என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்டெர்லைட்"
திருச்சி:
திருச்சியில் இன்று பா. ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று கடந்த 40 வருடங்களாக காங்கிரசும், தி.மு.க.வும் கூறி வந்தனர். ஆனால் இன்று பா.ஜனதா அரசு 50 நாளில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்துள்ளது.
பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளார். வெளிமாநிலங்களில் தான் முன்பு வளர்ச்சி திட்டங்கள் வரும் போது நக்சல்கள் ஊடுருவி தடுப்பார்கள்.
இப்போது தமிழகத்திலும் அது நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது நக்சல்கள் ஊடுருவலை தடுத்தார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் தமிழக அரசு நக்சல்கள் ஊடுருவலை தடுப்பதில் தோல்வியடைந்து விட்டது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தீயசக்திகள் வன்முறையில் ஈடுபட்டது போல ஸ்டெர்லைட் போராட்டத்திலும் நடத்தினார்கள்.
இந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் ரஜினி காந்த் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. இதில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன், ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி ஆகியோர் இரட்டை வேடம் போடுகிறார்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும். ஸ்டெர்லைட் திறந்தால் வாழ்வு செழிக்கும் என கொடி பிடித்து அதை திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர் தான் பாலபாரதி. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மூட முதலில் உண்ணாவிரதம் இருந்தது தற்போதைய மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தான்.
ஆனால் ஸ்டெர்லைட் ஆலைக்காக போராடியவர்கள் இன்று இரட்டை வேடம் போடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiShooting
சென்னை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் உள்பட 5 இடங்களில் போலீசாருக்கும், ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களுக்கும் இடையே மிகப் பெரிய மோதல் நிகழ்ந்தது.
தீவைப்பு, கல்வீச்சு, வாகனங்கள் உடைப்பு போன்றவை கட்டுக்கடங்காமல் போனதால் போலீசார் 4 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 13 பேர் பலியானார்கள். சுமார் 140 பேர் காயம் அடைந்தனர்.
இந்த வன்முறையில் சுமார் 100 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. 4 நாட்கள் தூத்துக்குடி நகரமே முடங்கிப் போனது.
கலவரம்- தீவைப்பு தொடர்பாக தூத்துக்குடியில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி கலவரத்துக்கு காரணம் யார் என்பது பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது.
இதுபற்றி விசாரிக்க கோரி சுமார் 40 வழக்குகள் கோர்ட்டுகளில் தொடரப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தியது ஏன் என்பதற்கு தமிழக அரசிடம் ஐகோர்ட்டு விளக்கம் கேட்டுள்ளது. மனித உரிமை ஆணையங்களும் விசாரணையை தொடங்கி உள்ளன.
கலவரத்துக்கு வித்திட்டது யார் என்பது பற்றி தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி கலவரத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பா.ஜனதா தலைவர்களும் கூறி வருகின்றனர். நடிகர் ரஜினியும் இதே கருத்தை வெளியிட்டதால் கலவரத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
இதற்கிடையே போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வெளி மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்குள் ஊடுருவிய ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் சதி செய்து திட்டமிட்டு வன்முறையை நடத்தி விட்டு சென்று விட்டனர் என்று தெரிய வந்துள்ளது.
அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ளும் வகையில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், தூத்துக்குடியில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் வன்முறை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த அவர்கள் யார்-யார் என்ற விபரத்தை போலீசார் சேகரித்துள்ளனர். தூத்துக்குடியில் அவர்கள் தங்கி இருக்க உதவி செய்தவர்கள் பற்றியும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து கலவரத்தை நடத்திய அந்த வெளி மாவட்டக்காரர்களை வேட்டையாடும் அதிரடி நடவடிக்கையை தனிப்படை போலீசார் தொடங்கியுள்ளனர்.
இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தூத்துக்குடியில் 5 இடங்களில் வன்முறை நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தோம். அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி. டி.வி. கேமிராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான வன்முறை காட்சிகளையும் பல தடவை ஆய்வு செய்தோம். அப்போது சில இளைஞர்கள் மட்டும் தீ வைத்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது தெரிந்தது. அந்த இளைஞர்கள் யார்-யார் என்பதையும் கண்டுபிடித்து விட்டோம்.
