search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவச்சந்திரன்"

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேரோடு அழிக்க வேண்டும் என்று புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிவச்சந்திரன் மனைவி காந்திமதி கூறியுள்ளார். #PulwamaAttack #SivaChandran #Surgicalstrike2 #IndianAirForce
    அரியலூர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் பலியாகினர். இதில் தமிழகத்தில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவச்சந்திரன் ஆகியோரும் பலியானார்கள்.

    இருவரின் உடல்களும் கடந்த 16-ந்தேதி அவர்களது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பொது மக்கள் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு திரண்டு நின்ற இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பியதோடு, அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் வலியுறுத்தினர்.

    இதேபோல் சிவச்சந்திரன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், பாகிஸ்தானுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

    மேலும் பலியான சிவச்சந்திரனின் மனைவி காந்திமதியும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டு இருந்த பயங்காரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்தின. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

    திறமையுடன் செயல்பட்ட இந்திய விமானப்படை வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த தாக்குதல் குறித்து சிவச்சந்திரனின் மனைவி காந்திமதி நிருபர்களிடம் கூறியதாவது:-



    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேரோடு அழிக்க வேண்டும். பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    பெண்கள் தங்களது கணவர்களை இழந்து தவிக்கிறார்கள். குழந்தைகள் அப்பா என்று அழைக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் வேரோடு அழிக்க வேண்டும். தற்போது நடந்துள்ள இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதல் சற்றே ஆறுதல் அளித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #PulwamaAttack #SivaChandran #Surgicalstrike2 #IndianAirForce
    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் சிவச்சந்திரன் குடும்பத்தினரை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Vaiko
    அரியலூர்:

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் சிவச்சந்திரன் வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்திரை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பயங்கரவாதிகள் கிள்ளி எறியப்பட வேண்டும். வேரோடு அழிக்கப்படவேண்டும். சிவச்சந்திரன் தனது மகனை ஐ.பி.எஸ். ஆக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஏற்கனவே ஒரு மகனை இழந்த சிவச்சந்திரனின் பெற்றோர் இவரை வேலைக்கு செல்ல வேண்டாம் எனக் கூறிய போதும் நாட்டுக்காக செல்கிறேன் என கூறியுள்ளார்.

    எனவே சிவச்சந்திரனின் மனைவி காந்திமதிக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நல்ல அரசு வேலையை வழங்க வேண்டும். மேலும் சிவச்சந்திரனுக்கு சிலை அமைத்து நினைவு சின்னம் ஏற்படுத்த வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.

    தொடர்ந்து சிவச்சந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று வைகோ மலரஞ்சலி செலுத்தினார். இதேபோல் திரைப்பட நடிகர் தாமுவும் சிவச்சந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Vaiko
    அரியலூர் வீரர் சிவச்சந்திரன் இறுதி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘பயங்கரவாதிகளை சும்மா விடக்கூடாது’ என்று இளைஞர்கள் ஆவேசமாக கோ‌ஷம் எழுப்பினர். #PulwamaAttack
    அரியலூர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் தமிழகத்தில் அரியலூரை சேர்ந்த சிவசந்திரன், தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியை சேர்ந்த சுப்ரமணியன் ஆகியோரும் பலியாகினர். இருவரின் உடல்களும் நேற்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டன.

    முன்னதாக சிவசந்திரனின் உடல், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ரூ.20 லட்சத்திற்கான காசோலையை சிவச்சந்திரன் குடும்பத்தினரிடம் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வழங்கினர்.

    பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பின் சிவசந்திரனின் உடல், அவருக்கு சொந்தமான நிலத்தில் 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    அஞ்சலி நிகழ்ச்சியின் போது சிவசந்திரனின் தந்தை சின்னையன், மகன் சிவமுனியன் ஆகியோர் ராணுவ உடை அணிந்திருந்தனர். சிவமுனியன், தந்தையின் உருவப்படத்திற்கு முத்தமிட்டது அனைவரையும் கண்கலங்க செய்தது.

