search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரட்டியடிப்பு"

    ராமேசுவரம் மீனவர்களை தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர். #Rameswaramfishermen
    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடிப்பது, தாக்கி விரட்டியடிப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை. உடனே செல்லுங்கள் இல்லையென்றால் சிறை பிடிக்கப்படுவீர்கள் என்று மிரட்டும் தொனியில் தெரிவித்தனர்.

    மீனவர்கள் தங்கள் வலைகளை எடுத்துக்கொண்டு கரைக்கு திரும்ப ஆயத்தமாகினர். அப்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களை தாக்கி விரட்டியடித்தனர். மேலும் படகில் இருந்த மீன்களை அபகரித்து கொண்ட இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர். இதையடுத்து மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படை தொடர்ந்து மீன் பிடிக்க விடாமல் தடுத்து வருகிறது. ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து கடலுக்கு சென்றாலும், இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் வெறும் கையுடனேயே திரும்புகிறோம். இரு நாட்டு அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்தும் வரை தீர்வு ஏற்படாது. இதேநிலை நீடித்தால் நாங்கள் மீன்பிடி தொழிலை கைவிடும் சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்தனர்.

    இதனிடையே நேற்று கச்சத்தீவு பகுதியில் ராமேசுவரத்தை சேர்ந்த முனியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது வழக்கத்துக்கு மாறாக கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. அலையின் சீற்றத்தால் முனியராஜ் படகு தள்ளாடியது.

    இதில் கடல் நீர் புகுந்ததால் படகு மூழ்கத்தொடங்கியது. தண்ணீரை வெளியேற்ற முயன்றும் பலன் இல்லை. இதையடுத்து மீனவர்கள் படகில் இருந்து குதித்து அருகில் இருந்த மற்றொரு படகில் ஏறிக்கொண்டனர். சிறிது நேரத்தில் படகு முற்றிலும் மூழ்கியது. இதன் மதிப்பு ரூ. 15 லட்சம் ஆகும். #Rameswaramfishermen

    கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து படகுகளையும் சேதப்படுத்தினர். #Rameswaramfishermen
    ராமேசுவரம்:

    ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது 15 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை உடனே இங்கிருந்து சென்று விடுங்கள் என்று எச்சரித்தனர். மேலும் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படை வீரர்கள் மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் சேதப்படுத்தினர்.

    மேலும் ரோந்து கப்பல்கள் மூலம் மீனவர்களின் படகுகள் மீது மோத செய்தனர். இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவரின் படகு சேதம் அடைந்தது.

    இதனால் பீதி அடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை விட்டு விட்டு ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் தாக்குதல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் எங்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    கடும் டீசல் விலை உயர்ந்திருந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல் கடன் வாங்கி கடலுக்கு செல்கிறோம். ஆனாலும் அதற்கேற்ற வருமானம் கிடைப்பதில்லை என வருத்தத்துடன் தெரிவித்தனர். #Rameswaramfishermen

    நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக 6 குட்டி கப்பல்களில் 30-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். அவர்கள் தமிழக படகுகளை கண்டதும் அங்கிருந்து செல்லும்படி எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குள் வீசியிருந்த வலைகளை அவசரம், அவசரமாக எடுத்துக்கொண்டு கரைக்கு திரும்ப முயன்றனர்.

    ஆனால் அதற்குள் ஒரு சில படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அந்த படகுகளுக்குள் இறங்கி மீனவர்களை தாக்கியதுடன், அதில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் கடலில் வீசி எறிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து மீனவ சங்க நிர்வாகிகள் கூறும்போது, “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொல்லை இல்லாமல் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

    இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தனர்.
    ×