அவர்களில் ஒருவர் கூட தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக கடலூர், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வன்முறை நடந்த சமயத்தில் சிலர் அந்த பகுதியில் இருந்தபடி தீ வைப்புகளை தங்கள் செல்போனில் படம் பிடித்து மற்றவர்களுக்கு பகிர்ந்து கொண்டனர். சமூக வலைத்தளங்களில் அந்த காட்சிகள் பரவியது. அதில் உள்ள சமூக விரோதிகளை அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது.
வெளி மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கிராம மக்களிடம் ஊடுருவி மூளைச் சலவை செய்த வெளி மாவட்ட சமூக விரோதிகள் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைஒட்டியுள்ள கிராமங்களுக்குள் வர முயற்சி செய்கிறார்கள். எனவே வெளிமாவட்ட சமூக விரோதிகளிடம் இருந்து அப்பாபி கிராம மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளோம்.
சமூக விரோதிகளால் இனி தூத்துக்குடியிலும் அருகில் உள்ள கிராமங்களிலும் சட்டம்-ஒழுங்கு கெட்டு விடக்கூடாது என்பதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறாம். இதற்காக வீடு, வீடாக சென்று ஆய்வுப் பணியை தொடங்கி உள்ளோம். ஒவ்வொரு வீட்டிலும் இருப்பவர்களை ஆதார், ரேசன் கார்டுகள் மூலம் பரிசோதித்து வருகிறோம். இதன் மூலம் சமூக விரோதிகளை விரட்டி வருகிறோம்.
இவ்வாறு அந்த போலீஸ் உயர் அதிகாரி கூறினார். #ThoothukudiShooting
கோவை:
மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்க கருத்தரங்கு கோவையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
இதில் மத்திய தகவல் ஒலிபரப்பு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரி ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் பங்கேற்று பேசினார்.
புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற நோக்கத்துடன் மத்திய பாரதிய ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது.
48 ஆண்டில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகளை மத்திய மோடி அரசு வெறும் 48 மாதத்தில் செய்து முடித்துள்ளது. உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ஏழை மக்களின் அரசாங்கமாக மத்திய மோடி அரசு செயல்படுகிறது.
இந்தியாவில் 31 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு சேமிப்பு பழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு, கழிப்பிட வசதி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மத்திய அரசு வளர்ச்சி கண்டுள்ளது. இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்திய அளவில் கல்வி, வளர்ச்சி, பெண்கள் மேம்பாடு, மருத்துவம், தொலை தொடர்பு, தொழில் நுட்பம், வேலை வாய்ப்பு, விளையாட்டு உள்ளிட்ட எல்லா துறைகளிலும் நாடு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. போக்கு வரத்து துறையிலும் நல்ல வளர்ச்சி கண்டுள்ளோம்.
பொருளாதார மேம்பாடு நல்ல முன்னேற்ற பாதையில் செல்கிறது. பணமில்லா வங்கி பரிவர்த்தனை, கருப்பு பணம் ஒழிப்பு போன்றவற்றில் உலகளவில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது.
தொழில் துறையில் கடந்த 25 ஆண்டு காலம் இல்லாத வகையில் தற்போது நல்ல வளர்ச்சி கண்டுள்ளோம். இது வரவேற்கதக்கது. உலக அளவில் வளர்ச்சியின் உந்து சக்தியாக இந்தியா செயல்படுகிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இது பற்றிய அனைத்து தகவல்களும் பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர் நடந்த சம்பவம் முழுவதையும் கேட்டறிந்து வேதனை அடைந்தார்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றிய பின்னரும் இடைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்ததை கருத்தில் கொள்ளாமல் மக்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதையும் மேம்படுத்தும் வகையில் தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
ஆண்டு தோறும் தேசிய அளவில் ஆயிரம் பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 5 லட்சம் செலவு செய்து அவர்களை ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதேற்கேற்ற வகையில் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்ட்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiShooting
சென்னை:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிடடுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென அப்பகுதி மக்கள் பல மாதமாக போராடி வந்த நிலையில், தமிழக அரசு துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் உயிரை பறித்தது. நூற்றுக்கணக்கானோர் தடியடி மற்றும் குண்டு காயங்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசு தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி வருவதாகவும், மக்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறிக் கொள்கிறது. மறுபுறத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் பழி வாங்கும் நோக்கத்தோடு, அப்பாவி பொது மக்களையும், இளைஞர்களையும் இரவோடு இரவாக வீடு வீடாகச் சென்று மிரட்டியும், பயமுறுத்தியும், கைது செய்து வருகிறது.