    மேலும் அஞ்சலி செலுத்த வந்திருந்த அரசியல் கட்சியினர், இளைஞர்கள், பொது மக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைகளில் தேசியக்கொடிகளை ஏந்தி வந்ததோடு, கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பட்டையை சட்டையில் குத்தியும் வந்திருந்தனர். வாய் பேச முடியாத சிவசந்திரனின் தங்கை ஜெயசித்ரா, அண்ணனின் உடல் இருந்த மரப்பெட்டியை பார்த்து கதறி அழுதது காண்போரின் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள், இளைஞர்கள் பலர், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம், காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை சும்மா விடக்கூடாது. அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். ராணுவ வீரர்களின் ரத்தம் வீண் போகக்கூடாது என்று கூறி பாகிஸ்தானுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். #PulwamaAttack
    காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் 2 பேரின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. #PulwamaAttack
    திருச்சி:

    காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    இதில் தமிழகத்தை சேர்ந்த சிவசந்திரன், சுப்ரமணியன் ஆகியோர் பலியானார்கள்.

    சிவசந்திரன் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடியை சேர்ந்தவர்.

    சுப்ரமணியன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவலப்பேரியை சேர்ந்தவர் ஆவார்.

    பலியான துணை ராணுவ வீரர்களின் உடல்களுக்கு டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய மந்திரிகள், முப்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் ராணுவ வீரர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அந்த வகையில் டெல்லியில் இருந்து நேற்று காலை தனி விமானத்தில் அரியலூர் சிவசந்திரன், தூத்துக்குடி சுப்ரமணியன் ஆகியோரது உடல்களும், கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவரது உடலும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் உடலும் ஆக மொத்தம் 4 துணை ராணுவ வீரர்களின் உடல்கள் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது.



    உடல்களுடன் வந்த விமானம் திருச்சிக்கு நேற்று பகல் 11.10 மணி அளவில் வந்தடைந்தது. இதில் அரியலூர் சிவசந்திரன் உடல் மட்டும் தனியாக இறக்கப்பட்டது. தூத்துக்குடி சுப்ரமணியனின் உடல், கேரள மாநிலத்தை சேர்ந்தவரின் உடல் அதே விமானத்தில் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வீரரின் உடல் மற்றொரு தனி விமானத்தில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அரியலூர் சிவசந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய மந்திரி சீதாராமன் பாதுகாப்பு துறை விமானத்தில் நேற்று காலை 10.35 மணி அளவில் திருச்சி வந்தார். பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவதற்காக விமானநிலைய முனையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    தனி விமானத்தில் வந்த வீரர் சிவசந்திரன் உடலை பகல் 11.45 மணி அளவில் விமானநிலையத்தின் உள்ளே இருந்து துணை ராணுவ வீரர்கள் சுமந்து வெளியே வந்தனர். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியின் மீது வெள்ளை துணியும், தேசிய கொடியும் போர்த்தப்பட்டிருந்தன. அவரது உடலை அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்த இடத்தில் வைத்தனர்.

    சிவசந்திரனின் உடலை பெறுவதற்காக அவரது மைத்துனர் அருண், சித்தப்பா கண்ணன், மற்றும் உறவினர்கள் ஜெயபால், குணவேல் ஆகியோர் வந்திருந்தனர். சிவசந்திரன் உடல் வந்து இறக்கப்பட்டதும், அவர்கள் 4 பேரும் கதறி அழுதபடி கண்ணீர் மல்க ஓடி வந்து சவப்பெட்டியின் மீது விழுந்து அழுதனர்.

    அப்போது திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி, அவர்களை ஆசுவாசப்படுத்தி ஆறுதல் கூறினார். இருப்பினும் அவர்கள் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். சிறிது நேரம் அவர்கள் அஞ்சலி செலுத்தியபின் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பலியான சிவசந்திரனின் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சிவசந்திரன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அதனைதொடர்ந்து கர் நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். ராணுவ வீரரின் உடல் வந்தபோது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உணர்ச்சி பொங்க முழக்கமிட்டனர். பழிக்குப்பழி வாங்க வேண்டும் என இளைஞர்கள் கோஷமிட்டனர்.

    ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் பலர் நேற்று காலை 9 மணிக்கு விமான நிலையம் வரத்தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகமானது. பலர் கையில் தேசிய கொடியுடன் வந்திருந்தனர். பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின்னர் சிவசந்திரனின் உடல், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    கார்குடி கிராமம் காலனி தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு மாலை 4 மணி அளவில் உடல் கொண்டு வரப்பட்டது. ராணுவ மரியாதையுடன் சிவசந்திரன் உடல் இருந்த சவப்பெட்டியை இறக்கி அவரது வீட்டு முன்பு வைத்தனர்.

    அப்போது அவரது உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அங்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அப்போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், சிவசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் சிவசந்திரன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    இதேபோல மத்திய இணை மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., கோவை மத்திய ராணுவ படை டி.ஐ.ஜி. சோனல் மிஸ்ரா, திருச்சி மத்திய மண்டல டி.ஐ.ஜி. லலிதா, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

    நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ரூ.20 லட்சத்திற்கான காசோலையை சிவசந்திரன் குடும்பத்தினரிடம் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வழங்கினர்.

    21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

    பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பின் மாலை 4.45 மணி அளவில் சிவசந்திரனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது.

    தொடர்ந்து 8 ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க, சிவசந்திரனின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே துணை ராணுவ வீரர் சுப்ரமணியனின் உடல் மதுரை விமான நிலையத்துக்கு நேற்று மதியம் கொண்டு வரப்பட்டது. அவரது உடலை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பெற்று கொண்டார். பின்னர் சுப்ரமணியனின் உடலுக்கு அரசு அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து உடல், ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு அவரது சொந்த ஊரான சவலாப்பேரிக்கு இறுதி யாத்திரையாக புறப்பட்டது.

    மதுரை, விருதுநகர் மாவட்டங்களின் வழியாக வந்த சுப்பிரமணியனின் உடலுக்கு ஆங்காங்கே அரசு சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏராளமானவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், தேசிய கொடி ஏந்தியும், ‘பாரத மாதாவுக்கு ஜே’ என்று முழக்கமிட்டபடி சுப்ரமணியனின் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

    மாலை 4.20 மணிக்கு சுப்ரமணியனின் உடல் அவரது சொந்த ஊரான சவலாப்பேரியை வந்தடைந்தது. தொடர்ந்து ராணுவ வாகனத்தில் இருந்து சுப்ரமணியனின் உடலை ராணுவ வீரர்கள் இறக்கி, அவரது வீட்டின் முன்பு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைத்தனர். அப்போது சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி, தாயார் மருதம் அம்மாள், தந்தை கணபதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், கிராமமக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    சுப்ரமணியனின் உடல் இருந்த பெட்டியின் மீது ராணுவ வீரர்கள் தேசிய கொடி போர்த்தினர். தொடர்ந்து பல ஆயிரக்கணக்கானவர்கள் நீண்ட வரிசையில் நின்று சுப்ரமணியனின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    வீரமரணம் அடைந்த சுப்ரமணியனின் உடலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் முரளி ரம்பா (தூத்துக்குடி), அருண் சக்திகுமார் (நெல்லை), நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் சுகுணா சிங், பெரோஸ் கான் அப்துல்லா, எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், வசந்தகுமார் உள்பட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதையடுத்து தமிழக அரசு நிவாரணமாக அறிவித்த ரூ.20 லட்சத்துக்கான காசோலையை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணியிடம் வழங்கினார். மாலை 5 மணி அளவில் சுப்ரமணியனின் உடலை வீரர்கள் ராணுவ வாகனத்தில் ஏற்றினர். தொடர்ந்து சுப்ரமணியனின் உடலை சுமந்தவாறு ராணுவ வாகனம் இறுதி ஊர்வலமாக புறப்பட்டது.

