சுகாதாரம் வசதியான நிலை உடற்பயிற்சி ஆகியவற்றை அளித்து பிரசவித்த தாயின் உடல் நலத்தைப் பேணுதல் வேண்டும்.

    * பிரசவித்த பெண்ணை சீக்கிரமாகவே நடக்கச் செய்தல் வேண்டும்.

    * உடல் நலத்தோடு சேர்ந்து மன நலமும் பேணிடல் வேண்டும்.

    * தாய்ப்பாலுட்டல் துவக்க வேண்டும்.

    இவற்றைச் செய்வதன் மூலம் பியூர்பேரியத்தை சிக்கல்கள் ஏதுமின்றி சமாளித்தல் இயலும். பிரசவத்திற்கு பின் காலத்திய கவனிப்பில் கீழ்க்கண்டவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

    * போதுமான அளவு ஓய்வும் தூக்கமும் அளிக்க வேண்டும்.

    * தொற்று நோயின் அறிகுறிகளோ அதிக இரத்தப்போக்கு உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    உணவு

    * சமச்சீரான உணவு போதுமான அளவு புரதம் (90 கிராம்) தாது உப்புக்கள் உயிர்ச்சத்துக்கள் கொண்ட உணவினை அளித்தல் வேண்டும்.

    * கூடுதலான தண்ணீர் குடிக்க பரிந்துரைக்க வேண்டும்.

    * உணவில் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

    * வலிநிவாரணிகளும் ஆன்டிபயாடிக் மருந்துகளும் மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கப்பட வேண்டும்.

    * நோய் தொற்றுவதற்கு வழியில்லாத வகையில் கவனத்துடன் பெரினியல் சவ்வினை சுத்தம் செய்ய வேண்டும்.

    சிறுநீர் கழித்தல்

    பிரசவம் ஆனதும் முதல் சில நாட்களுக்கு சிறுநீர் கழித்தல் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனாலும் சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாகின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    மலச்சிக்கல்

    * பெருங்குடலில் பெரிஸ்டால்டிக் அசைவுகள் மிகவும் மந்தமாக இருப்பதால் பியூர்பேரியத்தில் மலச்சிக்கல் பொதுவாக அதிகமாக காணப்படும் பிரச்சினையாகும்.

    * நார்ச்சத்து அதிகம் உள்ள உணவினை திட்டமிடுவதால் இப்பிரச்சினை தீரும்.

    பிரசவத்திற்குப் பின் செய்ய வேண்டிய உடற்பயிற்சி

    * கர்ப்பத்தின் போது பிரசவத்தின் போதும் மிகவும் இழுக்கப்பட்ட தசைகளின் சக்தியை திரும்பப் பெறுவதற்காக, உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து பயிற்சிகளை கற்றும் கொடுக்க வேண்டும்.

    * இரும்புச்சத்து மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள அறிவுறுத்தல் வேண்டும்.

    * தினப்படி செயல்களை மெதுவாக செய்ய ஆரம்பிக்குமாறு உற்சாகப்படுத்த வேண்டும். தாய்ப்பாலூட்டவும் சிசுவுக்கு அளிக்க வேண்டிய கவனிப்பையும் அறிவுறுத்த வேண்டும்.

    * குடும்ப நல ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

    * 6 வாரங்களுக்குப் பிறகு மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்.

    • மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னே உடையும்.
    • கர்ப்பிணிக்கு திடீரென நீர் வெளியேறினால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

    கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid) இருக்கிறது. இது குழந்தையை பலவிதங்களில் பாதுகாக்கிறது. அமுக்கவிசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது. இத்திரவத்தைச்சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு (amniotic membrane) உள்ளது.

    இந்த மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னே உடையும். ஆனாலும் சில வேளைகளில் அதற்கு முன்னமே அது உடையலாம். அது Prelabour rupture of membrane எனப்படும். அதனால் குழந்தையைச் சுற்றியுள்ள திரவநீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று குழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

    அறிகுறிகள்

    திடீரென பிறப்பு உறுப்பு வழியே நிறையத் திரவம் (நீர்) வெளியேறுதல். இவ்வாறு ஒரு கர்ப்பிணிக்கு திடீரென நீர் வெளியேறினால் உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும்.

    மருத்துவ முறை

    34 வார கர்ப்ப காலத்திற்கு முன் இது நடைபெற்றால் மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு 34 வாரம் வரை கண்காணிக்கப்பட்டு அதன் பிறகு குழந்தை பிறப்பு தூண்டப்படும்.

    ஆனாலும் அதற்கு முன் கருப்பையினுள் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றினாலோ அல்லது தொப்புள் கொடி கீழிறங்குவது உறுதி செய்யப்பட்டாலோ உடனடியாக பிறப்பு தூண்டப்படும். இது யாருக்கு ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட முடியாது. ஆனாலும் ஏற்கனவே குறை மாதத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

    கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது சிசுவின் தலை தனியாக வந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #BabyBeheaded #TNHRC #Koovathoorbabydelivery
    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த 19-ம் தேதி இரவு ஒரு கர்ப்பிணி பெண் பிரசவ வலியுடன் சேர்க்கப்பட்டார். அப்போது, அங்கிருந்த செவிலியர், அவருக்கு பிரசவம் பார்த்தார். பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறிய அவர், சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்துள்ளார்.

    குழந்தையின் தலை திரும்பியதும், குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது குழந்தையின் தலை மட்டும் துண்டாகி வெளியே வந்தது. உடல் தாயின் கருப்பையில் சிக்கிக்கொண்டது. இதனால் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து மேல்சிகிச்சைக்காக அந்தப் பெண் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர முயற்சி செய்து, குழந்தையின் உடலை வெளியே எடுத்தனர். தாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் இவ்விவகாரம் தொடர்பாக  தாமே முன்வந்து விசாரணை நடத்த தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் தீர்மானித்தது.

    கூவத்தூரில் பிரசவத்தின்போது சிசுவின் தலை தனியாக வந்த விவகாரம் தொடர்பாக இன்னும் 6 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய இயக்குனரகத்துக்கு  தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #BabyBeheaded #TNHRC #Koovathoorbabydelivery
    மும்பை - விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் விரைவு ரெயிலில் இன்று காலை மும்பையை சேர்ந்த இளம்பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
    மும்பை:

    மும்பை - விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் விரைவு ரெயிலில் மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த சல்மா தபாஸ்சம் சேக் என்ற நிறைமாத கர்பிணி பயணித்தார். இன்று காலை 8 மணியளவில் கல்யான் ரெயில் நிலையத்தை ரெயில் வந்தடைந்த போது, சல்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இதனை அடுத்து, ரெயில் நிலையத்தில் இருந்த மருத்துவ சிகிச்சை குழு அவருக்கு பிரசவம் பார்த்துள்ளது. அப்போது, அவர் இரண்டு அழகான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதனை அடுத்து, அவர் ரெயிலில் இருந்து இறக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    தாயும், இரண்டு குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். 
    ×