தமிழக அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையால் தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புவதற்கு மாறாக மீண்டும் பதட்ட நிலை உருவாக்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
கைது படலத்தை உடனடியாக நிறுத்திட வேண்டும். தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும், தமிழக அரசும் உரிய கவனம் செலுத்த வேண்டுமென மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மே 26-ந் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவரது உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையை மார்க்.கம்யூ வன்மையாக கண்டிக்கிறது.
பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ThoothukudiFiring #SterliteProtest
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடியில் மே 22-ந் தேதி அன்று காவல்துறையினர் கொலைவெறியுடன் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்த தமிழரசன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து இதுவரை நடை பெற்ற போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்ற தமிழரசன் எந்த வன்முறையிலும் ஈடுபட்டது இல்லை. புரட்சிகர முன்னணியைச் சேர்ந்த இவர் திருமணம் ஆகாத இளைஞர்.
சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரசனின் உடலைக் காணச் சென்ற அவரது ஒன்றுவிட்ட அண்ணனையும் காவல்துறையினர் கைது செய்து விட்டு, தமிழரசனின் உடலை வாங்காவிட்டால் அவரது அண்ணனையும் சுட்டுக் கொல்வோம் என்று குடும்பத்தாரிடம் மிரட்டினர்.
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழரசனின் அண்ணன் ஸ்டெர்லைட் போராட்டங்களிலும் எங்கள் இயக்க நடவடிக்கைகளிலும் ஆதரவாக இருந்தவர். இவர் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டு காலமாகி விட்டார்.
தமிழரசன் படுகொலைக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்ற என்னிடம் அக்குடும்பத்தினர் அரசாங்கத்தின் நிதி எங்களுக்கு வேண்டாம், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும், துப்பாக்கிச் சூடு நடத்தி கோரமாக 13 பேரைச் சுட்டுக்கொன்ற காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினர்.
இந்நிலையில் புரட்சிகர இளைஞர் முன்னணியின் உண்மை கண்டறியும் குழுவினர் தூத்துக்குடிக்கு சென்று பொதுமக்களிடம் 22-ந்தேதி சம்பவம் குறித்த விவரங்களையும், செய்திகளையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று இரவில் அந்தக்குழுவில் இருந்த 8 பேரையும் காவல்துறையினர் சட்டவிரோதமாக கைது செய்து எவரும் அறிய முடியாத இடத்தில் கொண்டு போய் அடைத்து வைத்துள்ளனர்.
இந்தக்குழுவில் இடம் பெற்றிருந்த மதுரை வக்கீல் சரவணக்குமார், கல்லுப்பட்டியைச் சேர்ந்த முருகன், மணி, சமயன், அருப்புக்கோட்டை கோவேந்தன், தூத்துக்குடி வன்னி பெருமாள் ஆகிய எட்டு பேரும் புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்தவர்கள் காவல் துறையினர் யாரைக் கைது செய்தாலும் உடனடியாக அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிப்பதோடு, வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கவும் அனுமதிக்க வேண்டியது கடமை ஆகும்.
நேற்று இரவு கைது செய்யப்பட்ட நிரபராதிகளான 8 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். காவல்துறையின் ஜனநாயக விரோதமான அடக்குமுறைக்கு ம.தி.மு.க. சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெய்வேலியில் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விக்கிரவாண்டியில் சுங்க சாவடி பூட்டை உடைத்தார் என்று பொய் வழக்கு போட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
மேலும் அவரை துன்புறுத்தி இருக்கிறார்கள். வேல்முருகன் தொடர்ந்து போராடி வருகிறார் என்பதற்காக அவர் மீது தேச விரோத வழக்கு பதிந்துள்ளனர்.
ஆட்சி அதிகாரம் இருப்பதால்தான் அ.தி.மு.க.வில் பலர் இருக்கிறார்கள். எதிர்த்து பேசுபவர்கள் மீது இந்த அரசு பொய் வழக்கு போடுகிறது. இது பாசிச போக்காகும். மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:
தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் கலவரம் வெடித்தது.