    சவலாப்பேரியில் உள்ள சுப்ரமணியனுக்கு சொந்தமான தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ராணுவ வாகனத்தை பின்தொடர்ந்தவாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல ஆயிரக்கணக்கானவர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றனர்.

    மக்கள் வெள்ளத்தின் இடையே ராணுவ வாகனம் ஊர்ந்து வந்தது. சுப்ரமணியனின் தோட்டத்துக்கு ராணுவ வாகனம் வந்ததும், அவரது உடலை ராணுவ வீரர்கள் இறக்கி வந்தனர். தொடர்ந்து சுப்ரமணியனின் உடல் மீது போர்த்தப்பட்டு இருந்த தேசிய கொடி அகற்றப்பட்டு, அவருடைய மனைவி கிருஷ்ணவேணியிடம் வழங்கப்பட்டது.

    பின்னர் சுப்ரமணியனின் உடலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயகுமார், ராஜலட்சுமி மற்றும் அரசு அதிகாரிகள், முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் சுப்ரமணியனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சுப்ரமணியனின் உடல் அடக்கத்தையொட்டி அந்த கிராமமே சோகக்கடலில் மூழ்கி இருந்தது.
    புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் திருச்சி வந்து சேர்ந்தது. பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் திருச்சி விமான நிலையம் வந்து சிவச்சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். #PulwamaAttack
    திருச்சி:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனத்தின் மீது பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், பயங்கரவாதிகளுக்கு எதிராக மக்களிடம் ஆவேசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகிய 2 வீரர்கள் பலியானார்கள்.

    சிவச்சந்திரன் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். சுப்பிரமணியனுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு.

    பலியான மற்ற வீரர்கள் உடலுடன் தமிழக வீரர்களின் உடல்களும் டெல்லி கொண்டு வரப்பட்டு பிரதமர் மோடி , உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் அஞ்சலிக்கு பின் சொந்த ஊர்களுக்கு உடல்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.

    தமிழக வீரர்கள் சுப்பிரமணியன், சிவச்சந்திரன் உடல்களுடன் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த 2 வீரர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


    இந்த விமானம் இன்று காலை 11.10 மணியளவில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அரியலூர் வீரர் சிவச்சந்திரன் உடல் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு அஞ்சலிக்காக விமான நிலையத்தில் வைக்கப்பட்டது.

    தேசியக்கொடி போர்த்தப்பட்ட பெட்டியில் சிவச்சந்திரன் உடல் வைக்கப்பட்டிருந்தது. உடலுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் திருச்சி விமான நிலையம் வந்து சிவச்சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது சிவச்சந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அவர்களுக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறினார்.


    மத்திய மந்திரி ஆனந்த குமார் ஹெட், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, குமார் எம்.பி., தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கலெக்டர்கள் ராஜாமணி (திருச்சி), விஜயலட்சுமி (அரியலூர்), திருச்சி போலீஸ் கமி‌ஷனர் அமல் ராஜ், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து சிவச்சந்திரனின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டது.

    சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனும் அரியலூர் சென்று சிவச்சந்திரனின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கிறார்.

    இன்று மாலை 4 மணிக்கு சிவச்சந்திரன் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. இதில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்.

    இதேபோல் தூத்துக்குடி வீரர் சுப்பிரமணியன் உடல் தனி வாகனத்தில் சொந்த ஊரான கயத்தாறு கொண்டு செல்லப்படுகிறது. கேரளா, கர்நாடகா வீரர்களின் உடல்களும் தனித்தனியாக சொந்த ஊர்களுக்கு திருச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

    முன்னதாக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை கார்குடி கிராமத்துக்கு சென்று சிவச்சந்திரன் மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். #PulwamaAttack #CRPFAttack #SivaChandran #Subramaniyan
    ×