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 47 பேருக்கு இன்னமும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் துப்பாக்கி சூட்டுக்கு முன்பும், பின்பும் தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளிலும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீ வைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன. இதன் காரணமாக 141 வாகனங்கள் சேதம் அடைந்தன.
இதில் 20 வாகனங்கள் காவல் துறைக்கு சொந்தமானவை. 63 வாகனங்கள் அரசின் பல்வேறு துறைக்கு சொந்தமானவை. 58 வாகனங்கள் தனியாருக்கு உரியவை. இந்த வாகனங்களை சேதம் செய்ததாக 177 பேர் கைது செய்யப்பட்டனர்.
கலவரத்தில் 72 போலீசார் காயம் அடைந்தனர். அவர்களில் 26 பேருக்கு உள் நோயாளியாகவும், 46 பேருக்கு புற நோயாளியாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசை தாக்கியதாக மொத்தம் 185 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் பலியானதற்கு போலீசார் விரிவான விளக்கம் தர வேண்டும் என்று 3 வக்கீல்கள் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து தூத்துக்குடியில் 13 பேர் உயிரிழக்கும் அளவுக்கு துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது என்பதை முழுமையாக விளக்கி சென்னை ஐகோர்ட்டில் போலீஸ் டி.ஜி.பி. ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். டி.ஜி.பி. சார்பில் உதவி ஐ.ஜி. மகேஸ்வரன் அதை தாக்கல் செய்தார்.
தூத்துக்குடியில் எந்தெந்த இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது, பலியானவர்கள் தூத்துக்குடியில் எந்தெந்த பகுதியில் வசித்தனர் என்பதை காட்டும் வரை படத்துடன் அந்த விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் டி.ஜி.பி. கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டம் மே 22-ந்தேதி 100-வது நாளை எட்டிய போது பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கைப்பற்ற தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது அவர்களிடம் வருவாய் துறை அதிகாரிகளும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சம்மதித்தனர்.
மே 22-ந்தேதி காலை தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் ஏராளமானவர்கள் திரண்டனர். பிறகு அவர்கள் அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.
அதே போன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு மிக அருகில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மடத்தூர் ஜங் ஷன் பகுதியில் திரண்டனர். அவர்களும் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.
இருமுனைகளில் இருந்தும் கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தவர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் இருந்தனர். அவர்களை போலீசார் குறிப்பிட்ட சில இடங்களில் தடுத்து நிறுத்தினார்கள்.
ஆனால் போலீசாரை மீறி ஊர்வலத்தில் வந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். அப்போது அவர்களில் சிலர் பல்வேறு விதமான விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபட்டனர். சாலையின் எதிர்புறம் வந்த வாகனங்களை உடைத்தனர்.
அவர்களைத் தடுத்து நிறுத்த போலீசார் எவ்வளவோ முயன்றனர். ஆனால் அந்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. போலீசாரையும் தாக்கி விட்டு போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை நெருங்கினார்கள்.
கலெக்டர் அலுவலகத்தை ஊர்வலம் அடைந்ததும் வன் முறை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமாக மாறியது. போராட்டக்காரர்களில் சிலர் சரமாரியாக கற்களை வீசினார்கள். சிலர் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.
அவர்களை தடுக்க போலீசார் அனைத்து வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீதும் பெரிய அளவில் தாக்குதல் நடத்தினார்கள். போலீஸ் வாகனங்களையும் அடித்து உடைத்து, தீ வைத்து கடுமையாக சேதப்படுத்தினார்கள்.
அந்த வன்முறையை கட்டுப்படுத்த எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்தன.
இந்த நிலையில் சூழ்நிலையை தங்களுக்கு சாதக மாக்கிக் கொண்ட சிலர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்புக்குள் ஊடுருவினார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் ஸ்டெர்லை ஆலை ஊழியர்களின் மோட்டார்சைக்கிள், வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
அவற்றுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். கீழ்தளத்தில் இருந்த ஜெனரேட்டர் அறைக்கும் தீ வைத்தனர். கீழ்தளத்தில் எரியத் தொடங்கிய தீ அந்த குடியிருப்பு முழுமைக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டது.
அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சுமார் 150 பேர் வசித்து வருகிறார்கள். கீழ்தளத்தில் தீ வைக்கப்பட்ட காரணத்தால், அந்த 150 பேர் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரும், தீயணைப்புப் படையினரும் தீயை அணைக்கும் நடவடிக்கையை மேற் கொண்டனர்.
ஆனால் போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்தை தடுத்து நிறுத்தி விட்டனர். போலீஸ்காரர்களையும் அந்த குடியிருப்புக்கு அருகில் வர முடியாதபடி தொடர்ந்து கல்வீசி தாக்கினார்கள்.
வன்முறை அதிகரித்தப் படி இருந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பில் இருந்த சுமார் 150 பேர் மற்றும் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. அவர்களை காப்பாற்ற கடைசி கட்டமாக வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தையும், சுற்றுப்புற பகுதிகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துப்பாக்கி சூடு நடத்துவதை தவிர வேறு வழியே இல்லை என்ற நிலை உருவான தால்தான் போலீசார் துப்பாக்கி சூடு பிரயோகத்தை மேற்கொண்டனர். இல்லையெனில் மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.
அன்று மதியம் 1 மணிக்கு சுமார் 3 ஆயிரம் பேர் இந்திய உணவுக் கழக குடோன் பகுதியில் திரண்டு வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் சரமாரியாக கற்களை வீசி தாக்கினார்கள். இதனால் அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடியும் நடத்தினார்கள்.
உடனே கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஒன்று திரண்டு ஒரு போலீஸ்காரரை தாக்கி கொல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதில் கார்த்திக் என்பவர் உயிரிழந்தார்.
மதியம் 1.35 மணிக்கு மீண்டும் ஒரு கலவர கும்பல் திரண்டு வந்து போலீஸ்காரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. 2 அரசு பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் அந்த கலவர கும்பல் மீது தடியடி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
பிற்பகல் 3 மணிக்கு திரேஸ்புரத்தில் ஒரு கும்பல் பயங்கர கலவரம் செய்தது. இதனால் துணை தாசில்தார் கண்ணன் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டார். அந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழக்க நேரிட்டது.
மதியத்துக்குப் பிறகு வன்முறையாளர்கள் நிறைய சொத்துக்களை சேதப்படுத்தினார்கள். முத்துக் கிருஷ்ணாபுரம், பொன்னகரம், சுந்தரவேல்புரம் ஆகிய இடங்களில் இருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
மே 23-ந்தேதி அண்ணாநகரில் சுமார் ஆயிரம் பேர் திரண்டு வன்முறைகளில் ஈடுபட்டனர். அவர்கள் டுவிபுரத்தில் இருந்த டாஸ்மாக் மதுக்கடையை அடித்து உடைத்தனர்.
அரசு சொத்துக்களும் நாசம் செய்யப்பட்டன. அந்த கலவரத்தை கட்டுப்படுத்த மீண்டும் துப்பாக்கி சூடு நடத்த நேரிட்டது. அதில் மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் உயிரிழந்தார். இந்த வன்முறை தாக்குதலில் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரனுக்கும் காயம் ஏற்பட்டது.
தூத்துக்குடியில் மே மாதம் 22 மற்றும் 23-ந்தேதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் 5 இடங்களில் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கலெக்டர் அலுவலகம் அருகில், எப்.சி.ஐ. அருகில், அண்ணாநகர் மெயின் ரோடு பகுதியில், திரேஸ்புரம் ஆகிய 4 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. எப்.சி.ஐ. அருகில் போலீசார் தடியடி நடத்தினார்கள்.
மே 22-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு திரேஸ்புரம் பகுதியில் நிறைய பேர் திரண்டதால் துப்பாக்கி சூடு நடத்தும்படி மண்டல துணை தாசில்தார் உத்தரவிட்டார். அதன் பேரில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஜான்சிராணி (37) மரணம் அடைந்தார். (இந்த துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட தாசில்தார் பெயர் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை)
வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கி நாசமாக்கிய கலெக்டர் அலுவலக பகுதி மற்றும் அரசு சொத்துக்களை பொதுப் பணித் துறைக்குட்பட்ட என்ஜினீயர் ஒருவர் ஆய்வு செய்து கணக்கிட்டுள்ளார். அவரது கணக்குப்படி கலெக்டர் அலுவலகத்தில் ரூ.28.12 லட்சத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் டாஸ்மாக் கடைகள் உடைப்பு, வாகனங்களுக்கு தீ வைத்தது காரணமாக ரூ.15.67 கோடிக்கு சேதம் மற்றும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #BanSterlite #SterliteProtest
மதுரை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந் தேதி நடைபெற்ற 100-வது நாள் போராட்டம் கலவரமாக வெடித்தது.
போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் அடுக்கடுக்காக 14 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்.
* துப்பாக்கிச்சூடு சம்பவம் முறையான அனுமதி பெறாமல் நடத்தப்பட்டுள்ளது. எனவே தமிழக தலைமைச் செயலாளர். உள்துறை செசலாளர் போலீஸ் டி.ஜி.பி., டி.ஐ.ஜி., தூத்துக்குடி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, சிப்காட் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
* இந்த சம்பவம் பற்றி ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
* சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
* துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை வெளி மாவட்டங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றி உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்கவும் உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், ஆர். சுரேஷ்குமார் ஆகியோர் முன்பு கடந்த 25-ந் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என்று வாதாடினர்.
இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப் பாண்டியன் ஆஜராகி அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
இதையடுத்து நீதிபதிகள் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும். பலியானவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை அதிகரிப்பது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரிய மனு தொடர்பாக சி.பி.ஐ. உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து இந்த வழக்குகள் அனைத்தும் வருகிற 6-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது அரசு தரப்பில் தாக்கலாகும் பதில் மனுக்களை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு பிறப்பிக்கிறது.
இதனிடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட மேலும் 2 வழக்குகள் நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலையில் கடந்த 30-ந் தேதி விசாரணைக்கு வந்தது.
இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் 14 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிடுமா? என்பது குறித்து வருகிற 6-ந் தேதி வழக்கு விசாரணையின் போது தெரியவரும்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக தமிழக அரசு திட்டமிட்டு நடத்திய கொடூரமான தாக்குதல் சம்பவமே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு. இனி மக்கள் போராட நினைக்கக்கூடாது என்பதற்காக, மக்களை அச்சுறுத்தும் விதமாக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆலை தொடர்பாக அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் அறிவிக்கும் அறிவிப்புகள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு பிறப்பித்த அரசாணை மக்களை ஏமாற்றும் நாடகம்.
துப்பாக்கிச் சூடுக்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்கள், உயரதிகாரிகளிடம் தெரிவித்து அனுமதி மற்றும் ஆலோசனை பெறாமல் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட முடியாது. இந்த சம்பவம் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமூக விரோதிகள் என தமிழக முதல்வரும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் ஒரே குரலில் பேசுகின்றனர். சமூக விரோதிகளால் தான் இந்த துரதிருஷ்டமான சம்பவம் நிகழ்ந்தது எனக் கூறுகின்றனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் அப்பாவி மக்கள்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான 10-ம் வகுப்பு மாணவி சமூக விரோதியா. இது உரிமைக்காக போராடும் மக்களை அவமதிக்கும் செயல், கண்டனத்துக்குறிய செயல். இதற்காக தமிழக மக்களிடம் முதலமைச்சரும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்.
உடனடியாக காவிரி நதி நீர் ஆணையத்தை அமைத்து, முழு அதிகாரம் பெற்ற அமைப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். மே மாத இறுதிக்குள் காவிரி நதி நீரை மேட்டூருக்கு கொண்டுவர தமிழக அரசு, மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். அதிகாரம் மிக்க ஆணையத்தை அமைக்கவும் பெற்றுத்தரவும் உரிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இல்லையெனில் குறுவை சாகுபடி சாத்தியமில்லாமல் போய்விடும்.
தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிகாரமில்லாத ஆட்சியும், ஆளுநர் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு அதிகாரமிக்க இன்னொரு ஆட்சியும் நடத்துகிறார். மாநில உரிமையில் தலையிடும் இந்த நடவடிக்கையை தமிழக அரசு கண்டிக்க வேண்டும். ஆனால், இங்கிருக்கும் அரசு ஆளுநர் நடவடிக்கையை நியாயப்படுத்துகிறது.
மோடி அரசு 4 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்குவோம் என கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். #SterliteProtest #ThoothukudiShooting
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்